.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, August 30, 2013

கண்ணாடியின் கதை!


 
 
 
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான்.

அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான்.

கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள்.

பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது.

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.

கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து!


130507153130_grey_hair304 
 
 
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது.

பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம் முடியின் இயற்கை வண்ணத்தை அதற்கு மீண்டும் அளிக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதி, அந்த வேதிப்பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கினார்கள். அதை பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்தபோது அவர்களின் உடல் முடி தனது பழைய நிறத்திற்கு மாறியதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வாளர்களால் உறுதியான விடையை கொடுக்கமுடியவில்லை.

இந்த குறிப்பிட்ட மருந்தை இவர்கள் கண்டுபிடித்த விதமே சுவாரஸ்யமானது.
விடிலிகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பின் ஒரு பகுதியாக இந்த ஆய்வாளர்கள் இந்த மருந்தை வடிவமைத்தார்கள். இயற்கையில் மனிதர்களின் தோலில் காணப்படும் மெலானின் என்கிற நிறத்துகள்கள் தோலின் சில இடங்களில் இல்லாமல் போவதால் இந்த வெள்ளைத்தழும்புகள் உருவாகின்றன.

இந்த தோல் மற்றும் கண்ணின் இமைகள், புருவங்களில் காணப்படும் வெள்ளைத்தழும்புகளை குணப்படுத்துவதற்காக இவர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட நோயாளிகளிடம் நல்ல பலனை தந்ததை கண்ட ஆய்வாளர்கள், இந்த மருந்தை கொஞ்சம் மாற்றி அதை பயன்படுத்தி மனிதர்களின் முடியில் உருவாகும் நரையை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தபோது அதுவும் சாத்தியம் என்பதை தாங்கள் கண்டறிந்ததாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுநாள்வரை நரைமுடியை மறைப்பதற்கான வழிகள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ சஞ்சிகையான பேசப் ஜர்னலின் தலைமை ஆசிரியர் ஜெரால்ட் வீஸ்மென், முதல்முறையாக, வெள்ளைமுடியை அதன் வேரிலிருந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறைக்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த மருந்து நரைமுடியையும் தோலில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் ஒருசேர குணப்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் இவர்.
 

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

twittertape

   டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று ஒரு விஷயமே இல்லை. டிவி,டெஸ்க்டாப்,ஸ்மார்ட் போன் என எதன் மூலம் வேண்டுமானாலும் பங்குகள் விலையை தெரிந்து கொள்ளலாம்.ஆனால் 1800 களின் பிற்பகுதி மற்றும் 1900 களின் பாதி வரை பங்குசந்தை போக்கை அறிய உடனடி வழி தந்தி சேவை தான். இப்படி தந்தி வழியே பெறப்படும் பங்குகள் விலையை அச்சிட்டு தரும் இயந்திரமாக டிக்கர் டேப் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் செல்வந்தர்களும் வர்த்தக பெரும் புள்ளிகளும் இதை பயன்படுத்தினர்.
twittertape 

twtape

ஆனால் டிவி அறிமுகமான போதே இந்த இயந்திரங்களின் முக்கியத்துவம் குறையத்துவங்கி விட்டது. கம்ப்யூட்டர் யுகத்தில் இவை முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டன.
ஆனால் டிக்கர் டேப்பை காலாவதியான தொழில்நுட்பம் தானே என்று அலட்சியம் செய்வதற்கில்லை. ஏனெனில் இந்த டிக்கர் டேப்பை உலகின் முதல் டிஜிட்டல் தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்லலாம்.விக்கிபீடியா கட்டுரை இப்படி தான் அறிமுகம் செய்கிறது.

எல்லாம் சரி 2013 ல் டிக்கர் டேப் பற்றி பிளேஷ்பேக்? காரணம் இருக்கிறது! பிரிட்டனை சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் ஆடம் வாகன் டிவிட்டர் யுகத்தில் இந்த இயந்திரத்தை புது விதமாக மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்.அதாவது பங்குகளை அச்சிட உதவிய டிக்கர் டேப் இய‌ந்திரத்தை டிவிட்டர் குறும்பதிவுகளை அச்சிட வைத்திருக்கிறார். தர்மல் பிரின்டர் மற்றும் ஈதர்நெட் இணைப்பு வாயிலாக 30 நொடிகளுக்கு ஒரு முறை குறும்பதிவுகளை இந்த இயந்திரம் அச்சிட்டு தள்ளும்.

