.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, October 31, 2014

கல்கண்டு (2014) - திரைவிமர்சனம்

நாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை.

அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். ஆனால், இளையவனான கார்த்திக்கோ பிளஸ்-2-வில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார். இதனால், அவரை மருத்துவ படிப்பு வைக்க முடியவில்லை.

இதனை தனது அண்ணனிடம் சொல்கிறார் கார்த்திக். அவரோ, பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கிடலாம் என ஆலோசனை கூறுகிறார். அதன்படி, முக்கிய அமைச்சரிடம் பேசி, பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்க ஏற்பாடு செய்கிறார். அந்த பணத்தை கார்த்திக்கே அமைச்சரிடம் கொடுக்க செல்கிறார்.

பணத்தை வாங்கிக் கொண்ட அமைச்சர் அவரது ரிஜிஸ்டர் நம்பரையும், பேரையும் எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதை எழுதிக் கொடுக்கும் கார்த்திக் தன்னுடைய ரிஜிஸ்டர் நம்பரான 10015-ஐ 1015 என்று தவறுதலாக எழுதிக் கொடுத்துவிடுகிறார். பின்னர், மாணவர் சேர்க்கைக்கான பெயர் விவரம் வெளியிடப்பட்டதில் கார்த்திக் பெயர் வரவில்லை.

கோபமடைந்து அமைச்சரிடம் சென்று நியாயம் கேட்கிறான் கார்த்திக். அமைச்சரோ, அவன் எழுதிக்கொடுத்ததை நினைவு கூர்கிறார். அப்போது கார்த்திக் தான் செய்ததுதான் தவறு என்பதை உணர்ந்து அமைச்சரிடம் கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால், அவரோ ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி கார்த்திக்கை அனுப்பி விடுகிறார்.

பின்னர், சோகத்துடன் திரும்பும் கார்த்திக், வீட்டில் இந்த உண்மையை மறைத்து, தனக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிட்டதாகவும், அதற்காக சென்னைக்கு போவதாகவும் கூறிவிட்டு சென்னைக்கு வருகிறார். சென்னையில் வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்குகிறார்.

அதே லாட்ஜில் தங்கியிருக்கும் அழகப்பன் (கஞ்சா கருப்பு), ராமநாதன் (சாமிநாதன்), டவுட் செந்தில் ஆகியோர் இவருக்கு நண்பர்களாகிறார்கள். ஒருநாள் தன்னுடைய சோகத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் கார்த்திக்கிடம் உன்னுடைய பணத்தில் மெடிக்கல் சீட் வாங்கி படிப்பவர் யார் என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த பணத்தை வாங்குவோம் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

அதன்படி, மெடிக்கல் காலேஜ் பியூனின் உதவியோடு அந்த ரிஜிஸ்டர் நம்பருக்குண்டான நபரை தேடிக் கண்டுபிடிக்கிறார் கார்த்திக். அவர்தான் நாயகி கார்த்திகா (டிம்பிள் சோப்டே). அவரைப் பார்த்ததுமே காதல் வயப்பட்டு விடுகிறார் கார்த்திக். அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஆனால், அவளோ இவனை கண்டுகொள்வதாக இல்லை.

ஒருநாள் அவளிடம் தன்னுடைய காசில்தான் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது என்றும், பணத்தை திருப்பிக் கொடு, இல்லையென்றால் என்னை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் கார்த்திக். வேறுவழி தெரியாத கார்த்திகாவும், தோழியின் ஆலோசனைப்படி கார்த்திக்கை காதலிப்பதாக ஒப்புக் கொள்கிறாள்.

படிப்பு முடிந்ததும் கார்த்திக்கிடம் சொல்லிக் கொள்ளாமல் அவளுடைய சொந்த ஊருக்கு சென்று விடுகிறாள் கார்த்திகா. அவள் எங்கு சென்றால் என்பது தெரியாமல் அவளை தேடி அலைகிறார் கார்த்திக்.

