.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, October 13, 2013

நாடு வளம்பெற காடுகளை காப்போம்!!

திருவள்ளுவர் “நாடு’ அதிகாரத்தில் மலையைப் பற்றி “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் பயனடைகிறது.


                                   13 - save_our_forest_

 


உலகில் ஆறுகள் அனைத்தும் பனிமலை அல்லது மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன. பனிமலை( இமயமலை)யில் கங்கை உற்பத்தியாகிறது.காவிரி, பெரியாறு, வைகை, தாமிரபரணி போன்றவை மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. மழைப்பொழிவு ஏற்படும் அனைத்து நிலப்பகுதியும் நீர்ப்பிடிப்பு பகுதிகள். இதில் பெய்யும் மழை நீர் காடாக இருந்தால், அது பூமியில் உள்ளிழுக்கப்பட்டு சிறு, சிறு நீருற்றுகளாக வெளிப்படும். பின், அவை ஓரிடத்தில் ஒன்று கூடி சிற்றோடைகளாகவும், அவை நீரோடையாகவும், பல ஒன்று சேர்ந்து ஆறாகவும் மாறுகிறது. இந்த மழை நீர் பாறை அல்லது விவசாய நிலத்தில் விழுந்தால், மழை பெய்த அன்றே (நிலத்தில் உறிஞ்சியது போக மீதம்) வடிந்து நீரோடை வழியாக ஓடி, நீர் நிலையை சென்றடைகிறது.



காடுகள் ஒரு வங்கியில் இருக்கும் முதலீடு போல் செயல்படுகிறது. காலப்போக்கில் நாம் பெறும் பயன் (வட்டி) போல், வற்றாத நீரோடை, ஆறுகளை தருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்பது நெறிமுறை
அத்துவானக் காட்டுக்குள்ளே ஒரு சிங்கம் இருந்ததாம். அந்தச் சிங்கம் அந்தக் காட்டில் கம்பீரமாக நடந்து வருமாம். இது நமக்கு பாட்டி சொன்ன ஒரு கதையின் தொடக்கப் பகுதி. மீசைக்கார அண்ணாச்சி ஒருவர் சுமார் 600 சதுர கி.மீ. காட்டுப் பகுதியில் ஒளிந்து இருந்ததாகவும், அப் பகுதியில் நிலத்தில் சூரிய வெளிச்சம் படாத அளவுக்கு காடுகள் அடர்ந்து இருந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இன்றைய காடுகளின் நிலை என்ன?


நீலகிரி மாவட்டத்தில் நிலச் சரிவால் போக்குவரத்து பாதிப்பு. கேரளம் – தமிழகச் சாலையில் நிலச் சரிவால் போக்குவரத்து பாதிப்பு. ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் போக்குவரத்து நிறுத்தம் போன்ற செய்திகளை அடிக்கடி பத்திரிகைகளில் படித்து வருகிறோம். ஏன் இந்த நிலை? நாம் நமது சுயநலத்துக்காகவும் தேவைக்காகவும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, நிலச் சரிவு, காட்டுத் தீ, புவி வெப்பமடைதல் போன்றவை நிகழ்கின்றன.
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். நீல மணிபோன்ற நீரையுடைய அகழியும் வெட்ட வெளியான நிலப்பரப்பும் உயரமான மலையும் மரநிழல் செறிந்த காடுகளும் கொண்டுள்ளதே அரண் என்பது இதன் பொருளாகும்.


சர்வதேச அளவில் இந்தியாவில் காடுகளின் வளத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அடர்த்தியான பல்லுயிர்ப் பெருக்க காட்டுப் பகுதிகள் உலகில் 25 உள்ளதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 இந்தியாவில் உள்ளன. கிழக்கு இமயமலைத் தொடர், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் மேற்கு இமயமலைத் தொடர் ஆகியவையே இம்மூன்றாகும். மேலும், உலகில் காணப்படும் பன்னிரண்டு பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், சமீப காலமாக இந்தியாவில் காடுகளின் வளம் குறைந்து வருகிறது.


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் காடுவளம் 60 சதவீதமாக இருந்தது. 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் காடுகளின் பரப்பு 23.41 சதவீதமாகும். நாட்டில் பாதிக்கு மேல் உள்ள காடுகளை கடந்த 66 ஆண்டுகளில் அழித்து விட்டோம். கட்டடம் கட்டுவது, சாலைகள் அமைப்பது, தொழிற்சாலைகள் அமைப்பது என பலவற்றுக்காகவும் நாம் காடுகளை அழித்துவிட்டோம். நாட்டின் வளர்ச்சிப் பணி என்பது முக்கியமானதுதான். அதற்காக பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை அன்னை கழுத்தை நெரிக்கலாமா?


