.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கேள்விப்பட்ட தகவல். Show all posts
Showing posts with label கேள்விப்பட்ட தகவல். Show all posts

Monday, January 20, 2014

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்..!



மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகமான மருந்துகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம்தான் என்று குழுவினர் கண்டறிந்தனர் என்றனர்.இந்நிலையில், அவர் கடைசியாக எடுத்து கொண்ட உணவில் விஷம் கலந்துள்ளதா, மது குடித்திருந்தாரா என்று அறிய உடலின் பாகங்கள் சிலவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதற்கான தடயம் இல்லை என்பதால், அவர் குடித்திருக்கவில்லை என தெரியவந்தது.

மேலும், மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை அவர் அதிகமாக சாப்பிட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த மருந்து அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தூக்க மாத்திரைகளை போல் மயக்கத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவர் அறிக்கைகள், நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா, அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், சுனந்தா அறையில் தங்கியிருந்த போது அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள், டுவிட்டர்கள் ஆகியவற்றையும் சிறப்பு புலனாய்வு படையினர் சேகரித்துள்ளனர். இவற்றை சிறப்பு புலனாய்வு படை தலைவர் அசோக் சர்மா ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையையும், ரசாயன பரிசோதனை அறிக்கையையும் இன்று மாலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ரசாயன பரிசோதனை செய்த நிபுணர்கள் ஆகியோருடன் சிறப்பு புலனாய்வு படையினர் விவாதிக்கவுள்ளனர்.இதற்கிடையே, ரசாயன மருத்துவ நிபுணர் குழு தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், எங்களது ஆய்வுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

சுனந்தாவின் உடலில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இதயத்தை ஆய்வு செய்ததில் சில மருத்துவ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.மேலும் தடயவியல் நிபுணர்களும் அறையில் எடுத்த மருந்துகள், கைரேகைகள், வியர்வை துளிகள், ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்வர். பின்னர் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணை அறிக்கைகளுடன் சேர்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலிவுட்டில் ‘சுப்பிரமணிபுரம்’..!



இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது சசிகுமாரின் சுப்பிரமணிபுரம்.

கடந்த மூன்று வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம்.

கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன.
இந்தப்படத்தினை சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் பாதிப்பில் நிறைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாயின.

அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் சமீபத்தில் தெரியப்படுத்தினார்.

இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார். பலர் கேட்டும் சுப்பிரமணியபுரத்தின் ரீமேக் உரிமையை அவர் தரவில்லை.

சுப்பிரமணியபுரம் இந்தி ரீமேக்கில் அனுராக் காஷ்யபும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் வசனத்தில் பங்களிப்பு செலுத்துவார் என தெரிகிறது.

மேலும், அனுராக்கின் தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருகின்றனர் – ஆய்வில் தகவல்..!



லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் நூதனமாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதன்படி 5 மற்றும் 10 நாட்கள் முக சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்கள் போட்டோவை பெண்களிடம் காட்டினர். இவர்களில் உங்களை கவருபவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 351 பெண்கள் மற்றும் 177 திருநங்கைகளிடம் இதற்கு பதில் அளிக்கும்படி கோரப்பட்டது.

அதற்கு 10 நாட்களாக முகச்சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்களே தங்களுக்கு பிடித்ததாக பெண்களும், திருநங்கைகளும் தெரிவித்தனர். 5 நாள் தாடி வளர்த்து இருந்த ஆண்களை பிடித்ததாக மிக குறைந்த அளவிலான பெண்கள் கருத்து கூறியிருந்தனர்

சிம்புக்கு ஏன் இந்த வம்பு..?




சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி  என்பது போல் ஆகப்போகிறது நம்ம சிம்புவின் வாலு படத்தில் உள்ள லேட்டஸ்ட் சாங்.

புதுசு புதுசா புது ட்ரெண்ட்களை தன்னுடைய பாடல்கள் முலம் முதன்முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான்.

தன் வழியை பின்பற்றி இன்று  உலகளவில் சில பேர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீண்ட நாள் கனவான லவ் அந்தம் என்ற ஆல்பத்தை மாபெரும் உலக இசைக் கலைஞர்  எகான் வைத்து எடுத்தும் முடித்து விட்டார்.

பிறகு என்ன? தற்போது நடித்து முடித்து இருக்கும் வாலு படத்தின் ஒரு பாடலில்  அவரின் வால் தனத்தை காட்டி விட்டார் சிம்பு.

தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

அதில் நயன்தாரா வேண்டாம், அண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்து உள்ளன என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ஏற்கனவே எவன் டி உன்ன பெத்தன் பெத்தன் என்ற பாடலை ரசிகர்களின் மத்தயில் பலத்த வரவேற்பு பெற்றுது போல் இந்த பாடலும் மிக பெரிய ஹிட் ஆகும் என  நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சிம்பு.  இப் பாடலை சிம்புவின் பிறந்த நாளான பிப்வரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  விவகாரத்துக்கு பேர் போன சிம்பு விவரமான ஆளும் கூடங்க!!!!

வில்லனிடம் இருந்து ஹீரோவை காப்பாற்றிய நயன்தாரா…



பொதுவாக தமிழ்ப்படத்தில் கதாநாயகியை வில்லன் கடத்திக்கொண்டு சென்றுவிடுவார். ஹீரோ அவரை கஷ்டப்பட்டு பல சண்டைகள் போட்டு காப்பாற்றுவார். முடிவில் சுபம் என்றுதான் இதுவரை நாம் தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கின்றோம். முதல்முறையாக ஹீரோவை வில்லன் கடத்திக்கொண்டு செல்கிறார். அவரை பல சாகசங்கள் செய்து ஹீரோயின் காப்பாற்றுகிறார். இப்படி ஒரு கதைதான் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடத்தப்பட்ட காதலனாக கணேஷ் வெங்கட்ராமனும், அவரை மீட்கும் காதலியாக நயன்தாராவும், கடத்தும் வில்லனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்த த்ரில்லிங் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது பெங்களூரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்குகிறது.

நயன் தாரா முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெயம் ரவியுடன் அவர் மோது அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளும் க்ளைமாக்ஸில் இருக்கின்றதாம். வில்லன் வேடத்தை அதுவும் நயன் தாராவுடன் மோதும் வில்லன் வேடத்தை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என ஜெயம் ரவியிடம் கேட்டால் படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த கேரக்டரை நான் எதற்காக ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் செல்வகுமார் கலையில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு பொருத்தமான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா. -

சிம்புவின் காதலை சொல்லும் பாடல்..!



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

" மாமியாரின் அன்புப் பரிசு...!!!




ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்
ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு
படகுப் பிரயாணம் போனாள்..
நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா வ
விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம்
புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..

அதன் கண்ணாடியில்
ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
" மாமியாரின் அன்புப் பரிசு..

"ரெண்டாவது மருமகனுக்கும்
இந்த சோதனை நடந்தது.. அவரும்
ஒரு மாருதி கார் வென்றார்.."
மாமியாரின் அன்புப் பரிசாக..
".
மூன்றாவது மருமகனுக்கும் இந்த
சோதனை நடந்தது.. அவர்
கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு'
உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார்-லாம் வேணாம்.. சாவுற வரைக்கும்
சைக்கிள்ல போயிக்கிறேன்..த்து பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன்
வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ROLLS ROYCE கார்
நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு"
என்ற அட்டையோட….!

‘எனக்கான இடம் காத்திருக்கிறது’ - விதார்த் நம்பிக்கை



 புதிதாக வரும் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் விதார்த். ‘மைனா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அனைவரது பாராட்டையும் பெற்றவர், தற்போது வீரம் படத்தில் அஜித் ‘தல’ ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறார். “சினிமாவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் தவறிப் போகாது” என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் விதார்த்தை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘மைனா' பார்ட் 2-ல நடிச்சுட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்?
‘மைனா’ பார்ட் 2-ல்லாம் கிடையாது. ‘மைனா ‘ மாதிரி ஒரு கதையில நடிச்சிட்டிருக்கேன், அவ்வளவுதான். இன்னைக்குத்தான் ஷுட்டிங் தொடங்குச்சு. ‘காடு’ன்னு படத்துக்கு பெயர் வச்சிருக் கோம். ‘மைனா’ படத்துல என்னோட நடிச்ச தம்பி ராமையா கூட திரும்பவும் நடிக்கிறேன். ஸ்டாலின் ராமலிங்கம் தான் இயக்குநர். அவரோட வாழ்க்கையை சினிமாவா எடுக்கிறார். ‘மைனா’ மாதிரியே காட்டுக்குள்ளே நடக்குற காதல் கதை தான். இந்தப் படத்துல சமூகத்திற்கான ஒரு விஷயத்தையும் பதிவு பண்றோம்.

ரெண்டு வருஷத்திற்கு முன்னாடியே இந்தப் படத்தோட கதை தெரியும். கடைசியா பார்த்தப்போ, இந்த படத்தோட முழுக்கதையையும் ஸ்டோரி போர்டு பண்ணிட்டார். அதுக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் எல்லாத்தையும் இப்படித்தான் எடுக்கப் போறேன்னு அனிமேஷன் பண்ணி எனக்கு லேப்டாப்புல போட்டு காண்பிச்சார். எனக்கு புதுசா இருந்தது. எல்லாரும் படம் முடிஞ்ச உடனே பண்ற வேலைகள் எல்லாத்தையும், இவரு படத்துக்கு முன்னாடி பண்றதைப் பார்த்து பிரமிச்சு போயிட்டேன். இப்போ ஷுட்டிங் தொடங்கியாச்சு. ‘வீரம்’ வெற்றிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தோட ஷுட்டிங்ல புது வருஷத்தை தொடங்கியிருக்கேன்.

