.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 4, 2014

சரவணன் சம்பளம் நான்கு கோடி..?



எங்கேயும் எப்போதும், இவன்வேறமாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணனை நோக்கி நிறையப் படநிறுவனங்கள் வருகின்றனவாம்.


அவர்களில் முந்திக்கொண்டு வந்திருப்பது ஏஆர்.முருகதாஸ் என்கிறார்கள். அவரடம் உதவிஇயக்குநராக வேலை பார்த்தவர் என்பதால் எல்லோரையும் விட எனக்கே முன்னுரிமை கொடுத்து எங்கள் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம் முருகதாஸ்.


அவர் நிறுவனத்துக்குப் படமெடுத்தால் அதிகச் சம்பளம் கேட்கமுடியாதே என்று யோசித்த சரவணன், பதில் சொல்லாமல் நாட்களைக் கடத்தியிருக்கிறார்.


இதுதான் காரணம் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட முருகதாஸ், அடுத்த படத்தை எங்களுக்கு எடுத்தால் உனக்குச் சம்பளம் நான்குகோடி என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத சரவணன், அடுத்தபடம் முருகதாஸ் நிறுவனத்துக்குத்தான் என்று ஒப்புக்கொண்டாராம்.


தன்னிடம் பணியாற்றியவரை இவ்வளவு சம்பளம் கொடுத்து ஒப்புக்கொள்ள வைக்க முருகதாஸ் நினைத்ததற்கும் பின்னணி இருக்கிறதென்று சொல்கிறார்கள்.


அவர் இயக்குநரையும் அவருடைய கதைக்கேற்ப சந்தைமதிப்புள்ள ஒரு கதாநாயகனையும் ஒப்பந்தம் செய்துவிடுவார். அதன்பின் அந்தப்படத்தை வேறு ஏதாவது ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கப்போவதாக அறிவிப்பார். உண்மையில் அந்தப்படத்தைத் தயாரிப்பது அவர் கூட்டுச்சேருகிற நிறுவனமாகத்தான் இருக்கும்.


ஆனால் இவருடைய நிறுவனத்தின் பெயரும் படத்தில் இருக்கும். இவருக்கு அதனால் என்ன கிடைக்கும்? அந்தப்படக்குழுவை ஒப்பந்தம் செய்து கொடுத்ததற்காக அவர் சில கோடிகளைப் பெற்றுக்கொள்வார். சாதாரணமாக தயாரிப்புமேலாளர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.


அந்தப்படத்தில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய முறையான சம்பளம் கூடக் கிடைக்காமல் போகும். ஆனால் அதே வேலையை முருகதாஸ், உட்கார்ந்தி இடத்திலிருந்து செய்துவிட்டு சில கோடிகளைப் பெற்றுக்கொள்கிறார் என்கிறார்கள்.


அதுவும் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பது உங்களுக்குக் கிடைத்திருக்கிற அரியவாய்ப்பு என்றே சொல்வாராம் முருகதாஸ். பணம் போடுகிறவர்களும் அதையே பெருமையாக எண்ணிக்கொண்டு அவர் சொல்கிற படியெல்லாம் செய்வார்களாம். முருகதாஸ் எனும் பெயருக்குக் கிடைக்கும் இலாபம் இது.

இரட்டைவேடங்களில் சூர்யா..!



              லிங்குசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படத்தை அடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாக மையக்கதையை மட்டும் சொல்லிப் படத்தைத் தொடங்கிவிடுவார் வெங்கட்பிரபு. ஆனால் இப்போது சூர்யா படத்துக்கான முழுமையான திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் படப்பிடிப்பு தொடங்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.

              அதெல்லாம் அப்படித்தான் சொல்வார், ஆனால் படப்பிடிப்புத்தளத்தில்தான் அவருக்குப் புதுப்புது யோசனைகள் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ? வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு இரட்டைவேடங்கள் என்பது மட்டும் உறுதியாம். அந்தப்படத்துக்குத் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பெயர், கல்யாணராமன். இரட்டைவேடம் என்று சொல்லிவிட்டு கல்யாணராமன் என்று பெயரும் வைத்தால் கமலஹாசனின் கல்யாணராமன் மற்றும் ஜப்பானில்கல்யாணராமன் ஆகிய படங்களின் நினைவு வரும். அதுபோன்ற ஒரு படத்தையே மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? இந்தப்படமும் நகைச்சுவை பெருமளவில் கலந்த சண்டைப்படம் தானாம்.

               பிதாமகன் படத்துக்குப் பிறகு சூர்யா, நகைச்சுவை கலந்த வேடங்களில் நடிக்கவில்லை என்பதால் அந்தப்பாணியில் ஒரு கதையைத் தயார் செய்தால், அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டிருக்கும் சூர்யாவை வேறுபடுத்திக்காட்டலாம் என்கிற வெங்கட்பிரபுவின் எண்ணம் செயலாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பலருடைய எதிர்ப்பை¬யும் மீறி வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. லிங்குசாமியின் படம் முடிவதற்கு முன்பே இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!




ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!

ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.


வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.


தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.


அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

 
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?



உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.

பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.

• முடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் மூலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெண்ட், டீப் கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெண்ட், வாசலின் ட்ரீட்மெண்ட் ஆகிய முறைகள் கையாளப்படுகிறது.

• வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
 
back to top