.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 5, 2013

ஆர்யபட்டா டூ மங்கல்யான்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய பயணம் இன்று தொடங்குகிறது



 இந்தியா 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து  செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று  நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை  ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.  இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதை யில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014  செப்டம்பர் 24ம் தேதி  செவ்வாய் கிரகத்துக்கான சுற்று  பாதை யில் நிலை நிறுத்தப்படும்.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்

* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள்  1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட்  10ம் தேதி  ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும்,  ஜெர்மனி, கொரியா,  பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி,  சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட “மோனாலிசா’ ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம்.




                    nov 5 - edit smile


எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை “புன்னகை அரசி’ என்றும், ஆணை “புன்னகை மன்னன்’ என்றும் கூறி நாம் புன்னகைக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறோம்.


பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது. பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது. வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது.


அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.


“புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு’ என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது.


நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது. நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.


நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள். புன்னகை ஒரு தொற்று நோய். நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.


நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.


உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.


எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?


வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.


நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.


புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை – நல்லன எல்லாம் தரும்.

மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகள்!

நலவாழ்வில் ஒரு தலையாய பிரச்னை, எதிர்ப்பு மருந்துகளுக்கு (ஆண்டிபயாட்டிக்) கட்டுப்படாத தொற்றுநோய்ப் பெருக்கத்தால் ஏற்படும் உயிர் பலிகள் உலகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்து செல்வது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30,000 மனிதர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் புதிய ஆய்வுகளோ, புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய முதலீடுகளோ அவ்வளவாக இல்லை.



                nov 5 - health


ஐ.நா. உலக நலவாழ்வு அமைப்பு ஏற்கெனவே இதுகுறித்த எச்சரிக்கையில், “கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளால்கூட வெல்ல முடியாத சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால், சூப்பர் பக் பாக்டீரியாவை அழிக்கக் கூடிய புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய தலையாய பொறுப்பு வடக்கு நாடுகளுக்கு உள்ளது…’ என்று கூறியுள்ளது.


ஆண்டிபயாட்டிக் மருந்துகளின் முக்கிய பயன் நோய்க்கிருமிகளை அழிப்பதுதான். அவை முற்றிலும் அழியாமல் இருந்தாலும் நமது உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மூலம் ஓரளவு பரிகாரம் கிடைக்கிறது. அழியாமல் எஞ்சியுள்ள “சூப்பர் பக்’ என்று கூறப்படும் பாக்டீரியா கிருமிகள் மீண்டும் பன்மடங்கு பலத்துடன் வளர்ந்து எந்த எதிர்ப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் மனித மரணத்தை உறுதிப்படுத்தி வருகிறது.


ஐ.டி.எஸ்.ஏ. என்று சொல்லப்படும் அமெரிக்க தொற்றுநோய் எதிர்ப்பு சமூகம் வெளியிட்டுள்ள 2013 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2009-க்குப் பின் இரண்டே இரண்டு நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டும் வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாம், ஏழு நோய் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லையாம். அவை ஒப்புதல் பெற்று பயன்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். உலகிலேயே மிகப்பெரிய 12 பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஒருகாலத்தில் நோய் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தன. இன்று காலம் மாறிவிட்டது. நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் லாபம் இல்லை.


இன்று நான்கு மருந்து நிறுவனங்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு மருந்துகளின் ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் ஓரளவுக்கு கவனம் செலுத்தியுள்ளன. அவையாவன: கிளஸ்கோ ஸ்மித் கிளென், பிஃப்சர், ஆஸ்ட்ரா செனகா, மெர்க்.
என்ன காரணத்தினால் மாபெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு ஹெலன் பவுச்சர் – ஐ.டி.எஸ்.ஏ. வெளியீட்டாளர் பதில் கூறுகையில், “நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பொது மருத்துவப் பயன் என்பதால் அவற்றுக்கு விலை அதிகம் நிர்ணயிக்க முடியாது.