இறுதியில், கார்த்திகாவை தேடிக் கண்டுபிடித்து அவளுடன் ஒன்று சேர்ந்தாரா? கார்த்திக்கின் தில்லு முல்லுவை அவரது பெற்றோர்கள் அறிந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கஜேஷ், அவருடைய அப்பா ஆனந்த் பாபுவை அப்படியே திரையில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார். ஆட்டத்திலும், கொண்டாட்டத்திலும், நடிப்பிலும் தன்னுடைய தாத்தா நாகேஷ், அப்பா ஆனந்த் பாபு ஆகியோரின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். நாயகியிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். இறுதிக் காட்சியில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் அண்ணனாக வரும் அகிலுக்கு சிறப்புத் தோற்றம்தான் என்றாலும், அழுத்தமான நடிப்பு. அண்ணனுக்குண்டான பொறுப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

நாயகி டிம்பிள் சோப்டே அழகாக இருக்கிறார். தாவணியில் மிகவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் கஞ்சா கருப்பு, சாமிநாதன், டாடி ஒரு டவுட் செந்தில் ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு. மெடிக்கல் ரெப்பாக வரும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார். மனோபாலாவை, மகாநதி சங்கரின் ஆட்கள் அடிக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

பாசம், காதல், நகைச்சுவை கலந்த கலவையாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார். திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தாலும், படத்தை இறுதிவரை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ், டுவிஸ்டுகளை வைத்து கொஞ்சம் குழப்பமடையவும் வைத்திருக்கிறார்.

கே.வி.கே.சுரேஷின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். கண்ணனின் இசையில் மீனே வாஸ்து மீனே பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘கல்கண்டு’ தித்திக்கும்.

Thursday, October 30, 2014

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? அப்ப இதை படிங்க..!




உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

அப்ப இதை படிங்க..!


கொசு ஒரு பிரச்சனையா?


இது 100% வேலை செய்யும்...!


உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!


ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.


ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது..?



குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

Tuesday, October 28, 2014

தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி.பி., சுகர்..!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி..! சுகர்..!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே!

உணவுப் பழக்கம் தனிமனித உரிமை..!


 நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான்.

கண்ணப்ப நாயனாரின் பன்றிக்கறி

சைவ மதத்தின் பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக்கறி படைத்தவர்), சிறுத்தொண்ட நாயனாருக்கும் (பிள்ளைக்கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்துவிட்டு, கடவுளரைச் சைவமாக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் காளத்திநாதனிடம் வேண்டுவதாக இவ்வாறு பாடப்பட்டுள்ளது:

“நாதனே! அமுது செய்ய
  நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
  கொண்டிங்கு வருவே னென்பார்!”

சைவ உணவுமயமாக்கல்

சமீப காலங்களில் சைவ, அசைவ உணவுகள் பற்றிய பட்டிமன்றங்கள் பொதுவெளிகளில் பிரபலமாகியுள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவைச் சத்துணவுத் திட்டம் என்று அறிவித்த அரசு, ஏழைக் குழந்தைகளின் புரதச்சத்து போதாமையைக் கருதி, வாரத்தில் மும்முறை, அவித்த முட்டைகளை அளித்து வருகிறது. இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பேதும் இல்லாதது மட்டுமன்றி, தமிழகக் குழந்தைகளின் உடல்நலம் பெரிதும் முன்னேறியுள்ளது. முட்டை எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கப்பட்டுவருகிறது. எனினும் மதிய உணவில் முட்டையைத் தவிர்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சொற்பமே.

பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தும் மத்தியப் பிரதேசத்திலும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தைச் சீராய்வு செய்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், வாரம் மும்முறை அவித்த முட்டைகள் அளிக்கப்பட்டன. இந்து மதத்தின் பாதுகாவலன் என்று அவதரித்துள்ள அந்த அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டைகள் போடுவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையானோர் சைவர்கள் என்றும், பெற்றோர்கள் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்றும் விளக்கம் கூறினார். இதைப் பற்றி விமர்சனம் செய்த ஊடகங்கள் மத்தியப் பிரதேசத்தில் 35 சதவீதத்தினரே சைவர்கள் என்று கூறியது. இந்து மதத்தை ஒருமுகப்படுத்தும் செயல்திட்டத்தில் சரஸ்வதி வந்தனம், சூரிய நமஸ்காரம், கோ பூஜை என்று தொடர்ச்சியாகப் பள்ளிக்கூடங்களைத் தங்களது சோதனைக்கூடங்களாக்கியுள்ள பா.ஜ.க-வினரின் அடுத்த முயற்சியே சைவ உணவுமயமாக்கல் திட்டமாக இருக்கலாம்.

