.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, September 24, 2013

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ளது.


1974-ஆம் ஆண்டும் பின் 1976-லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது எனவும், கச்சத்தீவை மறுபடியும் இந்தியா எடுத்துக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


sep 24 - kacchadevu

 


இலங்கையின் பழங்கால பூகோள வரைபடங்கள் எதிலும் “கச்சத்தீவு’ எனும் ஒரு தீவுப் பகுதி இருக்காது. 1920-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்னை ராஜதானி மற்றும் சிலோன் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் முதன் முதலாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை அளந்து இரண்டு ராஜதானி பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


1921, அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் இதுபற்றி விவாதிக்க, கூடிய கூட்டத்தில்தான் முதன் முதலாக அன்றைய இலங்கை அரசின் உயர் அதிகாரிகளின் தலைவர் ஹார்ஸ்பர்க், வரைந்து காட்டிய இரு நாடுகளுக்கிடையிலான எல்லைக்கோட்டில் கச்சத்தீவு இலங்கைக்குள் உள்ளடங்கிய வகையில் இருந்தது. அதை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்திய அதிகாரிகள், ராமநாதபுரம் அரசரின் ஆளுகையின்கீழ்வரும் ஒரு தீவு கச்சத்தீவு என வாதிட்டு அதற்கான அத்தாட்சி பத்திரங்களையும் காட்டினார்கள். அன்றைய சிலோன் அரசின் உயரதிகாரிகள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மெüனமாகி விட்டனர் என்பது அந்த கூட்டத்தின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.


அடுத்து, 1966-ஆம் ஆண்டு மே மாதத்தில், இதுபற்றி ஒரு பேட்டியில் அன்றைய இலங்கை அரசின் மந்திரி சபை செயலாளர் பி.பி. பெய்ரிஸ் கூறியது மிகவும் முக்கியமானது. “”நான் துணை சட்ட வரைவாளர், (டெபுடி லீகல் டிராஃப்ட்ஸ்மேன்) வேலையில் இருந்தபோது ஜாஃப்னாவின் வடக்கு மாவட்டங்களின் எல்லைக்கோட்டினை ஆராயும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது சம்பந்தப்பட்ட கோப்புகளை படித்தபோது, விக்டோரியா மகாராணி காலத்தில் ஒரு பிரகடனத்தில், கச்சத்தீவு ஜாஃப்னாவின் வடக்குப் பகுதிக்குட்பட்ட தீவு அல்ல என்றும் அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தம் எனவும் ஆங்கில அரசால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது” எனக் கூறினார்.


இதை நிரூபிக்கும் வகையில் 1977-ஆம் ஆண்டிற்குமுன் இலங்கையில் நடந்த தேர்தல்களில் எந்த தொகுதியிலும் கச்சத்தீவு இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், 1974-ஆம் ஆண்டில் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபின், 1977-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தேர்தலில் ஜாஃப்னா மாவட்டத்தின் கய்த்ஸ் பாராளுமன்ற தொகுதியில் ஒரு இடமாக அது இடம்பெறத் தொடங்கியது.



சரித்திரத்தைப் புரட்டினால், 69 கடற்கரை கிராமங்களையும் பாக்ஜலசந்தியின் 11 சிறிய தீவுகளையும் உள்ளடக்கி ராமநாதபுரம் சமஸ்தானம் அன்றைய மதுரை நாயக்க மன்னர்களால் 1605-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது புரியும். இந்த 11 சிறிய தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. ராமனாதபுரம் ராஜா கூத்தன் சேதுபதி 1622 முதல் 1635 வரை ஆட்சியிலிருந்தார். அவர் காலத்து தாமிர செப்பேடு ஒன்றில் அவரது ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த தீவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் ராஜாவின் ராஜாங்க கணக்குப் பேரேடுகளில் கச்சத்தீவிலிருந்து குத்தகை வருமானம் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.


1767-ஆம் ஆண்டில் டச்சு கம்பெனி ஒன்று ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்த கணக்கும் உள்ளது. 1802-ஆம் ஆண்டு (ஆங்கிலேயர் காலத்தில்) இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் சர்வே செய்யப்பட்ட கணக்குகளும் வரைபடங்களும் இன்றும் உள்ளன. அதில் கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என குறிக்கப்பட்டுள்ளது.


