.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 8, 2013

வாழ்வை மாற்றும் 10 வாக்கியங்கள்

அடுத்து வரும் வாக்கியங்கள் வாசிக்க மட்டுமல்ல. யோசிப்பதற்காகவும் கூட. அவற்றைப் புரிந்து கொண்டால் பார்வை விரியும். பார்வை விரிந்தால் பாதை தெரியும்.


1.பணிவு

பணிவு எப்போதும் தோற்றதில்லை; பயம் ஒருபோதும் வென்றதில்லை


2.கல்வி

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்; வெற்றியின் போது அதை நினைவில் வைத்துக் கொள்


3.படைப்பு

காற்றால் நிரம்பிய வானத்திலும் கல்லாய் இறுகிய பாறையிலும் எதுவும் விளைவதில்லை


4.படிப்பு

யோசிக்க வைக்காத புத்தகம் உபயோகமில்லாத காகிதம்


5.தேடல்:

பேணி வளர்க்க வேண்டிய உறவுகள் மூன்று

உங்களுக்கும் மனதிற்குமான உறவு;

உங்களுக்கும் உலகிற்குமான உறவு;

உங்களுக்கும் கடவுளுக்குமான உறவு


6..இலக்கு

நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நிலவை ரசிக்கத் தவறிவிடுகிறார்கள்


7.முயற்சி

பனி பெய்து குடம் நிரம்பாது. கோஷங்கள் மட்டுமே லட்சியங்களை வென்றெடுக்காது


8.சாதனை

மைல் கற்கள் பயணிப்பதில்லை சாதனைகளைக் கடப்பதுவே சாதனை


9. எதிர்காலம்

எதிர்காலத்தை நம்புங்கள்; எறும்புகள் கூட சேமிக்கின்றன


10.நாளை

நாளை என்பது இன்று துவங்குகிறது.

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?

நீங்கள் தொலைத்தொடர்பு  (BSNL / AIRTEL / AIRCEL and Etc) வாடிக்கையாளரா? உங்கள் செல்பேசிக்கு வரும் வேண்டாத குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் நிறுத்த வேண்டுமா? அப்படியெனில் இது உங்களுக்கான தகவல்தான்.


எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.


வேண்டாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் என்பது என்ன?

நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.


நிறுத்துவதற்கான வழிமுறைகள்:

உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.


1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.


2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.


START 1 &  வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை

START 2 &   ரியல் எஸ்டேட் தொடர்பானவை

START 3 &   கல்வி தொடர்பானவை

START 4 &   உடல்நலம் தொடர்பானவை

START  5 &  நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை

START 6 &  தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை

START 7 &   சுற்றுலா தொடர்பானவை


எப்படி பதிவு செய்வது?

1909 என்ற எண்ணுக்கு அழைபேசியில் தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினால் முழுமையாக நிறுத்துவதற்கு START 0 என்றும் ஒரு சில வகைகளை மட்டும் நிறுத்துவதற்கு அந்த வரிசை எண்ணைத் தவிர மற்றவற்றைக் குறிப்பிட்டு உதாரணமாக START  2,3 (ரியல் எஸ்டேட், கல்வி) டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.


இப்படி பதிவு செய்ததும் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட எண் (Unique Number ) ஒன்று குறுஞ்செய்தியில் வரும்.


எத்தனை நாட்களில் நிறுத்தப்படும்?

தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் (‡National Customer Preference Register) பதிந்த ஒரு வாரத்திற்குள் உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டு வேண்டாத விளம்பர அழைப்புகள் நிறுத்தப்படும்.


ஏற்கெனவே (‡National Do Not Call Registry) NDN ‡இல் பதிவு செய்திருந்தால் மீண்டும் நீங்கள் குறுஞ்செய்தியோ, அழைப்போ செய்தால் அது முழுமையாக நிறுத்தப்படும் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் (‡NDNC  தான் தற்போது ‡NCPR  ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது).


தொந்தரவுகள் தொடர்ந்தால்...

