.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

முதுமை என்பது வரமா..? சாபமா..?



           இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவப் பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து 60 வயதிற்கு மேல் வாழும் மக்களின் மனநோய் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆய்வின் முடிவு உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த முடிவின்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் நகரங்களில் 17.3 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 20 விழுக்காட்டினரும் ஒருவகை மனநலம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 விழுக்காடாக உள்ளது.

இதேபோல் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை ஒட்டுமொத்தமாக 55 விழுக்காடு வரை வளர்ச்சியை எட்டக்கூடும் என தெரிய வந்துள்ளது. அப்போது 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

தற்போது 1.71 கோடி பேர் மனநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்றவாறு மருத்துவமனை வசதிகளும், பணியாளர்களின் தேவைகளும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதியவர்கள் மனநலம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாததே! பெற்று வளர்த்த பிள்ளைகளே தங்களைப் புறக்கணிக்கும்போது பெற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த வேதனையின் உச்சமே மன இறுக்கமாகி மன நோயாக மாறுகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஆன்றோர் கூறியதை மறக்கலாமா? அந்த வணக்கத்துக்குரிய தெய்வங்களை பாரமாகக் கருதுகிற இளைய தலைமுறையை என்னென்பது? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிற்றில் இருந்தபோது அவள் பாரமாகக் கருதியிருந்தால் இன்று நாம் பூமியில் பிறந்திருக்க முடியுமா? இதை எண்ணிப் பார்க்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை.

விலங்குகளின் குட்டிகள் நடக்கத் தொடங்கியதும் தாயை விட்டுப் பிரிந்து விடுகின்றன; பறவைக் குஞ்சுகள் சிறகு முளைத்ததும் தாயை விட்டு பறந்து விடுகின்றன. மனிதர்களும் அப்படியிருந்தால் பகுத்தறிவு பெற்று என்ன பயன்? நமக்கும், விலங்குகளுக்கும் வேறுபாடு என்ன?

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பார்கள். பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம். எவ்வளவு காலத்துக்கு இளமை இப்படியே இருக்கப் போகிறது? எல்லாருமே முதுமையை நோக்கியே பயணம் செய்கிறோம். இதுதான் உண்மை. இந்த உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?

“ஒரு தாய் 10 குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம்; 10 குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது’ என்பது சீனப் பழமொழி. “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவைப் பிராட்டி. அருமையான காரியங்களைச் செயல்படுத்துவதே அறிவுடைய மனிதர்களின் அடையாளம். அந்த அடையாளங்களை இழந்து விட்டு வாழ்வதால் பயன் என்ன?

பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில் தனி வீட்டில் தவிக்கின்றனர். பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும் யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அவர்களது பணத்துக்காகப படுகொலை செய்யும் பரிதாபப் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கே இருக்கிறது மனிதநேயம்?

திருவள்ளுவர் கூறியது போல உறுப்புகளால் மட்டும் ஒருவர் மனிதராக மாட்டார். கூர்மையான அறிவு பெற்றிருந்த போதும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரங்களைப் போன்றே மதிக்கப்படுவர்.

அரம்போலும் கூர்மைய ரேணும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்


என்று குறள் கூறுகிறது.

காயை விடக் கனி சுவையானது. இளைஞர்களைவிட முதியவர்கள் அறிவோடு அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். இந்த மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்வது அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்படும்.

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 60 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 32 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கிற்கும் மேலாகும். 2010ஆம் ஆண்டில் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருந்தது. இது 2015ஆம் ஆண்டில் 32 கோடியை எட்டும் என ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார்.

அண்மையில் மூத்த குடிமக்கள் தொடர்பாக புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் வளர மூத்த குடிமக்களின் பங்கு கணிசமானது. தாய் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதன் மூலம் அவர்கள் உலகப் பொருளாதாரத்திற்குத் தங்கள் பங்களிப்பைபைத் தருகின்றனர் என்பதை இம்மாநாடு அங்கீகரித்தது.

இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இருப்பதாக அறியப்பட்டாலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் முதியவர்களாகவே இருக்கின்றனர். மத்திய ஆட்சி எனினும், மாநில ஆட்சி எனினும் நிலைமை இதுதான்.

