.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 30, 2013

வணக்கம் வைப்பது தீண்டாமையா...?







இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு.  ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.


   ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது.  இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன.  விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.


 இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது.

  இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது.  இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள் வணக்கம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள்.

  இதில் தீண்டாமை இருப்பதாக அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

  காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு என கண்ணதாசன் சொல்வது போல் குதர்க்கமான பார்வையாளர்களுக்கு எல்லாமே குதர்க்கமாகப் படுகிறது.


மேல்நாட்டு முறையில் கை குலுக்கி கொள்வது தீண்டாமையை விரட்டுகிறது என்றால் ஐரோப்பியர்கள் போலவே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அறிமுகம் படுத்தி கொள்வதற்கு இந்த அறிஞர்களுக்கு துணிச்சல் உள்ளதா என கேட்க விரும்புகிறேன்.

 இவையெல்லாம் இருக்கட்டும் இனி வணக்கம் செலுத்தும் முறைக்கு வருவோம்.  இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது கடவுளை வணங்கும் முறை.

 நெற்றிக்கு நேராக கை கூப்புவது ஆசியரை வணங்கும் முறை.

  உதடுகளுக்கு நேராக கைகளை குவிப்பது தந்தையையும், அரசரையும் வணங்கும் முறை.


   மார்புக்கு நேராக வணங்குவது உள்ளத்தாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோரை வணங்கும் முறை.

   தொப்புள் கொடி உறவை தந்த தாயை வயிற்றுக்கு நேர் கை கூப்பி வணங்க வேண்டும்.


   இதயத்தில் கை வைத்து நம்மை விட சிறியவர்களை வணங்க வேண்டும்.  இது தான் இந்திய மரபு.

    இதில் தீண்டாமை என்பது இல்லவே இல்லை.

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??





நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.


ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான்.


 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.


ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம்.
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும்.


பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும்.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.


 விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க...




உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும்.


வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் கழித்து, 1947க்குப் பிறகு 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும் கிழமைகளையும் கொண்டுள்ளது.  புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை, மசூதிகளில் சிறப்பு தொழுகை என அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டி வருகிறது. சென்னையை பொறுத்த வரையில், புத்தாண்டு என்றாலே யூத்களுக்கு தனி குஷிதான்.


புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் பீச்களிலும், கடற்கரை சாலைகளிலும் கூட்டம் அலைமோதும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகள் வெடித்தல், பலூன்களை பறக்கவிடுதல், ஓட்டல்களில் கேக்வெட்டுதல் என புத்தாண்டு களைகட்டும். முகம் தெரியாத நபர்களையும் நண்பர்களாக பாவித்து கேக் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்‘ என கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.  புத்தாண்டை பெரியவர்கள் கொண்டாடினால் போதுமா சிறுவர் சிறுமியருக்கான நியூஇயர் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டின்னருடன் பாட்டு, டான்ஸ் மேஜிக் ஷோ என குழந்தைகளுக்கான தனிக்கொண்டாட்டமாக இப்போது துவங்கியிருக்கிறது.


விபத்தை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடு


சென்னையின் ஒட்டுமொத்த கூட்டமும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலும், புத்தாண்டு அன்றும் பீச், ஈசிஆர் மற்றும் முக்கிய சாலைகளிலும் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தாண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் கொண்டாட வேண்டுமென்பதில் போலீசார் அதிக அக்கறை எடுத்துள்ளனர். அதனால்  சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யாரும் கடலில் குளிக்காதவாறு கண்காணிக்கப்படும். 


இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், சென்ற ஆண்டைப்போல் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையின் பல்வேறு இடங்கலில் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினாவில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரை பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.


மக்கள் கூம்பு வடிவ ரேடியோ பயன்படுத்தக்கூடாது என்றும், நீச்சல் குளம் அருகில் மது விருந்து நடத்தக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். விதிமுறைகளை மீறும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலை விபத்துகளும் தவிர்க்க முடியாதவை. போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அதிவேகமாக செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இம்முறை அதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க, போதையில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நகர் முழுதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படும்.


புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட பீச்சுக்கோ, ஈசிஆருக்கோ, பொழுதுபோக்கு தளங்களுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயம் போதையில் செல்வதோ, ரேஷ் டிரைவிங்கோ வேண்டாம். விதியை மீறினால் புத்தாண்டு தினம் மகிழ்ச்சிக்கு பதிலாக உங்களை சங்கடத்தில் கொண்டு சேர்த்து விடும். கவனமா இருங்க! புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பிறருக்கு இடையூறு செய்யாதபடியும் கொண்டாடினால் எல்லா நாளும் புத்தாண்டுதான்.


விடிய விடிய சிறப்பு பஸ்கள்


புத்தாண்டு தினத்தில் கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 31ந்தேதி பகல் 12 மணி முதல் 1ந்தேதி மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரினா, பெசன்ட் நகர், தாம்பரம், கோவளம், வண்டலூர், எம்.ஜி.எம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடிய விடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும். அதிகாலையில் குன்றத்தூர், மாங்காடு, மயிலை கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், திருவேற்காடு, வடபழனி முருகன் கோவில், திருநீர்மலை மற்றும் சந்தோம், பெசனட் நகர் சர்ச் உள்ளிட்ட தலங்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல, அவசர காலங்களில் உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் தயாராக இருக்கும்.

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!







என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.


வைரம்

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.

அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.

வௌவால்

வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

சுத்தமான தண்ணீர்


சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.

பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.

ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மருக்கள்

மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.

இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.

ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம்

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.

ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

மரபை மீறும் மரபணு மாற்றம்.. அச்சத்தில் விவசாயிகள்..!




மரபை மீறும் மரபணு மாற்றம்.. அச்சத்தில் விவசாயிகள்..!