பழைய திரைப்படங்களில் பார்த்த இந்த இயந்திரம் தனது மேஜை மீது இருந்தால் எப்படி இருக்கும் என்ற விருப்பம் ஏற்பட்டதை அடுத்து டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப இதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பழைய உதிரிபாகங்களை இணையம் மூலம் தேடிப்பிடித்து தானே இந்த டிவிட்டர் டேப் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். 

இந்த இயந்திரத்துக்கு என்று இணைய வீடு ஒன்றையும் உருவாக்கியுள்ளார். டிவிட்டர் டேப் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் அடங்கிய அந்த தளத்தில் எந்த கலைப்பொருளையும் சேதப்படுத்தாமல் இந்த இயந்திரத்தை பழைய உதிரிபாகங்கள் கொண்டே உருவாக்கியிருப்பதாகவும் அவர் கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
டிவிட்டர் டேப் இணைய இல்லம்:http://twittertape.co.uk/

பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான்.

பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு வளர்கவும் ஊர் வம்பு பகிர்ந்து கொள்வதற்கான இடம் மட்டும் அல்ல: அதை பலவிதங்களில் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கு வலை வீசவும் தான்!.புதிய வேலை தேடுவதாக இருந்தாலும் சரி ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட சிறந்த வேலை தேவை என்றாலும் சரி பேஸ்புக் கைகொடுக்கும்.

சரி,பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்பு தேடுவது எப்படி?

முதல் வழி,மிகவும் எளிதானது.உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள்.ஆம் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதை உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதில் தவறேதும் இல்லை. உங்கள் தகுதியையும் வேலைக்கான எதிர்பார்ப்பையும் தெரிவித்தீர்கள் என்றால் பொருத்தமான வேலை வாய்ப்பை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.த‌ங்களுக்கு தெரியாவிட்டாலும் தங்கள் நண்பர்கள் மூலம் கேட்டு சொல்லலாம்.பேஸ்புக்கின் தனிச்சிறப்பே இந்த சங்கிலித்தொடர் தானே. இதை உங்கள் தேலைவாய்ப்பு தேடலுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் ஒன்று பேஸ்புக் மூலம் வேலை தேடுவதாக இருந்தால் அதற்கு முன்பாக நீங்கள் ஒரு விஷய‌த்தை செய்தாக‌ வேண்டும்.அது உங்கள் பேஸ்புக் அறிமுக பக்கத்தை (புரபைல் பேஜ்)தூய்மையாக வைத்திருப்பது தான்.அதாவது  பேஸ்புக் பக்கம் உங்களை பற்றி சரியான அறிமுகத்தை தரும் வகையில் இருக்க வேண்டும்.இதன் பொருள் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்ப்டங்கள் மற்றும் கேலியாகவும் கின்டலாகவும் தெரிவித்த கருத்துக்கள எல்லாம் நீக்குவது தான்.இவற்றை பகிர்ந்து கொள்ளமாலே இருப்பது இன்னும் நல்லது.

காரணம்,பேஸ்புக் ப‌டங்களும் அதில் வெளியிடப்படும் நீங்கள் யார் என்பதை சொல்லாம்ல் சொல்லக்கூடியவை.பர்ஸ்ட் இம்பிர‌ஷன் ஈஸ் த பேஸ்ட் இம்பிரஷன் என்று சொல்வார்களே ,அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் உங்கள் பேஸ்புக் பக்கம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.நீங்கள் பார்த்த திரைப்படங்களை பற்றி பகிர்வதற்கு பதிலாக படித்த புத்தகம் அல்லது படிக்க விரும்பும் புத்தகம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பொன்மொழி மற்றும் உங்களை கவர்ந்த முன்னோடிகள் பற்றி எழுதுங்கள்.நீங்கள் எப்படி இருக்க விரும்புகிரீர்கள் என்பது பற்றியும் ப்கிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த பகிர்வுகள் உங்களை பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.அது மட்டும் அல்ல இந்த நோக்கில் பேஸ்புக்க்கை பயன்ப‌டுத்தி பாருங்கள் உங்களுக்கே அது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும்
மேலும் பேஸ்புக்கில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் காரணமாக பலர் வம்பில் மாட்டிக்கொண்ட கதைகள் எல்லாம் இருக்கின்றன.எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.இவ்வளவு ஏன்,பேஸ்புக்கில் ஆட்சேபனைக்குறிய தகவல்கள் இருக்கின்றனவா என்று சரி பார்த்து சொல்வதற்காகவே தனியே இணைய சேவைகள் இருக்கின்றன தெரியுமா? ரெப்லர் (போன்ற தளங்கள் பேஸ்புக் பக்கத்தை அலசி ஆராய்ந்து அதில் நீக்கப்பட வேண்டிய பதிவுகள் மற்றும் கருத்துக்களை அடையாளம் காட்டுகின்றன.எனவே ,பேஸ்புக்கில் உங்களை பற்றிய எந்த வகையான க‌ருத்துக்கள் இடம் பெறுகின்றன என்பதில் கவனமாக‌ இருங்கள்.அவை தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் லட்சிய வேலைக்கான வழியாக அமையலாம்.

