.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 8, 2013

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன.


nov 8 edit isro


நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி ரூபாயில் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சி தேவைதானா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றன. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்குக் கூட அளிக்கப்படுவதில்லை. அந்த விளையாட்டுகளுக்கு சமமான முக்கியத்துவம் அளியுங்கள் என்றுதான் வலியுறுத்த வேண்டுமே தவிர, நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட கிரிக்கெட்டை நிராகரித்துவிட முடியாது. அதுபோல் வறுமை ஒழிப்பு, பொதுக் கல்வி, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்திப் போராட வேண்டுமேயன்றி அறிவியல் ஆராய்ச்சி தேவையில்லை என்ற முடிவுக்குப் போய்விடக் கூடாது.

சொல்லப்போனால் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மிகவும் குறைவாகச் செலவிடும் நாடு இந்தியா. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) அமைப்பில் உள்ள நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடுவதில் கடைசி இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத நிதிதான் அறிவியலுக்காக ஒதுக்கப்படுகிறது. 2 சதவீதமாகவாவது அதை உயர்த்த வேண்டும் என்ற அறிவியலாளர்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான ஆலோசனை புறக்கணிக்கப்படுவது போலத்தான்.

இந்தியாவின் பல வல்லுநர்கள் அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற நிறுவனங்களுக்குச் சென்றிருப்பது வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் என்பதற்காக மட்டுமல்ல. தாங்கள் கற்றறிந்த அறிவியலை இங்கே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.

மக்களின் வறுமைக்குக் காரணம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இத்தனை கோடி ஒதுக்குவதல்ல. விவசாய வளர்ச்சி, உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு வழிவகுக்காத அரசின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளே காரணம். அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்று அவற்றை வெற்றிபெறச் செய்வதே மாற்றுக் கொள்கைகள் காலூன்றுவதற்குக் களம் அமைக்கும்.

‘மங்கள்யான்’ திட்டத்தால் நாட்டிற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப்போகிறது என்றும் கேட்கிறார்கள். இவ்வளவு முதலீடு செய்தேன், இவ்வளவு லாபம் கிடைத்தது என்று பார்க்கிற வியாபார விசயம் அல்ல இது. மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கட்டண அடிப்படையில் விண்ணில் செலுத்துகிற ஒரு வர்த்தகத் திட்டமும் அல்ல. இப்படிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளால் நேரடி பலன் என்று உடனடியாகக் கிடைத்துவிடாதுதான். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் பல புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு வருகிறபோது மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன.

செவ்வாய்ப் பயணம் தேவையா என்ற விவாதங்களையே கூட மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, அது விண்வெளி ஆராய்ச்சியால் கிடைத்த தொழில்நுட்பம் அல்லவா? செல்போன், பெர்சனல் கம்ப்யூட்டர் இரண்டும் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? இவை விண்வெளி ஆராய்ச்சி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களிலிருந்து கிடைத்தவைதான். எளிதில் கணக்குப் போடுவதற்கான கால்குலேட்டர், காலணிகளுக்குக் கூட பயன்படும் வெல்க்ரோ, வலியற்ற அறுவைக்குப் பயன்படும் லேசர் சர்ஜரி, சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்ட டிஜிட்டல் கடிகாரம், உடலின் உட்பகுதிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திடும் இன்ஃப்ரா ரெட் கேமரா, இதய சிகிச்சையில் முக்கிய வளர்ச்சியாக வந்துள்ள பேஸ் மேக்கர் பேட்டரி, கதிர் வீச்சுத் தடுப்புக் கண்ணாடிகள், அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறைகள், நோய்க்கிருமிகளற்ற தண்ணீர் தயாரிப்பதற்கான சுத்திகரிப்புக் கருவிகள், கார்களை இயக்குவதற்கான நேவிகேசன் அமைப்பு, எங்கே இருக்கிறோம் என்று அறிய உதவும் செல்போன் வழிகாட்டி என்று பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. நாட்டிற்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுகிற மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து பெறுவது குறித்து இன்று பெரிதும் பேசப்படுகிறது. அந்த சூரிய மின்சாரத் தொழில்நுட்பமும் செயற்கைக்கோள்களுக்கான மின்சார ஏற்பாட்டிலிருந்து வந்ததுதான். இத்தகைய எண்ணற்ற பலன்கள் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளால் உலக மக்களுக்குக் கிடைத்துள்ளன.