‡NCPR இல் பதிந்து ஏழு நாட்களுக்குப் பிறகும் ஏதேனும் வேண்டாத விளம்பர அழைப்புகள் வந்தால் அந்த எண்ணைக் குறிப்பிட்டு அதைப் புகாராகப் பதிவு செய்யலாம். மூன்று நாட்களுக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். வணிக நோக்கமில்லாத தகவல் ஏதேனும் வந்தால் அந்த நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், அழைப்பு வந்த தேதி, நேரம் (ரயில்வே நேரத்தைக் குறிப்பிட வேண்டும். மதியம் 4 மணி எனில் 16 என்று குறிப்பிடவேண்டும்) மற்றும் பேசிய விஷயத்தின் நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கும் 1909 என்ற எண்ணையே இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பெற்றதற்கான எண்ணையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது சம்பந்தமான புகார்கள் ஏழு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.


மீண்டும் விருப்பத் தேர்வுகளை மாற்ற இயலுமா?

நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த பிரிவினை மாற்ற வேண்டுமெனில் அதாவது இரண்டாவது பிரிவான கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வேண்டாம் எனப் பதிவு செய்திருந்து மீண்டும் வேண்டும் என விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. முன்னர் பதிவு செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் மீண்டும் உங்களது குறுஞ்செய்தியை உறுதி செய்வார்கள். அதை மீண்டும் உறுதி செய்யலாம் அல்லது அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் அனுப்பலாம். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் புதிதாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.


உங்கள் வேண்டுகோளை திரும்பப் பெற விரும்பினால் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி ‡NCPR லிருந்து வரும். அதாவது உங்கள் வேண்டுகோள் 24 மணி நேரத்திற்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடும் என்று வரும். அதை உறுதி செய்யாமல் விட்டால் மீண்டும் வழங்குநர் வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் உங்கள் எண் சேர்க்கப்பட்டுவிடும் அல்லது STOP  என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு தேவைப்படுகிற வரிசை எண்ணைக் கொடுத்தால் அதுகுறித்த அழைப்புகள் வரத் துவங்கும்.


கட்டணம்:

இந்த சேவையைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.


மற்ற சேவைகள் பாதிக்கப்படுமா?

உதாரணமாக ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்ததும் தானியங்கி இயந்திரம் மூலம் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் இதன் மூலம் தடுக்கப்படாது. அதேபோல ஆன்லைனில் பொருள் வாங்கும்போதோ, ஏதேனும் தளத்தில் பதிந்து கடவுச்சொல் சரிபார்த்தலுக்கோ, பேருந்து, ரயில் முன்பதிவுக்கான குறுந்தகவலோ வருவது இதன் மூலம் பாதிக்கப்படாது.


எப்படி இது சாத்தியம்?

எல்லா விளம்பரத் தொடர்புகளும் டிராயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். டிராயிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் அழைப்பாகவோ, குறுஞ்செய்தியாகவோ வராது. இப்படி விளம்பரதாரர்கள் பதிவு செய்யும்போது டிராய்க்கு பணம் செலுத்தவேண்டும். அதனால் நீங்கள் வேண்டாம் என்றால் அதை நிறுத்தவும், வேண்டும் என்றால் தொடரவும் டிராய்க்கு சாத்தியமாகிறது.


எந்தெந்த விளம்பர நிறுவனங்கள் டிராயிடம் பதிவு செய்திருக்கின்றன என்பதை

http://www.nccptrai.gov.in/nccpregistrylistoftmstateanddistrict.misc?method=loadStates  என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


மேலும் தகவலுக்கு:

பதிவு செய்வதற்கு, அழைப்புகளைத் தடுப்பதற்கு, விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கு, புகாரைப் பதிவு செய்வதற்கு அனைத்துக்கும் 1909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படியோ  Interactive Voice Response System  (IVRS) அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பலாம்.


எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பதை கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

http://www.nccptrai.gov.in/nccpregistry/How%20to%Register%20complaint.pdf?reqtrack=UcGCjkQNUmAwhxyUdaWZlieLC

மேலும் தகவலுக்கு http://www.nccptrai.gov.in/nccpregistry/  என்ற தளத்தைப் பார்க்கவும் அல்லது helplene@nccptrai.gov.in  என்ற மின்னஞ்சலிலோ 011-24305726, 011-23212032 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு  கொள்ளவும்.

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் கண்டுபிடிப்பு!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி, கோலின் இயாடி கூறியதாவது:


சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம் தான் கண்ணீரை வரவழைக்கிறது. எனவே, கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம்.


