.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label சிந்தனைக்கு. Show all posts

Tuesday, October 28, 2014

கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா..? தவறா..?


பல கல்லூரி மாணவிகள், மற்றும் இளைஞிகள் “காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் அணிய விரும்புகிறார்கள்.அந்த காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்களில் சில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மலர்கள், அல்லது விருப்பமான நிறங்களில் எல்லாம் கிடைக்கின்றன.” கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? என்றும் கேட்கிறார்கள்.கண்ணாடி அணிவதை தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப் பிரசாதம்.

அதே நேரம் எச்சரிக்கை, ஒரு தகுதி வாய்ந்த கான்டாக்ட் லென்ஸ் நிபுணரிடம், மையத்திற்கு சென்று அணிவதே சிறந்தது.

ஆன் லைனில் வாங்கி அணிவது கண்ணை இழப்பதற்க்கான முன்னுரை.

மேலும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை உங்களுக்கு வழங்கிய நிபுணர் சொன்ன அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு சமையல் வேலை செய்யக்
கூடாது.

நெருப்பின் அருகே செல்லக்கூடாது.

உங்கள் உங்கள் கான்டாக்ட் லென்ஸை நண்பர்கள் அணிந்து கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸை நம்ம கார்ப்பரேஷன் தண்ணீர், மினரல் வாட்டரில் எல்லாம் அலம்பக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் வாங்கியபோது அதற்கென்று கொடுத்த திரவத்தில் தான் அலம்ப வேண்டும்.

முக்கியமான விஷயம் – கண்ணாடி அணிவதற்கான கண் பரிசோதனையும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்க்கான கண் பரிசோதனையும் வேறு வேறு.

கண்ணாடிக்கான ப்ரிஸ்க்ரிப்ஷனை வைத்துக் கொண்டு உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வழங்க முடியும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஒருவேளை, உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வேண்டாம் கண்ணாடியே அணிந்து கொள்ளுங்கள் என்று கான்டாக்ட் லென்ஸ் நிபுணர் மறுத்து விட்டால், வேறொருவரை சந்தித்து அல்லது நீங்களாகவே ஒரு கண்ணாடிக்கடைக்கு சென்று கான்டாக்ட் லென்ஸ் வாங்கி அணிந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் கார்னியா (விழி வெண் படலம்) கான்டாக்ட் லென்ஸை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வலுவில்லாமல் மெலிதாக இருக்கலாம். ஒரு நல்ல ஃப்ரேம் செலக்ட் செய்து கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் கண்ணாடி உங்கள் அழகை மட்டுமல்ல, உங்கள் தன்னம்பிக்கையயும் அதிகரிக்கக்கூடும்.

Thursday, July 3, 2014

நான் படித்ததில் எனக்கு பிடித்தது - இதோ உங்களுக்காக...!


* பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.

* மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.

* தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடும்.

Saturday, February 1, 2014

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி..!



மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

 குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 21, 2014

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!



கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும்.

இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு.

இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும்.

 இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி செய்யும் டெக்னாலஜி பொருளை நான் இன்னும் சில நாட்களில் லான்ச் செய்ய உள்ளேன்.

மாமேதை லெனின் நினைவு தினம் இன்று..!



மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனினின் நினைவு தினம் இன்று...

உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின்.

 மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின்.

 இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார்.

 மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது.

Monday, January 20, 2014

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க..!



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான  பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா  என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்:

 கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்:

 கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை:

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட  வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை  பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: 

உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ,  அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு:


 சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா  உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி:

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில்  மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின்  போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு:

 பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.  இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்:


 மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.


8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி..!



கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.

அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.

இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது 110 கோடி குறைவு. மேலும் இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது “வாட்ஸ்அப்”, “டுவிட்டர்” மற்றும் “ஸ்நாப்ஷாட்” போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில் ”தங்களுடைய பெற்றோரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொள்வதால்.ஏனைய வலைதளங்களில் இதே போன்ற கணக்குகளை துவக்கி தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Saturday, January 18, 2014

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம் ..!



தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

* முதன்முதலில் ஒருவரிடம் பேசும்போது, தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச வேண்டும்.

