.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, September 24, 2013

குளுகுளு குற்றாலம்! - சுற்றுலாத்தலம்!


      குளுகுளு குற்றாலம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் குளுகுளு பகுதியே குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. காடு, மலைகளைக் கடந்து வரும் தண்ணீர் பல்வேறு மூலிகைச் செடிகளையும் தழுவி வந்து அருவியாக கொட்டுவதால் இயற்கையிலேயே நோய்தீர்க்கும் குணம் கொண்டது என்பதும் ஒரு நம்பிக்கையாகும்.
 
குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. முக்கியமான பேரருவியே குற்றால அருவி என்றழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற துறையில் விழும் தண்ணீர் பொங்கியெழுந்து விரிந்து பரந்து கீழே விழுகிறது. பேரருவிக்கு சற்று மேலே சென்றால் சிற்றருவி. பெயருக்கு ஏற்றாற்போல சிறிய அருவிதான். பேரருவியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவி உள்ளது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் இருக்கிறது. சித்ரா பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேனருவி உள்ளது. இங்கு ஏராளமான தேன்கூடுகள் உள்ளதால் தேனருவி என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர். தேனருவி அருகே பாலருவி உள்ளது.

 குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஐந்தருவி அமைந்துள்ளது. இங்கு ஐந்து கிளைகளாக பிரிந்து அருவி கொட்டுவதால் ஐந்தருவி எனப் பெயர்பெற்றது. ஐந்தருவிக்கு அருகே பழத்தோட்ட அருவி என்றழைக்கப்படும் வி.ஐ.பி அருவி உள்ளது. இங்கு முன் அனுமதி பெற்ற முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி. குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் புலியருவியும், சுமார் 15 கி.மீ தொலைவில் பழைய குற்றாலம் அருவியும் உள்ளது.

 தென்மேற்கு பருவ காலம் தொடங்கியவுடன் ஜூன் மாதத்தில் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கி விடும். ஆகஸ்ட், செப்டம்பர் வரை இங்கு சீசன் காலம்தான். தமிழக அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் சாரல் விழாவும் குற்றாலத்தில் நடத்தப்படுகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) கோவில் உள்ளது. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகர் இந்த குற்றால நாதர்தான்.

 அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம், மதுரையில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் தென்காசியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தங்குவதற்கு தனியார் விடுதிகளும், பேரூராட்சி விடுதிகளும் உள்ளன. குற்றாலக் குளியல் உற்சாகத்தின் புதையல் என்பது அதனை அனுபவித்தவர்களின் கருத்தாகும். 
 

படங்களை அடுக்கும் விக்ரம்!


 
 
 
 
 
 


தரணி, கெளதம் மேனன், ஹரி என தான் அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் இயக்குநர்களை தேர்வு செய்திருக்கிறார் விக்ரம். 


ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறார் விக்ரம். ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் (நடிகர் பிரபுவின் அண்ணன்) என பலரும் நடித்துவரும் இப்படத்தினை தயாரிக்கிறது ஆஸ்கர் நிறுவனம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வளர்கிறது ‘ஐ’.
இந்த படத்திற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தனது அடுத்தடுத்த படங்கள் யாவுமே குறுகிய காலத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கமர்ஷியல் பாதையை தேர்வு செய்திருக்கிறார் விக்ரம். 


‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக நடக்க இருக்கிறது. அடுத்தாண்டு பிப்ரவரி முதல் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் படப்பிடிப்பினை தொடங்கவிருக்கிறார் விக்ரம். 


முதலில் தரணி இயக்கத்தில் ‘ராஸ்கல்’ என்னும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரிக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். அப்படம் சூர்யா நடிப்பதாக இருந்து விலகிய ‘துருவ நட்சத்திரம்’ என்கிறது கோலிவுட். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கும் படத்தில் நடிப்பதற்கும் விக்ரம் தான் முதலிடத்தில் நிற்கிறார். 


தரணி, ஹரி இருவரின் படங்களுமே மாஸ் கமர்ஷியல் படங்களே. இருவருமே படங்களை விரைவில் முடித்துவிடுவார்கள் என்பதால் இதில் நடித்துக் கொண்டே கெளதம் மேனன் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம். 