 ஆனால் அதே கவனத்தை உயிர் காக்கும் மருந்து உற்பத்தியில் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம்’ என்கிறார். உயிர் காக்கும் மருந்து என்பது புற்றுநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளாகும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் 1.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவிடப்பட்டு சுமார் 10,000 அணு உயிர்கள் (மாலிக்யூல்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. 2010-இல் பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்ட மருந்துகளில் சுமார் 3000 மருந்துகள் வெளிவர உள்ளன. அவற்றில் 800 புற்றுநோய் மருந்துகள், 250 இதயநோய் மருந்துகள். இவை தவிர 83 புதிய மருந்துகள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஆண்டிபயாடிக்குகள் ஆகும். இதுதான் உலக நிலை.


மருந்து உற்பத்தித் தொழிலில் இந்தியாவின் பங்கு உயர்வானதே. உலகில் தொழில்ரீதியாக மூன்றாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனத் தொழில் மதிப்பு சுமார் 21 பில்லியன் டாலர். மதிப்பு அடிப்படையில் 14-ஆவது இடம். வளர்ச்சி 13 சதவீதம். பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் இந்திய மருத்துவத் தொழில் வளர்ச்சி பெறுகிறது.


கடந்த ஏப்ரலில் நோவார்ட்டிஸ் என்ற அமெரிக்க நிறுவன வழக்கில், தில்லி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மருந்து உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஒரு உதாரணம். ரத்தப் புற்றுநோய்க்குரிய மருந்து கிளீவி என்ற பெயரிலும் கிளைவி என்ற பெயரிலும் விற்கப்படும். அடிப்படை மருந்தான இமாடினிப் மெசிலேட் மருந்துக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்று இந்திய விற்பனைக்கு ஒப்புதல் பெற்ற ஆண்டு 2002. அன்று முதல் மேற்படி மருந்துகள் ஒரு நபருக்கு ஒரு மாதம் 2500 டாலர் (ரூ.15,000) என்ற அளவில் விற்கப்பட்டன. எனினும் அதே ஆண்டு அதே மருந்தை மாற்றுப் பாதுகாப்பு செய்முறை அடிப்படையில் ஏற்கெனவே காப்புரிமை செய்யப்பட்ட இமாடினி மெசிலேட்டை நாட்கோ என்ற இந்திய நிறுவனம் 10 மடங்கு குறைந்த விலைக்கு (250 டாலர்) விற்பனை செய்தது.


நாட்கோவைப் பின்பற்றி, வேறு பல ஜெனரிக் மருந்து நிறுவனங்கள் (காப்புரிமை செய்யப்பட்ட மருந்தை மாற்றுச் செய்முறையில் தயாரித்து விற்கும் நிறுவனங்கள்) குறைந்த விலைக்கு விற்றன. நோவார்ட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது இந்திய ஜெனரிக் நிறுவனங்கள் சார்பில் புற்றுநோயாளிகள் நுகர்வோர் சங்கமும் வழக்கு போட்டது. நன்கறியப்பட்ட மருத்துவப் பொருளை ஊர்மாற்றிப் பேர்மாற்றி உருமாற்றிக் கருமாற்றிப் புதிதாகப் பெயர் சூட்டி காப்புரிமை பெறுவதை டிரிப்ஸ் (அறிவார்ந்த சொத்துரிமைச் சட்டம்) ஷரத்துக்கள் ஏற்காது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நோவார்ட்டிஸ் கேஸ் தோற்றுப் போனது.


எனினும் ரத்தப் புற்றநோய்க்குரிய மருந்தின் ஒரு மாதச் செலவு 150 டாலருக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாட்கோ மேலும் விலையைக் குறைத்தது. நோவார்டிஸ் நிறுவனமும் மருந்து விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.



இப்படிப்பட்ட சூழ்நிலையில் 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலைப்பாடு முற்றிலும் சரியே. அண்மையில் வெளிவந்த இந்த அறிக்கை, இப்போது இந்தியாவில் இயங்கி வரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் மேலும் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதை தடை செய்ய வேண்டுமென்று மிகவும் வெளிப்படையாகவே எடுத்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகும்.


இத்தகைய நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் டாலர் பலத்தால் கபளீகரம் செய்யத் துடிப்பதெல்லாம் சுயலாபத்திற்கும், வருமானத்திற்கும்தானே தவிர மக்களின் நலனுக்காக அல்ல.
1970களில் இந்தியாவில் 85 சதவீத மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்தி செய்தன. 15 சதவீதம் மட்டுமே தேசிய நிறுவன உற்பத்தி. 1990களில் நிலைமை மாறியது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970 உதவியால் இந்திய தேசிய மருத்துவ நிறுவனங்களின் உற்பத்தியும் விற்பனையும் ஏற்றுமதியும் உயர்ந்து மருந்து உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. இந்திய நிறுவனங்கள் மக்கள் நலனை மனதில் வைத்து, நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி மிகவும் கட்டுப்பாடான விலையில் வழங்குகிறது.