* அதேபோன்று, புதிய நபரிடம் பேசும்போது, தாங்கள் பேசும் நபர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற வேண்டும்.

* பிறருக்கு வந்த அழைப்பை நாம் பெற நேரும்போது, பேசியவரை, தயவுசெய்து காத்திருக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவரை அழைத்து வருவதாக கூற வேண்டும். அதை செய்யாமல், தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே, கூப்பிட வேண்டிய நபரை சத்தமாக அழைக்கக்கூடாது.

* தொலைபேசியில் ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள நேர்ந்தால், அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவும், அரைகுறையாகவும் கேட்டுக் கொண்டு தவறான தகவல்களை தந்துவிடக்கூடாது.

* பேசிவிட்டு, தொலைபேசியை வைக்கும்போது, நன்றி என்று மறக்காமல் கூறிவிட்டு வைக்க வேண்டும்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - IGNOU



இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்பு:-

பி.ஏ.,
பி.காம்., வணிகவியல்
பி.எஸ்.சி., கணிதம்
பி.எஸ்.சி,. வேதியியல்
பி.எஸ்.சி., இயற்பியல்
பி.எஸ்.சி,. விலங்கியல்
பி.எஸ்.சி., தாவரவியல்
பி.எஸ்.டபிள்யூ., சமுகப் பணி (சோசியல் வொர்க்)
பி.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.எட்., கல்வி
பி.டெக்., கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மென்ட்
பி.டெக்., வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம்
பி.எஸ்சி (ஹானர்ஸ்)., ஆப்டோமேட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னீசியஸ்
பி.ஏ., டூரிசம் ஸ்டடீஸ்
பி.பீ.பீ ., பிரிப்ரேட்டரி புரொகிராம்
பி.பி.ஏ., ரீடைலிங் வித் தி மாடுலர் அப்ரோச்

முதுநிலை பட்டப்படிப்புகள்:-

எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., ஹிந்தி
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பப்ளிக் பாலிசி
எம்.காம்., வணிகவியல்
எம்.எஸ்.சி., டயட்டெடிக்ஸ் மற்றும் புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட்
எம்.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
எம்.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
எம்.எச்.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் அட்மினிஷ்ட்ரேஷன்
எம்.ஏ., தொலைநிலைக்கல்வி
எம்.ஏ., சுற்றுலா மேலாண்மை
எம்.பி.ஏ., மனிதஆற்றல் /நிதி/ ஆப்ரேஷன்ஸ்/மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி
எம்.ஏ., கிராமப்புற மேம்பாடு
எம்.ஏ., கல்வி
எம்.காம்., நிதி மற்றும் வரி விதிப்பு
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ்
எம்.ஏ., பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
எம்.ஏ., உளவியல்
எம்.எஸ்சி., கவுன்சிலிங் அண்ட் பேமிலி
எம்.ஏ., எக்ஸ்டென்ஷன் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (மாடுலர் புரோக்ராம்)
எம்.ஏ., அடல்ட் எஜுகேசன்
எம்.ஏ., மானிடவியல்

டிப்ளமோ படிப்புகள்:-

கிரியேட்டிவ் ரைட்டிங் இன் இங்கிலீஷ்
கிரியேட்டிவ் ரைட்டிங் இன் ஹிந்தி
ஏர்லி சைல்டுஹுட் கேர் மற்றும் எஜூகேஷன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பிரைமரி எஜூகேஷன்
மேனேஜ்மென்ட்
டூரிசம் ஸ்டடீஸ்
யூத் இன் டெவலப்மென்ட் வொர்க்
அக்வாகல்ச்சர்
நாட்டிக்கல் சயின்சஸ்
வுமன்ஸ் எம்பவர்மென்ட் மற்றும் டெவலப்மென்ட்
சிவில் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
வேல்யூ ஏடெடு புராடக்ட்ஸ் இன் புரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ்
டெய்ரி டெக்னாலஜி
மீட் டெக்னாலஜி
புரொடக்சன் ஆப் வேல்யூ ஏடெட் புராடக்ட்ஸ்
நர்சிங் அட்மினிஷ்ட்ரேஷன்
டிப்ளமோ
உருது
பிஷ் புராடெக்ட் டெக்னாலஜி

அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிப்புகள்:-

கன்ஸ்டரக்டிவ் மேனேஜ்மென்ட்
வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பவர் டிஸ்டிரிபூசன் மேனேஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:-

லைப்ரரி ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங்
மொழிபெயர்ப்பு
ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
ரேடியோ பிராசரன்
ஆடியோ புரொகிராம் புரொடக்சன்
மெட்டேனல் மற்றும் சைல்டு ஹெல்த்
ஆஸ்பிட்டல் மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட்
ஜிரியேட்டிரிக் மெடிசின்
ரூரல் டெவலப்மென்ட்
ஹையர் எஜூகேஷன்
டிஸ்டன்ஸ் எஜூகேஷன்
ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பினான்சியல் மேனேஜ்மென்ட்
ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்
மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்
இன்டலச்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ்
என்விரான்மென்ட் மற்றும் சஸ்டைனபில் டெவலப்மென்ட்
கம்யூனிட்டி கார்டியோலஜி
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
புட் சேப்டி அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட்
பிளாண்டேஷன் மேனஜ்மென்ட்
பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
இன்டர்நேஷனல் பிசினஸ் ஆப்ரேஷன்ஸ்
அனல்டிகல் கெமிஸ்ரிட்
எஜூகேஷ்னல் டெக்னாலஜி
ஸ்கூல் லீடர்ஷிப் அண்ட் மேனஜ்மென்ட்
எஜூகேஷ்னல் மேனஜ்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்
டீச்சிங் ஜெர்மன் அஸ் எ பாரின் லேங்குவேஜ்
சமூக சேவை

சான்றிதழ் படிப்புகள்:-

கம்ப்யூட்டிங்
லிட்ரசி கரிக்குலம் மற்றும் இன்ஸ்டரக்சன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
நீயூட்டிரசன் மற்றும் சைல்டு கேர்
புட் மற்றும் நியூட்ரிசன்
புட் சேப்டி
ரூரல் டெவலப்மென்ட்
கைடன்ஸ்
டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்
டீச்சிங் ஆப் இங்கிலீஷ்
பிரைமரி டீச்சிங்
சூ அப்பர் ஸ்டிச்சிங்
சூ அப்பர் கட்டிங்
சூ லாஷ்டிங் மற்றும் பினிசிங்
டூரிசம் ஸ்டடீஸ்
கிராப்ட் மற்றும் டிசைன்
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் ஸ்டடீஸ்
ஹூமன் ரைட்ஸ்
கன்ஸ்யூமர் புரொடக்சன்
லேப்ரேட்ரி டெக்னிக்ஸ்
காம்பெடன்சி என்ஹேன்ஸ்மென்ட் பார் ஏ.என்.எம்/எப்.எச்.டபிள்யூ
ஹெல்த்கேர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்
மோட்டார் சைக்கிள் சர்வீஸ் மற்றும் ரிப்பேர்
ஜெர்மன் லாங்குவேஜ்
பிசினஸ் ஸ்கில்ஸ்
நியுபார்ன் மற்றும் இன்பேன்ட் கேர்
மெட்டர்னல் மற்றும் சைல்டு ஹெல்த் கேர்

முதுநிலை சான்றிதழ் படிப்புகள்:-

பார்ட்சிபேடரி மேனேஜ்மென்ட் ஆப் டிஸ்பிலேஸ்மென்ட் ரீசெட்டில்மென்ட் மற்றும் ரீஹெபிலேஷன்
காப்பிஎடிட்டிங் மற்றும் புரூப்ரீடிங்
ரைட்டிங் பார் டெலிவிஷன்
ரூரல் சர்ஜரி

விழிப்புணர்வு படிப்புகள்:-

இன்டெலெக்சுவல் ப்ராப்பர்ட்டி ரைட்ஸ்
அப்ரிசியேஷன் கோர்ஸ் ஆன் என்விரான்மென்ட்

தொடர்புகொள்ள:-

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)
மெய்டன் கார்ஹி, டெல்லி 110 068

தொலைபேசி : 011 29532321
பேக்ஸ் : 011 29536588
வெப்சைட் : www.ignou.ac.in


உயர்க்கல்விக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?



 உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாட்டில் கல்வி கற்க வேன்டும் என்பது படிக்கும் மாணவர்கள் பலரின் கனவாக இருந்தாலும், வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிலருக்குத் தான் நனவாகிறது.

வெளிநாட்டுக் கல்வியானது திட்டமிட்டவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகிவிடுகிறது. திட்டமிடாமல் கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்களுக்கு பதட்டத்தோடு, பண விரயமும் அதிகமாகிறது. கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்கள் பலரும் உதவித்தொகைகளை பெறுவதற்கான காலத்தை கடந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

நாட்டைத் தேர்ந்தெடுங்கள்


நீங்கள் குறிப்பிட்ட பாடம்தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் அந்த படிப்பிற்கு எந்த நாடுகள் சிறந்த நாடுகள் என்பதை முடிவு செய்யுங்கள். சில பாடங்களுக்கு சில நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எதோ ஒரு நாட்டில் படிக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம் அது தவறான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

நாட்டைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? அந்த பல்கலைக்கழகங்களின் கட்டண விபரங்கள், பகுதி நேர வேலை விபரங்கள் மற்றும் குறிப்பாக அந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித்தொகைகள் குறித்த விபரங்களை முதலில் அறியுங்கள்.

சேகரித்த தகவல்களையெல்லாம் கொண்டு ஒரு அறிக்கை தயார் செய்யுங்கள். உங்களுக்கு தேர்ந்தெடுப்பது எளிதானதாக இருக்கும்.

விண்ணப்பியுங்கள்

உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும்பொழுது இதற்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பிரிக்கும் வேலையில் இறங்க வேண்டும். உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என கருதும் உதவித்தொகைக்கும் தயங்காமல் விண்ணப்பியுங்கள்.

உதவித்தொகைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகளை வைத்திருக்கும். அஞ்சல் வழியாக விண்ணப்பங்களைப் பெறலாம் என்று காலத்தை வீணாக்காதீர்கள். அதே போன்று விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கூர்ந்து படியுங்கள்.

வெற்றிகரமாக எழுதுங்கள்

உதவித்தொகையை பெறுவதற்காக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு வரக்கூடிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமான அளவு இருக்கலாம். உங்கள் விண்ணப்பம் தனித்து தெரியவேண்டும் என்றால் நீங்கள் உங்களைப் பற்றிய ஒரு கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் எழுதும் கடிதத்தில் உங்களின் தனித்திறன்கள், இதற்கு முன் கல்வியில் நீங்கள் சாதித்த சாதனைகள், உங்கள் விருப்பங்கள், எதிர்கால லட்சியங்கள், மொழித்திறன், உங்களின் உறுதி போன்றவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நீங்கள் பெறப்போகும் உதவித்தொகை உங்களுக்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விவரித்து எழுதுங்கள். ஏனெனில் ஒரு சிறந்த சுய விபரக் கட்டுரை உதவித்தொகை எளிதாகப் பெறுவதற்கு துணை புரியும்.

பரபரப்பு வேண்டாம்

உங்கள் விண்ணப்பத்தை சிறப்பாக கட்டமைத்தப் பின்னர் உடனடியாக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்புங்கள். முதலாவதாக வரும் விண்ணப்பங்களை ஆழந்து படித்து முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கடைசி நேரத்தில் பரபரப்புடன் சரியாக பூர்த்தி செய்யாமலோ, இறுதி நாளுக்குப் பிறகோ அனுப்பினால் உங்களுக்கு உதவித்தொகை கிடைப்பது அரிதான காரியமாகிவிட வாய்ப்பிருக்கிறது.

காத்திருங்கள்

உதவித்தொகைகள் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு உதவித்தொகை வழங்கும் நிறுவனத்தை தொடர்புகொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம், அமைதியாக காத்திருங்கள்.

நீங்கள் தகுதியுள்ள நபராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

Friday, January 17, 2014

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!




இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

 சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

 திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

 முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

தத்துவ ஞானி சாக்ரடீஸ் - வாழ்க்கை வரலாறு



கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

செல்போனில் புயல் அறிகுறி:வி.ஐ.டி.மாணவர்களின் லேட்டஸ்ட் சாதனை!