இளைஞர்களின் ஆற்றலும், முதியவர்களின் அனுபவமும் இணைந்து செயல்படும்போதுதான் ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறும். ஆனால், இங்கே ஆட்சியிலும், அரசியல் கட்சிகளிலும் மூத்தவர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.

இளைஞர்களும், மாணவர்களும் அவர்களுக்கு எடுபிடிகளாகவும், ஏணியாகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இந்த கெடுபிடிகளால் ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் வெறுப்படைந்து ஒதுங்கி விடுகின்றனர்.

இங்கு நடப்பது “மக்களாட்சி’ என்று கூறப்பட்டாலும் வாரிசு அரசியலே தலைதூக்கி நிற்கிறது. தலைவர்கள் தங்கள் வாரிசுகளையே கட்சியிலும், ஆட்சியிலும் புகுத்திடும் போக்கே எங்கும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியே. இங்கே இளைஞர்களுக்கும். மூத்தவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.

“எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்பதும், “மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பதும் இங்கே பேச்சளவில்தான்.

சமுதாயத்தில் இளைஞர்கள் மூத்தவர்களை மதிப்பதில்லை. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களை மதிப்பதில்லை. இந்தப் போக்கு நல்லதில்லை.

மூத்த குடிமக்களைப் போற்றிக் காக்கும் பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் இருக்கிறது. உழைத்து ஓய்வு பெற்றவர்களை இறுதிவரை காக்கும் கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்கக் கூடாது.

“அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்ற பிறகு அவருக்கும், அரசுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை’ என்ற அரசாங்கத்தின் பிடிவாதத்தைப் போக்கும் விதமாக, கடந்த 1982 டிசம்பர் 17அன்று நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இப்போதும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

“”பென்சன் ஒரு கருணைத் தொகையல்ல. அது பணி நிறைவு பெற்ற அலுவலரின் அசைக்க முடியாத உரிமை. அவர் பணியில் இருக்கும்போது எத்தனை வாழ்க்கை வசதிகளுடன் வாழ்ந்து வந்தாரோ, அதே வசதிகளுடன் அவர் பணி நீங்கிய பிறகும் வாழ வேண்டும்…” என்பதே அந்தத் தீர்ப்பாகும்.

மேலும், 1982இல் வியன்னாவில் ஐ.நா. அமைப்பு சார்பாக கூட்டப்பட்ட உலக அனைத்து முதியோர் மாநாட்டில், “பென்சன் என்பது ஈட்டிய ஊதியம்’ என்று உறுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பணியாற்றியவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை இப்போது பணியாற்றுகிறவர்களுக்கு மறுக்கப்படுகிறது. “புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரால் தனியாரிடம் விடப்படுகிறது. எல்லாமே தனியாரிடம் விடப்படுமானால் அரசாங்கமே தேவையற்றதாக ஆகிவிடுமே.

கடந்த அக்டோபர் முதல் நாள் உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு சார்பில் தலைநகர் புது தில்லியில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் பேரணியும், கருத்தரங்கமும் நடத்தியுள்ளனர். அந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன.

“காக்கை குருவி எங்கள் சாதி’ என்று பாடினார் பாரதியார். நாம் நம் முன்னோரை நேசிக்கவே தயங்குகிறோம்; மூத்தோரை ஆதரிக்கவே யோசிக்கிறோம். இன்று நம் சமுதாயம் இருக்கும் நிலையில் ஒரு மனிதனுக்கு முதுமை என்பது வரமா அல்லது சாபமா?

ஃபார்மல் ஷூ வாங்கும் ஆண்களுக்கான சில பயனுள்ள டிப்ஸ்..!



'ஆள் பாதி ஆடை பாதி' என்பது ஊரறிந்த பழமொழி. உங்களுடைய ஆடையலங்காரத்தில் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும் காலணிகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும், உங்களுக்கான ஒட்டுமொத்த பாணியையும் வழிநடத்தக் கூடியதாக வைத்திருக்கவும் வேண்டியது அவசியமாகும்.

இவை உங்களுடைய பாதங்களை குப்பைகளிலிருந்து காப்பாற்றியும், மோசமான தரைப்பகுதிகளில் பாதுகாத்தும் வந்தாலும் உங்களுடைய ஸ்டைலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க முடிவதில்லை. அழகிய காலணிகள் உங்களுடைய ஸ்டைலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றிக் கொண்டு செல்லவும் செய்கின்றன. ஒவ்வொரு ஸ்டைல் காலணியும் ஒவ்வொரு வகையான உடைகள் மற்றும் நிகழ்வுகளுக்கென்று தேர்ந்தெடுக்கலாம்.