செவ்வாய் ஆராய்ச்சியும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில் வழங்கக்கூடும். புயல்கள் உருவாவதைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என்று இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிச் செல்கிறபோது மோசமான புயல்தாக்குதல்களிலிருந்து மக்களைப் பெருமளவுக்குக் காக்க முடியும். இதற்கான உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பாக அது அமையும். உலகத்தின் ஒரு அங்கம்தான் நாம். உலகத்திலிருந்து நாம் பெறுகிறோம், நாமும் உலகத்திற்கு வழங்குவோம்.

இன்னொரு முக்கியமான பயன் இருக்கிறது: செவ்வாய் என்பது பூமியைப் போல கல்லும் மண்ணும் உள்ள ஒரு செந்நிறக் கோள்தான், அதற்கென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமை எதுவும் கிடையாது என்ற உண்மை உறுதிப்படும் அல்லவா? செவ்வாய் தோஷம் என்பதன் பெயரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கெல்லாம் முடிவுகட்ட இந்த ஆராய்ச்சியும் தன் பங்கிற்கு உதவுமே! நட்சத்திரங்களும் கோள்களும் மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மை பரவுமானால் அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை!

அறிவியல் என்பது வெறும் பிப்பெட், பியூரட் மட்டுமல்ல. இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தில், மக்களிடையே அறிவியல் மனப்போக்கை வளர்த்தல் ஒரு லட்சியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவேற்றுவது அரசின் கடமை. பள்ளிகள், கல்லூரிகளில் இயற்பியல், வேதியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் கல்வியை ஊக்குவிப்பது, அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் தங்களது சொந்த முயற்சியில் செய்கிற அறிவியல் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்வது, அறிவியல் திட்டங்களை முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்துவது, ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக உருவாக்குவது என்று பல முனை நடவடிக்கைகள் தேவை. அதேவேளையில் அருமையான அறிவியல் திட்டங்களைத் தொடங்குகிறபோது, ஏதோவொரு கோவிலுக்குச் சென்று கடவுள் சிலையின் பாதத்தில் திட்டத்தின் சிறு வடிவத்தை வைத்துப் பூசை செய்கிற அபத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீஹரிகோட்டா போல தமிழகத்தின் குலசேகரபட்டினம் ஒரு பயனுள்ள தளமாக உருவாக முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கோள்களுக்கு செலுத்து வாகனத்தை ஏவுகிற எரிபொருள் செலவு அதனால் குறையும் என்கிறார்கள். தளத்திற்குத் தேவையான நிலம் அரசாங்கத்திற்கே சொந்தமானதாக இருந்தும் இந்த ஆலோசனையை ஏனோ மத்திய அரசு ஏற்காமலிருக்கிறது. இதை ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புத் திறன் எப்போது வளரும்? தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கப்படும்போதுதான் வளரும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளிலெல்லாம் தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் வழியாகப் படித்துவிட்டு மொழிபெயர்த்து மொழிபெயர்த்தே மூளையின் கண்டுபிடிப்பு ஆற்றல் பின்னுக்குத் தள்ளப்பட்டு காப்பியடிக்கிற வேலைதான் நடக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் புறப்படுகிறார்களே தவிர, கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உருவாகிறார்கள். தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான். ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு தாய்மொழியே பயிற்றுமொழி என்பதை மத்திய – மாநில அரசுகள் எல்லா மாநிலங்களிலும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

அறிவியல் திட்டங்களை நிராகரிப்பதற்கு மாறாக, இப்படிப்பட்ட மாற்று அணுகுமுறைகளுக்கான குரல்கள் வலுவாக ஒலிப்பதன் மூலமே மக்களுக்கான அறிவியல் ஓங்கிடும்.

சீன வானில்மூன்று ஆதவன்கள்!!

