.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 8, 2013

காப்பி அருந்துவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

நோய் நொடிகளற்ற மனித வாழ்வை நோக்கி செல்ல இன்று பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக உடலுக்கு உற்சாகத்தை வழங்கும் காப்பி குடிப்பதற்கு சிறந்த நேரம் காலை 9.30 இருந்து காலை 11.30 வரையான காலப்பகுதி என நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்திலேயே காப்பியில் காணப்படும் காபைன் (caffeine) எனும் பதார்த்தம் உடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் கோட்டிசோல் (cortisol) ஓமோனுடன் சிறந்த முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கோட்டிசோல் ஆனது தூக்கத்திலிருந்து எழும்பும்போது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது எனவும், 8 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் மேலும் மந்தமான நிலையை அடைகின்றது எனவும் ஸ்டீபன் மில்லர் எனும் நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும்.
அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.

அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்கு பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாஸ்தா

இத்தாலியன் உணவுப் பொருட்களில் ஒன்றான பாஸ்தாவை பிரசவத்திற்கு பின் சாப்பிட பெண்கள் பயப்படுவார்கள்.

ஆனால் அப்படி பயப்படத் தேவையில்லை. இதில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவியாக இருக்கும். இருப்பினும் அளவாக சாப்பிடுவதே நல்லது.

சீஸ்

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று தான் சீஸ்.

ஏனெனில் பிரசவத்தின் போது பெண்கள் அதிகப்படியான கால்சியம் சத்தை இழக்க நேரிடும். ஆகவே கால்சியம் அதிகம் நிறைந்த பால் பொருட்களில் ஒன்றான சீஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களைக் கூட பிரசவத்திற்கு பெண்கள் சாப்பிடலாம்.

இருப்பினும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை போன்றவற்றை அளவாக உட்கொள்வது நல்லது. ஏனெனில் அதிகமாக சாப்பிட்டால், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. இந்த சத்து பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டியது. எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன், ஒரு கையளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும். இதனால் அது தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும்.

காபி

கர்ப்பமாக இருக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் அது கருவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பிரசவத்திற்கு பின் காபி குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சிக் கொடுக்கும்.

பால்

ஒவ்வொரு புதிய தாய்மார்களும் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பால்.

ஏனெனில் பாலில் அவர்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாலானது தாயப்பாலின் சக்தியை அதிகரிக்கும்.

ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 1 மணிநேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது.

இத்தகைய வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டால், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டி நிறைந்துள்ளது. அதிலும் சால்மன், டூனா போன்ற மீன்களில் இச்சத்து மிகுந்த அளவில் உள்ளது.

ஆகவே இதனை பெண்கள் சாப்பிட்டால், குழந்தைகளின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதிலும் வாரத்திற்கு 2 முறைக்கு மேல் மீனை சாப்பிடக்கூடாது.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்

பிரசவத்தின் போது இழக்கப்பட்ட உடலின் எனர்ஜியை அதிகரிப்பதற்கு, கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமானதாக உள்ளது.

ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களான கைக்குத்தல் அரிசி அல்லது பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்!

கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அவசரமான ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு சரி செய்தது.


இருப்பினும் அடுத்த ஹேக்கர் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். எனவே தான், எப்போதும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை உடனுடக்குடன் இன்ஸ்டால் செய்வதுடன், தொடர்ந்து இன்னல்களை வரவழைக்கும் வழிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தாக்கும் வழிகளாக எவை இருந்தன என்பதனையும், எதிர்காலத்தில் எப்படி இவற்றை எதிர்கொள்ளலாம் என்பதனையும் இங்கு பார்க்கலாம்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு என்ன ஏற்பட்டது?