1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஒரு எலுமிச்சையின் மரபணுவை மற்றொரு எலுமிச்சை ரகத்துடன் சேர்த்து உருவாக்குவது ஒட்டுமுறை. ஆனால், அதே எலுமிச்சையை அதற்கு தொடர்பில்லாத வேறொரு தாவரம் அல்லது உயிரினத்துடன் இணைத்து உருவக்கப்படுவதே மரபணு மாற்றப் பயிர். இது சம்பந்தப்பட்ட தாவரத்தின் இயல்பையே மாற்றிவிடும்.

பருத்தி, கத்தரிக்காய் என தொடங்கி அனைத்து தாவரங்களும் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அவற்றை விளைவிக்கும் நிலங்களுக்கும் உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்புகள் உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஆரஞ்சுப் பழத்திற்கு தவளையின் மரபணுவை இணைத்து பளபளப்பை கூட்டுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இதுகுறித்து முறையாக பரிசோதிக்கப்பட்டதாக பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் கூறினாலும், அத்தகைய ஆய்வுகள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதன் மூலம் அதன் மொத்த சந்தையும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்திடம் சென்றுவிடும் என குற்றம்சாட்டப்படுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தேசிய அளவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணைய சட்ட மசோதாவை நிறைவேற்ற கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி மக்களவையில் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வாசுதேவ் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உணவுப் பொருள் தேவை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மசோதா, மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விதிமுறைகளை உள்ளடக்கியது. குறிப்பாக மரபணு மாற்ற பயிர்களை அனுமதித்தல், அதன் தன்மைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையம், மரபணு மாற்ற பயிர்கள் குறித்த அனைத்து விவகாரங்களையும் கையாளும். உடல்நல பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

நீதிமன்றத்தை அணுக முடியாது!

மரபணு மாற்ற பயிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. பிரச்னை எதுவாயினும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையத்திடம் தான் முறையிட முடியும். அதேநேரத்தில் மரபணு மாற்ற பயிரால் பாதிப்பு ஏற்பட்டால், 2 ஆண்டுகளுக்குள் ஆணையத்திடம் முறையிட வேண்டும். அதன்பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினால் அந்த கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. மரபணு மாற்ற தொழில்நுட்ப பிரச்னையில் நாட்டிலுள்ள எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது. ஆணையம் அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்யவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழும் தகவல்களைப் பெற முடியாது.

விவசாயம், வனம், மீன்வளம், உடல்நலம், கால்நடை, சுற்றுச்சூழல் என தனித்தனி துறைகளில் ஒழுங்காற்றுப் பிரிவுகளை அமைக்க இந்த மசோதா வழி செய்கிறது. மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே ஆராய தனி குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் என சட்ட மசோதா கூறுகிறது.

மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்கும் இந்த மசோதா, முழுக்க முழுக்க அறிவியல் தொழில்நுட்பத்துறையை சார்ந்தது. இதில் வேளாண்துறைக்கோ, சுற்றுச்சூழல் துறைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அப்போது உறுப்பினர்கள் தெரிவிக்கும் திருத்தங்களை கருத்தில்கொண்டு, மசோதா திருத்தப்படும். பின்னர் அதனை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்படும்.

உணவே மருந்து என்றார் திருமூலர். ஆனால் இன்று உணவை விஷமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கலக்கத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

விவசாயிகள் குரல் ஓங்கி ஒலிக்குமா, மத்திய அரசு செவி சாய்க்குமா, நமக்கும் நம் சந்ததிகளுக்கும் உணவு உணவாகவே கிடைக்குமா இல்லை ஆரஞ்சு தோற்றத்தில் இருக்கும் தவளையை நாம் எதிர்காலத்தில் உண்ண வேண்டியிருக்குமா?!................ மரபணு மாற்றம் வரமா? சாபமா? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!







சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும்.


தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது.


சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், Ôஎனக்கு என் செல்ல பூனை மீது கொள்ளை பாசம். அதனால்தான் அதை போகும் இடத்துக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன்.


4 கிலோ பூனையை பையில் போட்டு எடுத்துச் செல்வது கஷ்டமாக இருந்ததால் ஜாரில் போட்டு வெளியே எடுத்துச் சென்றேன். அது தப்பா…Õ என விளக்கம் கொடுத்தார் லின். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த லின், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.


போலீசார் லின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். லின் காட்டிய ஜாரில் காற்று போவதற்காக துளைகள் போடப்பட்டிருந்தது. ஆனால் பேஸ்புக்கில் இருந்த படத்தில் துளைகள் இல்லை.இதையடுத்து அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!




சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.


 வழக்கம்போல் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைக்கப்படலாம்


 மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் வருகிறாராம்.


 இப்படத்தில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக குங்பூ என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள இருக்கிறாராம். வில்லன் ஒரு குங்பூ வீரன் என்பதால் அவருடன் சண்டை போடுவதற்காக இந்த பயிற்சியை பெறுகிறாராம்.

தனுஷ்,சிம்பு,அனிருத் - கலக்கவிருக்கும் மூவர் கூட்டணி



   

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இளைய தலைமுறைக் கலைஞர்களான தனுஷ், சிம்பு மற்றும் அனிருத் ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றன.


சமீபமாக இம்மூவரும் தங்களது விடுமுறையைக் கொண்டாடுவதற்காக லண்டன் சென்றிருந்தனர். ஆனால் இவர்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்குப் போகவில்லை என்றும், தங்களது புதிய படத்தினைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவே சென்றார்கள் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.


தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடித்தால் அது மிகப்பெரும் வெற்றிக்கு வித்தாகும் என்பது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


ஏற்கெனவே அஜித் மற்றும் விஜய் இணைந்து நடிப்பார்கள் என்றும் கிசுகிசுக்கள் பரவி வரும் நேரத்தில் இந்த வதந்தியும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் அனிருத்தும் இவர்களின் படத்தில் இணைந்தால் அது இளைஞர்களுக்கு மாபெரும் விருந்து அளிப்பதாகவும் இருக்கும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.


