.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு – திரை விமர்சனம்



அக்கா, தம்பியாகிய கவிதாவும் சிவாவும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். சிவா மற்றும் அவரது நண்பர்கள், அக்கா கவிதா மீது பேரன்பு கொண்டு பாசத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். கவிதாவிற்கு போலீசில் சேருவதற்கான கடிதம் வருகிறது. இதனால் சிவா மற்றும் அவரது நண்பர்கள் கவிதாவை கண்ணீர் மல்க போலீஸ் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு நாள் சிவா, கவிதா ஒரு ஆபத்தில் சிக்குவதாக கனவு காணுகிறார். இதனால் பதறிபோய் அவருக்கு போன் செய்கிறார். ஆனால் போன் நம்பர் ஒர்க் ஆகாமல் போய் விடுகிறது. இதனால் துடித்து போகிறார்.

மறுநாள், கிராமத்திலுள்ள ஒரு தோட்டத்தின் உரிமையாளர் தனது தோட்டத்தில் மர்ம பை ஒன்றை பார்க்கிறார். அதை திறந்து பார்க்கும் அவர் அதிர்ந்து போகிறார். அதில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது சிவாவின் அக்கா கவிதா என தெரிகிறது. இதனால் சிவா மற்றும் அவரது நண்பர்கள் கதறி அழுகிறார்கள். பின்னர் அக்கா சாவிற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கிறார்கள்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆட்களை மர்ம கும்பல் கொலை செய்கிறது. பிறகு சிவா மற்றும் அவரது நண்பர்கள் துணையோடு அமைச்சரை கடத்துகிறது. போலீஸ் அவர்களை துரத்திக் கொண்டு சென்று அமைச்சரை மீட்கிறார்கள். போலீஸ் அதிகாரியான அக்கா கவிதாவின் காதலனான பாஸ்கர் அமைச்சரை கடத்தி சென்ற சிவாவை தப்பிக்க உதவி செய்கிறார்.

பிறகு அமைச்சரின் சகோதரர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இதனால் போலீஸ் அனைத்து கொலைகளையும், கவிதா கொலையையும் கண்டறிய தனி டீம் ஒன்றை அமைக்கிறது.

இறுதியில் கவிதா எப்படி கொலை செய்யப்பட்டாள்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? கொலை செய்தவர்களை சிவா பழிவாங்கினாரா? மற்ற கொலைகளை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகன் ஆதவராம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகி பிரியாவுடன் ஒரே பாடலில் டுயட் பாடுவதுடன் இரு காட்சிகளில் மட்டுமே இணைந்து நடித்துள்ளார். அக்கா கதாபாத்திரமான மஞ்சுவும் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. போலீஸ் அதிகாரியாக வரும் பிளாரென்ஸ் பெரைரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அக்கா, தம்பி பாசத்தை கதையாக எடுத்துக் கொண்ட இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா, அதை திரைக்கதையில் தெளிவாக கூறியிருக்கலாம். படத்தில் தேவையற்ற காட்சிகள், தேவையில்லாத இடத்தில் பாடல் காட்சிகள் என பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறார். கதாபாத்திரத்தை விட போலீஸ் என சொல்லிக்கொண்டு நிறைய பேர் வருகிறார். அதை குறைத்திருக்கலாம் இயக்குனர். எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். பிரேம் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்கலாம்.

0 comments:

 
back to top