.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, September 13, 2013

‘மத்தாப்பூ’ ஜாலியான காகித பூ ! – திரை விமர்சனம்



சினிமாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கும்போது அதில் பயணப்படும் சிலர் வழியில் கிடைக்கும் சின்ன சின்ன ஆசையான ‘காட்டாற்று வெள்ளத்தில்’ அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகிறவர்கள் பட்டியலில் சிக்கி எப்படியோ மீண்டு ‘மத்தாப்பூ’ ஆக வந்திருப்பவர் இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜ்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸ் இயக்குனர் நாகராஜூக்கு கை கொடுக்குமா….
‘மத்தாப்பூ’ படத்தின் பெயரில் ஒரு புன்னகையை வைத்திருக்கிற இயக்குனர் பட கிளைமாக்ஸ்வரை ஹீரோயின் முகத்தில் சிரிப்பையே காட்டாமல் வைத்திருக்கிறார்… அந்த ‘உம்’ முகத்திற்கு ரொம்ப பொருந்துகிறார் காயத்திரி.
புதுமுகம் ஜெயன்… புதுமுகம் என சொல்ல முடியாதபடி நக்கல் நையாண்டியிலும், அதிரடி ஆக்ஷனிலும், காதல் தோல்வி சோகத்திலும் விதவிதமான வித்தியாச முகபாவனைகளை ரொம்ப அனாயசமாக காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்கிறார்…
ஹீரோவின் அம்மா ரேணுகா, சித்தி சித்தாரா, சித்தப்பா இளவரசு, ஹீரோயின் அம்மா கீதா என மூத்த கலைஞர்கள் ஜாலியாக வந்து போகிறார்கள்…
எல்லாம் சரி… ‘மத்தாப்பூ’ கதை என்னப்பா… என்கிறீர்களா…

sep 13 - mathapoo_ cinema

 


ஹீரோயின் காயத்திரி அறந்த வாலு டைப்… கல்லூரியில் கலாட்டா பேர்வழி… ஒரு பையனுடன் நட்பு ஏற்படுகிறது… அந்த நட்பை நம்பி ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போகும்போது அங்கே வேறு விதமான சிக்கலில் மாட்டி போலீஸ் நிலையம் செல்லும் நிலைக்கு ஆளாகிறார்… வீட்டிற்கு வரும் காயத்திரியை ‘ஆம்பள வேணும்னு சொல்லியிருந்தா நாங்களே கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமேன்னு’ அம்மா கீதா சொல்ல.,..

அந்த தினத்தில் இருந்து அம்மா என அழைப்பதை தவிர்கிறார் காயத்திரி… ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவும், பொண்ணும் பேசிக் கொள்வதில்லை… அதேநேரம்… ஹீரோயின் காயத்திரி தனது பழைய வால் தனங்களை மூட்டை கட்டி பரணில் தூக்கிப்போட்டு விட்டு சிரிப்பை தொலைத்து விட்டு முகத்தை உர்ரென வைத்துக் கொள்கிறார்…

ஆண்களை கண்டாலே பிடிக்காமல்போகிறது…

நம்ம ஹீரோ அநியாயத்துக்கு எங்க தப்புன்னாலும் வந்து தட்டிக்கேட்கிறார்… திருச்சியில் அப்படி ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கப்போக போலீஸ் பஞ்சாயத்தாகி சென்னையில் இருக்கும் சித்தி சித்தாரா வீட்டுக்கு வந்து சேருகிறார்…

வந்த இடத்தில் ஒரு காபி ஷாப்பில் பர்சை தொலைத்துவிட்டு நிற்கும் ஹீரோவைத்தேடி காணாமல் போன பர்சை எடுத்துக் கொண்டு வருகிறார் ஹீரோயின் காயத்திரி…