சிம்பு தற்பொழுது பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் நடித்துவருகிறார். தனுஷ் தற்பொழுது கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் வேலையில்லாப் பட்டதாரி என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

மீன் பிரியாணி - ரெடி!!!




மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மீன் - 1/4 கிலோ

அரிசி - 2 ஆழாக்கு


வெங்காயம் - 150 கிராம்


தக்காளி - 150 கிராம்


இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்


புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு


மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்


தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்



மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்


தயிர் - 1 கப்


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி



செய்முறை:


* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

வடிவேலுவின் இடைத்தைப் பிடிப்பாரா சூரி ?




வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சியின் மூலம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் பட்டியில் இடம்பிடித்த நடிகர் சூரி தற்சமயம் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார்.


நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்த காலத்திலிருந்தே நகைச்சுவை நடிகர்களுக்கென்று சில காலகட்டங்கள் பொற்காலமாக அமைந்திருந்தது.



குறிப்பிடத்தக்கது.கடந்த தொண்ணூறுகளில் தொடங்கி பல ஆண்டுகள் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமாக இருந்துவந்தன. கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் குறைந்து வந்த காலங்களில் விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் கொடிகட்டிப் பறந்தனர். குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைகள் தமிழர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.


வடிவேலு நடிக்கும் திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக அதிகமாக இல்லாததாலும், சந்தானத்தின் புதிய முறை நகைச்சுவைகளாலும் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சந்தானம் மிக முக்கிய நகைச்சுவை நடிகராக வலம்வருகிறார்.


அந்த வகையில் தற்பொழுது அதிகப் படங்கள் நடிக்கும் நகைச்சுவை நடிகருக்கான பட்டியலில் “பரோட்டா” சூரியும் இடம்பெற்றுள்ளார். இவரது நடிப்பில் இவ்வாண்டில் வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” முதலான படங்கள் பெரும் வாய்ப்புகளைத் தேடித்தந்தன.


இவர் நடிப்பில் வருகிற 2014ல் இளைய தளபதி விஜயின் “ஜில்லா”, சிவகார்த்திகேயனின்” மான் கராத்தே”, ஜெயம் ரவியின்  “ நிமிர்ந்து நில்” மற்றும் விஜய் சேதிபதியின் “ ரம்மி” மற்றும் அனேக திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

20 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்...!!!




கோலிவுட்டின் மற்றொரு நம்பகமான ஹீரோவாக உருவெடுத்து வரும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெருவெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்தது. இவர் தற்பொழுது “மான் கராத்தே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.


மான் கராத்தே திரைப்படம் தற்பொழுதுதான் உருவாகிவரும் சூழலில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமைகள் ஏற்கெனவே 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கள் பரவியிருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்தான் ரிலீசிற்கும் முன்பாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படும். அத்தகைய சாதனையை சிவகார்த்திகேயன் மிகக் குறைந்த காலத்திலேயே, மிகக் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துப் பெற்றிருக்கிறார்.


மான் கராத்தே திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனத்தில், அவரது முன்னால் உதவி இயக்குனரான திருக்குமரனால் இயக்கப்பட்டு வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.


ஹன்சிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

400 கோடிகளைக் குவித்துள்ள தூம் 3




அமீர்கான், கத்ரீனா கைஃப் , அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடிப்பில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான தூம் 3 திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்கள் வரை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.



தூம் படவரிசையான தூம் 3 திரைப்படம் கடந்த டிசம்பர் 20ல் வெளியானது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். தூம் படவரிசைகளான தூம் மற்றும் தூம் 2 ஆகிய படங்களின் வசூலை விட அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.



இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 250 கோடிகள் வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இந்தி வெர்சன் 200 கோடிகளுக்கும் மேலாகவும் இதர மொழிகளில் சுமார் 20 கோடிகள் வரையிலும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.



இப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றியினை அமீர்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம் பிரபிவின் அரிமா நம்பி





விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் அரிமா நம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.


விக்ரம் பிரபு நடிப்பில் சமீபமாக வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததுடன், சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவன் வேற மாதிரி திரைப்படத்தை எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.


விக்ரம் பிரபு தற்பொழுது சிகரம் தொடு மற்றும் தலப்பாக்கட்டை முதலான படங்களில் நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் தற்பொழுது வை ராஜா வை,
பொடியன், இரும்புக் குதிரை முதலான படங்களில் நடித்துவருகிறார்.

நாளை மாலை வெளியாகிறது வேலையில்லாப் பட்டதாரி டீசர்!




அறிமுக இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துவரும் தனுஷின் இருப்பத்து ஐந்தாவது படமான வேலையில்லாப் பட்டதாரி படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் இயக்குனர் தனுஷின் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், 3 மற்றும் நைய்யாண்டி ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவராவார். தனுஷ் கேட்டுக்கொண்டதன் பேரில் இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.


வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் இப்படத்தின் பாடல்களை தனுஷே எழுதியிருக்கிறார். 


மூன்று படத்தின் மெஹாஹிட் பாடலான ஒய் திஸ் கொலவெறி மற்றும் எதிர் நீச்சல் படத்தின் “பூமி என்ன சுத்துதே” போன்ற பாடல்கள் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கைக்கு அனுப்பட்டது ஜில்லா..?





இளைய தளபதி விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜில்லா திரைப்படம் இன்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜில்லா படத்தின் தயாரிப்பாளார் ஆர்.பி.சௌத்ரி ஜில்லா படத்தினை இன்று தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், ஜில்லா திரைப்படம் நாளை அல்லது ஜனவரி 2ல் தணிக்கை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.


இதற்கிடையில் ஜில்லா படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருப்பதால், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இன்று தணிக்கை செய்யப்படலாம் என்றும், முழு திரைப்படம் நாளை தணிக்கை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஜில்லா திரைப்படத்துடன் ரிலீசாகவிருக்கும் அஜித்தின் வீரம் திரைப்படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டு U சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஜில்லா திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கத்தில், இமான் இசையில் உருவாகியுள்ளது.