புயல் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பதிலாக புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விவேக் வித்யாசாகரன் மற்றும் சந்தீப் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

வி.ஐ.டி. இயந்திரவியல் மற்றும் கட்டிட அறிவியல் பள்ளி பேராசிரியர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் செல்போன் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 929 மில்லியனிலிருந்து 2014–ம் ஆண்டில் 1.15 பில்லியன் அளவிற்கு உயரும் வாய்ப்பு உள்ளது.

செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலமாக புயல் போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும் வகையில் அதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

செயற்கைகோள் தொழில்நுட்ப வசதியின் மூலம் புயல் அறிகுறிகளை வானிலை ஆராய்ச்சி மையத்தினர் பெற்று அதனை தொலைகாட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வழியாக மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு பதிலாக செல்போன் மற்றும் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான புதிய தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தனர்.

ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையை அம்மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள ராயல் மெட்ராலாஜிக்கல் சொசைட்டியில் சமர்ப்பித்தனர். அதனை ஆய்வு செய்த ராயல் மெட்ராலஜிக்கல் சொசைட்டி அதனை ஏற்றுக்கொண்டு வானிலை அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.வி.ஐ.டி. மாணவர்கள் விவேக் வித்யா சாகரன், சந்தீப் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புயல் பற்றிய அறிகுறிகளையும், அதன் வேகம், பலம் மற்றும் அமைப்பு பற்றிய தகவல்களை செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

ஆபிஸ் போகும் பெண்களெ...! உங்களுக்காக சில டிப்ஸ்...



அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்;

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரெடியா...? நாசா அறிவிப்பு....



செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும்.

நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை தரும் பெரிய சம்பளம்..!




பெயர்தான் சின்னத்திரையே தவிர அது நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ரொம்ப பெருசு. இந்தி உலகில் கோடிகணக்கில் சம்பளம் சர்வசாதாரணம். அதுவும் ரியாலிட்டி ஷோக்களுக்காக இந்தி நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் தலைசுற்ற வைக்கும்.

  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. 
  • கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி.
  •  மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், 
  • அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை.

  • தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியதுதான் அதிக பட்ச சம்பளம் எபிசோடுக்கு பத்து லட்சம்.

Thursday, January 16, 2014

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம். அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்? நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.

குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது. நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.

முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.

பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம். எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.

அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிறபோதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம். அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.

மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம். வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.

நலிவிலிருந்து மீண்ட நம்பிக்கை குரல்...!

குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி தட்டி

எழுப்பி உங்கள் பெயரென்ன என்று வினவினார் மருத்துவர். “என் பெயரை ஒரு வார்த்தையில் சொல்லவா? ஒரு வரியில் சொல்லவா? அல்லது ஒன்பது வரிகளில் சொல்லவா” என்று கேட்டு மருத்துவர்களையே அசரவைத்த நம்பிக்கை மனிதர் திரு. செங்குட்டுவன்.

பல தடைகள் தாண்டி வெற்றி பெற்ற செங்குட்டுவன் அவர் குரலை இழந்தது எவ்வாறு?
பல வருடங்களாக தன்னை ஆசிரியர் பணியில் கரைத்துக்கொண்ட செங்குட்டுவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தொலைபேசியில் யாருடனாவது பேசும்போது, திடீரென்று ஒலிக்கும் பெண் குரல் யாருடையது என்று எதிர்முனையில் இருப்பவர்கள் வினவுவார் களாம். பிறகுதான் இவர் குரல் பெண்களின் குரல் போல் மென்மையடைந்து வருவதை உணர்ந்திருக்கிறார். சிறிதும் மனம் தளராமல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட செங்குட்டு வனுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுத்தமாக குரலை இழந்து பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். வேதியியல், இயற்பியல், கணிதம் என அனைத்து பாடங்களையும் சிறப்புற நடத்துபவர் செங்குட்டுவன். அவருக்கு அவர் குரலை இழந்ததுகூட வாழ்க்கைப் பாடமாகத்தான் தோன்றியது. இவர் சில காலம் சென்னையில் தங்க நேர்ந்தது. எந்த இடத்தில் இருந்தாலும் இவருக்கு கற்றுக்கொள்ளும் தாகம் மட்டும் குறையவே இல்லை. கன்னிமாரா நூலகத்தில் பல பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என அறிந்து பயிற்சிகளில் பங்கேற்றார். பட்டியலிடப்பட்ட பல பயிற்சிகளில் மாயாஜாலம் கற்றுக்கொள்வது என முடிவு செய்தார்.