சென்ற செப்டம்பர் 17ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அனைத்து பதிப்புகளிலும் சரி செய்யப்படாத தவறு ஒன்று உள்ளது என்றும், அதனை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கெடுக்கும் வேலையினை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்தது. இதற்கான சரியான பாதுகாப்பினையும் தீர்வையும் தரும் பேட்ச் பைலை மைக்ரோசாப்ட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், தற்காலிகமாகவும் அதனைத் தீர்க்கும் வகையிலான டூல் ஒன்றை வெளியிட்டது. இதனைத் தாங்களாகவே பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு பரபரப்பின ஏற்படுத்தியது. அதே வேளையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்திய அனைவரையும் இது தாக்கியது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இதற்கான தீர்வு தரும் புரோகிராமினைத் தயாரித்து வழங்க மூன்று வார காலம் ஆனது. அக்டோபர் 8ல், வழக்கமான Patch Tuesdayல் இந்த பாதுகாப்பு குறியீடு வழங்கப்பட்டது. இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டு சிஸ்டம் அப்டேட் ஆகி இருந்தால், நீங்கள் தற்போதைக்குத் தப்பித்துக் கொண்டீர்கள் என நிம்மதியாக இருக்கலாம். இதற்கிடையே நாம் வேறு என்ன வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.


1.தானாக விண்டோஸ் அப்டேட் அமைக்கவும்: கம்ப்யூட்டரில், விண்டோஸ் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசத்தில், தானாகவே அப்டேட் செய்வதற்குத் தேவையான பைல்களை வெளியிடுகிறது. தானாக அப்டேட் செய்திடும் வழி அமைக்கப்பட்டால், நாம் இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் தானாகவே, இந்த அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளும்.


2. அண்மைக் கால பதிப்பிற்கு மேம்படுத்துதல்: எப்போதும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் புதிய பதிப்பு வெளியாகும் போது, அதற்கு நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அண்மையில் ஏற்பட்ட பாதிப்பு, அனைத்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பதிப்புகளையும் பாதித்தாலும், பழைய அப்டேட் செய்யப்படாத பதிப்புகள் அதிகம் தாக்குதலுக்குள்ளாயின. பொதுவாக, பழைய பதிப்புகள் குறித்து மைக்ரோசாப்ட் அக்கறை கொள்வதில்லை.

தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பிரவுசராக உள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 11 ஐப் பயன்படுத்த வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பதிப்பு 10, பழைய பிரவுசர்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான வேகத்தில் இயங்கியது. அடுத்த பதிப்பு 11, புதிய, தொடு உணர் செயல்பாடு கொண்ட பிரவுசராக அமைந்துள்ளது. மேலும், இந்த பதிப்பு, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்துடன் எளிதில் இணைந்து செயல்படுகிறது.


3. பிரவுசரை பாதுகாப்பான நிலையில் இயக்கவும்: அண்மையில் ஏற்பட்ட பிரச்னைக்குத் தீர்வினை, மைக்ரோசாப்ட் வழங்க, வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிகமாக வழங்கிய டூலினை இயக்க பயனாளர் முயற்சி தேவைப்பட்டது. இது போன்ற பிரச்னை ஏற்படும் காலம் மட்டுமின்றி, எப்போதும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, Protected Mode என்னும் பாதுகாப்பான வழியில் இயக்கலாம். அதனுடைய security level நிலையையும் மிக அதிகமாக வைக்கலாம்.


இதற்கு, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, தேடல் கட்டத்தில் Internet Options என டைப் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், Settings charm திறந்து, Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், கண்ட்ரோல் பேனல் திறந்து, அதில் Internet Options என்பதனைத் தேடி அறியவும். அடுத்து Security tab இயக்கி, Enable Protected Mode என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப் பட்டுள்ளதனை உறுதி செய்து கொள்ளவும். அடுத்து, Internet and Local intranet ஆகியவற்றுக்கு பாதுகாப்பு நிலை மிக அதிகமாக (high) அமைக்கப்பட்டுள்ளதனையும் உறுதி செய்திடவும். நீங்கள் அடிக்கடி செல்லும் இணைய தளங்கள் நம்பிக்கையானவை என்றால், செக்யூரிட்டி நிலை குறைவாக இருப்பதனையே விரும்புவீர்கள். இவற்றின் இணைய முகவரிகளை Trusted sites என்பதில் இணைத்து, இவற்றுக்கு மட்டும் security levelஐ மத்திமமான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.