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..




தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!


அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.



1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.



இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.



 கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

வாழ்வின் ரகசியம் !!!




வாழ்வின் ரகசியம் !!!


"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.


"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.


"புரியல குருவே.." என்றான்.


"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.


புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.

உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள் !!!!




உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள்.

ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒருசில கனிமங்களும் அடங்கும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது 8 வகை வைட்டமின் பி-க்களை கொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவி புரிகிறது. அதற்கு காரணம் உடல் கார்போஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவி புரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவும். அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும். ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி

உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர். வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி

உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும். அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது. இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்

கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது. இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.


குரோமியம்

உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல் நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் அது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்

கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும். இது இல்லையென்றால், கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைபட்டு போகும். சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது.

ஜிங்க்

தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன...?




1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள், அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போது மட்டும்தான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.

ரூ.1 கோடி சம்பளத்தை உதறி ஆம் ஆத்மியில் இணைந்தார் லால்பகதூர் சாஸ்திரி பேரன்!



ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் அனில் சாஸ்திரியின் மகன் ஆதர்ஷ் சாஸ்திரி, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.


இந்நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆம் ஆத்மி கட்சியில் ஆதர்ஷ் சாஸ்திரி நேற்று இணைந்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் கொள்கைகள் தன்னை கவர்ந்ததால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும், 2014ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் போட்டியிடத் தயார் என்று ஆதர்ஷ் சாஸ்திரி கூறினார்.

முகேஷ் அம்பானி - வாழ்க்கை வரலாறு!




முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார்.


‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார்.



அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கும் முகேஷ் அம்பானி அவர்களின், வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 19, 1957

பிறப்பிடம்: மும்பை மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “மும்பையில்”, இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்)’, கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.


வணிகத்தில் ஈடுபடக் காரணம்


இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.


இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.


தொழில் வளர்ச்சியில் மேற்கொண்ட சாதனைகள்


ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.


அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட ‘இன்ஃபோகாம் நிறுவனத்தை’ (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம்நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார்.


ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர்,  தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது.


தனிப்பட்ட வாழ்க்கை


முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.


விருதுகளும், மரியாதைகளும்


    2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது’.


    என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது’.

    பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது’.

    2010 – ஐ.எம்.சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான ‘ஜுரான் தர பதக்கம்’.

    2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்’.

    அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது’.

    குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான ‘சித்திரலேகா நபர் விருது’.

 முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.


 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார்.

ரயில் பயணம் ஆபத்தாவதேன்?




கர்நாடகத்தின் பெங்களூரில் இருந்து ஆந்திரத்தின் நாந்தேத் நகருக்குச் சென்ற விரைவு ரயிலில் நேரிட்டதீ விபத்து 26 பேரைப் பலிவாங்கியிருக்கிறது. அதிகாலை3.30 மணி அளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிவது தெரியாமல் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தற்செயலாகக் கண்விழித்த ஒரு பெண் பயணி அலறியதை அடுத்து, பயணிகள் விழித்துள்ளனர். அந்தப் பெட்டியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கிறார். அதற்குள் மளமளவென்று தீ பரவியிருக்கிறது. தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்கு எல்லாம் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதால், ஏராளமானோர் தப்பியிருக்கின்றனர்.

இத்தகைய விபத்துகள் இந்திய ரயில்வே துறைக்குப் புதிதல்ல. பல முறை நாம் மீண்டும் மீண்டும் பார்த்ததுதான். கடந்த ஆண்டுகூட ஒன்பது ரயில்கள் தீ விபத்துக்குள்ளாயின; 30 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஐந்து ரயில்கள் தீ விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தவறாமல் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன; பரிந்துரைகள் பெறப்படுகின்றன; அவை அப்படியே காற்றில் விடப்படுகின்றன.

இந்த விபத்துக்கான காரணங்கள் உடனே வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. மின்கசிவு காரணமாகத்தான் பெட்டியில் தீப்பிடித்தது என்று தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் தெரிவிக்கின்றனர். ரயில்வே அதிகாரிகள் இதை மறுக்கும் சூழலில், “ஏ.சி. மெக்கானிக்குகளுக்குப் பணிச் சுமை அதிகரித்துவிட்டது. ரயில் நிலையங்களிலும் பெட்டிகளிலும் அவர்கள் இருப்பதற்குக்கூட அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் மறுக்கிறது” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறது ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்.

தீ விபத்தைத் தவிர்க்கும் பணிகள் இந்த லட்சணத்தில்இருக்கின்றன என்றால், தீ விபத்தின்போது மக்களைக் காக்கும் பணிகளின் லட்சணம் இன்னும் மோசம். ஒரு ரயிலில் தீ எச்சரிப்பு சாதனத்தைப் பொருத்த சுமார் ரூ. 35 லட்சம் ஆகும். அப்படிப் பொருத்தினால், ரயில் தீ விபத்துக்குள்ளாகும்போது பெரும் உயிர்ச் சேதத்தை நிச்சயம் தவிர்க்க முடியும். ஆனால், 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் ரயில் பெட்டிகளில் தீயணைப்புக் கருவிகள் வைக்க மொத்தமாகவே ரயில்வே துறை ஒதுக்கிய தொகை ரூ.8.63 கோடிதான் (கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில்களில் நேரிட்ட தீ விபத்துகளால் ஏற்பட்ட சேதம் மட்டும் ரூ. 15 கோடி). விளைவு, பல ரயில்களில் தீயணைப்புக் கருவிகள் கிடையாது. உதாரணமாக, இப்போது விபத்துக்குள்ளாகியிருக்கும் நாந்தேத் விரைவு ரயிலிலேயே தீ எச்சரிப்புக் கருவி கிடையாது. விளைவை அனுபவிக்கிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாகவே மக்களிடம் ‘நல்ல பெயர் வாங்க’ பயணிகள் கட்டணக் குறைப்பில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர் ரயில்வே அமைச்சர்கள். ஆனால், குறைந்த கட்டணத்துக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்!