முதல் சந்திப்பிலேயே ஹீரோயின் மீது ஹீரோவுக்கு ஒரு ‘இது’ பிறக்கிறது…
ஆனால்… அதை சொல்வதற்குள் ஹீரோயின் மறைந்து போகிறார்….
அவர் எங்கே போனார்… யார்… பேரென்ன என்பது தெரியாமல் ஹீரோ குழப்பத்தில் இருக்க… ஒரு நாள் வீட்டு காலில் பெல் அடிக்கிறது. கதவை ஹீரோ திறக்க… வாசலில் அந்த பர்ஸ் கொடுத்த ஹீரோயின்…

ஹீரோயினை மடக்க பல ஐடியாக்களை போடும் ஹீரோவுக்கு எதுவும் பலன் அளிக்கவில்லை… ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஏன் எப்போதுமே ‘உர்ர்ர்’ ஆக இருக்கிறார் என்பதை சித்தி சித்தாரா மூலம் ஹீரோ தெரிந்து கொள்கிறார்…
ஹீரோயினை சிரிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்தும்… அதிரடி ஆக்ஷனில் சண்டை போட்டும்… நேரடியாக காதலை சொல்லியும் ஹீரோயின் மசிவதாக இல்லை… காதலையும் மறுத்து விடுகிறார்…

கடைசியில் ஹீரோ ஜெயன்… ஹீரோயின் காயத்திரி சேர்ந்தார்களா… என்பதுதான் கிளைமாக்ஸ்….

இப்போது வரும் வழக்கமான கதையில் இருந்துகொஞ்சம் வருஷங்கள் பின்னால் போய் பார்த்தால் இந்த கதை புதுசாக தெரியும்… ஹீரோவை தேடி ஹீரோயின் அவர் வீட்டுக்கு வரும்போதே கதையை முடித்திருந்தால் சபாஷ் போட்டிருப்பார்கள்… அதன்பிறகு கதையை இழுழுழுழுழுத்து முடித்திருக்க வேண்டியதில்லை…

பாடல்களில் 10 வருஷத்து பழைய சாயல்… பின்னணி இசையில் சபேஷ்முரளியின் அதிரடிகள் பல இடங்களில் சபாஷ் முரளி போட வைக்கிறது…

இப்போது வரும் படங்களை பார்க்கும்போது ‘தினந்தோறும்’ நாகராஜ் சொல்லியிருக்கிற ‘மத்தாப்பூ’ கதையின் பின்பாதியில் கொஞ்சம் கத்திரியை மட்டும் போட்டால் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்…

'யானையும்...குறும்பும்..'.........குட்டிக்கதை



ஒரு ஊரில் யானை ஒன்று இருந்தது.அது தினந்தோறும்...அந்த ஊர் கடைத்தெரு வழியாக ஆற்றில் குளிக்கச் செல்லும்.

குளித்து முடித்து திரும்புகையில் கடைத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் யானைக்கு தின்பதற்கு ஏதேனும் தருவார்கள்.தன் துதிக்கையில் வாங்கி அது உண்ணும்.

அந்தக் கடைத்தெருவில் இருந்த ஒரு தையல்கடையின் தையல்காரர் தினமும் யானைக்கு வாழைப்பழம் தருவார்.

ஒரு நாள் அதனிடம் குறும்பு செய்ய எண்ணிய அவர் அது பழத்திற்கு வந்த போது ..அதன் துதிக்கையில் பழம் தராமல் ஊசியால் குத்தினார்.

யானை...கோபத்துடன் சென்று விட்டது.

அடுத்த நாள் குளிக்க சென்ற யானை..குளித்து முடித்ததும் தும்பிக்கையில் சேற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து ...தையல் கடையில் நின்று கொண்டிருந்த தையல்காரர் மீது பீச்சியடித்தது.

தையல்காரர்..தைப்பதற்கு வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளும் சேறாயின..

தன் குறும்புச் செயல் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்ததுக் கண்டு தையல்காரர் மனம் வருந்தினார்.