மாயாஜாலக் கலையை கற்று முடித்தபின், இவர் செய்த வித்தையில் அசந்துபோன பலரில் குறிப்பிடத்தக்கவர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மோகன் காமேஸ்வரன் அவர்கள். நிலையறிந்து இவருக்கு உதவ முன்வந்தார். செங்குட்டுவனை முழுவதும் பரிசோதித்துப் பின் மருத்துவருக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே எழுந்த உரையாடல்தான் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட சம்பவம். பொதுவாகவே அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சைக்குப் பின் என சில விளம்பரங்களை கண்டிருக்கிறோம். ஆனால் செங்குட்டுவனைப் பொறுத்த வரையில் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நம்பிக்கை நிறைந்த அசாத்திய மனிதராகவே இருந்துவருகிறார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த செங்குட்டுவன், 21 வயதில் ஆசிரியராகப் பொறுப் பேற்று பின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். அமைதியாக மேற்கொள்ளவேண்டிய ஆசிரியர் பணியை அதிரடியும் அன்பும் கலந்து மேற்கொள்வது செங்குட்டுவன் ஸ்டைல். ஆசிரியர் பணியில் இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை “டியூஷன்”.

“பெற்றோர்கள் சத்தான உணவை கொடுத்தால் பிள்ளைகள் அடுத்த வீட்டில் கை ஏந்துமா என்ன? அப்படித்தான் டியூஷனும்.” என்று ஆசிரியருக்கே உரித்தான கோபம் அவர் வார்த்தைகளில்.

குடும்பத்தில் ஆண் படித்தவராக இருப்பதைக் காட்டிலும் ஒரு பெண் படித்தவராக இருக்கும்போது எத்தனை நன்மைகள் விளையும் என்பதற்கு என் தாயார் சிறந்த உதாரணம். கண்டிப்பான தந்தை. தந்தையிடம் கற்றுக் கொண்ட ஒழுக்கமும், நேரம் தவறாமை, தாயின் பரிவும், அனைத்தையும் தாண்டி ஆசிரியர் பணியில் அடைந்த அளவற்ற மகிழ்ச்சி. இவையே, பல தடைகளை தகர்த்தெறிந்து இன்று என்னை வெற்றியாளன் ஆக்கியிருக்கிறது” என்கிறார் செங்குட்டுவன்.

குரலை இழந்து மீண்டும் பெற்றவர் மட்டுமல்ல, வாழ்வை இழந்து மீண்டும் பெற்றவர், வெற்றியும் பெற்றவர் திரு. செங்குட்டுவன்.

கட்டி பிடிங்க..! ரத்த அழுத்தம் குறையும், மூளை சுறுசுறுப்பாகும்..!



நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும்.

இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது.

இது தவிற கட்டி தழுவுவது உங்களை மேலும் மென்மமையாக மாற்றும். அத்துடன் உங்கள் அன்புக்குரியோரை நீங்கள் அடிக்கடி தழுவி கொள்வது அவர்கள் உடையே ஆன அன்பை மேம்படுத்தும். இது கால போக்கில் உறவில் ஏதும் சிக்கல் ஏற்பட்டாலும், அதனை அறுத்தெறிய வழிவகுக்கும். குற்றமே செய்தாலும் அந்த நம்பிக்கை உரிய அன்பானவர்கள் உங்கள் முந்தய அன்பான நடவடிக்கைகளை எண்ணி தவறையும் மறப்பார்கள்.

ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

மேலும் நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.

அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, அந்த தழுவதலின் மூலம் ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும்.

அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பு காலப்போக்கிலும் மேம்படாது என்று இந்த ஆய்வின் முடிவில் நரம்புநோய் மருத்துவர் சாண்ட்க்யூளர் தெரிவித்துள்ளார்.

 
back to top