உங்களைப்பற்றிய சில தகவல்களை உடன‌டியாக அப்டேட் செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.உதாரணத்திற்கு நீங்கள் பகுதிநேர வேலை பார்ப்பவராக‌வோ அல்லது பிரிலான்சராகவோ இருந்தால் உங்கள் சமீபத்திய செயல் பற்றிய தகவலை அடிக்கடி வெளியிடுங்கள்.செல்போனில் இருந்தே பேஸ்புக்கில் அப்டேட் செய்யும் வசதியை கொண்டு இப்படி உடனுக்குடன் தகவலகளை பகிர்ந்து கொண்டால் அது உங்கள் சுறுசுறுப்பை பறைசாற்றும்.நீங்கள் செய்த‌ வேலைக்கான இணைப்புகளையும் வழங்குங்கள்.

  ஆக உங்களை பற்றிய நல்ல தோற்றத்தை த‌ரும் வகையில் பேஸ்புக் பயன்பாட்டை மாற்றிக்கொண்டாயிற்று,இனி அடுத்த கட்டமாக வேலைக்கான வலையை விரிவாக்கலாம்.பேஸ்புக்கில் கிராப் சர்ச் எனும் தேடல் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இந்த தேடல் வசதி உங்கள் நண்பர்களின் பேஸ்புக் பக்கங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க்கூடியது. இதன் மூலம் நண்பர்கள் தொடர்பான விவாகாரங்களான தகவல்களை கூட கண்டுபிடிக்க முடியும்.அவை நம‌க்கு தேவையில்லை.ஆனால் இந்த தேடல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு உள்ள தொடர்புகளையும் காணலாம்.இதன் வாயிலாக உங்கள் நண்பர்களில் யார் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் துறையில் தொடர்புகளை பெற்றிருக்கின்றனர் என தெரிந்து கொண்டு அவர்கள் உதவியை நாடலாம்.

அதே போல பேஸ்புக்கில் உள்ள மார்க்கெட் பிலேஸ் வசதியையும் நிறுவங்களில் உள்ள வேலை வாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள அணுகலாம்.இந்த வசதி வர்த்தக நோக்கிலானது என்றாலும் இதை வேலைபாய்ப்பு நோக்கிலும் ப‌யன்படுத்த முடியும்.
பேஸ்புக்கில் இருக்கும் சோஷியல் ஜாப்ஸ் செயலியையும் முயன்று பார்கலாம்.ஆனால் இது பெரும்பாலும அமெரிக்கா சார்ந்ததாக இருக்கலாம்.

இறுதியாக ,வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய வகையில் சமூக உரையாடலில் ஈடுபடுங்கள். நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதை குறிப்பால் உணர்த்தும் அப்டேட்களை வெளியிடலாம்.உங்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் திறமை மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்க‌ளுடன் நீங்கள் உரையாடும் விதம் உங்களுக்கு வேலை வாய்ப்புக்கு உதவும் புதிய தகவல்களையும் தொடர்புகளை பெற்றுத்தரலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் இப்போது நிறுவங்கள் வேலை வாய்ப்புக்கு தகுதியான‌வர்கள் பற்றிய விவர்ங்களை திரட்ட இணையத்தை பயன்படுத்துகின்றன.பல நிறுவன‌ங்கள் பேஸ்புக் பக்கங்களிலும் வலைவீசி தகுதாயானவர்களை தேடுகின்றன. இந்தெ தேடலின் போது உங்கள் திறமையும் அடையாளம் காணப்படும் வாய்ப்பு இருக்கிறது.ஆல் த பெஸ்ட்.

 
back to top