4. நம்பிக்கையான தளங்களுக்கு வேறு பிரவுசர்: உலக அளவில் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உள்ளது. இதனால் தான், ஹேக்கர்கள், இதனையே குறி வைத்துத் தங்கள் தீய வேலையை மேற்கொள்கின்றனர். மேலும், பல நிறுவனங்கள் தங்கள் இணைய பயன்பாட்டிற்கு இதனையே தரப்படுத்தப்பட்ட பிரவுசராக அமைத்துக் கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கான இணைய தளங்களை அமைக்கின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தொடர்ந்து அப்டேட் செய்தாலும், பாதிக்கப்படும் அபாயம் இருந்து கொண்டே தான் உள்ளது. எனவே, நம்பிக்கையான இணைய தளங்களை அணுகுவதற்கு நாம் வேறு பிரவுசர்களைப் பயன் படுத்தலாம். இது அதிகம் பயன்படுத்தப்படாத பிரவுசராக இருந்தால், பாதுகாப்பு இன்னும் அதிகமாகும். அத்தகைய பிரவுசர்கள் இணையத்தில் இலவசமாக அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன.


5.ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துக: நம் கம்ப்யூட்டரை மொத்தமாகப் பாதுகாக்க, ஏதேனும் ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். இதனையும் அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றின் வழியாகத்தான், அனைத்து மால்வேர் புரோகிராம்களும் வரும் என்பதில்லை. வேறு எந்த புரோகிராம் வழியாகவும், துணை சாதனங்கள் வழியாகவும், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் பரவ அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துவது ஓர் அடிப்படைத் தேவையாக உள்ளது.

Thursday, November 7, 2013

ஷாருக்கான் - வாழ்க்கை வரலாறு (Biography)

                                            Shahrukh-Khan

                          ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது. 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார். டிரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், மோஷன் பிக்சர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் அனிமேஷன் ஸ்டூடியோ ரெட் சில்லிஸ் VFXஇன் இணைத் தலைவராகவும் இருந்து வரும் அவர், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளரும் ஆவார். ஹிந்தித் திரையுலகில் சாதாரணக் கலைஞனாக அடியெடுத்து வைத்து, உலகின் அனைத்து திரையுலகையுமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கான் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாலிவுட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 நவம்பர், 1965 (வயது 47)

பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா

பணி: நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு

ஷாருக்கான் அவர்கள், இந்தியாவின் தலைநகரான புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, இந்தியப் பிரிவினைக்கு முன்பே, பாக்கிஸ்தானில் உள்ள பெஷாவரிலிருந்து இந்தியா வந்து குடியேறிய ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

சிறு வயதிலிருந்தே, தனது பெற்றோரின் அரவணைப்பிலும், பாசப்பினைப்பிலும் வளர்ந்த அவர், டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைக் கற்றார். பள்ளிக்காலங்களில் படிப்பு, விளையாட்டு, மற்றும் நடிப்பு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதான ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவருக்குப் 15 வயதிருக்கும் போது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவர் தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், 1985ல் பின்னர் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்த அவர், பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை 1988 ஆம் ஆண்டில் பெற்றார். இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன்ஸில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

என்னதான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், அவரது கவனம் முழுவதும் பாலிவுட்டில் நுழைவதில் தான் இருந்தது. இதன் காரணமாக, அவர் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து திரையுலக நுணுக்கங்களைப் பயின்றார். அவரது தாயார் வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்ததால், 1990ல் மரணமடைந்தார். இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், அவரது தாயாரின் அறிவுரைப்படி, ‘கடும் முயற்சியால் மட்டுமே வெற்றியின் இலக்கிய அடைய முடியுமென்று’ எண்ணி அதை நோக்கிப் பயணித்தார்.

