.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 6, 2014

விஜயகாந்த் - வாழ்க்கை வரலாறு (Biography)

 Vijayakanth

புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘விருத்தாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா, அரசியல் பணிகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

இடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு 

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

திரைப்படத்துறையில் விஜயகாந்தின் பயணம்

1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார்.

கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த சிலத் திரைப்படங்கள்

‘இனிக்கும் இளமை’ (1978), ‘ஓம் சக்தி’ (1979), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981), ‘சாட்சி’ (1983), ‘100வது நாள்’ (1984), ‘சத்தியம் நீயே’ (1984), ‘தீர்ப்பு என் கையில்’ (1984), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘அம்மன் கோயில் கிழக்காலே’ (1986), ‘ஊமைவிழிகள்’’ (1986), ‘கரிமேட்டுக் கருவாயன்’ (1986), ‘தழுவாத கைகள்’ (1986), ‘சட்டம் ஒரு விளையாட்டு’ (1987), ‘சிறை பறவை’ (1987), ‘செந்தூரப் பூவே’ (1988), ‘தென்பாண்டி சீமையிலே’ (1988), ‘பூந்தோட்ட காவல்காரன்’ (1988), ‘சத்ரியன்’ (1990), ‘சந்தனக் காற்று’ (1990), ‘புலன் விசாரணை’ (1990), ‘கேப்டன்  பிரபாகரன்’ (1991), ‘மாநகர காவல்’ (1991), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஏழைஜாதி (1993), ‘கோயில் காளை’ (1993), ‘செந்தூரப் பாண்டி’ (1993), ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994), ‘என் ஆசை மச்சான்’ (1994), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994), ‘அலெக்ஸ்சாண்டர்’ (1996), ‘உளவுத்துறை’ (1998), ‘வானத்தைப்போல’ (2000), ‘ரமணா’ (2002), ‘சொக்கத்தங்கம்’ (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும்.

இல்லற வாழ்க்கை

1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை

தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ‘புரட்சி கலைஞன்’ என பெயர்பெற்ற அவர், எம்ஜிஆரின் தீவிர ராசிகனாக மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, களம் கண்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. ஆனால் குறுகிய நாட்களுக்குள் அ.தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!


கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!


கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ...‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!


நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்:

 கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்:

 எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்:

 வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்:


 நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: 

வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்:

 எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை:

 சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்..!

கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.

‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இதரப் பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் துவங்கியுள்ளனர்.

“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. இது அவர்களின் குரல் மட்டுமல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம்பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் வெளியில் வரத் துவங்கியுள்ளது. உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாணவர்களின் நலனுக்காக தேடிவந்து வேலை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அதுவல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார்கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதால், தரமான ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.

கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரிய வரப்பிரசாதம். சக போட்டிக் கல்லூரிகளை விட ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்துதான் அதிகம் பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று காட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்க்கின்றனர். ஆகவே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு ஏற்பாடாகவோ கருத வேண்டியது இல்லை.

இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம் வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வேலை தராமல் இழுத்தடிப்பது எதனால்? கல்லூரிகளை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அழைத்து வருகின்றன.

இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வாகும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தராமல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோருமே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்; 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டிதான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு கடைசியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதிமூலம்” என்கிறார் செந்தில்.

ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவதும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வேலை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள்ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள்ளைகள். இந்தப் பிரச்னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…

“ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால் கல்லூரி முடியும்வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க… அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக்கிறார்கள்.

நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப்ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை, வேலையில் சேர்ந்துவிடலாம். ‘வெட்டியாக வேலைக்காக காத்திருந்தோம்’ என்று சொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனியர்களுடன் போட்டிப் போட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொல்கிறார்.

எனில், இதில் கல்லூரியின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம்தானே… என்று கேட்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறுவனங்களை கெஞ்சி கூத்தாடிதான் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வரமாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.

10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொறியியல் படிப்பை விற்கும் கல்லூரிகள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை. ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல்லூரியில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப்படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படையற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்களையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண்மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் பட்டறை அல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கேம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களிடம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘நன்றாக படி, வேலைக்குப் போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங்கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத்தைப் போல சிந்திப்பதற்கான மூளையை கல்லூரியிலேயே தயார் செய்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வியை கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங்குவதை பெரிய திருவிழா போல கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக்கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்லும் நிலையில், இந்த அபாயமான போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்தது போல ஆர்டர் கிடைத்திருந்தால் வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மையல்ல.. என்னதான் ஆர்டர் குறைந்திருந்த போதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாபவெறியின் பலியாடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் மாணவர்கள்!

 
back to top