.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Sunday, November 9, 2014

ஜெய்ஹிந்த் 2 (2014) - திரைவிமர்சனம்

சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்கும் போது மேலிருந்து கீழே விழும் நிலையில் இருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் அர்ஜூன் இவரை பார்த்ததும் வீட்டிற்குச் சென்று காப்பாற்றுகிறார்.

இதை பார்க்கும் சுர்வின் சாவ்லாவின் அப்பாவான மனோபாலாவும் அவரது மனைவியும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் சம்மதத்துடன் அர்ஜூனை காதலில் விழவைக்கிறார் சுர்வின் சாவ்லா.

இவர்கள் வசிக்கும் பகுதியில் ஏழ்மையான குடும்பதைச் சேர்ந்தவர் தனது குழந்தையை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். அந்தக் குழந்தையுடன் அர்ஜூன் மற்றும் சுர்வின் இருவரும் நன்றாக பேசி பழகுகிறார்கள். அந்தக் குழந்தை பெரிய பள்ளியில் இடம் கிடைத்தும் அதிக பணத்தை செலுத்த முடியாத காரணத்தால் பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறாள். இதனால் மனவேதனை அடையும் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை கொன்று விட்டு அவர்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதைக் கண்டு வேதனை அடையும் அர்ஜூன் நமது நாட்டின் கல்வி நிலைமையையும் ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்காமல் இருப்பதையும் மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். மக்கள் அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும் எனபதற்காக முயற்சி எடுக்கிறார்.

அதில் முதல் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் முன்னால் பேட்டியளிக்கிறார். இதை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளி உரிமையாளர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அர்ஜூனை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

இதிலிருந்து அர்ஜூன் தப்பித்தாரா? நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்தாரா? என்பதே மீதிக்கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய்ஹிந்த் 2-ம் பாகத்தை எடுத்திருக்கும் அர்ஜூன், முதல் பாகத்தில் இருந்த அர்ஜூன் போல் இன்றும் சுறுசுறுப்புடனும் இளமையுடனும் இருக்கிறார். தேசப்பற்று என்பது நாட்டுக்கு வெளியே ஆயுதம் ஏந்தி போராடுவது மட்டுமல்லாமல் நாட்டுக்குள் வாழ்பவர்களுக்கு கிடைக்க கூடிய கல்வி மற்றும் பிற பொது நலன்கள் கிடைக்க போராடுவதும் தேசப்பற்றுதான் என்பதை இப்படத்தின் மூலம் காண்பித்திருக்கிறார். நாட்டிற்கு தேவையான முக்கியமான கருத்தை அழுத்தமாக சொல்லவந்த அர்ஜூனின் முயற்சி வரவேற்கக் கூடியது. ஆக்‌ஷன் காட்சிகளில் அர்ஜூனின் ஆக்‌ஷன் சற்றும் குறையாமல்  மிரட்டியிருக்கிறார். முற்பாதியில் ஒரு சில காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன.

நாயகி சுர்வின் சாவ்லா பார்க்க அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மயில்சாமி மற்றும் பிரமானந்தத்தின் காமெடி எடுபடவில்லை.

அர்ஜுன்ஜெனியாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். வேணுகோபாலின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘ஜெய்ஹிந்த் 2’ ஆக்‌ஷன் விருந்து.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) - திரைவிமர்சனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது.

இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள் இவர்களை வாழ்த்துகிறார்கள். அதில் ஒரு பெண் சூரி மீது காதல் கொள்கிறாள். சூரியும் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

காதலித்த முதல் நாளே வீட்டுக்கு தெரியாமல் சூரியும், அந்த பெண்ணும் ஊரை விட்டு சென்னைக்கு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். இவர்களுக்கு விமல் உதவி செய்கிறார்.

அப்போது, தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் வைத்து, சூரி ஒரு 'அன்னாடங்காச்சி' என்பதை அந்த பெண்ணிடம் விமல் கூறிவிடுகிறார். இதனால் காதலி சூரியை விட்டு விலகி செல்கிறாள்.

மனமுடைந்த சூரி, விமலுடன் சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்கிறான். ரெயிலில் நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார் விமல். டாக்டரான பிரியா ஆனந்தை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விமல்.

ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பிரியா ஆனந்தை ஒரு மர்ம கும்பல் கொலை செய்ய பார்க்கிறது. அவர்களிடம் இருந்து விமலும் சூரியும் பிரியா ஆனந்தை காப்பாற்றுகிறார்கள். அதன் பிறகு இவர்கள் யார்? எதற்காக உங்களை கொல்ல வருகிறார்கள்? என்று பிரியா ஆனந்திடம் கேட்கிறார்கள் விமலும் சூரியும்.

அதற்கு பிரியா ஆனந்த், தான் தூத்துக்குடியில் மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தபோது, தன் தோழி பணிபுரியும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன்.

இதற்கு தொழிற்சாலையை சரியாக பராமரிக்காததால் தான், தொழிலாளர்களை நோய் தாக்கியதாக அதன் முதலாளியான நாசரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார். இதனால் கோர்ட்டுக்கு சென்றேன். தீர்ப்பு நெருங்குவதால் என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறார் பிரியா ஆனந்த்.