திரையுலகப் பிரவேசம்


தனது தாயாரின் மரணத்திற்கு முன்பே அவர், ‘தில் டரியா’, மற்றும் ‘ஃபௌஜி’ என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ‘ஃபௌஜி’ என்ற தொடரில் அவர் நடித்த கமாண்டோ கதாபாத்திரம் பெருமளவு வரவேற்பு பெற்றுத்தந்ததால், அவர் தொடர்ந்து ‘சர்கஸ்’ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சித் திரைப்படத்தில் நடித்தார். இதன் விளைவாக, ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பட வாய்ப்பைப் பெற்ற அவர், மும்பைக்குப் பயணமானார்.

இல்லற வாழ்க்கை

திரையுலகில் கால்பதிக்க எண்ணிய ஷாருக்கான் அவர்கள், பாலிவுட்டின் தலைமை இடமாகத் திகழும் மும்பைக்கு 1991ல் சென்றார். அங்கு ஒரு விழாவில், கவுரி சிப்பர் என்பவரைக் கண்ட அவருக்கு, அவர் மீது காதல் மலர்ந்தது. அவர் ஒரு இந்து என்பதால், பல எதிர்ப்புகளையும் மீறி, அவர்கள் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்தனர். அவர்கள் இருவருக்கும் 1997ல் ஆரியன் என்ற மகனும், 2000ல் சுஹானா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்கு முன்பு தனது மதமான இஸ்லாமியம் மீது அபார நம்பிக்கை கொண்ட அவர், திருமணத்திற்குப் பின், இரண்டு மதங்களையும் பின்பற்றுகிறார்.

திரையுலக வாழ்க்கை


ஷாருக்கான் அவர்கள், முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் ‘சமத்கார்’ (1992), ‘இடியட்’ (1992), ‘ராஜூ பன் கயா ஜென்டில்மேன்’ (1992), ‘மாயா மேம்சாப்’ (1993), ‘ஜிங் அங்கிள்’ (1993), ‘பாசிகர்’ (1993), ‘கபி ஹா கபி நா’ (1993), ‘அஞ்சாம்’ (1993), ‘கரன் அர்ஜுன்’ (1993), ‘ஜமானா தீவானா’ (1993), ‘குட்டு’ (1995), ‘ஓ டார்லிங்! யெஹ் ஹை இந்தியா’ (1995), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ராம் ஜானே’ (1995), ‘த்ரிமூர்த்தி’ (1995), ‘இங்கிலீஷ் பாபு தேசி மேம்’ (1995), ‘சாஹத்’ (1996), ‘ஆர்மி’ (1996), ‘கோய்லா’ (1997), ‘எஸ் பாஸ்’ (1997), ‘பர்தேஷ்’ (1997), ‘தில் தோ பாகல் ஹை’ (1997), ‘டூப்ளிகேட்’ (1998), ‘தில் சே’ (1998), ‘குச் குச் ஹோத்தா ஹை’ (1998), ‘பாட்ஷா’ (1993), ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’ (2000), ‘ஜோஷ்’ (2000), ‘ஹே ராம்’ (2000), ‘மொஹப்பத்தேன்’ (2000), ‘ஒன் 2 கா 4’ (2001),  ‘அசோகா’ (2001), ‘கபி குஷி கபி கம்’ (2001), ‘ஹம தும்ஹாரே ஹை சனம்’ (2002), ‘தேவதாஸ்’ (2002), ‘சல்தே சல்தே’ (2003), ‘கல் ஹோ னா ஹோ’ (2003), ‘யே லம்ஹே ஜூடாய் கே’ (2004), ‘மெய்ன் ஹூ நா’ (2004), ‘வீர் ஜாரா’ (2004), ‘ஸ்வதேஷ்’ (2004), ‘பஹெளி’ (2005), ‘கபி அல்விடா னா கெஹ்னா’ (2006), ‘டான்: தி தி சேஸ் பிகின்ஸ் அகைன்’ (2006), ‘சக் தே! இந்தியா’ (2007), ‘ஓம் சாந்தி ஓம்’ (2007), ‘ரப் னே பனா தி ஜோடி’ (2008), ‘பில்லு பார்பர்’ (2009), ‘மை நேம் இஸ் கான்’ (2011), ‘ரா ஒன்’ (2011), ‘டான் 2: தி சேஸ் கண்டிநியூஸ்’ (2011), மற்றும் ‘ஜப் தக் ஹை ஜான்’ (2012) போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தயாரிப்பு நிறுவனராக ஷாருக்  

