.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 8, 2014

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!




மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

இணைந்தனர் சிம்பு - நயன்தாரா.....




பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்க ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள்
வெளியாகியுள்ளன.

சிம்புவுடனான காதல் முறிவிற்குப் பின்னர் வீண் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து
வந்தனர்.

சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். பாண்டிராஜ் இயக்கிவரும் இப்புதிய படத்திற்கு நயன்தாராவை விடவும் பொருத்தமான ஹீரோயின்
கிடைக்கமாட்டார் என்பதால் படக்குழு நயன்தாராவை அணுகியது. நயன்தாராவும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. காதல் நகைச்சுவையை மையப்படுத்தி இப்படம் தயாராகிவருகிறது.

சிம்பு தயாரிக்கும் இப்படத்தில், சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?






நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.


இதையடுத்து அவரது குடும்பத்தாரும், அருகிலுள்ளோரும் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் மர்ம வனவிலங்கு ஒரு உடலைக் கடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  ஆனால்,  சின்னப்பனை தேடிக்கொண்டு தீப்பந்தத்துடன் போன பொதுமக்களின்  சத்தத்தைக் கேட்டவுடன் அவ்விலங்கு தின்றுகொண்டிருந்த உடலை போட்டுவிட்டு புதருக்குள் மறைந்துவிட்டது.


பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அது சின்னப்பன் தான் என்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்த சின்னப்பன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரண உதவியாக ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.


சோலாடா, அட்டபெட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஆட்கொல்லி வனவிலங்கு, சிறுத்தையா அல்லது புலியா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த ஆட்கொல்லி வனவிலங்கை உயிருடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


இதன் ஒரு கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களிலிருந்து தலா ஒரு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த 5 இடங்களிலும் இரகசியமாக காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இனம் காணப்படாத இவ்விலங் கைப் பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டபெட்டு முதல் கல்லட்டி பகுதி வரை தொடர் ரோந்துப்பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒலிபெருக்கி மூலம் இப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்குள் யாரும் அனுமதியின்றி செல்லக் கூடாது என்றும் அறிவித்து வருகின்றனர்.

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா?






அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம்.

ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட தோற்றமா? இது தான் ஐ திரைப்படத்தின் கதையா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
 
back to top