சம்ஸ்கிருதமயமாக்கல்
சைவ, வைணவ மதங்களில் மறுமலர்ச்சி என்று சொல்லக்கூடிய 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சமண மதத்துடன் கருத்துப் போர் நடத்திய பின் ஏற்பட்ட புதிய மாறுதலே சைவ உணவையும் மத வழக்கங்களுடன் பிணைக்கும் செயல். பக்தி மார்க்கத்தைப் பலதரப்பட்டவர்களிடமும் எடுத்துச் சொல்லும் முயற்சியில் எழுதப்பட்டவையே நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வாழ்க்கைப் புராணங்கள். அனைத்துச் சாதியினரையும் இணைக்கும் வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை, புராணங்களாக்கப்பட்டது. இன்றும் சைவ உணவுப் பழக்கம் என்பது, சாதிக்கட்டுமானத்தின் உயர்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில சாதியினரைத் தவிர்த்து, மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. சாதிக்கட்டுமானத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களை அடுத்த உயர்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதை ‘சம்ஸ்கிருதமயமாக்கல்’ என்று சமூகவியல் அறிஞர் எம்.என். னிவாஸ் குறிப்பிட்டுள்ளார். அசைவ உணவு உண்டுவந்த சில சமூகத்தினரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். அதுபோலவே “நீங்களும் உஜாலாவுக்கு மாறவில்லையா?” என்று கேட்பது தவறு.

பிராமணர்கள் அசைவம் உண்பார்களா?

உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதைச் சமயக் கட்டுப்பாடாக ஆக்கவும் அதையொட்டி மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதும் ஏற்கத் தக்கதல்ல. வேத காலத்திய பிராமணர்கள் புலால் உண்டிருக்கிறார்கள். அதேபோல், இன்றைக்கும் வடஇந்திய பிராமணப் பிரிவுகள் சிலவற்றில் மீன் மற்றும் ஆட்டுக்கறி உண்பது பழக்கத்தில் உள்ளது. அதையெல்லாம் மூடிமறைத்து, சைவ உணவுப் பழக்கத்துக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திருப்ப முனைவது வீண் செயல். ‘சர்வதேச சைவர்கள் காங்கிரஸ்’ கூட்டங்களில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட பிரமுகர்களைப் பேசச் சொல்வதும் அது மட்டுமே உலகத்தின் மிகச் சிறந்த நெறிமுறை என்று பிரச்சாரம் செய்வதும் பலரது மனதையும் புண்படுத்தும். வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மிருகங்களைப் பலியிடுவதைத் தடைசெய்யச் சட்டம் இயற்றிய தமிழக அரசு, மக்களின் கோபக் கனலைக் கண்டு விரைவிலேயே அந்தச் சட்டத்தை ரத்துசெய்ததை இங்கு நினைவுகூரலாம்.

உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களைத் தனிமைப்படுத்துவதும், அந்தப் பழக்கங்களைக் கேலிசெய்வதும் விரும்பத் தக்க செயல் அல்ல. இன்றைக்குச் செய்திப் பத்திரிகைகளில் ‘வாடகைக்கு வீடு’பற்றி வரும் வரி விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும். நகர வீட்டு உரிமையாளர் பலர் தங்கள் வீட்டில் குடியிருக்க வருவோர் சைவமாக இருக்க வேண்டும் என்ற விளம்பரங்கள்தான் பெரும்பான்மையானவை. உணவுப் பழக்கத்தை வைத்து பிராமணர் அல்லாதவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களைத் தவிர்க்கவே இத்தகைய புத்திசாலித்தனமான ஏற்பாடு. அசைவர்கள் வாடகை வீடு பிடிக்க எங்கு செல்வார்கள்? என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறுவதில்லை. அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், நிறுவனங்களின் குடியிருப்புகள் போன்றவற்றில் குடியிருப்போருக்கு இடையே இந்தப் பிரச்சினைகள் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைவ நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் மதுரை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி விடுதிகளில் அசைவ உணவு கிடைப்பதில்லை என்று அங்குள்ள வக்கீல்கள், வழக்கறிஞர் ரத்தினத்தின் தலைமையில் போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்களது கோரிக்கைக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை எதிர்த்து வளாகத்தில் உள்ள விடுதியில் ஒரு நாள் அவர்களே அசைவ உணவை விநியோகிக்க முற்பட்டனர். ஈத் பண்டிகை அன்று ஒட்டகங்களை வெட்டக் கூடாதென்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஒட்டகங்கள் மிருகங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராததோடு மட்டுமல்லாமல், மதச்சார்பான பண்டிகைகளின்போது வெட்டப்படும் மிருகங்களுக்கு அந்தச் சட்டத்தில் விதிவிலக்கு உண்டென்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தது. சிறைக் கைதிகளை எல்லாம் அரசு சைவபட்சியாக மாற்றிவிடாமல் இருக்கவும், அந்தக் கைதிகளுக்கும் புரதச் சத்து தேவை என்பதாலும் தமிழகச் சிறைகளிலும் வாரம் ஒருமுறை அசைவ உணவு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவை ஏற்று சிறைக் கைதிகளுக்கும் இப்போது அசைவ உணவு வழங்கப்படுவது பாராட்டத் தக்க செயல்.