இந்திய தேசிய நலனுக்கு எதிராக கி.பி. 2000 முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 4392 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்திய மருத்துவ நிறுவனப் பங்குகளாக வந்துள்ளன. 2010-13 ஆண்டுகளில் 18678.11 கோடி அந்நிய முதலீட்டில் 3 சதவீதம் மட்டுமே மருந்து ஆராய்ச்சி – வளர்ச்சிக்குச் செலவாகியுள்ளது. ஆகவே, அந்நிய நாட்டு மருத்துவ நிறுவனங்களின் இலக்கு தேசிய நிறுவன வளர்ச்சியை சீர்குலைப்பதுதான் என்று தெளிவாகிறது.


 எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் பயனால் இந்திய மருத்துவ நிறுவனங்கள் கண்டுபிடித்த அணு உயிரிகள் (மாலிக்யூல்ஸ்) சுமார் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ளவை காப்புரிமையாக்கப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களுடன் சமபலத்துடன் போட்டியில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் நலவாழ்வுத் துறை மருத்துவக் கழகங்களின் யோசனைகளையும், 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையையும் புறந்தள்ளிவிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மைலான் – அஜிலா ஸ்பெஷாலிட்டி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி பன்னாட்டு மருந்து நிறுவன ஏகபோகங்களின் கைப்பாவையாக மாறி இந்திய தேசிய மருத்துவ நிறுவன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.


இன்றைய தலையாய தேவை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் வழங்கல்தான். தொற்றுநோய் எதிர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை புறக்கணிக்கப்பட்டால் மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகளால் பொது மருத்துவமனைகளில் தொற்றுநோய்ச் சாவுகள் மேலும் மேலும் உயரலாம். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளிடம் உண்டு. பொதுத் துறையில் ஹிந்துஸ்தான் ஆண்டி பயாட்டிக்ஸ் நிறுவனம் “சூப்பர் பக்’ பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆய்வில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து இந்தியத் தேவையை மட்டுமல்ல. உலகத் தேவையையே நிறைவேற்றும் காலம் விரைவில் வரவேண்டும்.

பெற்றோரே முதல் தெய்வம்..(நீதிக்கதை)




சரவணன்...எப்போதும் காலை எழுந்ததும் தன் பெற்றோர்களுக்குத் தேவையான பணிவிடைகளை செய்த பின்னரே மற்ற வேலைகளைக் கவனிப்பான்.அதே நேரத்தில் அவனுக்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது.

ஒரு நாள் இறைவன் அவனுக்குக் காட்சியளித்தார்......

அப்போது அவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான்.அப்பணியை பாதியில் நிறுத்திவிட்டு இறைவனைக் காண விரும்பவில்லை..

' இறைவா....எனக்காக சற்றுநேரம் பொறுங்கள்..பெற்றோர்களுக்கான என் தினசரி கடமையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.

இறைவனும் வீட்டுத் திண்ணையில் அவனுக்காக அமர்ந்திருந்தார்.

பின்னர் அவன் இறைவனிடம் வந்து ' தங்களை தாமதப்படுத்தியதற்கு மன்னியுங்கள் ; என்றான்....

ஆனால் இறைவன் மன மகிழ்ச்சியோடு...'சரவணா...இறைவனே நேரில் வந்தும் ....பெற்றோர்கள் தான் முதல் கடவுள் என அவர்களுக்குப் பணிவிடை செய்த பின்னரே என்னைக் காணவந்த உன்னை பாராட்டுகிறேன்.அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை உணர்ந்தவன் நீ. வாழ்வில் எல்லா செல்வத்தையும் பெற்று வாழ்வாயாக...'என்று வாழ்த்திச் சென்றார்.

இதையே திருவள்ளுவரும் .....

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

              என்றுள்ளார்.
(எழுத்துக்கள் எல்லாவற்றிலும் முதலாக உள்ள எழுத்து ' அ'  அது போல ஒருவனுக்கு உலகில் முதல் முதலான தெய்வங்கள் 'தாய் தந்தையரே' )
 
back to top