இந்த வர்த்தகமயமான உலகத்தில், நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவோ அல்லது பணி நிமித்தமாகவோ அல்லது கருப்பு டை அணிந்து டின்னருக்கு செல்வதாகவோ என எதுவாக இருந்தாலும் காலணிகள் அவசியம். சரியான ஷூவை அணிவதன் மூலம் நம்பிக்கை அதிகரித்து, உங்களுடைய எண்ணங்களும் மேம்படுகின்றன. அனைத்து உடைகளுக்குமான ஷூக்கள் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதில்லை. நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு போகிறீர்கள் மற்றும் எந்த உடையை அணிகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், அந்நிகழ்வில் மற்றவர்கள் அணிவதைப் போலவும் ஷூக்கள் இருக்க வேண்டும்.

ஃபேஷன் பற்றி அதிகம் தெரியாதவர்களாக இருப்பவர்கள் கூட அதிகம் பரிந்துரைக்கப்படுவது கருப்பு நிற லெதர் ஷூக்களையே. எனினும், கருப்பு நிற ஷூவை லேஸுடன் அணிவதற்கும், பழுப்பு நிற ஷூவை ஸ்லிப்-இன் வகையில் அணிவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சில நேரங்களில் உங்களுடைய வாடிக்கையாளர்களுடன் பாதி அலுவல் மற்றும் பாதி கேஷூவல் வகையில் ஞாயிற்றுக்கிழமை விருந்துகளுக்கு செல்ல வேண்டியிருக்கும் போது, முழுமையான ஃபார்மலில் செல்வதா அல்லது கேஷூவலாக செல்லலாமா என்பது போன்ற குழப்பங்கள் உங்களுக்கு வரும்.

இதுப்போன்ற நேரங்களில் உங்களுடைய ஆடை அணிகலன்களை, மிகவும் தேவையான பொருட்களை தயாராக வைத்திருக்கவும் மற்றும் கடைசி நேரத்தில் தடுமாறாமலும் இருக்கவும் செய்யவே நீங்கள் விரும்புவீர்கள். இதோ நீங்கள் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் ஃபார்மல் ஷூக்களை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்

வியாபார நிகழ்வுகள்


இது போன்ற நிகழ்வுகளில் சூட்-உடன் சேர்த்து தோலால் செய்யப்பட்ட ஷூக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றின் முன்-மேல் பகுதி உங்களுடைய பாதத்தை சூழ்ந்திருக்குமாறும் மற்றும் தனித்திருப்பதாகவும் இருக்க வேண்டும். மேல் பகுதியில் தோலை கொண்டு, தனியான இரப்பர் கட்டைகளை கொண்டிருக்கும் ஷூக்களை தவிர்க்கவும். மற்ற லெதர் ஷூக்களைப் போல இவை ஃபார்மல் ஷூக்களாக இருப்பதில்லை. லேஸ்களை கொண்டிருக்கும் ஷூக்கள் பொதுவாகவே வியாபார நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதாகவும், மிகவும் ஃபார்மல் வகை என்று கருதுவதாகவும் உள்ளன.

ஃபார்மல் லெதர் ஷூ

இரவு விருந்துகளுக்கு ஏற்ற டக்ஸீடோ ஆடைகளை அணியும் போது உங்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான சாய்ஸ்களே காலணியை தேர்ந்தெடுப்பதில் கிடைக்கும். சூட்களுடன் நீங்கள் அணியும் காலணிகளைப் போலல்லாமல், அதிகபட்ச தையல்கள் இல்லாத ஷூக்களையே நீங்கள் இதில் தேடுவீர்கள். ஃபார்மல் ஷூக்களில் லேஸ் தவிர பிற பகுதிகள் அனைத்தும் ஃப்ளைனாகவே இருக்கும். ஃபார்மல் ஷூக்கள் பளபளப்பாக தோற்றமளிக்கும், ஆனால் நீங்கள் பேடன்ட் லெதரை வசதியற்றதாக நினைத்தால் மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கும் திறன் கொண்ட கருப்பு மேட் தோல் ஷூக்களை பயன்படுத்தலாம்.

