.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, August 23, 2013

ரசித்த உரை மொழிகள் சில!

ரசித்த உரை மொழிகள் சில>>>

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்...

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

‎3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்.

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்.

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.

 ‎8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

‎9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-

1)பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டீசலைப் (disel) பயன்படுத்தி இயக்க முடிவதில்லை ஏன்?
 
     பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் (fuels) கொண்டு இயங்கும் இரு பொறிகளும் உட்கனற்பொறிகளே (internal combustion engines). ஆயின் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை (ignition temperature) என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். அடுத்து பெட்ரோல் பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி (spark plug) ஆகும். மேலும் இப்பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் (compression ratio) குறைவு. இந்நிலையில் பெட்ரோல் பொறியில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. அடுத்து டீசல் பொறிகளில் பெட்ரோல் பொறிகளில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் பொறிகளுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.
 
2)உயர் அழுத்த(EHT) மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் இருந்து ஒரு வகை ஒலி உண்டாவது ஏன்?
 
             உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்பது உண்மையே. இவ்வொலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடையுண்டாகும்போது ஒலி எழும்புவதை நாம் அறிவோம். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு (Resonant vibration) ஆட்படுகின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது.
 
3)நீண்ட தூரம் செலுத்துவதற்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் (Alternating current-AC) பயன் படுத்துவது ஏன்?
             நீண்ட தூரச் செலுத்துகைக்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது மாறுதிசை மின்னோட்டத்தின் அழுத்தத்தை (Voltage) மின் மாற்றிகளைப் (Transformer) பயன்படுத்திக் கூட்டவோ, குறைக்கவோ இயலும். எடுத்துக்காட்டாக 400,000 வோல்ட் மின்னழுத்தமுள்ள மாறு மின்னோட்டத்தை 220 வோல்ட் அழுத்தமுள்ள மின்னோட்டமாக, இறக்கு மின்மாற்றியைப் (Step down transformer) பயன்படுத்தி, வீட்டுப் பயன்பாட்டிற்காகக் குறைத்திட இயலும். அடுத்து மாறு மின்னோட்டத்தை உயர் அழுத்தத்தில் நீண்டதூரம் செலுத்தும்போது ஏற்படும் இழப்பு மிகவும் குறைவு.
 
4)விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?
     விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு நிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, ..................... 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக் குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப் பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜ்யம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

5)கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை? 


             கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் (Centre of gravity) நமது காலடியில் விழும்; இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றமுறுவதால் ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில் நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால், உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும். இயல்பாக நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால், ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும், ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை. எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும் கடினமான செயலாகிவிடுகிறது. 

 

6)சோப்பு பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன்? 

 
      சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension) காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப் பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது பொருந்தும். 



7)ஓசோன் (ozone), காற்றைவிட கனமானதாக இருப்பினும், அது காற்று வெளிக்கு (atmosphere) மேலே இருப்பது ஏன்? 
        காற்று வெளியில் மேலே செல்லச் செல்ல, ஓசோன் பல்வேறு அளவுகளில் அமைந்துள்ளது. புவிக்கு அருகிலும் கூட மிகக் குறைந்த அளவில் அது உள்ளது. இருப்பினும் காற்று வெளியில் தரையிலிருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை உயரமுள்ள பகுதியில் ஓசோன் மிக அதிகமாகச் செறிந்திருக்கிறது. இப்பகுதிக்கு ஓசோன் படலம் என்று பெயர். மூன்று உயிர்வளி (oxygen) அணுக்கள் ஒருங்கிணையும் போது ஒரு ஓசோன் மூலக்கூறு உருவாகிறது. சாதாரணமாக உயிவளி அணுக்கள் இரண்டிரண்டாக இணைந்து உயிர்வளி மூலக்கூறுகளாக விளங்கும். காற்று வெளியின் மேற்பகுதியில் உயிர்வளி மூலக்கூறுகள் கதிரவனின் ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சினால் தாக்குறும் போது அவை பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்து ஓசோன் படலத்திற்குக் கீழே புவிக்கு அருகிலும் உயிர்வளி மிகுதியாக உள்ளது என்பது உண்மையே. கதிர் வீச்சினால் உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாகப் பிளவுறும் வாய்ப்பும் அதனால் இங்கும் ஓசோன் மூலக்கூறுகள் உருவாகும் நிலைமையும் ஏற்படாதா என ஐயம் எழலாம். கதிரவனின் கதிர்கள் காற்று வெளியில் நீண்ட தூரம் வரவேண்டியிருப்பதால் ஆற்றல் குறைந்து அதனால் உயிர்வளி மூலக்கூறுப் பிளவும் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும். இதனால் ஓசோன் மூலக்கூறுகளும் குறைவாகவே உருவாகின்றன. மேலும் ஓசோன் படலத்திலும் கூட உருவாகும் ஓசோன்கள் அவ்வாறே இருப்பதில்லை. கதிர்வீச்சின் காரணமாக ஓசோன் மூலக்கூறுகளும் அணுக்களாகப் பிளவுற்று உயிர்வளி மூலக்கூறுகளாக மாறுகின்றன. மீண்டும் உயிர்வளி மூலக்கூறுகள் பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உருவாகின்றன. இவ்வாறு ஓசோன்/உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாக மாறிமாறிப் பிளவுற்று, ஒருங்கிணைவதால் ஓசோன் படலத்தில் ஓசோன் செறிவு ஏறக்குறைய சமமான அளவில் மாற்றமின்றி அமைவதுடன், அது ஓசோன் படலத்திற்குக் கீழே இறங்கிச் செல்வதும் தவிர்க்கப் படுகிறது.

8)வளி அடுப்பைப் (gas stove) பற்றவைக்கும்போது உருளைகளில் (cylinders) அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied petroleum gas-LPG) எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது? 
 
        ளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே, அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner) சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும் நடைபெறாது. உருளையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும் குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின் வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator) நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது. மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின் வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter) தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச் செய்யவேண்டியுள்ளது. 

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்!

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்

 முன்னுரை
நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்


1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்
இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.

2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் திடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.

3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் "போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"
வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"
கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.

5. களவும் கற்று மற.
திருடக் கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்ப்பில்லை.

6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.

7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடி  நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.

8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்களா தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.

10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?
கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.

11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்
எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.

12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
"கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்." இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

13. மார்கழி பீடை மாதம்
இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.

14. தை பிறந்தால் வழி பிறக்கும்
இறை நிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் "மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்" என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.

முடிவுரை
 பழமொழிகள் பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.

கவிதைகள்!

கவிதைகள்

வாழ்க்கை

இன்று
தவறிவிடும்
லட்சியக்குறி
நாளை
காத்திருக்கும்
கேள்விக்குறியாம்!
 

புன்னகை
பொதி சுமக்கும்
கழுதை
சிரித்தது...
முதுகில்
சுமையோடு
பள்ளிக்கு போகும்
குழந்தை!
 
கடவுள்
யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

தேசிய கீதம்
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்

நிலநடுக்கம்
விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!
  
ஒற்றுமை
அருகருகே இருந்தாலும்
முட்டிமோதாது சுழலும் சமாதானம்
மின்விசிறி!
 
வெளிநாட்டு வேலை
உறவுகள் தொலைத்து
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்

 
back to top