சீபெங் நகரில் நடந்த விண்வெளி அற்புதத்தில் காணப்பட்ட மூன்று சூரியன்கள் 
 
சீனாவின் வடக்குபகுதியில் உள்ள உள்மங்கோலியா சுயாட்சி பகுதி மக்கள் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வை காண்பதற்காக வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். வானில் ஒரே நேரத்தில் தெரிந்த மூன்று சூரியன்கள்தான் அவர்களது வியப்புக்கு காரணாமாகும். 


காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனும் அதன் இரட்டை உடன்பிறப்புகளான சிறிய சூரியன்களும் திடீரென்று முளைத்தன.


 இவை மூன்றும் வானவில் போன்ற ஒளிவட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன. சீபெங் நகரில் தோன்றிய இந்த அற்புத நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது.


இந்த அற்புத விண்வெளி நிகழ்வை ஏராளமானவர்கள் தங்கள் புகைப்படக்கருவி அல்லது வீடியோ கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். நகரின் சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாக சிலர் கூறினர். 


இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீபெங் வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கு பேண்டம் சன் என்றும் ஐஸ்ஹேலோ என்றும் பெயர்கள் உண்டு என்று அது கூறியது.


 வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில்ஊருடுவும் ஒளிச்சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார்.

பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது இளைஞர்களின் லேட்டஸ்ட் பேஷனாகவே மாறி விட்டது பஸ் புக்கை ஒரு நாள் அதை பயன்படுத்தாவிட்டாலும் அவர்கள் நிலை தடுமாறிதான் போய் விடுகிறார்கள் அந்த அளவுக்க மக்களை இந்த பேஸ்புக் தனக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில் பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (Facebook for every phone) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி என்கிறார்கள்.

nov 8 - online media


இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச் சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. என்றாம், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அதே சமயம் பிச்புக்கில் பல தகவல்கள் பொய்யாக பரப்பப் படுகிறது என்றும் ஆய்வில் தெரிய வருகிறது
சமீபத்தில் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


ஆனால் இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர் பொழுதுபோக்கு செய்திகள்தான் மிகவும் பிரபலமடைவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் சில தகவல்கள் பொய்யாக பரப்பப்படுவதாக குறிப்பிட்டனர்.


அதிலும் செய்திக்காக பேஸ்புக்கை நாடும் நபர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் வழக்கமான செய்திகள் பக்கம் தலை காட்டுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.இது குறித்து பியூ ஆரய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏமி மிட்செல் கூறுகையில், “செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான அனுகுமுறையை முன்னிலைப்படுத்துகிறது.



இந்த ஆராய்ச்சிக்காக 5,173 பேரிடம் கருத்துக்களைப் பெற்றபோது, நாம் செய்தியை மெனக்கிட்டு தேடாதபோதும் நாம் செய்தியை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் சிறந்தத் தளம் என ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து கணிசமான அளவில் செய்திகளை பகிரும் செய்தி நிறுவனங்களின் இணையதளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வாசகர்கள் வட்டம் அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


எந்த மாதிரியான செய்திகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வர வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், மேலோட்டமாக செய்திகள் தங்களது பேஸ்புக் முகப்புப் பக்கத்தில் வந்து சேர்வதை அனைவரும் விரும்புவதாகவே ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது..

காணாமற்போன அடையாளங்கள்!

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை கிராமங்களின் அடையாளங்கள் மாறிவருவதைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். கிராமங்களின் தனித்துவமான அடையாளங்களாக விளங்கிய இடங்கள், பொருட்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் இன்று மாறியும், காணாமலும் போய்விட்டன. இதனால் பலவகையான அடையாளங்களைக் கிராமங்கள் இழந்தாலும் சில பழக்கவழக்கங்களால் தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

 கிராமங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த பொருட்கள், இடங்கள்கூட கால ஓட்டத்தில் காணாமற்போய்விட்டன. ஒருகாலத்தில் புழக்கத்தில் மக்களோடு ஒன்றியிருந்த பொருட்கள்கூட இன்று நினைவுப் பொருட்களாக மாறிவிட்டன. வீட்டின் முன்பு கால்நடைகள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், வீட்டுத் திண்ணையில் முதியவர்கள், தாவணி போட்ட கன்னிப் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயும் குடும்பப் பெண்கள் என்றிருந்த கிராமம்தான் இன்று எப்படியெல்லாமோ மாறிவிட்டது.