தமிழ்த்திரை 2013 நட்சத்திரங்கள் மின்னுவதும்.. மங்குவதும்...




புதிய சிந்தனை, புதிய திரைமொழியோடு திறமையான இயக்குநர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இன்னும் திரைப்படம் இயக்குநரின் ஊடகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்பவை, முன்னணி நட்சத்திரங்களின் முதுகில் சவாரி செய்பவையாகவே இருக்கிறன. 2013ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்த்தால், மின்னிய நட்சத்திரங்கள், மின்னுவதுபோலத் தோற்றம் காட்டிய நட்சத்திரங்களின் செல்வாக்கு நிலையை, பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிவரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.


மாஸ் ஹீரோக்களைப் பொறுத்தவரை நடப்பாண்டில் ரஜினியின் கணக்கில் வரவு வைத்திருக்க வேண்டிய ‘கோச்சடையான்’ வெளியாகவில்லை. என்றாலும் ரஜினியின் எந்திரன் பட வசூல் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.


ஆனால் கொஞ்சமும் அசைத்துப் பார்க்க முடியாதபடி ஜம்மென்று அடுத்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் கமல் ஹாஸன். அலையாகப் புறப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து வெளியான கமலின் விஸ்வரூபம், ரசிகர்களை ஏமாற்றவில்லை. கதை, திரைக்கதை, படமாக்கல், தொழில்நுட்பம், இயக்கம், நடிப்பு என எல்லா வகையிலும் கமல் தனது ஆளுமையால் ரசிகர்களை வியக்க வைத்த படமாகவே விஸ்வரூபம் இருந்ததால், பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.


 விஸ்வரூபத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டுமே 30 கோடி. மற்ற தென்மாநிலங்கள், இந்திப் பதிப்பின் வசூல், வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்து 85 கோடியை ஈட்டியிருக்கிறது. கமலை நடப்பாண்டின் ‘மேன் ஆஃப் த பாக்ஸ் ஆபீஸ்’ என்று சொல்லிவிடலாம். ஒரு பொழுதுபோக்கு படத்தின் ஊடாகக் கையாண்ட இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். கமலுக்கு அடுத்த நிலையில் நடப்பாண்டில் யார் செல்வாக்கு செலுத்தினார் என்பதுதான் விஜய் - அஜித் ரசிகர்களிடையே நிலவும் மில்லியன் டாலர் கேள்வி. சந்தேகமில்லால் அஜித் முன்னால் வந்து நிற்கிறார். அதற்குக் காரணம் ‘ஆரம்பம் ’ படத்தின் வசூல். தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 35 கோடி வசூல் செய்த ஆரம்பம், ஆந்திராவிலும் கணிசமாக வசூல் செய்தது, ஆரம்பம் படத்தின் மொத்த வசூல் 65 கோடி.


விஜயைப் பொருத்தவரை கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தின் 80 கோடி ரூபாய் வசூல்தான் அவரது அண்மைய சாதனை. கடந்த 4 ஆண்டுகளில் விஜய்க்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. ஆனால் நடப்பாண்டில் அரசியல் வசனச் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சற்றுத் தாமதமாக வெளியான ‘தலைவா’ 50 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழ்நாட்டில் 13 கோடிகளை மட்டுமே இது வசூல் செய்தது.


அஜித்துக்கு அடுத்த நிலையில் சூர்யாவின் சிங்கம் 2 படம் 60 கோடியை வசூலித்திருக்கிறது. இதனால் கமல், அஜித் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் சூர்யா ஒளிர்விட ஆரம்பித்திருக்கிறார்.


அஜித் - விஜய்க்கு இணையாக வியாபாரக் களத்தில் நின்ற சியான் விக்ரமுக்கு கடந்த ஆண்டில் தாண்டவம் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது. இதற்கிடையில் ஹிந்தியில் தயாராகி, தமிழில் டப் செய்யப்பட்ட ‘டேவிட்’ படம் சில நாட்கள்கூடத் திரையரங்குகளில் இல்லை. தனது எல்லாச் சறுக்கல்களுக்கும் தீர்வாக அமையும் என்று ஷங்கரின் ’ஐ’ படத்தில் நடித்துவருகிறார் விக்ரம். ஷங்கரின் இயக்கமும், ஐ படக் கதாபாத்திரதுக்கான விக்ரமின் உழைப்பும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கின்றன.


விக்ரமுக்கு அடுத்த நிலையில் வந்த சிம்பு - தனுஷ் இருவரில், சிம்புவுக்குக் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘போடா போடி’ படத்துக்குப் பிறகு எந்தப் படமும் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில் தற்போது பாண்டிராஜ், கௌதம் மேனன் என்று சுறுசுறுப்பைக் கூட்டியிருக்கிறார்.


தனுஷ் இந்திப்பட உலகில் அறிமுகமான ‘ராஞ்சனா’ 100 கோடி வசூலை அங்கே ஈட்டியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதே படம் தமிழில் அம்பிகாபதியாக வெளியாகி 8 கோடி மட்டுமே வசூல் செய்தது. மரியானில் தனுஷின் நடிப்பு விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும் படம் வெற்றிபெறவில்லை. ‘நையாண்டி’ படமும் மோசமாகத் தோல்வியடைந்தது.


வசூல் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்துகொள்ள வேண்டும் என்று துடித்துவந்த விஷாலின் தொடர் தோல்விக்கு ‘பாண்டிய நாடு’ முற்றுப்புள்ளி வைத்தது. இந்தப் படத்தின் மொத்த வசூல் 40 கோடி. இதற்கு முன்பு வெளியான பட்டத்து யானை சுமார் என்று சொல்லப்பட்டாலும் 20 கோடியை வசூல் செய்திருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் மதகஜராஜா படம் 2014இல் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.