குறும்பு செய்யும் பழக்கம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உண்டு...

ஆனால் அக்குறும்பு பிறருக்கு மன வருத்தத்தையோ,காயத்தையோ ஏற்படுத்தக்கூடாது.

என்னால் கமல் வளர்ந்தானா, அவனால் நான் வளர்ந்தேனா - பாலச்சந்தர் பரபரப்பு பேட்டி!



38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். அதுகுறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:

இது அற்புதமான விழா. சீன் சீனா நினைத்துப் பார்க்கும்போது இந்த படத்திற்கு ‘நினைத்தாலே இனிக்கும் ’ என்று எப்படி பெயர்வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு பாயின்ட் சொல்லி ஒரு இசைக்குழுவினர் பற்றிய கதை என்று முடிவுசெய்து, டிஸ்கஸ் செய்தோம். 32 நாட்கள் சிங்கப்பூரில் ஷுட் செய்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் படம் பார்த்தபோது  பட்ட கஷ்டம் மறைந்துபோயிற்று. 38 வருடம் கழித்து இந்தபடம் இப்போது மீண்டும் வெளியிடப்போகிறார்கள் என்றபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நான் கமலிடம் அவனுக்கும் எனக்குமான உறவுபற்றி ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துகொள்‌ள விரும்புகிறேன். ‘அவனால் நான் வளர்ந்தேனா அல்லது என்னால் அவன் வளர்ந்தானா’ என்பதுதான்.  முதலில் என்னால் கமல் வளர்ந்தான். அடுத்த 20 ஆண்டுகளில் அவனால் நான் வளர்ந்தேன். அவனின் ஆர்வம், என் படங்களில் போட்டி போட்டு நடிக்கிற விதம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அதிசயமானவர் கமல். சினிமாவில் என்னென்ன வரப்போகுது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமல் அப்பவே எனக்கு நிறைய டெக்னாலஜி பற்றி சொல்லுவான். எனக்கு படிக்க நேரம் கிடையாது. ஆனால் கமலுக்கு படிக்கிறதே நேரமா இருந்துச்சு அப்போ. இந்த நேரத்தில் நான் ரஜினியை ரொம்ப மிஸ் பண்றேன்.

மரோசரித்ரா என்று டென்ஷனான ஒரு படம் எடுத்தேன். அப்போது எனக்கு புல்லா ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அடுத்து சீரியசா படம் பண்ண நான் தாங்குவேனா என்று தெரியவில்லை. அதனால் கமலிடம் நார்மலா ஒரு படம் பண்ணனும் என்று சொல்லி டிஸ்கஸ் செய்து படம் எடுத்தேன். அதில் கமல் நடித்தார். படம் முடிந்தபின் முதல் காப்பியின் முதல் பாதியை நானும் கமலும் பார்த்தோம். பிறகு சைலன்டாக வெளியில் வந்துவிட்டோம். படத்தைப்பற்றி எதுவும் பேசவில்லை.லிப்டில் வந்தபோது கமலுக்கு அவர் நண்பரிடமிருந்து போன் வந்தது. அவர் படம் எப்படி வந்திருக்கு என்று கேட்டதற்கு, படத்தில் ஜெயப்பிரதா எப்படி தலையை ஆட்டுவாரோ அப்படி கமல் தலையை ஆட்டினான். அதை நான் பார்த்தேன். அப்போது கமலுக்கு அந்த படம் பிடித்ததா இல்‌லையா என்று தெரியவில்லை. அப்போ கமலுக்கு கதை பத்தவில்லை. அவன் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டான். இப்போது அந்த படம் ரிலீசாறத பார்க்கிறப்போ நான்தாண்டா ஜெயித்திருக்கிறேன்’ என்றார்.

உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்


உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும்.

வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.

கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம். வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.

பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என நிறைய கிடைக்கின்றன.

நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

 
back to top