அழிக்கப்பட்ட காடுகளுக்கு சமமாக தரிசு நிலங்களில் காடுகளை உருவாக்கத் தவறி விட்டோம். தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.


தேசிய அளவில் தமிழகத்தின் காடு வளம் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் மொத்த காட்டுப் பகுதி 22,877 சதுர கி.மீ. ஆகும். இது மாநில நிலப்பரப்பில் 17.59 சதவீதமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதம் காடு வளம் இருக்க வேண்டும். எனினும், தமிழகத்தில் 5 தேசிய பூங்காக்கள், 10 வனவிலங்கு சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள், 4 புலிகள் காப்பகங்கள், 4 யானை பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.


தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்தான் காடுகளின் பரப்பு உள்ளது. இந்த மாவட்டத்தில் காடுகளின் பரப்பு 81.84 சதவீதமாகும். இந்தியாவில் காணப்படும் 17,672 பூக்கும் தாவரங்களில் 5,640 தாவரங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இந்த தாவரங்களில் பெரும்பாலானவை மிகவும் அரிதானவையாகும்.


மேற்கு தொடர்ச்சி மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை மற்றும் பழனி மலைத் தொடர்களில் எண்ணிலடங்கா மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. காடுகளைக் காப்பது நமது தலையாய கடமையாகும்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்து, காடுகளைக் காக்க வேண்டும். ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவனிடம், “காடுகளை காப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?’ எனக் கேட்டார். அதற்கு அந்த மாணவன், “சும்மா இருந்தாலே போதும் சார்’ என பதில் கூறினான். மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். ஆனால் ஆசிரியர், “இவன் கூறியது சரியான பதில்தான். காடுகளைப் பாதுகாக்க, நாம் காடுகளை அழிக்காமல் சும்மா இருந்தால் போதுமானது என்பது அதன் பொருளாகும்’ என்றார். மற்ற மாணவர்கள் புரிந்து கொண்டார்கள். நாமும் புரிந்துகொள்ள வேண்டும்!

மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு!

தலைநகர் தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள்/ மத்திய அரசு துறைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவு பணிகளில் ஏற்பட்டு உள்ள காலியிடங்களை Staff Selection Commission நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.

                                     13 - vazhikatti ssc
 
தேர்வு பெயர்: Stenographer (Grade C & D) Examination -2013

பணியின் பெயர்: Stenographer (Grade C & D)

காலியிடங்கள்: இறுதி செய்யப்படவில்லை.

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.


கல்வித்தகுதி:


 +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100/80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனிணியில் ஆங்கிலம், இந்தியில் டைப் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:
29.12.2013


எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள் கோடு எண்: சென்னை – 82012, கோயம்புத்தூர் – 8202, மதுரை – 8204, திருச்சிராப்பள்ளி – 8206, திருநெல்வேலி – 8207, புதுச்சேரி – 8401

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
 
26.10.2013

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Reginal Director(SR), Staff Selection Commission, 2nd Floor, College Road, Chennai – 600006.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, October 12, 2013

பதைக்க வைத்த பாலைவன மலர்!


1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது. 


துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.ஆரம்பத்தில் நல்ல உணவு கொடுக்கப்பட்டு, அன்பாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். 



அதிகாலை மருத்துவச்சியின் பிளேடால் அவரது பிறப்புறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு, முள்களால் தைக்கப்பட்டது. உடல் முழுவதும் ரத்தம்… வலியின் உச்சம்… அந்தச் சின்னஞ்சிறிய பாலைவன மலர் வதங்கிப் போனது.


                           12- lady deset wariyors

 


மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கற்பைக் காப்பதற்காக, இந்தக் கொடிய செயல் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா உள்பட உலகின் 28 நாடுகளில் பெண்களுக்கு இந்தக் கொடூரம் இன்னும் நடக்கிறது. பெருகும் குருதி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நான்கில் இரு பெண்கள் மரணத்தைச் சந்தித்துவிடுவார்கள்.



தைக்கப்பட்ட பிறப்புறுப்பு திருமணத்தின் போது வெட்டிவிடப்படும் (இப்படிச் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் தாம்பத்ய இன்பம் கிடைக்காது என்பது இன்னொரு கொடூரம்). அதுவரையிலும், தைக்கப்பட்ட பிறப்புறுப்பின் மிகச்சிறு துளை வழியே சிறுநீர் கழிப்பதும் மாதவிடாய் ரத்தம் வெளியேறுவதும் கொடுமையாக இருக்கும். அம்மாவின் அரவணைப்பில் தைரியம் மிக்க வாரிஸ் தேறினார். 