இதற்கிடையில் வழக்கமான ஹீரோயிசப் படங்களில் ஆர்வம் காட்டும் ஆர்யா, வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலும் ஆரம்பம் போன்ற மல்டி ஸ்டார் படங்களிலும் நடிக்கத் தயங்குவதில்லை. ஜெய் - நயன்தாராவுடன் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’, 30 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்துக்கு முன்பு வெளியான சேட்டை தோல்விப் படம் என்றாலும் 20 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆர்யாவை வியாபாரத்தின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் உலகம் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில் அவரது அடுத்த நம்பிக்கை ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘புறம்போக்கு’.


ஜெயம் ரவியைப் பொருத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவா இயக்கத்தில் நடித்த ‘எங்கேயும் காதல்’ 20 கோடி வசூல் செய்ததோடு சரி. நடப்பாண்டில் வெளியான ஆதிபகவன் வெற்றி பெறவில்லை. பாக்ஸ் ஆபீஸில் தொடந்து ஆதிக்கம் செலுத்திவரும் ஹீரோக்களின் பட்டியலில் சசிகுமாரும் இந்த ஆண்டு இடம்பிடித்திருக்கிறார்.


சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விமல், விக்ரம் பிரபு ஆகிய வளரும் ஹீரோக்களின் சின்ன பட்ஜெட் படங்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், என அனைவரும் கொண்டாடும் படங்களாகியிருக்கின்றன.


(கட்டுரையில் கூறப்படும் தகவல்கள் திரையரங்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களிலிருந்து திரட்டியவை)


இந்த ஆண்டின் நாயகிகள்  


தமிழ்ப் பெண்ணா, கேரளப் பெண்ணா, இல்லை வடநாட்டு மாடல் அழகியா என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் போதும், 10 ஆண்டுகளைக் கடந்தும் எங்களால் வெற்றிக் கதாநாயகியாக நீடிக்க முடியும் என்று நிரூபித்தபடி தொடர்கிறார்கள் த்ரிஷாவும் நயன்தாராவும். த்ரிஷாவுக்கு மவுசு குறைந்துவிட்டது, அவர் தனது கல்யாணத்தைத் திட்டமிட்டுவருகிறார் என்று செய்திகள் வெளியான நேரத்தில், த்ரிஷா தன் மந்திரப் புன்னகையால் அவற்றை ஊதித் தள்ளிவிட்டார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் தன்னை விட வயதில் குறைந்த ஜீவாவின் காதலியாக நடித்த அவர், மென்மையான கதாபாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தினார். தோற்றத்தில் இளமையும் நடிப்பில் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. சமரில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அதிலும் அவரது நடிப்பும் அழகும் பாராட்டப்பட்டன.


இன்னொரு வெற்றி நாயகியான நயன்தாராவைச் சர்ச்சைகள் சுழற்றியடித்தன. அவரும் ஓய்வுபெறுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நயன்தாராவின் வசீகரம், சர்ச்சைகளிலிருந்து அவரை விடுதலை செய்தது. இவரும் தன்னைவிட இளையவர்களான ஜெய், கோபிசந்த் ஆகியோருடன் நடிக்கிறார். தமிழில் அதிக ஊதியம் பெறும் நாயகி இவர்தான். இந்த ஆண்டு ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்கள்; இரண்டிலும் வெற்றி என்று தொடரும் இவரது பயணத்தின் அடுத்த மைல்கல் கமல் படமாக இருக்கலாம்.


ஹன்சிகாவின் குழந்தைத்தனமான தோற்றமும் அழகும் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில், அவர் நடிக்கும் படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அவர் கொண்டாடப்படுகிறார்.


காஜல் அகர்வால், அனுஷ்கா இருவருமே தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் தமிழில் இந்த ஆண்டு பின்தங்கி விட்டார்கள். வந்த படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காஜலுக்கு ‘அழகுராஜா’வும் அனுஷ்காவுக்கு ‘இரண்டாம் உலக’மும் நல்ல பெயரை வாங்கித்தரவில்லை.


இளம் கதாநாயகிகளான லட்சுமி மேனன், நஸ்ரியா இருவரும் நடிப்பத் திறமைகளாகவும், கவனமான படத் தேர்வுகளாலும் கவனிக்கவைத்திருக்கிறார்கள்.

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்




2013-ம் ஆண்டில் டாப் கியரில் பயணித்த ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அந்த வேகத்தை சற்றும் குறைக்காமல் அடுத்த ஆண்டிலும் பயணிக்க தயாராகி வருகிறார். 2014-ல் ரிலீஸாகவுள்ள அவரது முதல் படம் ‘மான் கராத்தே’. இந்தப் படத்துக்காக ஹன்சிகா மோத்வானியுடன் காதல் கராத்தேவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாமல்லபுரம் சாலையில் சந்தித்தோம்.


இந்தப் படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 


முதல்லயே இப்படி தொடங்கினா எப்படி நண்பா. நீங்களே சொல்லுங்க, நாம வந்து கருத்து சொன்னா சரியா இருக்குமா? புதுசா ஒரு காதல் சொல்ல வர்றோம். துறுதுறுனு சுத்திக்கிட்டிருக்கிற வெகுளிப் பாப்பா ஹன்சிகாவை, எவ்ளோ தூரம் துரத்தி துரத்தி காதல் செய்றான் பீட்டர் (சிவா) அப்படிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன். இந்தப் படத்துல மீசை இல்லாமல் நடிச்சிருக்கேன்.


அதுக்காக உடைகள், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் மாத்த கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்துல முழுக்க முழுக்க காமெடியெல்லாம் இருக்காது. கொஞ்சம் ஆக்‌ஷன். அள்ள அள்ள காதல் இருக்கும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட கதை. அவர் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். இளைஞர்கள் ஒவ்வொருத்தருக்கும் இந்தப் படம் காதல் உணர்வைக் கொடுக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலி விருந்து.


ஷூட்டிங்ல ஹன்சிகா என்ன சொல்றாங்க? 