வீரம் ஹிட் ஆன பிறகு அஜித் உங்ககிட்ட பேசினாரா?

பட ரிலீஸுக்கு முந்தின நாள்தான் சென்னைக்கு வந்தார் அஜித். பட ரிலீஸ் அன்னைக்கு காலைல 7 மணிக்கு எல்லாம் போன் பண்ணிட்டார். நியூ இயர், பொங்கல் வாழ்த்துகள் எல்லாம் சொல்லிட்டு, படம் பாத்திட்டீங்களான்னு கேட்டார். ‘இல்ல சார்.. ஷுட்டிங்ல இருக்கேன். நாளைக்கு தான் போறேன்’னு சொன்னேன். முதல் ஷோ பாத்தவங்க எல்லாம் நெட்ல நல்லாயி ருக்குன்னு எழுதினதைப் பார்த்து அவரு பயங்கர உற்சாகமாக பேசினார். எல்லாம் பேசிட்டு முடிச்சிட்டு, ‘நீங்க ஒரு தனி ஹீரோ. என்கூட சேர்ந்து நடிச்சதுக்கு ரொம்ப நன்றி’ அப்படினு சொன்னார். ‘சார்.. உங்களோட தீவிர ரசிகன் நான். உங்க கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்ததிற்கு நான் தான் நன்றி சொல்லணும்’னு சொன்னேன். போனை கட் பண்ணும் போது கூட, ‘படம் முடிஞ்சுருச்சுனு விட்றாதீங்க. அப்பப்போ போன் பண்ணுங்க. சென்னை வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வாங்க’ன்னு சொன்னார்.

நீங்க ஒரு ஹீரோ. ‘வீரம்’ படத்துல 4 தம்பிகள்ல ஒருத்தரா நடிக்க எப்படி சம்மதிச்சீங்க?
நான் அஜித்தோட தீவிர ரசிகன். இயக்குநர் சிவா என்கிட்ட கதை சொல் றேன்னு சொன்னப்போ கூட, ‘அஜித் கூட நடிக்கிறேன். போதும் கதை எல்லாம் வேண்டாம்’னு சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு அஜித்தை அவ்வளவு பிடிக்கும். ‘மைனா' படத்துக்கு பிறகு அவரை சந்திச்சு பேசணும்னு ஆசைப்பட்டேன். அவர்கூட நடிக்க வாய்ப்பு வரப்போ எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும்.

‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ படத்துல காமெடில பட்டைய கிளப்பியிருக்கீங்கனு இயக்குநர் சொல்லியிருக்காரே?

காமெடி படங்கள் பண்றது எனக்கு பிடிக்கும். ஏன்னா காமெடி எனக்கு நல்லா வரும். 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' படம் 100 சதவீதம் காமெடி படம்தான். நானும் சூரியும் சேர்ந்து செம காமெடி பண்ணியிருக்கோம். எனக்கு காமெடியும் வரும்னு நம்பிக்கையை கொடுத்த படம். கண்டிப்பா என்னை விட சூரிக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும்.

‘மைனா’ படத்தோட வெற்றிக்குப் பிறகு பெரியளவிற்கு உங்களோட படங்கள் ஹிட்டாகல. அதுக்கு என்ன காரணம்?

என்னை பொறுத்தவரை படங்களை சரியா கொண்டு போய் சேர்க்கலைன்னுதான் நினைக்கிறேன். ‘மைனா’க்கு பிறகு நான் நடிச்ச படங்கள் வந்ததே நிறைய பேருக்கு தெரியல.அதுமட்டுமல்லாம, ‘மைனா’ படத்துக்குப் பிறகு நிறைய பேர் அதே பாணியில் என்கிட்ட படங்கள் எதிர்பார்க்கு றாங்க. இது எனக்கு மட்டுமல்ல.. எல்லா ஹீரோக்களுக்கும் இதே மாதிரி நடக்குது. ஒரு படம் ஹிட்டாயிட்டா உடனே அதே சாயல்ல படம் பண்ணுங்கனு சொல்றாங்க.

என்னை பொறுத்தவரை ஒரு படம் நடிச்சா, ஒரு நடிகனா நல்லா பண்ணியிருக்கனா அதை மட்டும்தான் பாக்குறேன். 'மைனா' வெற்றிக்கு நிகரா ஒரு படம் கொடுக்கல அப்படிங்குறது உண்மை தான். அதை ‘ஆள்', 'காடு' படங்கள் கண்டிப்பா பூர்த்தி பண்ணும்.