 தெருவெங்கும் தார் சாலைகள், கான்கிரீட் வீடுகள், சுடிதார் போட்ட சிறுமிகள், வீட்டின் முன்பு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்றெல்லாம் நகரத்துக்கு இணையாக கிராமங்களும் மாறிவிட்டன. கால ஓட்டத்தில் காணாமற்போன கிராமத்து அடையாளங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

 ஊர் கிணறு (பொது கிணறு): குடிநீருக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ஏரிகளே பிரதானமாக இருந்தன. ஆனால் நாளடைவில் சரியான பராமரிப்பு இல்லாமற்போனதால் கால்நடைகளுக்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் மட்டுமே ஏரிகளின் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் ஊர் கிணறு (பொது கிணறு) எனப்படும் கிணறுதான் மக்களின் தாகம் தீர்த்தது.

 ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி பயன்பட்டு வந்த ஊர் கிணறு காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் பரபரப்பாக இருக்கும். மற்ற நேரங்களில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருக்கும். ஊர் கிணறு பெரும்பாலும் குடியிருப்புகளை ஒட்டினாற்போன்று ஒதுக்குப் புறத்திலும் ஏரியின் மையப்பகுதியிலும்தான் அமைந்திருக்கும்.

 ஆழ்துளை குழாய்களின் உபயம், குடிநீர் திட்டத்தினால் தெருக்களில் தண்ணீர் விநியோகம் போன்றவற்றால் காலப்போக்கில் ஊர் கிணறு காணாமற்போய்விட்டது. அன்று குடிநீர் விநியோகத்தில் பிரதானமாக விளங்கிய ஊர் கிணறு இன்று குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டது. ஊர் கிணறு காணாமற்போக காரணமாக விளங்கிய கைப்பம்புகளை காண்பதும் இன்று அரிதாக உள்ளது.

 சுமைதாங்கி: உள்ளார்ந்த அர்த்தத்தோடும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்றே எண்ணத் தோன்றும் பழக்கவழக்கங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதற்கு "சுமைதாங்கி' ஓர் உதாரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இறந்துவிட்டால் அவர்களின் நினைவாக அமைக்கப்படுவதுதான் "சுமைதாங்கி'. கர்ப்பிணி பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பே சுமையுடன் இறந்துவிட்டதாகவும், இந்நிலை இனி எவருக்கும் வரக்கூடாது என்பதற்காகவும் சுமைதாங்கி அமைக்கப்படுகிறது.

 சுமைதாங்கி பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனப்பகுதியிலும் சாலையோரங்களிலும்தான் அமைக்கப்படும். செங்குத்து வடிவில் இரண்டு கற்களும் கிடைமட்டமாக ஒரு கல்லும் கொண்டு அமைக்கப்பட்ட சுமைதாங்கியில் எவ்வளவு கனமான சுமையையும் எவரது உதவியும் இல்லாமல் இறக்கிவைக்கவும், மீண்டும் சுமந்து செல்லவும் முடியும்.

கர்ப்ப கால மரணங்கள் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டாலும் மக்களின் பழக்கவழக்கங்கள் இன்று மாறிவிட்டதால், சுமைதாங்கி அமைப்பது இல்லாமற் போய்விட்டது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சுமைதாங்கிகளும் பயனற்றுப் போய்விட்டன. அவையும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
 திண்ணை: முதியவர்களின் கடைசிகால இருப்பிடமாக விளங்கும் திண்ணை கொண்ட வீடுகளை இன்று காணமுடிவதில்லை. இருக்கின்ற வீடுகளிலும் திண்ணைப் பகுதி பயன்பாடில்லாத இடமாகவே உள்ளது. வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களை வரவேற்கும்போது திண்ணையைக் காட்டி, "உட்காருங்கள்' என்று சொல்வதே மிகப் பெரிய மரியாதையாகக் கருப்பட்டது.