இந்த புது வெங்காயம், கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.


ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கியுள்ளோம்.


இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும் என கோலின் மேலும் தெரிவித்தார்.


இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்பதை, அவர் குறிப்பிடவில்லை.

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன.


nov 8 edit isro


நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி ரூபாயில் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சி தேவைதானா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றன. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்குக் கூட அளிக்கப்படுவதில்லை. அந்த விளையாட்டுகளுக்கு சமமான முக்கியத்துவம் அளியுங்கள் என்றுதான் வலியுறுத்த வேண்டுமே தவிர, நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட கிரிக்கெட்டை நிராகரித்துவிட முடியாது. அதுபோல் வறுமை ஒழிப்பு, பொதுக் கல்வி, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்திப் போராட வேண்டுமேயன்றி அறிவியல் ஆராய்ச்சி தேவையில்லை என்ற முடிவுக்குப் போய்விடக் கூடாது.

சொல்லப்போனால் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மிகவும் குறைவாகச் செலவிடும் நாடு இந்தியா. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) அமைப்பில் உள்ள நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடுவதில் கடைசி இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத நிதிதான் அறிவியலுக்காக ஒதுக்கப்படுகிறது. 2 சதவீதமாகவாவது அதை உயர்த்த வேண்டும் என்ற அறிவியலாளர்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான ஆலோசனை புறக்கணிக்கப்படுவது போலத்தான்.

இந்தியாவின் பல வல்லுநர்கள் அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற நிறுவனங்களுக்குச் சென்றிருப்பது வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் என்பதற்காக மட்டுமல்ல. தாங்கள் கற்றறிந்த அறிவியலை இங்கே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.

மக்களின் வறுமைக்குக் காரணம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இத்தனை கோடி ஒதுக்குவதல்ல. விவசாய வளர்ச்சி, உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு வழிவகுக்காத அரசின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளே காரணம். அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்று அவற்றை வெற்றிபெறச் செய்வதே மாற்றுக் கொள்கைகள் காலூன்றுவதற்குக் களம் அமைக்கும்.

‘மங்கள்யான்’ திட்டத்தால் நாட்டிற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப்போகிறது என்றும் கேட்கிறார்கள். இவ்வளவு முதலீடு செய்தேன், இவ்வளவு லாபம் கிடைத்தது என்று பார்க்கிற வியாபார விசயம் அல்ல இது. மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கட்டண அடிப்படையில் விண்ணில் செலுத்துகிற ஒரு வர்த்தகத் திட்டமும் அல்ல. இப்படிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளால் நேரடி பலன் என்று உடனடியாகக் கிடைத்துவிடாதுதான். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் பல புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு வருகிறபோது மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன.

செவ்வாய்ப் பயணம் தேவையா என்ற விவாதங்களையே கூட மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, அது விண்வெளி ஆராய்ச்சியால் கிடைத்த தொழில்நுட்பம் அல்லவா? செல்போன், பெர்சனல் கம்ப்யூட்டர் இரண்டும் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? இவை விண்வெளி ஆராய்ச்சி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களிலிருந்து கிடைத்தவைதான். எளிதில் கணக்குப் போடுவதற்கான கால்குலேட்டர், காலணிகளுக்குக் கூட பயன்படும் வெல்க்ரோ, வலியற்ற அறுவைக்குப் பயன்படும் லேசர் சர்ஜரி, சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்ட டிஜிட்டல் கடிகாரம், உடலின் உட்பகுதிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திடும் இன்ஃப்ரா ரெட் கேமரா, இதய சிகிச்சையில் முக்கிய வளர்ச்சியாக வந்துள்ள பேஸ் மேக்கர் பேட்டரி, கதிர் வீச்சுத் தடுப்புக் கண்ணாடிகள், அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறைகள், நோய்க்கிருமிகளற்ற தண்ணீர் தயாரிப்பதற்கான சுத்திகரிப்புக் கருவிகள், கார்களை இயக்குவதற்கான நேவிகேசன் அமைப்பு, எங்கே இருக்கிறோம் என்று அறிய உதவும் செல்போன் வழிகாட்டி என்று பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. நாட்டிற்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுகிற மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து பெறுவது குறித்து இன்று பெரிதும் பேசப்படுகிறது. அந்த சூரிய மின்சாரத் தொழில்நுட்பமும் செயற்கைக்கோள்களுக்கான மின்சார ஏற்பாட்டிலிருந்து வந்ததுதான். இத்தகைய எண்ணற்ற பலன்கள் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளால் உலக மக்களுக்குக் கிடைத்துள்ளன.