மத உணர்வும் கறிக் கடைகளும்

சமண மதத்தினரின் ‘பர்யூஷான்’ விரதத்தின்போது 18 நாட்கள் கறிக் கடைகளை மூடச் சொல்லி அகமதாபாத் நகராட்சி போட்ட உத்தரவை எதிர்த்து, கறிக் கடைக்காரர்கள் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் 2008-ல் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பில் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கறிக் கடைகளை மூடும்படியான உத்தரவு ஒரு சிறுபான்மை மதத்தினரைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக என்பதால், அதில் தவறில்லை என்றும் அதே சமயம், ஆண்டு முழுவதும் மக்கள் எவ்வித உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் நிர்ப்பந்திக்க முடியாது என்றும், அது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டதென்றும் கூறப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட கறிக் கடைகளில் மாமிசம் வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள், அதற்காகத் தொலைதூரங்களுக்குச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டது.

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீனும் கோழியும் விற்பனைசெய்த கடைகளை மூடிவிட்டு, பேரூராட்சிக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு போட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சாதாரண முட்டை வாங்குவதற்குக்கூட ஊருக்கு வெளியில் போக வேண்டும் என்று வற்புறுத்துவது தவறென்றும், அது பொருட்களின் விலையை உயர்த்தவே தூண்டுமென்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஈரோடு மாவட்டத்தில், கவுந்தம்பாடி வாரச் சந்தையில் மாட்டுக்கறி விற்ற அருந்ததியர் குடும்பத்திடம், கடையை மூடச்சொன்ன ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடைசெய்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததோடு மட்டுமல்லாமல், உணவுப் பழக்கங்களில் அரசின் தலையீட்டைக் கண்டித்தது.

வேறு மாநிலங்களிலிருந்து சுகாதாரக் கேடான மாமிசங்கள் நகராட்சிப் பகுதிக்குள் வருவதை, சுகாதாரத் துறை தடைசெய்வதுடன், உள்ளூரில் உள்ள ஆட்டுத்தொட்டியை நவீனப்படுத்தி, உடல்நலக் கேடு விளைவிக்காத வகையில் நல்ல சுகாதாரமான மாமிசப் பொருட்களை வழங்கும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளும் மாநகராட்சிகளும் சட்டப்படி கடமைப்பட்டுள்ளன.

பிரசவத்தின் பின்னும் இளமையாக இருக்கனுமா..? - இதைப்படிங்க...!


சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினாலும் உடல் குண்டாவது இயல்பு. முகம் மட்டுமல்லாது, வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பல இடங்களில் உடல் அமைப்பே மாறிவிடும். பிரசவத்திற்குப் பின்னர் ஒரு சிலருக்குத்தான் உடம்பு இயல்பு நிலைக்கு திரும்பும். பெரும்பாலோனோர் குண்டம்மாக்களாகவே காட்சித்தருவார்கள். இதனால் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே புது அம்மாக்கள் தங்களின் பழைய உடம்பைப் பெற செய்யவேண்டிய ஏழு வழிமுறைகளை கூறியுள்ளனர் மகப்பேறு நிபுணர்கள் படியுங்களேன்.

தாய்பால் கண்டிப்பாக கொடுக்கணும்


பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். சிலர் கட்டுடல் குலைந்து விடும் என்று தாய்ப்பாலை சில மாதங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுதான் உடல் இளைக்காமல் போவதற்கு காரணமாகிறது. எனவே பெண்கள் கண்டிப்பாக ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதனால் உடல் கண்டிப்பாக இளைக்கும்.