பிஸினஸ் கேஷூவல் ஷூக்கள்

பிஸினஸ் கேஷூவல் ஷூக்கள் என்பது மிகவும் சிக்கலான சூழல்களை மையமாக கொண்டவையாகும். அலுவலகத்தில் செல்லும் இன்ப சுற்றுலாவாகவோ அல்லது ஒரு ஞாயிற்றுக் கிழமை விருந்தாகவோ இருக்கும் வேளைகளில் நீங்கள் பாதி ஃபார்மலில் இருக்க வேண்டும். இச்சூழலில் ஜுன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ப்ளேஸரையும் கூட போட்டிருக்க நேரலாம். நீங்கள் கேஷூவல் பேண்ட்களை - டெனிம் அல்லது ஷhர்ட்ஸ்களை அணிந்தால், ஷூக்களை அதற்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். கேஷூவல் உடைகளிலும் மிடுக்கான தோற்றததை பெற விரும்பினால், தோலால் செய்யப்பட்ட போட் ஷூக்களை தேர்ந்தெடுங்கள். லோஃபர் வகை காலணிகள் இந்த உடைகளுக்கு மிகவும் ஏற்றவையாகும்.

லோபர்ஸ் காலணிகள்

ஊர் சுற்றிக் கொண்டே இருக்கும் வியாபார அலுவலர்களுக்கு மிகவும் ஏற்றவை லோபர் வகை காலணிகளாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளின் போது எளிதில் கழட்டவும், மாற்றவும் ஏற்றவையாகவும், வசதியாகவும் மற்றும் பல்வேறு வகை பயன்பாடுகளுக்கும் இந்த காலணிகள் உதவுகின்றன. மென்மையான மற்றும் எளிமையான வடிவமைப்புகளே மிகவும் ஃபார்மலாக இருக்கும். மேலும், அடர்வண்ணங்கள் மிகவும் ஃபார்மல் என்றும் (கருப்பு நிறம் மிகவும் ஃபார்மல் என்று பெயர் பெற்றுள்ளது), மற்றும் உங்களுடைய சாக்ஸின் ஒரு சிறு பகுதி வெளியே தெரிவது ஃபார்மல் என்றும் கருதப்படுகின்றது. லோபர் காலணிகள் ஜுன்ஸ் மற்றும் பிற பேண்டகளுடனும் நல்ல தோற்றத்தைக் கொடுக்கின்றன. மேலும் டை அணியாமல் சூட்களை போடும் போதும் லோபர்கள் நலல தோற்றத்தைக் கொடுக்கின்றன.

விண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்..!



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா..? வேண்டாமா..? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர்.

 மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.

இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன:-

1. டெஸ்க்டாப்பில் அதிக பயன்பாடு: இது என்ன ரகசிய மெனுவா? என்று கேட்கும் அளவிற்குப் புதிய பயன்பாடுகள், இந்த விண் 8.1 அப்டேட்டில் கிடைக்கிறது. விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாடு இதில் முதல் இடத்தில் உள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப் திரையில், வலது மூலையில் ரைட் கிளிக் செய்தால், விண்டோஸ் இயக்கத்தின் பல பயனுள்ள ஆப்ஷன்களுக்கான ஷார்ட்கட் வழிகளை மெனுவாகப் பெறலாம். விண்டோஸ் 8 எப்படி ஷட் டவுண் செய்வது என குழப்பமாக உணர்ந்த பயனாளர்கள், இந்த மெனுவினைப் பார்த்து, அப்பாடா தலைவலி விட்டது என்று எண்ணுவார்கள். பவர் ஆப் செய்வதற்கும், ரீ ஸ்டார்ட் செய்வதற்கும், சிஸ்டம் முடித்து வைக்கவும் பல வழிகளை இது காட்டுகிறது.

2. டெஸ்க்டாப்பிற்கு கம்ப்யூட்டரை பூட் செய்திட: நீங்கள் விண் 8/ 8.1 சிஸ்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஸ்டார்ட் ஸ்கிரீன் தேவை இல்லை என எண்ணி, எளிமையான பழைய ஸ்கிரீன் தோற்றமும் செயல்பாடும் போதும் என எண்ணுகிறீர்களா? உங்க ளுடைய விருப்பத்தினை மைக்ரோசாப்ட் வல்லுநர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். டெஸ்க்டாப்பில், உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் 'Properties' தேர்ந்தெடுக்கவும். நேவிகேஷன் டேப்பினைத் தேர்ந்தெடுத்து 'Go to the desktop' என்ற ஆப்ஷனில் டிக் செய்திடவும். பின்னர், விண்டோஸ் உங்கள் டெஸ்க்டாப்பில் பூட் செய்திடும்.