படத்துல நடிக்க உங்க வீட்ல எதிர்ப்பு வந்திருக்குமே? எப்படி சமாளிச்சீங்க?

எங்க வீட்டுல எங்கப்பாதான் எல்லாமே. வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்த குடும்பம்தான். சிங்கப்பூர், மலேசியா, கனடால எல்லாம் எங்கப்பா வேலை பார்த்துதான் கொஞ்சம் மேலே வந்தோம். அதனால எங்கப்பா எப்போதுமே, எல்லாமே பசங்க விருப்பம்தான் அப்படினு விட்டுருவார். உனக்கு என்ன தோணுதோ பண்ணுனு சொல்லிடுவார். முதல்ல டிரைவராகப் போறேன்னு சொன்னேன். சரினு லைசன்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அப்புறமா.. நடிகனாக போறேன்னு கூத்துப் பட்டறைல சேர்ந்தேன். சரிப்பானு சொன்னார். குடும்பத்துல இருக்குறவங்கதான் நடிகன் எல்லாம் வேண்டாம் சொன்னாங்க. எங்கப்பா என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தார். நான் நடிகனாக ஆனதற்கு எங்க வீட்டுல இருந்து எதிர்ப்புனு எதுவுமே இல்ல.

இப்போ சினிமால உங்களோட வளர்ச்சியைப் பார்த்து உங்கப்பா என்ன சொல்றார்?

ரொம்ப சந்தோஷமாக இருக்கார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தை நான் நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு போனேன். எங்கப்பா படம் பாத்துட்டு தூங்காம காத்திருந்தார். நான் கதவை திறந்து உள்ளே போனதுமே, என்னை கட்டிப்பிடிச்சு “நல்லா பண்ணிருக்கடா... சூப்பர்.. பிரமாதம்.. இன்னும் பண்ணணும். விட்டுறதே..” அப்படினு சொல்லிட்டு தூங்க போயிட்டார். எங்கப்பா சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் அன்றைக்கு தூங்கவே இல்லை. அந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அது தான் எனக்கு உரம். கண்டிப்பா எனக்கான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

Sunday, January 19, 2014

“கே.பாக்யராஜ் ஊசி போடுவதில் கில்லாடி…” - மன்சூர் அலிகான்



ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் ’3 ஜி’ எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’.

இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா,  மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி .

இந்த 3 ஜீனியஸஸ் எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.

நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. ‘என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க…’ என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை, நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்குப் பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது..? அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்…” இவ்வாறு பேசினார்.

நடிகர்  மன்சூர் அலிகான் பேசும்போது “இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார். கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது. எங்க ஊர் பக்கத்திலிருந்தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

தயாரிப்பாளராகும் அஜித்..?



தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித்.

தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.

இந்த பட்டியலில் விரைவில் அஜீத்தும் சேருகிறாராம். ஒரு நேரத்தில் தான் நடித்த படங்கள் சறுக்கி வந்தபோது, தன்னை வைத்து தைரியமாக படம் தயாரித்தவர்களுடன் சேர்ந்து தானும் பங்குதாரராக செயல்பட்ட அஜித், இந்த முறை, தனக்காக தயாரிப்பாளராகவில்லையாம்.

நல்ல திறமையான நடிகர், இயக்குனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தயாரிப்பாளராகிறாராம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. என்றபோதும், தலயின் தாராள குணமறிந்த சில இளவட்ட நாயகர்கள் ஆதரவு கேட்டு தலசமூகத்தை நாடியுள்ளார்களாம்.

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்..!



ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது, அவருக்கு இரண்டாவது படம்.

படத்தை பற்றி எஸ்.வி.சேரிடம் கேட்டபோது,”இது, கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் கதை. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு கணவர் வரவேண்டும் என்று ஆசைப்படுகிற மாதிரி, கதாநாயகனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில், அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் வாலி, என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அதன் அடையாளமாக அவர் இறப்பதற்கு முன், இந்த படத்துக்காக 4 பாடல்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். சென்னை, ஏற்காடு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகிய 2 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சின்னி ஜெயந்த், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘‘நிலா அது வானத்து மேலே’’ என்ற பழைய பாடல், ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டுள்ளது. சீர்காழி சிவசிதம்பரம் பாடியிருக்கிறார். அந்த பாடலுக்கு கவர்ச்சி நடிகை சோனா, கீர்த்தி சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் சேகர் நடனம் ஆடியிருக்கிறார்.

கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தை டைரக்டு செய்த அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய 2 மகள்களின் படிப்பு செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு ‘கட்’ கூட கொடுக்காமல், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.’’ என்றார்

ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜின் புதிய தொடர்..!



