.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..!




இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது.

இது பற்றி வெஸ்ட் விர்ஃதுஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை.

இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

 மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது

சுவாமி விவேகானந்தர் - ஒருவரின் பண்ணை வீட்டில் ?




ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா..?



டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.



ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.


இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை..!

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!!! எச்சரிக்கை ரிப்போர்ட் :-


மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர்.

உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!

யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.

1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.

2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.

3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.

4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்

அழையா விருந்தாளியின் மனசு!

மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.

அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.

இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

இதற்கு என்ன காரணம்?

1.வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு தேவையான கல்வி நமது குடும்பங்களில் இருந்தோ, கல்வி நிலையங்களில் இருந்தோ , மார்க்க நிறுவனங்களில் இருந்தோ கிடைப்பதில்லை.

2.நவீன காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக உருவாகும் அபாயங்கள் குறித்து இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுப்பதில்லை.

3.தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சமூகம் அலட்சியமான போக்கை கையாண்டு வருகிறது. காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பழைய சம்பிரதாயங்களில் இருந்து மாத்தி யோசிக்க சமூகம் தற்பொழுதும் தயாராகவில்லை.

4.தன் மீதான அதீத நம்பிக்கையில் வளரும் இந்த தகாத உறவுகள் வெகுவிரைவில் தீவிரமடைந்துவிடுகிறது.

5.பெண்களில் தீவிரமாக காணப்படும் எதனையும் எளிதில் உள்வாங்கும் குணம் பாலியல் ரீதியான தவறுகளை புரிய துணைபுரிகின்றது.

6.நவீன காலக்கட்டத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரம் செல்ஃபோன் தொடர்புகளை அதிகரிக்க செய்கிறது.

7.தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் எந்த மோசமான காட்சிகளையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காணும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புதிய தலைமுறையினருக்கு இடையே ஆண்-பெண் உறவுகள் குறித்த பார்வையில் கலாச்சார வீழ்ச்சியை உருவாக்க இது காரணமாகிறது.

8.இல்லற வாழ்க்கையில் தம்பதியினர் இடையே பரஸ்பர அன்பும், பிணைப்பும் வறட்சியாக காணப்படுவதால் தாம்பத்தியம் குறித்த கனவு மாளிகைகள் தகர்ந்து போகின்றன. இல்லற வாழ்க்கையில் வெறும் உடல் இச்சை மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பொழுது வெகுவிரைவில் திருமண வாழ்க்கை சலித்துப் போகிறது.

9.வளைகுடாவாசிகளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு விடுகிறது. விடுமுறை முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு திரும்புகையில் தம்பதியினர் இடையே உண்மையான அன்பும், நேசமும், காதலும் முறையாக பரிமாறப்படாத சூழல் உருவாகிவிடுகிறது. இத்தகையதொரு சூன்யமான சூழலில் வரும் மிஸ்டுகால்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

10.ஒரு குழந்தை பிறந்த உடன் தாம்பத்தியத்தின் வசந்தம் அணைந்து போவதைத் தான் பொதுவாக காண்கிறோம். முற்றிலும் இயந்திர மயமாகிப்போன வாழ்க்கையில் புதிய வசந்தங்களை மனம் தேட துவங்குகிறது.

தொடர்கதையாகும் துயரங்கள்!

மிஸ்டு கால் மூலமாக இளம்பெண்களின் அந்தரங்க வாழ்வில் ஊடுருவும் ஆசாமி உடனான உறவில் ஒரேயொரு அடிப்படையாக அமைவது செல்ஃபோன் நம்பர் மட்டுமே. இந்த ஆசாமி, குடிகாரனாகவோ, போதைப் பொருளுக்கு அடிமையானவனாகவோ, பெண்களை ஆபாச வலையில் சிக்கவைத்து அதன் மூலம் சம்பாதிப்பவனாகவோ, மனநோயாளியாகவோ, ரெளடியாகவோ இருக்கலாம்.

மேலே கூறப்பட்ட நபர்களுக்கு காதலும், பாலியலும் எல்லாம் ஆதாயமும், பொழுது போக்குமாகும். முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகிப் போன விடலைப் பையன்களும் இதில் அடங்குவர். இத்தகைய நபர்கள் மிஸ்டுகால்களை விடுத்து காதில் ஓதும் மந்திரங்களை நம்பும் இளம் பெண்கள் வரப்போகும் துயரங்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.

சிம் கார்டை மாற்றுவதன் மூலம் மிஸ்டுகால்களை தொடுத்து இளம் பெண்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தப்பித்து விடுகின்றார்கள்.

தற்பொழுது குறைந்த கட்டணத்தில் இணையதளம் வாயிலாக இயங்கும் சட்டமுறையற்ற தொலைபேசி கார்டுகள் மூலமாகவும் அழைத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதில் அழைத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அனாமதேயர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலரே சைபர் செல்லில் புகார் அளிக்கின்றனர். திருமணமான பெண்களுக்கோ மிஸ்டுகால்கள் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இங்கே சில பெண்கள் துயரங்களுக்கு அப்ரூவர்களாக மாறிவிடுகின்றார்கள். இரண்டு குடும்பங்களிலும் சண்டைகளும், சச்சரவுகளும் உருவாகின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள். இறுதியாக தற்கொலையில் அபயம் தேடும் அவலநிலைக்கு மிஸ்டுகால்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் செல்கிறார்கள்.

செல்ஃபோன்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடும்ப உறவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ திருமண உறவுகள் விவகாரத்தை நோக்கிச் சென்றுள்ளன. எத்தனையோ இளம்பெண்கள் ஓடிப்போய் கடைசியில் ஆபத்துகளில் சிக்கியுள்ளனர். மன நல மருத்துவமனைகளும், குடும்ப நீதிமன்றங்களும் இதற்கு சாட்சியம் வகிக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு அது மாறாத வடுவாக மாறிவிடுகிறது.

உண்மையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சமூகரீதியான உணர்வுதான் இன்று ஒழுக்க விழுமியங்கள் ஓரளவு பேணப்படுவதற்கு காரணமாகும்.

 
back to top