1822-இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி ராமநாதபுரம் ராஜா சேதுபதியிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தது. 1845-ஆம் ஆண்டில் அன்றைய சிலோன் கவர்னர் ஒரு கடிதத்தில் கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதிக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார்.


இதை எல்லாம் விட மேலாக 1905-ஆம் ஆண்டில் ராமநாதபுர ஜமீன் சீனிக்குப்பன் படையாச்சி கச்சத்தீவில் புனித அந்தோனியாரின் ஆலயத்தை (மீனவர்களின் தெய்வம் அந்தோணியார்) கட்டியுள்ளார். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், தொழுகை செய்யவும் இந்த ஆலயப் பகுதி அவசியம் என்பது சீனிக்குப்பனின் எண்ணம்.


1913-ஆம் ஆண்டில் கச்சத்தீவு பகுதியில் 15 வருடங்களுக்கு கடல் சங்குகளை சேகரிக்கும் உரிமையை ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து ஆங்கிலோ இந்திய அரசின் செயலர் குத்தகை எடுத்துள்ளார். அந்தப் பதிவுப் பத்திரம் இன்றளவும் காப்பகத்தில் உள்ளது. இந்த குத்தகை 1936 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த எல்லா ஆதாரங்களையும் வைத்துப் பார்த்தால் அன்றைய இந்தியா மற்றும் சிலோன் நாடுகளை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என ஒப்புக் கொண்டு ஆட்சி புரிந்தது விளங்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையிலிருந்த ஜமீன் பகுதிகள் இன்றைய ராமநாதபுரம் மாவட்டமாகி, தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றாகியது.


ஆக கச்சத்தீவு எந்தக் காலத்திலும் இலங்கைக்கு சொந்தமாக இருந்ததில்லை என்பதற்கு சட்ட வழக்குகளின் மிக முக்கியமான சாட்சியமாகக் கருதப்படும் தாஸ்தாவேஜு எனப்படும் “டாக்குமென்ட்ரி எவிடன்ஸ்’ உள்ளது என்பது திண்ணம்.
பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிரிமாவோ பண்டார நாயகாவும் அன்றைய காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் கூட்டாளிகள்.


இரு நாடுகளுக்கிடையிலும் நல்லெண்ணத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி புது தில்லியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அன்றைய சூழ்நிலையில் பிற்காலத்தில் மீன்வளங்கள் இந்தியக் கடலோரத்தில் வற்றிப் போய், கச்சத்தீவு பகுதியின் மீன்வளம் தென்னிந்திய மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.


உலகெங்கிலும் இரண்டு நாடுகளுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்யப்படும்போது இடையே நதியோ கடல் பகுதியோ இருந்தால் அதன் மையப்பகுதியில் எல்லைக் கோடு உருவாக்கப்படும். இப்போதும்கூட இரண்டு கிராமங்களின் எல்லை பிரிக்கப்படும்போது நடுவில் ஒரு நதி ஓடினால் நதியின் மையப்பகுதியில் கிராமங்களின் எல்லைக்கோடு வரையப்படுவது நம் மாநிலத்தில் பின்பற்றப்படும் சர்வே முறை. ஆனால் 1974-ஆம் ஆண்டு இந்திய அரசின் மிதமிஞ்சிய நல்லெண்ணத்தாலும், இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் சூட்சுமமான சாதுர்யத்தாலும் இந்த முறை தவிர்க்கப்பட்டது.


“இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், இப்போது கச்சத்தீவுக்கு சென்று வருவது போல் சென்று வரலாம். இதற்கு தனியாக இலங்கை அரசின் விசா தேவை இல்லை’ என ஒப்பந்தத்தின் ஒரு விதி கூறுகிறது.


அதாவது இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று விதியில் கூறப்படவில்லை. அதை அன்றைய இந்திய அரசின் உயரதிகாரிகள் கவனிக்கவில்லை. ஆனால், இலங்கை அதிகாரிகள் மிக சாதுர்யமாக அந்த ஒப்பந்த விதியை உருவாக்கி இந்திய பிரதமரிடம் கையெழுத்து பெற்றுவிட்டனர்.


1976-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மற்றொரு ஒப்பந்தம் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் கையெழுத்தாகியது.


அதன்படி, “இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடி ஓடங்களும் இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக்கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டது.