வழக்கமான வேலைகளைச் செய்து வந்தார். 13 வயதில் திடீரென ஒருநாள் வாரிஸின் அப்பா, தன்னை விட வயதில் பெரிய முதியவரை அழைத்து வந்து, ‘வாரிஸின் கணவன்’ என்றார். ‘திருமணம் வேண்டாம்’ என்று வாரிஸ் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.



ஒரு நாள் இரவு உணவு, தண்ணீர், செருப்பு எதுவுமின்றி, அம்மாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் வாரிஸ். பகல் முழுவதும் கொடுமையான பாலைவன வெயில். இரவு கொடுங்குளிர். வெற்றுக்காலில் ஓடிக்கொண்டே இருந்தார் வாரிஸ். கொஞ்சம் தாமதித்தாலும் அப்பாவால் பிடித்துச் செல்லப்படுவோம் என்ற உணர்வு, ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. 



களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ். அருகில் வந்த சிங்கம், அவரை முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டது.



மீண்டும் ஓட்டம்… பல நாள்கள் பயணம் செய்து, ஏறக்குறைய 480 கிலோமீட்டர் கடந்து வந்திருந்தார் வாரிஸ். அது அவருடைய அக்கா மற்றும் சில உறவினர்கள் வசிக்கும் மொஹதீஸு என்ற இடம். அக்கா வீட்டில் வீட்டு வேலைகள் முழுவதையும் செய்தார். குழந்தையைப் பார்த்துக்கொண்டார். அக்காவோ வாரிஸை தங்கையாக நினைக்காமல் வேலைக்காரியாகவே நடத்தினார். அங்கிருந்து வெளியேறி, சித்தப்பா வீட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் வீட்டு வேலைகளைச் செய்தார்.



அப்போது லண்டனில் உள்ள சோமாலியா தூதரகத்தில் வேலை செய்த சித்தப்பா, வீட்டுவேலை செய்ய ஆள் தேடி வந்தார். தானே வருவதாக விருப்பத்துடன் கூறினார் வாரிஸ். உடனே பாஸ்போர்ட் பெறப்பட்டு, லண்டன் வந்து சேர்ந்தார். அங்கும் சமையல் வேலை, வீட்டுவேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.



அந்த வீட்டுக் குழந்தையைப் பள்ளியில் விடும்போது, அங்கு ஒரு குழந்தையின் அப்பா, வாரிஸைப் பார்த்து அடிக்கடி புன்னகை செய்வார். ஒருநாள் தன்னுடைய பிசினஸ் கார்டை கொடுத்தார். ஆங்கிலம் அறியாத வாரிஸ் அதை வாங்கி வைத்துக்கொண்டார்.




சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்க, சித்தப்பாவை சோமாலி யாவுக்கு வரச் சொல்லிவிட்டனர். மீண்டும் சோமாலியா செல்வதில் வாரிஸுக்கு விருப்பம் இல்லை. தன் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் சித்தப்பா குடும்பம் மட்டும் கிளம்பிச் சென்றது.



வாரிஸின் தோழி ஒருவர் அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் பிசினஸ் கார்ட் கொடுத்தவரிடம் தொடர்புகொண்டார். அவர் டெரன்ஸ் டொனொவன். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். வாரிஸை புகைப்படம் எடுக்க விரும்பினார். தனக்கும் வாழ பணம் வேண்டும்… அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்று நினைத்த வாரிஸ் மாடலிங் செய்ய சம்மதம் தெரிவித்தார்.



அவருடைய அழகான புகைப்படங்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்றன. பணம் சேர்ந்தது. மருத்துவரிடம் சென்று, தைக்கப்பட்ட பிறப்புறுப்பை பிரித்தார். பல ஆண்டுகள் அனுபவித்து வந்த சித்திரவதையில் இருந்து மீண்டார். விரைவில் பைரலி காலண்டரின் முகப்பை வாரிஸின் படம் அலங்கரித்தது. குறுகிய காலத்திலேயே பிரபல மாடலாக வலம் வந்தார். 



உலகின் மிக முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு அவரை பிராண்ட் அம்பாசிடராக கொண்டாடின. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் (The Living Daylights) நடித்தார். இவரது வாழ்க்கையே 2009ல் ‘Desert Flower’ என்ற பெயரில் ஜெர்மன் திரைப்படமாக வெளியானது.



