.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, October 27, 2013

முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!

   முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
 
த்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. 
இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.

மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர்.  ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இதற்காக ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்தனர். கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவைகருதி ரயில்நிலைய கட்டடத்தை பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. புதிய கட்டட மாடல் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்டீவன்ஸ் சுமார் 10மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.

அதில் மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதுபோலவே மும்பை ரயில்நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகு ஓவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில்நிலையம்.
மரவேலைப்பாடு, டைல்ஸ் பதிப்பு, அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படி பிரம்மாண்டமாக உருவான ரயில்நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியை பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் என பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டு-களையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர்.
இப்படி சிறப்புமிக்க ரயில்-நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை உலக பண்பாட்டுச் சின்னமாக 2004ல் யுனெஸ்கோ அறிவித்தது. மத்திய ரயில்வேயின் தலைமையக-மாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)


வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.

அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.

அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.

அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.

அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.

வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.

' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை பொறுக்குகிறாயே' என்றான் குட்டிக்கண்ணன்.

அதற்கு அம்மா ' கண்ணா ...இந்த அரிசியை கடவுள் பூமியில் நம்மை போன்றவர்கள் உயிர் வாழ படைத்திருக்கிறார்.
அதனால் அதை சிறிதளவும் வீணாக்கக்கூடாது....கீழே விழுந்த அரிசி நமக்கு வேண்டாமென்றால் அதை எடுத்து பறவைகளுக்கும்,எறும்புகளுக்கும் போடலாமே.
அவை அதை உண்ணும்.நாமும் எப்பொழுதும் எங்கும் உணவை வீணாக்ககூடாது என்றாள்.


குட்டிக்கண்ணனும் அது முதல் ஒழுங்காக வீணாக்காமல் உணவை உண்ணத்தொடங்கினான்.

படு பிஸியாகி விட்டார் 1000 டன் தங்க சாமியார்!


 பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


65 வயதான இந்த சாமியாரிடம்  ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில் உள்ள மற்றொரு ஆசிரமத்திற்கு மாறியுள்ளார். புலித்தோல் வடிவம் கொண்ட துணியால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மிக அமைதியாக பேசும் இவரது அறையில் மின்சார விளக்குகள் கூட கிடையாது.


 ஏனென்றால், கிராமத்தில் மின்சாரம் கிடையாது. இவரது சீடர்களில் முக்கியமானவர் சுவாமி ஓம். தனது குரு சோபன் சர்க்கார் கூறியவை குறித்து கூறுகையில், ‘‘எனக்கு விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை. என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று யாரையும் அழைப்பதில்லை. எனக்கென்று வங்கி கணக்கோ, சொத்தோ இல்லை. ஆனால், என் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செய்யும் ஆற்றல் என்னிடம் உள்ளது’’ என்றார்.


இவர் சொல்வதைப்போலவே அக்கம், பக்கம் கிராம மக்களுக்கு இவர் மூலம் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை கிடைத்துள்ளது.இந்த சாமியார் அவ்வப்போது 2 சோள ரொட்டி மட்டும்தான் சாப்பிடுகிறார். அதுவும் உடல் பலத்துக்கு தேவை என்பதால், இதை சாப்பிடுகிறாராம். ஆனால் ஆசிரமத்தில் இவரைப் பார்க்க வருபவர்கள் தரும் பரிசு பொருள்கள் உணவுப்பொருள்களை ஏற்றுக் கொள்கிறார். 5 மாநில முதல்வர்கள் இவரின் சீடர்கள். முலாயம் சிங் யாதவ், உமா பாரதி, ராஜநாத் சிங், முதலிய பலர் இவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றுள்ளனர்.

பட்டமளிப்பு விழாக்களில் கவுன் அணியும் வழக்கத்திற்கு ஜனாதிபதி முடிவு !



பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா ஐ.ஐ.டி.யின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றுது.

இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநில கவர்னர் டி.ஒய். பாட்டீல், முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் பட்டமளிப்பு விழா மரபுகளின் படி கவுன் (அங்கி) மற்றும் தொப்பிகளை அணிந்திருந்தனர்.

அப்போது விழா மேடையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நோக்கியவாறு, 'இந்தியாவின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்ற பிறகு தேவையற்ற பல சம்பிரதாய செயல்களுக்கு முடிவு கட்டியுள்ளீர்கள்.

இதைப் போன்ற பட்டமளிப்பு விழாக்களில் கவுன்களை மாட்டிக் கொண்டு பட்டம் வழங்குவதும் பட்டம் பெறுவதுமான இந்த மரபுகளுக்கும் நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கவுனுக்கு பதிலாக வெறும் தொப்பியை மட்டுமே அணிந்து வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் அவர்களுக்கும் வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு தோன்றும்' என்று வேடிக்கையாக கூறினார்.

சிகப்பு நிற அங்கி அணிந்து மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதிஷ் குமாரின் பேச்சை கேட்டு ரசித்து சிரித்தார்.

 
back to top