செவ்வாய் ஆராய்ச்சியும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில் வழங்கக்கூடும். புயல்கள் உருவாவதைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என்று இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிச் செல்கிறபோது மோசமான புயல்தாக்குதல்களிலிருந்து மக்களைப் பெருமளவுக்குக் காக்க முடியும். இதற்கான உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பாக அது அமையும். உலகத்தின் ஒரு அங்கம்தான் நாம். உலகத்திலிருந்து நாம் பெறுகிறோம், நாமும் உலகத்திற்கு வழங்குவோம்.

இன்னொரு முக்கியமான பயன் இருக்கிறது: செவ்வாய் என்பது பூமியைப் போல கல்லும் மண்ணும் உள்ள ஒரு செந்நிறக் கோள்தான், அதற்கென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமை எதுவும் கிடையாது என்ற உண்மை உறுதிப்படும் அல்லவா? செவ்வாய் தோஷம் என்பதன் பெயரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கெல்லாம் முடிவுகட்ட இந்த ஆராய்ச்சியும் தன் பங்கிற்கு உதவுமே! நட்சத்திரங்களும் கோள்களும் மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மை பரவுமானால் அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை!

அறிவியல் என்பது வெறும் பிப்பெட், பியூரட் மட்டுமல்ல. இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தில், மக்களிடையே அறிவியல் மனப்போக்கை வளர்த்தல் ஒரு லட்சியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவேற்றுவது அரசின் கடமை. பள்ளிகள், கல்லூரிகளில் இயற்பியல், வேதியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் கல்வியை ஊக்குவிப்பது, அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் தங்களது சொந்த முயற்சியில் செய்கிற அறிவியல் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்வது, அறிவியல் திட்டங்களை முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்துவது, ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக உருவாக்குவது என்று பல முனை நடவடிக்கைகள் தேவை. அதேவேளையில் அருமையான அறிவியல் திட்டங்களைத் தொடங்குகிறபோது, ஏதோவொரு கோவிலுக்குச் சென்று கடவுள் சிலையின் பாதத்தில் திட்டத்தின் சிறு வடிவத்தை வைத்துப் பூசை செய்கிற அபத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீஹரிகோட்டா போல தமிழகத்தின் குலசேகரபட்டினம் ஒரு பயனுள்ள தளமாக உருவாக முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கோள்களுக்கு செலுத்து வாகனத்தை ஏவுகிற எரிபொருள் செலவு அதனால் குறையும் என்கிறார்கள். தளத்திற்குத் தேவையான நிலம் அரசாங்கத்திற்கே சொந்தமானதாக இருந்தும் இந்த ஆலோசனையை ஏனோ மத்திய அரசு ஏற்காமலிருக்கிறது. இதை ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புத் திறன் எப்போது வளரும்? தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கப்படும்போதுதான் வளரும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளிலெல்லாம் தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் வழியாகப் படித்துவிட்டு மொழிபெயர்த்து மொழிபெயர்த்தே மூளையின் கண்டுபிடிப்பு ஆற்றல் பின்னுக்குத் தள்ளப்பட்டு காப்பியடிக்கிற வேலைதான் நடக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் புறப்படுகிறார்களே தவிர, கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உருவாகிறார்கள். தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான். ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு தாய்மொழியே பயிற்றுமொழி என்பதை மத்திய – மாநில அரசுகள் எல்லா மாநிலங்களிலும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

அறிவியல் திட்டங்களை நிராகரிப்பதற்கு மாறாக, இப்படிப்பட்ட மாற்று அணுகுமுறைகளுக்கான குரல்கள் வலுவாக ஒலிப்பதன் மூலமே மக்களுக்கான அறிவியல் ஓங்கிடும்.

 
back to top