.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 6, 2013

என் சவ அடக்கத்தில் ... - மார்ட்டின் லூதர்!

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.


“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....



* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.



* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்



* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்



* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.



* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.



* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்



* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்



* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.



* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.



* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.



* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.



* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.



* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.



* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.



* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!



அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.


"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.


பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!



நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

 
back to top