 ஒவ்வொருவருக்குமே தாங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில், ஒர் அலாதியான சுகம் இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மாட்டிக்கொள்வதற்கும், டைரி எழுதுவதற்கும் கூட, ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. நம் நினைவுக் குளங்களில் படர்ந்திருக்கும், பாசியின் மேல் கல்லெறிவதில் ஒரு பேரானந்தம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உணர்வைதான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது நான் நடந்து வந்த பாதை அல்லது எனது வாழ்க்கையை பற்றிய சுயதம்பட்டமோ அல்ல. இது நான் மனக்கிடங்கில், சேமித்து வைத்த நினைவுகளின் அணிவகுப்பு. இதில், நான் மட்டும் தெரியப் போவதில்லை... நீங்களும்தான்.

எனது பால்யம் என்பது எனது பால்யம் மட்டுமா? அது உங்களுடையதும்தான்! எனது அவமானம், வெற்றி, தோல்வி, விருது எல்லாம் என்னுடையது மட்டுமா என்ன? அவை அனைத்துமே நம்முடையது.

அப்படி இந்தத் தொடர் மூலம் உங்கள் இளமைக்கால நினைவுகள் மயில் தோகையாக மனதில் விரியலாம், ஞாபக அடுக்குகளில் என் வார்த்தைகள் பொருத்திப்போடும் தீக்குச்சிகள் பழைய நினைவுகளை சுட்டு எரிக்கலாம், சூத்திரவாலு, அறுந்தவாலு, கரட்டான் மண்டையன், பொண்ணுக்கு வீங்கி, அதிரடி குசுவுனி, அவசர குடுக்கை, வீத்தக்குட்டி, அராத்து என பட்டப்பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்த நண்பனும் தோழியும், நினைவில் வந்து போகலாம். சிமிட்டுக்கண்ணி, சில்க் சுந்தரி, புட்டம்மா சிட்டு ,

வேப்பெண்ணை தேச்ச தேவதை என நமது முதல் காதலிகள் கனவில் கடந்து போகலாம்,

ஒரு இலைய கட்டிக்கிறேன்,

ரெண்டு இலைய கட்டிக்கிறேன்,

மூணு இலைய கட்டிக்கிறேன்,

நாலு இலைய கட்டிக்கிறேன்,

அஞ்சலைய கட்டிக்கிறேன்னு

பாடி மகிழ்ந்து, டேய்... இவன் அஞ்சலை புள்ளைய கட்டிக்கிறேன்னு சொல்றான்டா, என கேலி செய்து அஞ்சலைய வெக்கப்பட வைத்து... உதிர்த்த சிரிப்பொலிகள் காதுகளில் ஒலிக்கலாம், ரெடியோர் ரெடி, கிளியோர் கிளி, கிக்கிலி பிக்கிலி, மக்கான், சுக்கான், பாலு பறங்கி, நாட்டும சீட்டும அதிரி , எங்க மாடு எளச்சு போச்சு, தண்ணிங்குடுறா கொள்ளப் பயலே... விளையாண்ட விளையாட்டுக்களும், மென் கவிதை, மென் தூறல் கவிதை, என ரசனை மாற்றம் ரசவாதமாய் நிகழ்ந்த காலம்..

மயிலிறகு ஒளித்து, குட்டி போடும் நாள் பார்த்து காத்திருந்தது, கட்டிபோட்டா குட்டி போடும் இலை சுமந்த புத்தங்களை நாம் சுமந்தது, 1001 முறை ஓம் முருகா ஓம் முருகா! என எழுதி அனுப்பி கந்த சஷ்டி புத்தகம் வாங்கியது, தேங்காய் உடைக்கப்போகும் அம்மாவிடம் டம்ளர் எடுத்து போய் தேங்காய் தண்ணீர் வாங்கி தேவாமிர்தம் போல் குடித்து மகிழ்ந்தது, மெட்ராஸ் ஐ வந்ததும் நண்பர்கள் கண்ணை நேருக்கு நேராய் பார்த்து ஒனக்கும் ஒட்டி விட்டுருவேன்... என மிரட்டி தாத்தாவின் கண்ணாடியை பாட்ஷா கண்ணாடியாய் நினைத்து போட்டு ஸ்டைலாய் திரிந்தது, உள்ளூர் டூரிங் டாக்கீஸில் குடும்பத்தோடு அத்தை மகள் படம் பார்க்க செல்கிறாளே என அடம்பிடித்து... ‘இதயம்’ படம் குடும்பத்தோடு பார்த்தது,