ஜும்பா டான்ஸ் ஆடுங்க


நடனமாடுவது ஒருவகை உடற்பயிற்சிதான். லத்தின் நடனமான ஜும்பா நடனத்தை ஒருமணி நேரம் ஆடுவதன் மூலம் உடலில் 500 கலோரிகள் வரை குறைகிறதாம். இதனால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பாடு சரியா இருக்கணும்


கர்ப்பகாலத்தில் எந்த அளவிற்கு உணவில் கவனம் செலுத்தினோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபாஸ்ட் புட், எண்ணெயில்பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். காய்கறிகள், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

குட்டீஸ் உடன் வாக்கிங்

வீட்டுக்கு அருகாமையில் பார்க் அல்லது பீச் இருந்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வாக்கிங் போகலாம். அந்த வசதி இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நன்றாக ரவுண்ட் அடிக்கலாம். இதனால் உடல் மெலியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் அடிங்களேன்

கிராமங்களில் இருப்பவர்களுக்கு ஆறு, குளம் என நன்றாக நீந்திக்குளிக்க இடம் இருக்கும். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வசதி குறைவுதான். எனவே கண்டிப்பாக நீச்சல் குளத்திற்குச் சென்று நன்றாக நீந்தி பயிற்சி செய்யுங்கள். இது உடல் அமைப்பை பழைய நிலைக்கு மாற்றும்.

தூக்கம் அவசியமானது…

பிறந்த குழந்தையை வைத்திருப்பவர்கள் சில மாதங்கள் வரை தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் தாய்மார்கள் கண்டிப்பாக நன்றாக தூங்கவேண்டியது அவசியம். இதனால் செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு தேவையற்ற இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் கரையும். உடலும் பழைய நிலைக்குத் திரும்பும்.

ரிலாக்ஸ்சா இருங்களேன்

பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு ஒருவித மனஅழுத்தம் ஏற்படுவது இயல்புதான். உடல் இளைக்காமல் போவதற்கு இந்த மனஅழுத்தமும் ஒருவகையில் காரணமாகிவிடும். எனவே தியானம், மெடிடேசன் செய்து மனஅழுத்தத்தை போக்குங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்

கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா..? தவறா..?


பல கல்லூரி மாணவிகள், மற்றும் இளைஞிகள் “காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் அணிய விரும்புகிறார்கள்.அந்த காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்களில் சில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மலர்கள், அல்லது விருப்பமான நிறங்களில் எல்லாம் கிடைக்கின்றன.” கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? என்றும் கேட்கிறார்கள்.கண்ணாடி அணிவதை தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப் பிரசாதம்.

அதே நேரம் எச்சரிக்கை, ஒரு தகுதி வாய்ந்த கான்டாக்ட் லென்ஸ் நிபுணரிடம், மையத்திற்கு சென்று அணிவதே சிறந்தது.

ஆன் லைனில் வாங்கி அணிவது கண்ணை இழப்பதற்க்கான முன்னுரை.

மேலும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை உங்களுக்கு வழங்கிய நிபுணர் சொன்ன அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு சமையல் வேலை செய்யக்
கூடாது.

நெருப்பின் அருகே செல்லக்கூடாது.

உங்கள் உங்கள் கான்டாக்ட் லென்ஸை நண்பர்கள் அணிந்து கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸை நம்ம கார்ப்பரேஷன் தண்ணீர், மினரல் வாட்டரில் எல்லாம் அலம்பக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் வாங்கியபோது அதற்கென்று கொடுத்த திரவத்தில் தான் அலம்ப வேண்டும்.

முக்கியமான விஷயம் – கண்ணாடி அணிவதற்கான கண் பரிசோதனையும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்க்கான கண் பரிசோதனையும் வேறு வேறு.

கண்ணாடிக்கான ப்ரிஸ்க்ரிப்ஷனை வைத்துக் கொண்டு உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வழங்க முடியும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஒருவேளை, உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வேண்டாம் கண்ணாடியே அணிந்து கொள்ளுங்கள் என்று கான்டாக்ட் லென்ஸ் நிபுணர் மறுத்து விட்டால், வேறொருவரை சந்தித்து அல்லது நீங்களாகவே ஒரு கண்ணாடிக்கடைக்கு சென்று கான்டாக்ட் லென்ஸ் வாங்கி அணிந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் கார்னியா (விழி வெண் படலம்) கான்டாக்ட் லென்ஸை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வலுவில்லாமல் மெலிதாக இருக்கலாம். ஒரு நல்ல ஃப்ரேம் செலக்ட் செய்து கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் கண்ணாடி உங்கள் அழகை மட்டுமல்ல, உங்கள் தன்னம்பிக்கையயும் அதிகரிக்கக்கூடும்.

 
back to top