.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 29, 2013

மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!


இந்தோனேஷிய நாட்டில் நடந்த உலக அழகி 2013ம் ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது நிரம்பிய மேகன் யங் இறுதி சுற்றில் வென்று கிரீடம் சூட்டப்பட்டார். இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் 63வது வருட உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகன் யங் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவில் பிறந்த யங் தனது 10வது வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.



Miss World 2013 Final

 



இநதோனேஷியாவில் நடந்த இந்த போட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எனவே, போட்டி அமைப்பாளர்கள் பாதுகாப்பினை அதிகரித்து இருந்தனர். இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அமைப்பினர் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானது என்றும் உடலை காட்டி நடத்தப்படும் போட்டியினை தடை செய்ய அரசுக்கு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போட்டி நடத்துபவர்கள், பிகினி உடையில் தோன்றும் நீச்சல் உடை போட்டியினை நடத்த மாட்டோம் என ஒப்புதல் அளித்தனர்.



எனினும் போட்டியை தடை செய்ய தொடர்ந்து எதிர்ப்பு வலு பெற்று வந்தது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி நகரில் இறுதி போட்டி நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் இறுதி போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு குவிக்கப்பட்டனர். அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியின் முடிவில் 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.


இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

Miss Philippines Megan Young crowned Miss World 2013


********************************


 Miss Philippines was crowned Miss World 2013 today in a glittering finale on the Indonesian resort island of Bali amid tight security following weeks of hardline Muslim protests.Megan Young beat five other finalists, including France and Brazil, to win the coveted title in a contest broadcast to more than 180 countries worldwide.

.

சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை.- அமைச்சர் விளக்கம்!


“இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”என்று தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.



sep 29 - 100 years cine vizha

 



இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘‘ஈழத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துபோகவிட்டதோடு தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் சிறிதும் பரிசீலனை செய்யாத நிலையில் மத்திய அமைச்சர் அவையில் இனியும் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் தி.மு.க. உடனடியாக விலகுகிறது’’ என்று அறிவித்துவிட்டு, தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழர் நலத்தை மறந்து தன்னலத்தை முன்னிறுத்தி மூன்றே மாதங்களில் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, ‘அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும்’ என்ற தலைப்பில் தன்மானத்தைப் பற்றி பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதையும், இறுதி நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கியதையும் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, ஒரு விழா எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக சினிமா நூற்றாண்டு விழா விளங்கியதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். 


இதிலிருந்தே கருணாநிதியின் இந்த அறிக்கை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, இது போன்ற விழாக்களிலே ஒருவர் தலைமை தாங்குவது தான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்றும், ஆனால் இந்த மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கடைபிடிக்கப்படவில்லை; மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை; சில கலைஞர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


மரபுகளைப் பற்றி கருணாநிதி பேசியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. பொதுவாக, குடியரசுத் தலைவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால், அவர் இருக்கும் இடம் போய் தான் பார்க்க வேண்டும். இது தான் நடைமுறை, மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவில் கலந்து கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை புரிந்த போது, தன்னை வந்து பார்க்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் மூலம் வற்புறுத்தி, அதன் பேரில், இந்தியக் குடியரசுத் தலைவரும் வேறு வழியின்றி, கருணாநிதியை அவரது துணைவியார் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.


ஒரு வேளை இது போன்ற மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் போது கடைபிடிக்கப்படவில்லை என்று கருணாநிதி கூறுகிறார் போலும்! இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டதால், அந்த விழாவிற்கான வரைவு அழைப்பிதழ் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்பே அச்சிடப்பட்டிருக்கும் என்ற விவரம் ஐந்து முறை முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? இதைத் தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மரபு கடைபிடிக்கப்படவில்லை என்று கருணாநிதி கூறுவது குடியரசுத் தலைவரையே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.



திரைப்பட விழாக்களில் தலையிடுவது, திரைப்படத் தொழிலில் தன் குடும்ப உறுப்பினர்களை நுழைப்பது, திரைப்பட கலைஞர்களை வைத்து பாராட்டு விழாக்களை நடத்துவது, துதிபாடிகள் முன் உலா வருவது, திரைப்படத் துறையிலுள்ள முன்னணி நடிகர்கள், நடிகையர்களை தன்னுடைய பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், இலவசமாக கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுமாறும் வற்புறுத்துவது ஆகியவை கருணாநிதிக்கு தான் கை வந்த கலை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.


சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா, தமிழ்நாடு திரைப்படத் துறை சார்பில் பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு விழா என பல்வேறு பாராட்டு விழாக்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன. அனைத்து திரைப்பட விழாக்களையும், திரைத் துறையைச் சார்ந்த மாநாடுகளையும் தன்னுடைய பாராட்டு விழாக்களாக மாற்றிக் காட்டிய பெருமை கருணாநிதியையே சாரும். இது போன்ற விழாக்களை நடத்துவதற்காக படப்பிடிப்பு பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதையும், திரைப்படத் துறையினரின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டதையும் திரைப்படத் துறையினர் இன்னமும் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.


முதல்–அமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படக் கலைஞர்களை ‘‘காக்கா கூட்டம்’’ என்று கருணாநிதி கூறியதை அவர்கள் இன்னும் மறந்துவிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.



தன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் முன் வரிசையில் அமரச் செய்து தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழறிஞர்களை இழிவுபடுத்திய கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அவருடைய குடும்பத்தினருக்கே மேடையில் இடம் அளிக்காத கருணாநிதி, பல முன்னணி திரைப்படக் கலைஞர்களை கீழே அமரச் செய்த கருணாநிதி, திரைப்படத் துறையையே கபளீகரம் செய்த கருணாநிதி, இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.



‘‘தோளில் கிடக்கும் துண்டு என்பது பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டி தான் மானம். கொள்கைக்காக துண்டை உதறிப் போட்டுவிட்டு போக தயங்க மாட்டோம். சுயமரியாதைக் கொள்கைகளுக்காக வேஷ்டியை இழக்க மாட்டோம்’’ என்ற கொள்கையுடன் இருந்த தி.மு.க.வை, ‘‘வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறிபோய்விடக் கூடாது’’ என்ற நிலைக்கு மாற்றிக் காட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ‘‘துரோகம்’’ என்ற வார்த்தையைத் தவிர, சுயமரியாதைக் கொள்கை பற்றியோ, பகுத்தறிவு சிந்தனைகள் பற்றியோ, தன்மானம் குறித்தோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

கிரெடிட் கார்ட மோசடியா?வங்கிகளே பொறுப்பு!: ரிசர்வ் வங்கி உத்தரவு!


வங்கி கிரடிட் கார்டுகளில் ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.அத்துடன் இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


sep 29 - bank ceredit card

 


கிரெடிட் கார்ட் திட்டத்தில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருவதால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை ஜூலை மாதத்திற்குள் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
பணம் எடுக்கும் இயந்திரங்களில் மின்னணு சிப் மற்றும் கிரெடிட் கார்ட் உடையவர் பணம் எடுக்கும்போது அவரை அங்கீகரிக்கும்விதமாக அவர் பதிவு செய்யவேண்டிய ரகசியக் குறீயீட்டு எண் போன்றவற்றை செயல்படுத்துமாறு கேட்டிருந்தது. 


ஆனால் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த இயலாததால் செப்டம்பர் வரை இதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆயினும், தற்போதும் இந்த ஏற்பாடு முழுமையடையவில்லை என்பதால் மீண்டும் இந்தக் கெடுவை நீட்டிக்குமாறு வங்கிகள் கோரியிருந்தன.
தொடர்ந்து இந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. மேலும், இந்தப் பாதுகாப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படாத இயந்திரங்களில் புதிதாக ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


தற்போது இந்த சர்ச்சை குறித்த தீர்மானம் மிகவும் சிக்கலான நடைமுறை என்பதால் முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்தைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றது. பொதுவாக இத்தகைய திட்டங்களில் இரண்டு வங்கிகள் செயல்படுகின்றன. 


முதலாவது வங்கி முதலீட்டாளர்களுக்கு கடன் அட்டைகளை (கிரெடிட் கார்ட்) வழங்குகின்றது. மற்றொரு வங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களை செயல்படுத்துவதாக அமைகின்றது. எனவே, மோசடிப் புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் முதலாவது வங்கி இதனை உறுதி செய்துகொண்டு பாதிப்படைந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்டபடி பணத்தை வழங்கவேண்டும். 


அதன்பின்னர் அந்த வங்கி பணம் அளிக்கும் இயந்திரத்தைச் செயல்படுத்தும் வங்கியிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவு கடன் அட்டைகளின் பாதுகாப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கருதப்படுகின்றது.


Banks to pay for credit card frauds, RBI says

**********************************
The Reserve Bank of India has refused to extend the deadline for upgrading security on credit card swipe machines and has ordered banks to compensate cardholders in seven days if any fraud occurs on non-compliant terminals.


 
back to top