இதை கேட்ட விமலும் சூரியும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இறுதியில் பிரியா ஆனந்த் கோர்ட்டில் வெற்றி பெற்றாரா? விமல் தன் காதலை பிரியா ஆனந்திடம் சொன்னாரா? என்பதே மீதிக்கதை.

படத்திற்கு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்று தலைப்பு வைத்து கதை சொல்ல வந்த இயக்குனர் கண்ணன், சுவாரஸ்யமான கதையை சொல்ல தவறிவிட்டார். படத்தை பார்க்கும் ரசிகர்கள் கடைசி வரை சுவாரஸ்யம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள்.

சூரி, தம்பி ராமையா, சிங்க முத்து என்று காமெடி நடிகர்களை வைத்து நகைச்சுவை படமாக எடுக்க முயற்சி செய்ததும் பெரிதாக எடுபடவில்லை. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வரும் இன்னல்களும் முதலாளிகளின் அலட்சியத்தையும் சொல்ல நினைத்த இயக்குனரை பாராட்டலாம். ஆனால் அதை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

படத்தில் விமல் தனது முந்தைய படங்களைப்போல வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை விட சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள கதையில் நடித்ததற்காக இவரை பாராட்டலாம்.

படம் முழுக்க நாயகனைவிட சூரியின் கையே மேலோங்கி இருக்கிறது. நடனம், சென்டிமென்ட், நகைச்சுவை என்று சிறப்பாக நடித்திருக்கிறார். நாசர் இதுவரை தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தில் மாறுபட்டு தெரிகிறார்.

பிரியா ஆனந்திற்கு ஒரு ஹீரோவுக்கு உண்டான அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள். தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து அதை சிறப்பாக செய்திருக்கிறார் என்றால் அது கேள்விக்குறிதான். பாடல்களில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். லட்சுமி மேனன் பாடிய பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ கோமாளி

Wednesday, November 5, 2014

காதலுக்கு கண்ணில்லை (2014) - திரைவிமர்சனம்

நாயகன் முரளி (ஜெய் ஆகாஷ்) காதலுக்கு கண்ணில்லை என்னும் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், இப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெறுகிறார். அப்போது அந்த விழாவிற்கு வந்திருக்கும் ஷிவானி (நிஷா) முரளியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர் முரளியிடம், தான் அவரது ரசிகை என்றும் அவரை நேசிப்பதாகவும் கூறுகிறார். இதை முரளியுடன் இருந்து கவனித்த முரளியின் அம்மா இந்து, ஷிவானியை ஒரு நாள் வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு சென்று விடுகிறார்.

அதன்பின்னர் ஷிவானி, முரளி குடும்பத்துடன் பழக ஆரம்பிக்கிறார். முரளியின் அம்மாவிற்கு ஷிவானியை பிடித்து விடுகிறது. ஆதலால் முரளியிடம் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். முரளியும் தன் அம்மாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து, ஷிவானியை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

பின்னர் முரளி-ஷிவானி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அப்போது முரளியின் அப்பா திருமணத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஷிவானி வீட்டில் நிபந்தனை விதிக்கிறார்கள். இதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்து, என் அப்பா கலந்துக் கொண்டால்தான் இந்த திருமணம் நடக்கும் என்றால் எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறார்.

முரளியின் அப்பா யார்? எதற்காக அவரை வெறுக்கிறார்? ஷிவானியை முரளி திருமணம் செய்துகொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தில் முரளி மற்றும் ஆனந்த் என்னும் இரண்டு கதாபாத்திரங்களில் ஜெய் ஆகாஷ் நடித்திருக்கிறார். முரளி கதாபாத்திரத்தில் அமைதியாகவும், ஆனந்த் கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஆனந்த் கதாபாத்திரத்தில் அளவோடு இல்லாமல் அளவிற்கு மீறிய நடிப்பாக எண்ணத் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நாயகி அலிஷா தாஸ் திறமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட திறமையாக அழுதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். படம் முழுக்க அழுது கொண்டே இருக்கிறார். நிறைய சிரமப்பட்டு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கவர்கிறார். மற்றொரு நாயகியான நிஷாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஜெய் ஆகாஷின் அம்மாவாக நடித்திருக்கும் இந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

யு.கே.முரளியின் இசையில் 2 பாடல்கள் மட்டும் கேட்கும் ரகம். தேவராஜ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ஒரு பெண், சைக்கோவாக இருக்கும் ஒருவனை நல்லவன் என்று நம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவனால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை கதைக்கருவாக வைத்துள்ளனர். ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பது படத்திற்கு பின்னடைவு. மேலும் தேவையற்ற காட்சிகளையும் லாஜிக் இல்லாத காட்சிகளையும் இயக்குனர் ஜெய் ஆகாஷ் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘காதலுக்கு கண்ணில்லை’ வலுவில்லை.

Saturday, February 1, 2014

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்..!



திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல?

இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள்.

இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.
ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை விற்கின்றனர். ஆனால், அந்த பணத்தை சினிமாவில் போடாமல் ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் விட்டுவிடுகின்றனர்.
இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

இதற்கிடையில் ஆர்ம்பத்திலேயே சொன்னது மாதிரி திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம்.

மொத்தத்தில் ‘இங்க என்ன சொல்லுது’ சொல்ற மாதிரி இல்ல.

 
back to top