.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 30, 2013

பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!


சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எதிலிருந்து இந்த ஒளி தோன்றியது என்பதனை பொலிஸாரினாலும் கண்டறிய முடியவில்லை.

இந்த ஒளியை பார்வையிட பிரதேசத்தைச் சேர்ந்த பலர் ஒன்று கூடியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் 9 மணியளவில் இந்த ஒளி மின்குழில் ஒளி என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஒளி கடலில் விழுந்துள்ளமை எவ்வாறு என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

கமலும் பாலாவும் காட்டிய வழி இது! - சடச் சடக்கும் சீரியஸ் விவேக்!

 

கையிலும் பையிலும் மரக்கன்றுகளோடு அலைந்து திரியும் ’சனக்களின் கலைஞன்’ விவேக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குத் திரும்பியிருக்கிறார். இயக்குனர் பாலாவின் உதவியாளர் ஆர்.கண்ணன் இயக்கும் ‘நான்தான் பாலா’ படத்தில் முதல்முறையாக, நகைச்சுவை உதறிவிட்டுச் சீரியஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.இந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொண்டார் விவேக்? அவர் வழிபடும் அப்துல் கலாமிடம் அவருக்குப் பிடிக்காதது என்ன? இன்னும் பல சூடான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் விவேக்...

நகைச்சுவை நடிகராக மட்டும் உங்களைப் பார்க்க முடியவில்லை. சமூக ஆர்வலராக இயங்குவதற்கு அப்பால், ஒரு கவிஞராக, ஒரு கட்டுரையாளராக ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். எப்போது எழுதத்தொடங்கினீர்கள்? 

உண்மையில் எனக்குப் பிடித்தமானது எழுதுவதுதான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோதே எழுதத் தொடங்கி விட்டேன். வீதீநாடகங்கள் எழுதி, சகமாணவர்களுடன் நடிக்கவும் செய்தேன். மதுரையை ஒட்டிய சின்ன ஊர்களின் உள்ளூர் வினாக்களை எழுதி, அதில் நடிக்கவும் செய்தேன். எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் சுத்தானந்தா எனது நாடக எழுத்தின் குரு. கே.பாலச்சந்தர் இயக்கிய கருப்பு வெள்ளைப் படங்களின் காதலன் நான். சென்னை வந்து அவரிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்று விரும்பினேன். நான் பார்த்து வந்த அஞ்சல்துறை பணி அதற்குத் தடையாக இருந்தது. வேலையை உதறிவிட முடிவெடுத்தபோது, சென்னையில் தலைமைச் செயலகத்திலேயே புதிய வேலை கிடைத்தது. பிறகு பாலச்சந்தர் சாரிடம் உதவியாளனாகச் சேரும்வரை, சென்னை ஹியூமர் கிளபுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். என்னை மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு புதுப்புது அர்த்தங்கள். அந்தப் படத்தின் வெற்றி என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

நீங்கள் இணை இயக்குனர் என்பதும், உங்களுக்கொரு இசைமுகம் இருப்பதும் கூடப் பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.


இருக்கலாம். எனக்கு ஹார்மோனியம் வாசிப்பதில் அலாதியான ஈடுபாடு உண்டு. அதன் குரல், ஒரு குழந்தையின் குரல்போல அத்தனைக் கனிவானது ஆனால் தெளிவானது. உலகில் உள்ள எந்த இசை வடிவத்தத்தையும் ஹார்மோனியத்தில் சேதாரம் இல்லாமல் வாசிக்கமுடியும். சரண் அவர்கள் இயக்கிய காதல் மன்னன் படத்தில் பணியாற்றியபோது அந்தப் படத்தில் ’மெஸ் விஸ்வநாதன்’ என்ற கதாபாத்திரம் இருந்தது. அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ’கண்ணதாசன் பெயரில் ’ கண்ணதாசன் மெஸ்’ வைத்து நடத்துபவர் கண்டிப்பாகச் சம்மதிப்பார் என்று நினைத்து, அவரைச் சந்தித்தேன். ” பாலச்சந்தர், பாரதிராஜா நடிக்க அழைத்தே நான் போகவில்லை தம்பி. என்னை விட்டுடு என்றார். கொஞ்ச நாட்களுக்குப்பிறகு மீண்டும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது.. ” துபாய் விமான நிலையத்தில் என்னோட ஹார்மோனியத்தை அக்குவேறு ஆணிவேராகப் பிரிச்சுட்டாங்க. எனக்கு ஈரக்குழையே அறுந்துபோச்சு. காரணம் கேட்டப்போ ஹார்மோனியத்தில் வைச்சு போதைப்பொருள் கடத்துறதா அவங்களுக்கு தகவல் வந்துதாம்”என்றார். ” அவர்கள் சொன்னது உண்மைதானே என்றேன் நான். ” என்ன சொல்கிறாய் !? என்று கேட்டுப் பதறிப் போய்விட்டார். ” இத்தனை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மெட்டுகளைப் போட்டு, தமிழ்நாட்டு மக்களைப் போதையில் ஆழ்த்தினீர்கள். அதற்கு உங்கள் ஹார்மோனியம்தானே காரணம். அப்படிப்பார்த்தால் இன்னும் எவ்வளவு போதை மருந்தை உங்கள் ஹார்மோனியத்தில் பதுக்கி வைத்திருக்கிறீர்களோ யாருக்குத் தெரியும்?” என்று சொன்னேன். எனது பேச்சு, அவரது வருத்தத்தைப் போக்கிவிட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

இயக்குனர் சரணுடன் மனவருத்தம் ஏற்பட்டுப் பிறகு பிரிந்து விட்டீர்கள் இல்லையா?