ஊருக்கு முன்னாடி பள்ளிகூடத்துக்கு வந்து விட்டு இன்னைக்கு நான்தான் ஸ்கூல் first-னு தம்பட்டம் அடித்து திரிந்தது, பேரன், பேத்தி எடுத்துருந்தாலும்... ஏதோ ஒரு நினைவில்... தனக்கு பிடித்த ஒரு வாத்தியார்... நினைத்துப் பார்க்கும் ஒரு தருணம் வரும். அப்படி நமக்கு பிடித்த... குரு..! திருவுருவமாய் வந்து செல்லலாம்..! கொத்து கொத்து மாங்கா கோமாரி மாங்கா மதுரைக்கு போனாலும் வாடாத மாங்கா, அது என்ன? பல நேரம் விடை தெரியாத விடுகதை போட்டு சுற்றி திரிந்த காலங்கள், 13ம் நம்பர் பஸ்ஸில் “மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பாடலை”, பஸ்ஸை ஒரு பல்லாக்கு போல நினைத்து மேடு பள்ளங்களில் ஆடி ஆடி அசைந்து மிதந்து சென்றபடி நாங்களும் ராஜ ஊர்வலம் சென்று ரசித்த நாட்கள், “ஆசைய காத்துல தூதுவிட்டு” பாடலை தேசியகீதம் போல சிலோன் வானொலியில் கேட்டு கிறங்கி கிடந்த நினைவுகள், என பழசெல்லாம் படபடபடனு ஞாபகத்திற்கு வரப்போகிறது,

முடிவடையும் 'மான் கராத்தே' படப்பிடிப்பு..!



 பஞ்சாப்பில் இந்தி படங்களின் பாடல்கள் படமாக்கப்படும் இடத்தில் 'மான் கராத்தே' படத்தின் பாடல்களை படமாக்கி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மான் கராத்தே'. ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுத, திருக்குமரன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், காதலர் தினத்தன்று படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில், இரண்டு பாடல்களை பஞ்சாப்பில் பிருந்தா நடன அமைப்பில் படமாக்கி வருகிறார்கள்.

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Dilwale Dulhaniya Le Jayenge' படத்தின் பாடல்கள் படமாக்கப்பட்ட இடத்தில் இப்படத்தின் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது, கோதுமை வயல் பரப்பில் இப்படத்தின் பாடல்களை எடுத்து வருகிறார்கள். இப்பாடலில் ஹன்சிகா லுங்கி கட்டிக்கொண்டு நடனமாடுவது போன்று காட்சிபடுத்தி வருகிறார்களாம்.

இரண்டு பாடல்கள் முடிந்து விட்டால், மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். ஏப்ரல் 11ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

தமிழ் படம் இயக்கும் ஆஸ்திரேலிய இயக்குனர்..!



ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தமிழ் படம் இயக்குகிறார். பழமையான இசை கருவி யாழ். இந்த பெயரில் தமிழ் படம் இயக்குகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்.எஸ்.ஆனந்த். அவர் கூறியதாவது:

யாழ் என்பது இலங்கையின் பழமையான இசை கருவி. இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்களின் கலாசாரத் துக்கும் யாழ் என்றுதான் பெயர். இந்த கலாசாரத்தை பற்றி இலங்கை இறுதி போரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மறக்கப்பட்ட இக்கலாசாரத்தின் சமகாலத்து நிலைமையை படம் விளக்குகிறது. இதில் வினோத், சசி, மிஷா, ரக்ஷனா, லீமா பாபு ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். கருப்பையா, நசீர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். பாரதி, அருணகிரி இசை அமைத்திருக்கின்றனர்.

Saturday, January 18, 2014

நாமளா நாடிப்போனா குறைவு ; அதுவா தேடி வந்தா அதிகம்;



ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்..

டப்பிங் படம் வெளியிடும் மாபியா கும்பல் பிரகாஷ்ராஜ் கட்டம்..?




கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ்  கண்டனம் தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. தமிழில் நடித்த பிறகுதான் தேசிய அளவில் பிரபலமாகி, இந்தி படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். கர்நாடகாவில் சமீபகாலமாக தமிழ் உள்பட பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 இது தொடர்பாக போராட்டம் நடத்தவும் கர்நாடக திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் பேசிய பிரகாஷ்ராஜ் டப்பிங் படங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது: டப்பிங் படங்கள் கன்னட படங்களை அழிக்கும் பேய். இதுபோன்ற படங்களுக்கு பெரிய மாபியா கும்பல் உடந்தை யாக உள்ளது.

டப்பிங் படங்களுக்கு கன்னட திரையுலகில் பெரிய ஆதரவு இருப்பதை கேட்டு வருத்தம் அடைகிறேன்.  இந்தநேரத்தில் ராஜ்குமார் உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரி இருந்திருக்கும். கன்னட படங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன்.

 கன்னட படங்களால் வாழ்வு பெற்றுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் டப்பிங் படங்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே கன்னட திரையுலகில் டப்பிங் படங்கள் வருவதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி..!



அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர்.

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

 இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர்.

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார்.

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

ஒரே படத்தில் 3 நிஜ சம்பவம்..!



3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது  கற்பவை கற்றபின். இதுபற்றி இயக்குனர் பட்ராம் செந்தில் கூறியதாவது:

 ஈழ தமிழர்கள் பிரச்னைக்காக உயிர் தியாகம் செய்த இளைஞர், தகாத உறவால் அவமானத்தில் தற்கொலை செய்யும் ஜோடி, கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் பெண் என 3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

 தற்கொலை செய்யக்கூடாது என்று அட்வைஸ் சொல்லும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்பவர்கள் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

  சந்தீப்-தருணா, மது - அபினிதா ஆகிய 2 ஜோடிகளுடன் சிந்துகுமாரி மற்றும் சிங்கம்புலி, விசித்ரன், அம்மு, யுவான் சுவாங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், செந்தில் தயாரிப்பு. ஊட்டி, திருச்சி மற்றும் ஆந்திராவில் ஷூட்டிங் நடந்துள்ளது.

என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் போதாது..! - கமல்



என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் பத்தாது என்றார் கமல்ஹாசன். விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் என்னுடன் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் தேதி ஒத்துவரவிரவில்லை.

ஒருவகையில் அது நல்லதுதான். இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்ருதியும் நானும¢ சேர்ந்து நடிப்பது என்பது போதிய அவகாசம் இல்லாத சூழலாக உள்ளது.

அப்படி சேர்ந்து நடித்தால் அது எங்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். சினிமாவில் அவர் இன்னும் சில காலம் அனுபவம் பெற்ற பிறகு என்னுடன் நடிப்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 படத்தில் அவர் எனது மகளாகவே நடிக்கவிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிப்பார். இதற்காக 3 பேரை தேர்வு செய்துவைத்திருக்கிறோம். அவற்றில் பொருத்தமானவர் நடிப்பார். எனது மகனாக புதுமுக நடிகர் நடிப்பார். இவ்வாறு கமல் கூறினா

காணவில்லை..! - உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது



 வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே.

நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்...

சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி இன்று வரை கண்ணீர் விடும் ஒரு தாயிடம் கண்டிருக்கிறேன்.

ஓர் ஐந்து வயது குழந்தையோ ஐம்பது வயது குழந்தையோ, மறைந்து விட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ, பெற்றவர் படும் வேதனை மற்றவருக்குப் புரியாது, என் குழந்தை இந்த மடியில்தான் உறங்கியது, இங்கேதான் விளையாடியது, இப்படித்தான் என்னிடம் கொஞ்சியது, உணவுக் கிடைத்ததோ, இல்லையோ, அதன் உறுப்புக்கள் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ, பால் குடித்ததோ, பசியால் அழுகிறதோ, விபச்சாரத் தொழிலில் விட்டனரோ, இல்லை கொன்றுப் புதைத்தனரோ என்று ஒரு பெற்றவளின், தந்தையின் மனம் படும் பாடு திருடுபவனுக்கும், தேடும் கடமையில் இருக்கும் சிலருக்கும் புரிவதேயில்லை.

இந்தச் சோகத்தைக் கண்டும் காணாமல், புகார் பதியாமல், அல்லது இதுபோல் எத்தனையோ? இதில், இது வேறா என்று சில அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்கள் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிச்சைகாரர்களைப் போல் துரத்தியடிக்கும் சிலரின் அலட்சியம் இவைகள்தான் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது.

1,17,480 குழந்தைகள், 352 மாவட்டங்களில் இருந்து, கடந்த ஜனவரி 2008 முதல், ஜனவரி 2010 வரை, காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 41,546 குழந்தைகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது, அது நீதிக் கேட்டுப் போராட்டம் தொடங்கியபிறகும், தமிழ்நாடு, குஜராத், மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்கள் இன்னும் வழக்குக்காக நேரில் செல்லவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அட இங்குதான் ஒரு பசுவின் கன்றைக் கொன்றக் குற்றத்திற்கு, தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்திருக்கிறான்.

நாட்டில் முக்கியமான அறிக்கை விடும் செயல்கள் பல இருக்க, குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். முக்கியஸ்தர்கள் வீட்டில் இதுபோல் நிகழ்வுகள் நடப்பதில்லை, காரணம் திருடுபவனுக்கு ஒரு பயம் இருக்கலாம், செய்தால், கண்டுபிடித்துக் கழுத்தைத் திருகிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். யாரைக் கொலை செய்தாலும், எந்தக் குழந்தையைத் திருடினாலும் நாட்டில் நீதி எல்லோருக்கும் பொது என்ற நிலை இருந்தால், இங்கே குற்றங்களும் குறைந்து விடுமே.