3. ஸ்டார்ட் ஸ்கிரீன் ஒழுங்குபடுத்து: உங்களிடம் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட திரைக் காட்சிகளுடன் ஒரு ஸ்மார்ட் போன் உங்கள் பயன்பாட்டில் இருந்தால், அதே போன்ற ஒழுங்குமுறையினை, உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் ஸ்கிரீனிலும் எதிர்பார்ப்பீர்கள் தானே? இது கம்ப்யூட்டரிலும் விண் 8.1 சிஸ்டத்தில் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய அப்ளிகேஷன் குரூப்பினை வேறு பெயருக்கு மாற்றுவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனில் ரைட் கிளிக் செய்து, 'Customise' என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் திரையில் தோன்றும் புரோகிராம் டைல்ஸ்களை ஒருங்கிணைக்கவும், பெயர் சூட்டவும் முடியும்.

4. எக்ஸ்பாக்ஸ் மியூசிக் பிளே லிஸ்ட்: சர்ச் எனப்படும் தேடல் செயல்பாடுகள், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், மீண்டும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. பல பின்னூட்டங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் சில விஷயங்கள் சீரமைக்க வேண்டியுள்ளது. எனவே, மிக விரைவான தேடலை மேற்கொள்ள, சிஸ்டத்துடன் கிடைக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரினைத் திறந்து (உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து), Bing பயன்படுத்தவும். இங்கு இசைக் கலைஞர்களைக் குறிப்பிட்டுத் தேடலாம். பின்னர் Share Charm என்பதில் மவுஸைக் கொண்டு சென்று அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Music' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் இசைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் அமைத்திடலாம். இந்த வகையில் தேடல் தெளிவும் விரைவும் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

5. நிரந்தர வால் பேப்பர்: ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆகிய இரண்டும் வெவ்வேறு என நீங்கள் உணர்ந்தால், எப்படி ஒரே வால் பேப்பரை இரண்டுக்குமாக அமைக்க முடியும்? ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து Settings Charm திறக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Personalise' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குப் பிடித்தமான வால் பேப்பரைத் தேர்ந்தெடுத்து, இரண்டுக்குமாக அமைக்கலாம்.

6. ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட: கம்ப்யூட்டரில் இருக்கும் ஸ்டோரேஜ் உங்களுக்குப் போதாது; கூடுதலாக இன்னும் ஹார்ட் டிஸ்க் இடம் தேவை, அதுவும் இலவசமாகக் கிடைக்குமா என்று பார்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மிக அருமையான ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதி தரப்படுகிறது. மைக்ரோசாப்ட் தன் ஸ்கை ட்ரைவினை, விண் 8 .1 பயன்படுத்தும் பயனாளர்களை இணைத்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், Settings Charm செல்லவும்; 'Change PC settings' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதிலிருந்து 'SkyDrive' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில், நீங்கள் உங்கள் டாகுமெண்ட் மற்றும் பைல்கள் அனைத்தையும், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட விருப்பமா என்ற ஆப்ஷன் தரப்படும். மாறா நிலையில், அனைத்து பைல்களையும் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட அமைத்துவிட்டால், இணைய இணைப்பில் இருக்கும்போது, அனைத்து பைல்களும் ஸ்கை ட்ரைவிற்குக் கொண்டு செல்லப்படும். இதனால், நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், எந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும், உங்கள் பைல்களை அணுக இயலும்.