தொழில்முறையில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் எல்லா இடத்திலும் உண்டுதானே. அப்படி ஏற்பட்ட ஆரோக்கியமான கருத்துப் பிணக்குகள் அவை. அதை நான் தவறாகச் சொல்லமாட்டேன். சரண் நிறைய ’மியூசிக்கல் ஹிட் கொடுத்திருக்கிறார். அவரை விட்டு வெளியே வந்தபிறகு எனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. எனக்காக நான் நான் எழுதத் தொடங்கினதும் அதன்பிறகுதான். திருநெல்வேலி படத்துக்கு எழுதத் தொடங்கின பிறகு, எழுத்தாளர் பிரசன்னக் குமார் என்னோடு வந்து இணைந்து கொண்டார். எங்கள் கூட்டணி சுமார் 500 படங்களில் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைவாணர் வழியில் திரை நகைச்சுவையை ஏன் செய்தி சொல்லும் ஊடகம் ஆக்கக் கூடாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டு இயங்க ஆரம்பித்த பிறகு, சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள். பிறகு தங்கர்பச்சான் ’சனங்களின் கலைஞனாக’ என்னை அங்கீகரித்தார். தமிழக அரசின் விருதுகளில் ஆரம்பித்து ’ மத்திய அரசின் ’பத்மஸ்ரீ’ வரை, எல்லாம், ரசிக எஜமானர்கள் நம்மை ஏற்றுக்கொண்டதால் சாத்தியமானது.

நடிகர் விவேக் புகழ்பெற்று விட்டதால், இயக்குனர் விவேக் இனி வெளிப்பட வாய்ப்புகள் குறைவு இல்லையா?


அலைபாயுதே படத்தின்போது மணிரத்னம் சாரே கேட்டார். ஆனால் கேப்டன் ஆஃ த ஷிப் வேலை அத்தனை எளிதானது அல்ல. எதிர்பாராமல் கப்பல் முழ்கினால் கடைசியாகக் குதித்துக் கூட நீங்கள் தப்ப முடியாது. இயக்கம் என்று வரும்போது முன்தயாரிப்பு வேலைகளுக்கே ஆறுமாதம் போய்விடும். என்றாலும் இயக்கத்தைக் கண்டிப்பாகத் தொடுவேன். அதற்கு இன்னும் காலம் இருப்பதாக நினைக்கிறேன்.

ஆனால் முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், படமாக்க இருக்கும் கதைகளை உங்களிடம் சொல்லி ஆலோசனை கேட்கும்போது மறுப்பதில்லையாமே நீங்கள்?

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாக அதைப் பார்ப்பதால் அந்த இன்ப அவஸ்தையை ஏற்றுக்கொள்கிறேன். பலநேரங்களில் கேட்கப்படும் கதையால் துன்ப அவஸ்தையாகிவிடுகிறது. ஆனால் எனது ’ஸ்கிரிப்ட் சூப்பர்வைசிங்’ மூலமாக யாருடைய வாழ்க்கையும் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். காரணம் சினிமாவில் அடையாளம் பெற இங்கே முதல்பாதி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்தான் அதிகம்.

அதேநேரம் என் வெளிப்படையான விமர்சனத்தை மீறிப் படமெடுத்தவர்கள் முட்டியை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையில் அவருக்கு மேல் உச்சபச்ச நட்சத்திரம் கிடையாது. அவர் என்னை அழைத்து நடிக்கவிருக்கும் கதையைச் சொல்லி ஆலோசனை கேட்டார். ” உங்களது வெறிபிடித்த ரசிகர்கள் விரும்பும் கதை இதுவல்ல. ஏதோ மந்திரசக்தி, மாயசக்தி வந்து, கதையில் வரும் தீயசக்தியை எதிர்ப்பதுபோல் இருப்பது மிகப்பெரிய ஓட்டை. ரசிகர்கள் உங்கள் சக்தியைத்தான் எதிர்பார்ப்பார்கள்” என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நான் சொன்னது போலவே அந்தப் படத்தின் நிலை ஆனது. கதை கேட்பதோடு மட்டும் நான் நிறுத்தி கொள்வதில்லை. அதன்பிறகு அந்த அதைக்கதையில் இருக்கும் குறைகளைக் களையும் வரை எனக்கு மன அமைதி ஏற்படாது. இதற்காகவும் என் பொழுதுகளை இழந்திருக்கிறேன். அதில் பலரது வாழ்க்கையை மலரும்போது ஏற்படும் மகிழ்வே தனிதான்.