இருக்கும் நீதியை நிலைநாட்டுவதில், நினைவுப்படுத்துவதில் உள்ள போராட்டம், குழந்தையைத் தேடி அலையும் அலைச்சலை விட மிகக் கொடுமையானது.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தைத் தட்டி எழுப்ப, குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஒரு போராட்டம், வேறொரு நாட்டில், அநீதியான ஒரு சட்டத் தீர்ப்புக் கண்டு ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வயதான பெண் குழந்தை 'லாமியா காம்தி'யைக் கற்பழித்துக் கொலை செய்த 'ஃபையான் காம்தி' என்ற சவூதியரேபிய மத குரு. இவன் பெற்ற தண்டனை, "குருதிப் பணம்" என்று சொல்லப்படுகிற வெறும் அபராதம் மட்டுமே, அதுவும் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்கு.

அந்தக் குழந்தைப் பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறது, பாலூட்டும்போது இறந்த குழந்தைக்காக ஒரு சிறுமியைக் கொன்ற சட்டம், பெற்ற பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு, தாய்க்குப் பணம் கொடுத்தால் போதும் என்கிறது! திரைப்படத்தில் காட்டும் நிழலுக்காய் பொங்கியவர்கள், இந்த உண்மை சுடுகிறது என்று ஒளிந்து கொண்டனரோ?

நீதி கேட்டுப் போகும் இடத்திலும், பெண்ணைப் புணர்ந்து வதை செய்கின்றன சில காவல் நிலையங்கள். ஆந்திராவில், சித்தூரில், விசாரணை என்ற பெயரில் ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்திருக்கிறான் ஒரு வெறிப் பிடித்த காவலன். இன்னும் எத்தனை எத்தனையோ வேதனை தரும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணென்றால் புணர்ச்சி, ஆண் குழந்தை என்றால் பணம், குழந்தையைக் கடத்தி வதைக்கும், பெண்களை நாசமாக்கும் ஒருவனுக்கு, அவனின் தாயோ அவன் வீட்டுப் பெண்களோ நினைவிற்கே வரமாட்டார்களா? சில நிமிடங்களில் அடங்கிப் போகும் உணர்விற்கு இத்தனை மிருகத்தனமா?

குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டுபவர்கள் யாரும் வாழத் தகுதி இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளே.

இப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் நாட்டில், தாய்மை உணர்வு மதிக்கப்படாத நாட்டில், ஒரு குழந்தைக் காணாமல் போனால், அந்தத் தாய்ப் படும் பாடு, எந்தப் பண, உடல் வெறிபிடித்த எந்த அயோக்கியர்களுக்கும் தெரியாது.

எந்த மதமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த நாடோ, குழந்தைகள் எல்லோரும் பறிக்கும் பூக்கள் இல்லை, முகர்வதற்கும், பின் வாடவிட்டுக் கொல்வதற்கும்! எத்தனையோ பந்தங்களை உடையாமல் காத்து, ஒரு புதிய உலகை படைக்கவிருக்கும் அழகான சிற்பிகள் அவர்கள்!

ஒருவரிடம் இருந்து அவர் சொத்தைக் களவாடினால், அவரின் சோகம் இழந்தப் பொருளின் மீது சிறிது காலத்திற்கே, மீண்டும் உழைத்துச் செல்வத்தைச் சேர்த்திடுவார். ஆனால் ஒருவரின் குழந்தையைக் களவாடினால், அவர் உயிரையே களவாடுவது போலத்தான், அந்தக் குழந்தைக் கிடைக்கும்வரை அங்கே உயிரே இருக்காது.

நிச்சயமாய் நாம் மனு நீதிச் சோழனைக் கேட்கவில்லை, மனசாட்சி கொண்ட மனிதர்களைத்தான் வேண்டுகிறோம். குழந்தையைத் தின்னும் நாகரிக மிருகங்கள் நாசமாய்ப் போகட்டும், இனியேனும் இங்கே தாய்மையும் மனிதமும் மலரட்டும்!

உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது, தன் வீட்டில் நெருப்பெரியும் வரை தீயின் கருகும் வாசம் அவர்களைச் சேராது. ஆள்பவர்களும், சட்ட அமைப்புகளும் நீதியை எல்லோருக்கும் சமமாய் வழங்கினால், பணத்தை விட உயிர் பெரிது என்று நினைத்தால், இழந்தவர் நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்தால், இங்கே குற்றம் குறையும், கண்ணீர் குறையும், இல்லையென்றால் இது போன்ற சட்டப் போராட்டங்களே நம் வாழ்க்கையாய் மாறிப்போகும், போராடுவோம், நாளை சந்ததியேனும் நிம்மதியாய் வாழட்டும்!

 
back to top