 வயதான காலத்தில் தரையில் உட்காரவோ, எழுந்திருக்கவோ முடியாதபோது இந்த திண்ணைதான் உற்ற தோழனாக விளங்கியது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து தெருக்களில் நடந்து செல்லும் போது வீட்டின் முன்புள்ள திண்ணையில் முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

 அதனால் முதியவர்கள் வசதிக்காக திண்ணையில் உட்கார்ந்து சுவறில் சாய்ந்து கொள்ளும் பொருட்டு சாய்வு தள அமைப்பும், அதற்கு மேல் சிறிய மாடமும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மாடம் விசேஷ காலங்களில் விளக்கேற்றி வைக்கும் இடமாகவும், மற்ற நாட்களில் முதியோருக்குத் தேவையான தண்ணீர் சொம்பு, வெற்றிலைப் பாக்கு பொட்டலம் வைக்கும் இடமாகவும் விளங்கும்.

 இன்று வீட்டில் திண்ணை என்பது இடத்தை ஆக்கிரமிக்கும் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அதனால் திண்ணை வைத்த வீடுகளை எவரும் கட்டுவதுமில்லை, இருக்கின்ற திண்ணைகள் பராமரிக்கப்படுவதும் இல்லை.

 டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.

 சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.

 மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.

 நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.

 டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.


 கிராம விளையாட்டுகள்: கிராமத்து தெருக்களில் சிறார், சிறுமியர் விளையாடுவதைக் காண்பதற்கில்லை. முன்பு பள்ளி நாட்களில் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களில் பகல் வேளையிலும் விளையாடிக் கொண்டிருப்பர். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி ஆட்டம், சில்லாட்டம், தாயம் போன்றவை சிறுமியர் விளையாட்டாகவும், கிட்டிப்புல், கோலி, கபடி போன்றவை சிறார் விளையாட்டாகவும் இருந்தது.

 ஆனால் காலப்போக்கில் நகரத்து சாயல், தகவல் தொடர்பு சாதனங்களால் இத்தகைய விளையாட்டுகள் இல்லாமற்போய்விட்டன. பண்டிகை நாட்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே இவ்வகையான விளையாட்டுகளைக் காணமுடிகிறது.

 பத்தாயம்: அறுவடைக்குப் பின்னர் விவசாய விளைபொருட்களை ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்க பயன்படுத்துவதுதான் பத்தாயம். அதிக அளவில் சாகுபடி செய்வோரும், வசதி படைத்தவர்களும்தான் பத்தாயம் வைத்திருப்பர். செவ்வக வடிவில் வசதிக்கேற்ப உயர்ரக அல்லது சாதாரண மரப்பலகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பத்தாயத்தில் பொருட்களைக் கொட்டுவதற்கு அதன் மேற்புரத்திலும் வேண்டும்போது எடுத்துக் கொள்ள கீழ்புறத்திலும் வழிவகை உண்டு.
 உள்ளூரில் கிடைக்கும் களிமண், வைக்கோல் துகள் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான குதிர் வட்ட வடிவில் விலைக்கேற்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வசதி குறைவானவர்கள் வீட்டில் குதிர்தான் இடம்பெற்றிருக்கும்.

 நகை, பணம் போன்றவற்றையும் இதனுள்தான் வைத்திருப்பர். விளைபொருட்களையே உணவுப் பொருட்களாகவும் அப்போது பயன்படுத்தியதால் பத்தாயம், குதிர் ஆகியவற்றின் தேவை அவசியமாக இருந்தது.

 கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்று உறுதியாகக் கூறப்பட்ட அடையாளங்கள் யாவும் இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட இல்லாமற்போய்விட்டன. அடையாளமாக விளங்கிய பொருட்கள், பழக்கவழக்கங்கள் யாவும் இன்று அடையாளத்தை இழந்துவிட்டன. பழக்கவழக்கங்கள் மட்டுமே இன்று பழக்கத்தில் இருந்தாலும் அதுவும் விசேஷ காலங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. 

 
back to top