இதுபோன்ற ஒரு ஒப்பந்தம், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவுடன் நடந்து கொள்ளுவதற்கு அடிப்படை என மத்திய அரசால் அப்போது பாராளுமன்றத்தில் பெருமையுடன் பறைசாற்றப்பட்டது.



அன்றைய ஜனசங்க கட்சியின் பாராளுமன்றத் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், “இது ஒப்பந்தம் அல்ல பணிந்து போதல்’ என பேசினார். அவரது வேண்டுகோளின்படி அன்றைய தமிழ்நாட்டின் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஒரு வழக்கு தொடர்ந்தார். அது சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் நீதிமன்றம் கேட்டபோது தங்களிடம் அது சம்மந்தமான ஆவணங்கள் இல்லை என மாநில அரசு தெரிவித்துவிட்டது. அதனால், வழக்கு தள்ளுபடியாகி விட்டது.


ஆகவே, இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை அவர்களிடம் ஒப்படைத்தோம் என உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அன்றைய அரசு எடுத்த நடவடிக்கையினால்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

சென்னை உலக செஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம்!


இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் நார்வேவின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டலில் நவம்பர் 9–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இரு வீரர்களும் மொத்தம் 12 சுற்றுகளில் மோதுவார்கள். முன்னதாக நவம்பர் 7–ந்தேதி பிரமாண்டமான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு ரூ.8 கோடியும், தோற்கும் வீரருக்கு ரூ.6 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.



sep 24 _CHESS_LOGO

 



போட்டியை சுமார் 400 பேர் நேரில் ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான டிக்கெட் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் அனைத்து நாட்களுக்கும் சேர்த்து வி.ஐ.பி. பாக்சின் டிக்கெட் விலை ரூ.3.25 லட்சமாகும். ஒரு வி.ஐ.பி. பாக்சில் 8 பேர் அமரலாம். அனைவருக்கும் சேர்த்து தான் இந்த கட்டணமாகும். 6 அல்லது 7 வி.ஐ.பி. பாக்ஸ் அமைக்கப்படுகிறது. தினசரி ‘பிரிமியம்’ வகை டிக்கெட் ரூ.2,500–க்கும், ஸ்டாண்டர்டு வகை டிக்கெட் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது. இது தவிர பிரிமியம் சீசன் டிக்கெட் ரூ.26 ஆயிரத்திற்கும், ஸ்டாண்டர்டு வகை சீசன் டிக்கெட் ரூ.21 ஆயிரத்திற்கும் கிடைக்கும்.



டிக்கெட்டுகள் ஆன்–லைன் மூலமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக www.chennai2013.fide.com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமே டிக்கெட் வாங்க முடியும். உலக செஸ் தொடர்பான பல்வேறு தகவல்கள் இந்த இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். மேலும் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் செல்போனிலும் போட்டி தொடர்பான விவரங்கள் மற்றும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல்களை இந்திய செஸ் சம்மேளன தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், செயலாளர் ஹரிகரன், உலக செஸ் சம்மேளன துணைத்தலைவர் டி.வி.சுந்தர், இந்திய செஸ் சம்மேளனத்தின் செயல் அதிகாரி பரத்சிங் ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். 


World chess championship logo, ticket prices unveiled

**************************************


The pricing of tickets for the world chess championship here from Nov. 7 to 28, among others, was released to the media during the logo unveiling function at Hotel Hyatt Regency on Monday.Justifying the prices, D.V. Sundar, vice-president, FIDE, said he was confident that only the connoisseurs of chess would come to the venue (Ball Room of Hyatt Regency) and appreciate the nuances of the matches between world champion Viswanathan Anand and challenger Magnus Carlsen.

அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Ubuntu Touch Mobile இயங்குதளம்!



வைரஸ் தாக்கங்கள் அற்றதும், திறந்த வளமாகவும் கருதப்படும் இயங்குதளமான Ubuntu மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் போன்ற மொபைல் சாதனங்களில் பல்வேறு இயங்குதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனைப் பின்பற்றி மொபைல் சாதனங்களுக்கான Ubuntu இயங்குதள உருவாக்கமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.



அதாவது இந்த இயங்குதளமானது முற்றிலும் தொடுதிரை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றது.
இதனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளனர்.


சர்க்கரை நோய் – கொஞ்சம் கசப்பான உண்மைகள்!


மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். 


இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.


ஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடைய ரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை காணப்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும்.

sep 24 Symptomsof diabetes

 



இந்தியர்களை பெருமளவு தாக்கத் துவங்கியிருக்கும் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என்று பொதுப் பெயரிட்டு அழைத்தாலும், சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் ஏற்படும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



முதல் ரக சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. இந்த முதல் பிரிவு சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இடிந்து விடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி செல்கள், இன்னொரு பகுதி செல்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை.



ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த முதல் ரக சர்க்கரை நோயைப் பொறுத்ததவரை, இது ஒருவருக்கு வந்ததால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி. அதேசமயம் உலக அளவிலும், இந்தியாவிலும், எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். இந்த இரண்டாவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.



பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80%. அது தவிர கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணங்கள் ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது வகையான கர்ப்பகால சர்க்கரை நோய் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகமாக இருப்பதாலும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும் பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் மறைந்துவிடும்.



நான்காவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை கணையத்தில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இது உருவாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.



இதற்கிடையில் ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு, உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார். அதே சமயம் அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுக் காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பதில் கிடைத்துள்ளது.



அடுத்ததாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு பொதுவான அறிகுறிகள் சில இருக்கின்றன. அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த்துவதாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் அவசியம் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இத்தகைய அறிகுறிகள் தெரிவதில்லை. சில சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம். இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்களில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதைப் போக்க வேண்டுமானால் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.




இதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது கண்டிப்பாக நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது என்கிறார் நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் மோகன். அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு மற்றும் அவரது பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மோகன். இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப் படுத்துவதும் எளிது. நீரிழிவு நோய் உண்டாக்கக் கூடிய இதர உடல் நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



நீரிழிவு என்பது நோயா அல்லது ஒருவித உடல் குறைபாடா என்பது தொடர்பில் மருத்துவ உலகில் இன்றளவும் சர்ச்சை தொடர்கிறது. உடலின் சகல பாகங்களையும் பாதிக்கும் பல்வேறு நோய்களை இது தோற்றுவிக்கும் என்பதால் இதை மதர் ஆப் ஆல் டிசீசஸ், அதாவது மற்ற பல நோய்களின் தாய் என்றும் இவர்கள் அழைக்கிறார்கள். அதேசமயம் இது ஒரு வித உடற்குறைபாடு என்றும் இதை சரியான முறையில் கையாண்டால் இதைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்கள்.




முதலாவதாக நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவில் இனிப்பை முற்றாக தவிர்க்க வேண்டும். தினந்தோறும் மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடும் பழக்கத்திற்கு பதிலாக, சராசரியாக மூன்று மணிநேர இடைவெளியில், சிறுகச் சிறுக சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கு நல்லது. மேலும் விரதம் என்கிற பெயரில் நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது கூடவே கூடாது. இந்த உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் ஒருவர் என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவரது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எச்சரிக்கிறார் உணவியல் நிபுணர் இந்திரா பத்மாலயம். உணவுக்கு அடுத்தபடியாக அன்றாய உடற்பயிற்சி அவசியம். இதில் எல்லோராலும் செய்யக்கூடிய அன்றாட உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சி ஆகும்.



உடற்பயிற்சிக்கு அடுத்ததாக நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் பரிந்துரைக்கப்படும். உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் என்று நீரிழிவுக்கான சிகிச்சை முறைகள் மூன்று வழிகளில் மேற் கொள்ளப்பட்டாலும் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது நீரிழிவு நோய் தாக்குதலுக்குள்ளானவரின் ஒத்துழைப்பு என்பதை மருத்துவர்கள் பலரும் வலியுறுத்து கிறார்கள். மேலும் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்பது நீரிழிவு நோயாளி மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். முறையான சிகிச்சை, இதற்கு தேவையான மனக் கட்டுப்பாடும் உறுதிப்பாடும் நீரிழிவு நோயாளர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பதோடு, நீரிழிவு நோயின் மிகத்தீவிரமான பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிவதில்லை என்பதாலும் பலர் இதற்கான சிகிச்சைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வதில்லை என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.



மேலும் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என் பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு, உண்மை நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விட்டால் அதன் மோசமான பக்க விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் இது தொடர்பில் நீரிழிவு நோயாளிகள் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்ரம் சொல்கிறார்ர்கள் இதேநீரிழிவு நோய் நிபுணர்கள்.

 
back to top