1999ல், ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குனர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கிய அவர், ஐந்து ஆண்டுகள் கழித்து, அதை ‘ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி, தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார். அந்நிறுவனம், ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’, ‘அசோகா’, ‘சல்தே சல்தே’, ‘மெயின் ஹூ நா’, ‘பஹெளி’, ‘கால்’, ‘பில்லு’, ‘ஆல்வேஸ் கபி கபி’, ‘ரா ஒன்’ மற்றும் ‘டான் 2’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது. பின்னர், அனிமேஷன் ஸ்டுடியோவை அத்துடன் இணைத்து, ரெட் சில்லீஸ் VFX என்ற பெயரில் ‘சக் தே இந்தியா’, ஓம் ஷாந்தி ஓம்’, ‘தோஸ்தானா’, குர்பான்’ போன்ற படங்களையும் தயாரித்தது.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக ஷாருக்

2007ல், ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியை வழங்கினார்.

2008ல், ‘க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹை?” என்ற நிகழ்ச்சியத் தொகுத்து வழங்கினார்.

2011ல், ‘ஜோர் கா ஜட்கா: டோடல் வைப்அவுட்’என்ற அமெரிக்கன் விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

•1997 – சிறந்த இந்திய குடியுரிமை விருது

•2002 – பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்கியதால், ‘ராஜீவ் காந்தி விருது’ வழங்கப்பட்டது.

•2005 – இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை, இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.

•2009 – “தசாப்தத்தின் மிக சக்திவாய்ந்த பொழுதுபோக்கு கலைஞர்” என்ற IIFA-FICCI பிரேம்ஸ் விருதுகள் பெற்று பெருமைக்குரியவர்.

•30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அவர், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.

ஷாருக்கான் அவர்கள், சிறந்த நடிகருக்கான ஆறு முறை ஐஐஎஃப்ஏ விருதுகள், எட்டு ஜீ சினி விருதுகள், பதிமூன்று ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள், மூன்று பாலிவுட் திரைப்பட விருதுகள், இரண்டு குளோபல் இந்திய திரைப்பட விருதுகள், ஆறு முறை சான்சூய் விருதுகள், நான்கு முறை பால்வுட் விருதுகள்,  மற்றும் ஆசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை செய்யப்பட்டார்.

காலவரிசை


1965: புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார்.

1985: ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்து, பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.

1990: வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாயார், 1990ல் மரணமடைந்தார்.

1990: ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1991: பாலிவுட்டின் தலைமை இடமாகத் திகழும் மும்பைக்குச் சென்றார்.

1992: முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது.

1991: கவுரி சிப்பர் என்ற இந்து பெண்ணைக் காதல் புரிந்து, பல எதிர்ப்புகளையும் மீறி, அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் மணமுடித்தார்.

1999: ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குனர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கினார்.

2௦௦4: ட்ரீம்ஸ் அன்லிமிடெட் நிறுவனத்தை, ‘ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி, தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார்.

2005: இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை, இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.

2007: ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியை வழங்கினார்.

 
back to top