கதை சொல்லும்போதே ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணுன்னு எடுத்துக்கிட்டுதான் சொன்னாங்க. கதை முழுக்க ஹன்சிகா மாதிரி, ஹன்சிகா மாதிரின்னு பேசிவிட்டு அவங்க இல்லாமல் இருந்தால் எப்படின்னு யோசிச்சோம். தயாரிப்பு தரப்பில் அவங்ககிட்ட கதையைச் சொன்னாங்க. கிளைமேக்ஸ் வரைக்கும் அவங்க கேரக்டரோட முக்கியத்துவத்தை பார்த்துட்டு உடனே ஒப்புக்கொண்டாங்க.


ஷூட்டிங்குல ஹன்சிகா, பயங்கர துறுதுறு கேரக்டர். செம ஜாலிப் பேர்வழி. யாரையாவது வம்புக்கு இழுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க அமைதியா இருந்து பார்த்ததே இல்லை. அதுவும் இயக்குநர் திருக்குமரனை வம்புக்கு இழுக்கலைன்னா அவங்களுக்கு பொழுதே போகாது. அவர் என்கிட்ட வந்து ஹன்சிகா பத்தி புகார் கொடுப்பார். நம்ம சிக்கிடுவோமா நண்பா, சொல்லுங்க.

உங்க குழந்தை ஆராதனா எப்படி இருக்காங்க?

குட்டிப்பாப்பா சமத்தா அம்மாக்கூட விளையாடிக்கிட்டிருக்காங்க. பிறந்து 2 மாசம் ஆகுது. ஆனா நான் அவங்களோட இருந்தது ரொம்ப குறைச்சலான நாட்கள்தான். இப்பக்கூட அவளைப் பார்த்து 20 நாட்கள் ஆச்சு. அவங்க அம்மாதான் அவங்களுக்கு எல்லாம். அவளோட விளையாட்டு, தூக்கம், புன்னகைன்னு எல்லா விஷயங்களையும் நான் செல்போன் மூலமாதான் பார்த்துக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இந்த புத்தாண்டை என் ஆராதனாவுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறேன்.


 அதேபோல அவங்க எங்களுக்கு பரிசா கிடைச்சபெறகு முதலில் வெளிவரப்போற படம் ‘மான் கராத்தே’. படம் ரிலீஸப்போ அவங்க 6 மாதக் கைக்குழந்தையா இருப்பாங்க. முதன்முதலா அப்போ அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு போகணும்னு இருக்கேன். திரையில வர்ற என்னை பார்த்துட்டு அவங்க எப்படி பாவனை காட்டப்போறாங்கன்ற எதிர்பார்ப்பு எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.


உங்க தலையில் இருந்த தொகுப்பாளர் கிரீடத்தை தூக்கி மா.கா.பா ஆனந்த் தலையில் வச்சீங்க. இப்போ அவரும் உங்களை பின் தொடர்ந்து சினிமாவுக்கு வந்துட்டாரே?


இதுதானே வேணும். அங்கிருந்து சினிமாவுக்கு வர முடியாதுங்கிற நிலையை உடைச்சிருக்கீங்கன்னு என்கிட்ட நண்பர்கள் சொல்வாங்க. அது தொடர்ந்து நடந்தா சந்தோஷம். இனிமேல் தொலைக்காட்சியை யாரும் சாதாரணமா பார்க்க மாட்டாங்க. பெரிய லிப்ட் அதுதான்னு நம்புவாங்க. அங்கிருந்து வரும்போது நிறைய கத்துக்கணும். அதுவேற இதுவேறதான். சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் மட்டும்தான் வரமுடியுது.


மா.கா.பா அப்படித்தான். நிறைய உழைப்பார். அதேபோல தொடர்ந்து எல்லாருமே வர்றது நல்ல விஷயம். இங்கே வந்துட்டோம் ஜெயிச்சிட்டோம் என்பதெல்லாம் எனக்கு இல்லை. சரியான ஆரம்பம் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாதுகாப்பானதா தொடர்ந்து கொண்டுப்போகப் போகிறேன் என்பதில்தான் எல்லாம் இருக்கு. ம்ம்ம்… பார்க்கலாம்.

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…




ஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.


    ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள்.


    எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.



    கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும்,
    சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும்,
 

 இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுத் தாருங்கள்.

    பொறுமையின்றி இருக்கும் துணிச்சலும், துணிவோடு இருக்கும் பொறுமையும் அவனுக்கு வேண்டும்.



    தன்னிடம் நம்பிக்கை வைப்பதை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அப்போது தான் மனித சமுதாயத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.”


இது லிங்கன், கடிதத்தின் முக்கியமான பகுதி மட்டுமே.


உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.


அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்…


* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?


* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?


* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?


* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?


* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?


* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?


* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?


* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?


* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?


இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்’ என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!




இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ...?




அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள
வேண்டும் ...


1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும்,


2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க


3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க


4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர்
வாங்காதீங்க


5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க


6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க


7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு ட்ரெஸ் பண்ணாதீங்க


8. ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலைய பாருங்க, பெண்கள் வந்து பேச்சு
கொடுக்குறாங்கன்னு அவுங்ககிட்டல்லாம் பேசாதீங்க


9. ப்ரெண்ட்லியா கூட பெண்களைப்பார்த்து ஸ்மைல் பண்ணாதீங்க


10. பெண்கள் டீ குடிக்க கூப்டுவாங்க, போகாதீங்க


11. பெண்கள் லிப்ட் கேட்டா கூட்டிகிட்டு போகாதீங்க, அப்பறம் பக்கத்துல
இருக்குறவங்கல்லாம் ஒங்கள தப்பா நெனச்சிப்பாங்க


12. பெண்கள் கிட்ட எப்போதும் குசுகுசுன்னு பேசாதீங்க, எப்போதும் கைல ஒரு
சின்ன ஸ்பீக்கர் வச்சிக்கோங்க


13. குட் லக்


14. சாப்டான பாட்டா, போஸ்டானியன், ஆல்டோ ஷூவெல்லாம் போட்டுகிட்டு ஆபீஸ் போகாதீங்க, பெண்களுக்கு பிடிச்சிடும்