7. அனைத்து அப்ளிகேஷன்களும் எளிதான தோற்றத்தில்: ஸ்டார்ட் ஸ்கிரீனில், நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அவற்றிற்கான டைல்ஸ்களுடன், வானவில் வண்ணக் கலவையில் தோற்றமளிக்கும். ஆனால், இவற்றத் தேடிக் கண்டறிய, நாம் ஒவ்வொரு திரையாகச் செல்ல வேண்டியதிருக்கும். அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க வேண்டுமானால், அதற்கு விண் 8.1 வழி செய்கிறது. டைல்ஸ் கீழாக அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்தால், இந்த வியூ கிடைக்கும். இங்கிருந்து, அனைத்து அப்ளிகேஷன்களையும் நீங்கள் விரும்பியபடி அமைக்கலாம். அவற்றை இன்ஸ்டால் செய்த நாட்களின் அடிப்படையில், அவற்றின் அளவின் அடிப்படையில், அகரவரிசைப்படி என நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொண்டு தேடிப் பெறலாம்.

8. எழுப்பும் அலாரம்: ஆம், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தைப் பயன்படுத்தி, நாள், வாரம், மாதம் அடிப்படையில் நேரத்தை செட் செய்து அலாரம் அமைக்கலாம். இது விண்டோஸ் போன் சிஸ்டத்தில் உள்ள அப்ளிகேஷன் போலத் தெரிகிறதா? ஆம். அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவூட்டல்களும், அதற்கான தனி ஒலிகளும் அமைத்து இயக்கலாம். அப்ளிகேஷன் பட்டியலில் இந்த அலாரம் செட் செய்திடும் அப்ளிகேஷனும் கிடைக்கிறது.

9. அப்ளிகேஷன்களை அருகருகே இயக்க: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் போது, ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். ஆனால், விண் 8.1ல் இரண்டு அப்ளிகேஷனை ஒரே நேரத்தில் இயக்கலாம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த அப்ளி கேஷன்கள் இயங்கும் இடத்தினைச் சரியாகச் சரி பாதி இடத்தில் இயக்க வேண்டியதில்லை. ஒன்றைச் சிறிய இடத்திலும், இன்னொன்றைச் சற்றுப் பெரிய இடத்திலும் நம் தேவைப்படி அமைத்து இயக்கலாம்.

10. பைல்களின் நகல்களைத் தக்க வைக்க: உங்களுடைய முக்கியமான பைல்களின் பேக் அப் நகல்களை எப்படி எங்கு வைப்பீர்கள்? நம் பைல்கள் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நாம் எண்ணினாலும், அவை கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றின் நகல்களைப் பாதுகாப்பாக வைத்திட விண்டோஸ் 8.1 வசதி தருகிறது. இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு 'System and Security' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதே நேரத்தில் 'file history' என்று அமைத்துத் தேடலில் ஈடுபடவும். அப்போது யு.எஸ்.பி. ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றை பேக் அப் பைல்களுக்காக இணைக்க வேண்டியதிருக்கும். இதில் பேக் அப் பைல்கள் பதியப்படும்.

விக்ரம் பாணியை கடைப்பிடிக்கும் தனுஷ்..!



விக்ரம் பாணியை கடைப்பிடிக்கும் தனுஷ்..!

மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை என்பதால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான கெட்டப்பில் வருகிறாராம் தனுஷ்.

ஆனால், அப்படி அவர் நடிக்கிற ஒவ்வொரு கெட்டப்புமே இதுவரை எந்த படத்திலுமே தனுஷ் நடிக்காத கெட்டப்பாம். அதனால், ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் அதிக காலஅவகாசம் எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, விக்ரம் போன்ற சில ஹீரோக்கள் தாங்கள் நடிக்கிற புதுமையான கெட்டப் பற்றி வெளியில் லீக்அவுட் பண்ணாமல் இருந்து வருவதையடுத்து. இப்படத்திலிருந்து தனுசும் அதை கடைபிடிக்கிறாராம். ஏற்கனவே ஒரு கெட்டப் சம்பந்தமான போட்டோக்கள் வெளியாகி விட்ட நிலையில், மற்ற 3 கெட்டப்புகளையாவது சீக்ரெட்டாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

அதனால், அனேகன் படத்தில் நடித்து முடிகிற வரைக்கும் சினிமா விழாக்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கும் தனுஷ், வழக்கமாக தான் நடித்து வரும் படங்களின் ஸ்டில்களை தனது உதவியாளரை வைத்து அவ்வப்போது போட்டோ எடுத்து வருபவர், இந்த படத்தைப்பொறுத்தவரை, போட்டோவே எடுத்துக்கொள்ளவில்லையாம். தனது கெட்டப் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த திடீர் முடிவு.

 
back to top