உலகப் புகழ்பெற்றவராக ஆகிவிட்டாலும் வாரிஸின் மனம் அமைதியடையவில்லை. தான் அடைந்த சித்திரவதையை இனி எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ அமைப்பை உருவாக்கினார். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்ப்பதும் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். அதோடு, சோமாலியா நாட்டின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றையும் அளித்து வருகிறது இந்த அமைப்பு.



1997ல் மாடலிங் செய்வதை நிறுத்திவிட்டு, முழு நேரத்தையும் சமூக சேவையில் செலவிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார் வாரிஸ். 2003ம் ஆண்டு வரை இந்தப் பணியைத் திறமையாகச் செய்து முடித்தார்.



 1998ல் வாரிஸ் தன் வாழ்க்கையை ‘டெசர்ட் ஃப்ளவர்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வலி மிகுந்த வாழ்க்கையையும் ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வெற்றியையும் வெளிப்படுத்திய இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 1 கோடியே 10 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்திருக்கிறது.



‘டெசர்ட் சில்ட்ரன்’, ‘லெட்டர் டூ மை மதர்’ உள்பட இன்னும் 4 முக்கிய நூல்களையும் எழுதியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி உள்பட பல நாடுகளும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் வாரிஸுக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன. மாடல், நடிகை, பெண்ணுரிமைப் போராளி என்று தானும் உயர்ந்து, சமூகத்தையும் உயர்த்திய இந்த வாரிஸ் டைரி பாலைவன மலர் அல்ல… பாலைவனச் சோலை!

பூசணிக்காய் நம்பிக்கை உயிர்!






 நாளை ஆயுத பூஜை. எது நடக்கிறதோ இல்லையோ.. திருஷ்டி கழிக்க பூசணி சுற்றி உடைக்கும் நிகழ்ச்சி எல்லா இடங்களிலும் நடக்க போகிறது. அக்டோபர் மாதம் மழை காலத்தில் பெரும்பாலும் சாலைகளும் தெருக்களும் சகதியாக மாறிவிடும். இந்த நேரத்தில் பூசணிக்காய் சிதறல்கள் வாகனங்களில் நசுங்கி சாலைகளை கொழ கொழ என்று மாற்றி விடுகின்றன. வழுக்கி விழுவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். 


பூசணி உடைப்பது அவரவர் நம்பிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. தெருக்கள், சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல தேவையில்லை. பைக்கில் செல்பவர்கள் எத்தனை பேர் பூசணிக்காயால் சறுக்கி விழுந்துள்ளனர். பலர் உயிரை துறந்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 


சுற்றுப்புறத்தை நாமே கெடுத்துவிட்டு, துப்புரவு ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை என்று குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.பூசணிக்காயால் பைக்கில் வழுக்கி விழுபவரின் உயிர் போகும் போது, மெதுவாக சென்றிருந்தால் நடந்திருக்காது. பார்த்து சென்றிருந்தால் நடந்திருக்காது, குடித்துவிட்டு ஓட்டாமல் இருந்திருந்தால் நடந்திருக்காது.  ஹெல்மெட் அணிந்திருந்தால் நடந்திருக்காது.. என்று பல காதுகளை காரணம் சொல்லி ஆறுதல் அடைவதே வழக்கமாகி விட்டது. 



ஆனால், சுற்றுப்புற கேடு, விபத்து என்று பல விஷயங்களுக்கு மூல காரணம் பூசணிக்காய் சிதறல்கள் என்பதை மறந்து விடுகிறோம்.பூசணிக்காய் இறப்புகளை தடுக்க தொடர்ந்து பிரசாரம் நடத்தப்படுகிறது. எனினும் விழிப்புணர்வுதான் முழுமையாக ஏற்படவில்லை. பூசணி உடைக்கலாம். உடைத்த பின் அதன் சிதறல்களை ஓரமாக தள்ளி வைத்தால் நடப்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 



இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க சட்டமும் இருக்கிறது. அந்த அளவுக்கு யோசிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம் வீட்டு முன்போ, கடை முன்போ உடைக்கப்படும் பூசணிக்காயே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தாலே போதும். திருஷ்டி கழித்த பின் அதன் சிதறல்களை ஓரமாக பெருக்கி தள்ளும் எண்ணம் வரும். அப்போதுதான் உண்மையாகவே திருஷ்டி கழியும்.

 
back to top