2014ம் ஆண்டில் ஷங்கரின் ‘ஐ’, தரணியின் ‘ராஸ்கல்’, கெளதம் மேனன், ஹரி இயக்கும் படங்கள் என விக்ரம் ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து தான். 


‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது! அதிர்ச்சியில் ஆந்திரா !


'Attharintiki Daaredi' படத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் பவன் கல்யாண்
'Attharintiki Daaredi' படத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் பவன் கல்யாண் 
 
 
'Attharintiki Daaredi' படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் பிரசாத், இயக்குநர் த்ரிவிக்ரம் மற்றும் நடிகர் பவன் கல்யாண்
'Attharintiki Daaredi' படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் பிரசாத், இயக்குநர் த்ரிவிக்ரம் மற்றும் நடிகர் பவன் கல்யாண்



'Attharintiki Daaredi' திரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திர திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.
பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘Attharintiki Daaredi’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது. 



பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்’ படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து 'Attharintiki Daaredi' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள். 


ஆகஸ்ட் 9ம் தேதி படத்தினை வெளிக்கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் தெலங்கானா பிரச்சினை வலுவானதால், அங்கு எந்த படமும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளரும் வெளியீட்டு தேதியினை அறிவிக்காமல் ஒத்திவைத்தார். 



பெரிய பட்ஜெட் படம் என்பதால், சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தசரா விடுமுறையை மனதில் வைத்து, அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. 


‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் உடனடியாக படத்தினை செப்டம்படர் 27ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். 


படக்குழுவினர் தங்களது ட்விட்டர் தளத்தில் “‘Attharintiki Daaredi’ படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். Piracy லிங்குகளை ad@apfilmchamber.com மற்றும் legal@apfilmchamber.com என்ற இமெயில் முகவரி அனுப்புங்கள். அல்லது 1800 4250 111 - 94901 64545 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கும் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்கள். 

உப்பு வியாபாரியும்..கழுதையும் (நீதிக்கதை)!





ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது.அவன் ஊரில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.பக்கத்து ஊருக்குச் செல்லக் கூட ஆற்றைக் கடக்க வேண்டும்.


அவன் தினமும் அடுத்த ஊருக்குச் சென்று உப்பு மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றைக் கடந்து தன் ஊருக்கு வந்து உப்பு வியாபாரம் செய்து வந்தான்.


அப்படி செய்கையில், ஒரு நாள் உப்பு மூட்டையுடன் கழுதையை ஆற்றில் இறக்கி நடந்து வந்த போது..ஆற்றின் நீர் மட்டம் உயர..உப்பு மூட்டை நனைந்து அதில் இருந்த உப்பு சற்று கரைய..கழுதைக்கு சுமந்து வந்த சுமை சற்று குறைந்தது.இதனால் மனம் மகிழ்ந்த கழுதை..அடுத்தடுத்த நாட்களில் உப்பை சுமந்து வரும்போது..வேண்டுமென்றே தண்ணீரில் அமிழ்ந்து உப்பைக் கரைத்தது.


இதனால்..வியாபாரத்தில் நஷ்டமடைந்த வியாபாரி..ஒருநாள் கழுதை செய்யும் தந்திரத்தை அறிந்தான்.உடன் கழுதைக்கு பாடம் கற்பிக்க எண்ணினான்.


அடுத்த நாள் அவன் கழுதையை கட்டிப் போட்டுவிட்டு..உப்புக்கு பதில்..பருத்தி பஞ்சை ஒரு மூட்டை வாங்கி வந்து கழுதையின் முதுகில் கட்டினான்.


வழக்கம் போல ஆற்றைக் கடக்கையில் கழுதை தண்ணீரில் அமிழ்ந்தது.பஞ்சு மூட்டை தண்ணீரில் நனைய ..மூட்டையின் சுமை ஏறியது.கழுதையும் கடக்க முடியாமல் ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.


தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது.இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.


நாமும்..நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது.அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும்.அன்று அவமானம் அடையும் நிலை வரும்.அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

 
back to top