15. பெண்கள் ஒங்க ட்ரெஸ் பாத்து, இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு அப்படின்னா,
இனிமேல அந்த ட்ரெஸ் போடாதீங்க


16. வீட்ல நடக்குற கல்யாணம், காதுகுத்தி இதுக்கெல்லாம் பெண்களை கூப்டாதீங்க


17.கல்யாணம் ஆன ஆண்கள் ஒங்க மனைவியைப்பற்றி நல்ல விதமாக பேசுங்க (பேசுவீங்க, எனக்கு தெரியும்!), மற்ற பெண்கள் ஒங்ககிட்ட நெறுங்கவே மாட்டாங்க


18.ஆபீஸ்ல இருந்து அவுட்டிங் போம்போது, டூர் போம்போது, ஏன் லன்ஞ் சாப்ட
போம்போது, ஒங்க பைக், கார் இதுல எல்லாம் பெண்களை ஏத்திட்டு போகாதீங்க


19. ஆபீஸுக்கு போம்போது, தலை வாரிட்டு போக கூடாது, ஷேவ் பண்ணிட்டு போக கூடாது ...

மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!



கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!


               பரம எதிரியின் வாயாலும் பாராட்டு பெற வேண்டும். அதுதான் நாம் மாறியதற்கான அடையாளம்.

துரோகியையும் அன்னை யாகக் காண்பதுதான் ஆத்ம ஞானமாகும்.

நமது ஆழ்மனதில் மறைந்துள்ள ஆன்மாவை வெளிக்கொண்டு வரவே நமக்கு துரோகம் செய்கிறார் கள். இதைப் புரிந்து கொள்வது பூரண ஞானம்.

எதிரி நம் வாழ்வைச் சிறப்பாக்கும் சிற்பி என்று உணர்ந்தால், அவர் நமக்கு எதிரியில்லை; ஆன்மிகத் தோழன்.

தன்னுடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்பவருக்கு யாராலும் தொந்தரவு வராது. லட்சியத்தோடு வாழ்பவர்கள் இறைவனை சுலபமாக நெருங்கிவிட முடியும். சராசரி மனிதனாக இருக்கும் வரைதான் பிரச்சினை வரும். சமூகப் பழக்கங்களை விட்டு விலகி இறைப்பண்புகளை ஏற்றுக் கொண்டால் இன்பம் மட்டுமே உண்டு.

இழந்தது எவ்வளவு பெரியதானாலும்- எவ்வளவு நாள் கடந்ததானாலும் பிரார்த்தனை அதனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் சுத்தம் இருந்தால்- நல்ல பழக்கங்கள் இருந்தால் தீய சக்திகள் வரவே முடியாது.

எவரின் மனம் அவருக்கு அடங்குகிறதோ அவர் தெய்வத்தைவிட உயர்ந்தவர்.

நாள்தோறும் தண்ணீர், மின்சாரம், நேரம் விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். அருள் விரயமாவதன் ரகசியம் இதுவே. பேசும்போது 100 வார்த்தைகளில் 90 வார்த்தைகளைத் தவிர்க்கலாம். அளவோடும் கனிவாகவும் பேசினால் முன்னேற்றத் திற்கு வேண்டிய சக்தியைச் சேமித்து உயரலாம்.

குறைந்த பட்ச கடனாக இருந்தாலும் மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் வரவேண்டிய பணம் வராது. எதிர்பார்த்த வாய்ப்புகளும் தடைப்படும்.

தேவையற்ற பொருட்களை வீட்டிலோ அலுவலகத்திலோ முடக்கி வைக்கக் கூடாது. இது வாழ்வின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். கடும் நோய்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் இதுவே காரணம். அடுத்தவர் கண்ணோட்டத் தையும் சரி என ஏற்கும் மனப்பான்மை வரவேண்டும். மனம் உயர இதுவே சிறந்த வழி.

குறித்த நேரத்தில் செயல்படும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். முறையாகத் திட்டமிட்டு, எந்தச் செயலையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுச் செய்யும் பழக்கம் வெற்றியை மட்டும் கொடுக்கும்.

பொறுத்துக்கொள்ள முடியாத இடத்தில் எல்லாம் பூரண மௌனத்தைக் கடைப்பிடித்து வெற்றி காண வேண்டும். வேண்டிய வரம் உடனே பெற இது சிறந்த முறை.

உங்கள் குரலைத் தாழ்த்தி, எதிரில் உள்ளவருக்கு மட்டும் கேட்கும் அளவுக்குப் பேசுவது உயர்ந்த குணம். தற்செயலாகக் காதில் விழுவதும், கண் முன்னால் நடப்பதும் தற்செயலானவை அல்ல. அது நம் வாழ்வில் நடக்கப் போகும் அறிகுறிகளாகும். நாம் விழிப்பாக இருந்தால் அவை நற்பலன்களாக முடியும்.

தினமும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குத் தியானம் உதவியாக இருக்கும். வளர்ச்சி வேண்டு மெனில் பேசும் பேச்சுக்களின் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்த வேண்டும். நமது நடவடிக்கைகள் யாவும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

தவறு என்று தெரிந்ததும் அதைச் செய்ய மறுப்பவருக்கு வருமானத் தட்டுப்பாடு வராது. அதிர்ஷ்டம் வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமானால் அதிர்ஷ்டம் அரை நிமிடம்கூட காத்திருக்காது.

யார்மீது கோபம் வந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்டுவிடுவது கருமத்தைக் கரைக்க உதவும்.

AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!





AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!



கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.

முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE ஐ அப்படியே TYPE செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள். (c,d,e,f,g,h,i,k mentioned are Driver Letters. If you have more than k: you can add it)

 cd\
 c:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 d:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 e:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 f:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 g:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 h:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 i:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 j:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 k:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf


இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!



வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.


கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.


பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.


முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

மூளையைத் தூங்க விடாதீர்கள்...?




பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்


இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.


ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள்.

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

 
back to top