திக்குமுக்காடித் திசை தெரியாம திணறி, முட்டு சந்துல மாட்டிக்கிட்ட மூஞ்சுறு மாதிரி, நல்ல கதைகள் கிடைக்காம சிரமப்படுது சார் தமிழ் சினிமா’ என்று 2006 ல் ஒரு காட்டமான கட்டுரை எழுதியிருந்தீர்கள் இப்போ தமிழ்சினிமா எப்படியிருக்கிறது?

புதிய இளைஞர்கள் நிறைய வந்துவிட்டார்கள். இவர்களுக்கு என் வாழ்த்துகள். பிளாக் காமெடி என்ற சொற்பதங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் காலையில் எழுந்து பல் கூட விளக்காமல் இளைஞர்கள் மது அருந்துவதாகக் காட்டும் பாடாவதி தமிழ்சினிமாகள் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. கதாநாயகிகள் மது அருந்துவதாக, ஒரு த்ரிலுக்காகச் சித்தரிக்கும் அவலமும் அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறது. இளைஞர்கள் என்றாலே மது அருந்துவது மட்டும்தான் அவர்களது ஒரே பொழுதுபோக்கு என்று சித்தரிப்பதை மட்டும் மாற்றிக்கொண்டால், வரலாறு வாழ்த்தும்.

இன்று சினிமா நகைச்சுவை என்பதை ஆபாசம் என்பதாகப் பல நடிகர்கள் புரிந்து கொண்டுவிட்டதுபோலத் தெரிகிறதே?

மலிவான சரக்கு உடனடியாக விற்பனையாகலாம். ஆனால் எப்போதுமே அதுவிலைபோகாது. கலப்படப்பொருள் என்று தெரியும்போது கைவிட்டுவிடுவார்கள். ஆபாசமும் அப்படித்தான். ரசிகர்கள் தெளிவான தீர்ப்பைத் தரக்கூடியவர்கள். சென்னை என்றாலும் கன்னியாகுமரி என்றாலும் ஒரே தீர்ப்புதான். திருந்தாதவர்கள் தப்பிக்கவே முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களை எந்தத் திரைவிழாக்களிலும் காணமுடியவில்லையே?
விழாக்களில் மட்டுமல்ல, திரையிலும் என்னைப் பார்த்திருக்க முடியாது. அதற்குக் காரணம் ஐயா அப்துல் கலாம் அவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் என்னை அழைத்த அவர் ” பல நடிகர்கள் இதை, கையிலெடுத்துப் பாதியில் போட்டுவிட்டார்கள். இதை உங்களால் செய்யமுடியும் என்று ’க்ரீம் கலாம்’ திட்டதை என் கையில் கொடுத்தார். நானும் ஏன் முடியாது என்று இறங்கிவிட்டேன். 25 ஆண்டுகளாக நம்மைப் புகழோடும், பொருளோடும் வைத்திருக்கிறது இந்தச் சினிமா. சினிமா என்றால் அதை வாழவைக்கும் மக்கள். அவர்களுக்கு நன்றிக்கடனாக இதைச் செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கினேன். என்னை விரும்பும் கோடிக்கணக்கான ரசிகர்களையும், நலம் விரும்பிகளையும் இதில் ஈடுபடுத்த நினைத்தேன் பாதுகாப்பு மிக்க பள்ளி, கல்லூரி வளாகங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில், 20.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். மரங்களை நடும்முன்பு புவி வெப்பமடைதல் பற்றி பேசுகிறேன்.

 அது மாணவர்களைச் செயல் வீரர்களாக்குகிறது. தற்போது விவசாயிகளும் எங்களோடு கூட்டம் கூட்டமாகக் கைகோர்க்கத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய திருப்பம். திருநெல்வேலி பக்கத்தில் கோபாலசமுத்திரத்தில் 5 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்கும் ’கிராமோதயம்’ என்ற உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களும், விவசாயிகளும், முன்வந்து என்னை அழைத்தார்கள். 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தோம். இனி நாங்கள் இந்தவேலையைக் கையில் எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். விவசாயிகள் இதில் இறங்கினால் முடிவெடுக்காமலேயே கலைந்துபோகும் சர்வதேசச் சூழலியல் மாநாடுகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஒரு கோடி மரங்களை நட்டு, அவை வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்வரை நான் ஓயமாட்டேன். ஆனால் உங்கள் தொழிலையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கலாம் அவர்கள் சொன்னதால் தற்போது மீண்டும் திரைக்குத் திரும்பியிருக்கிறேன்.

நீங்கள் வழிகாட்டியாக, ரோல் மாடலாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் அப்துல் கலாம் அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன?
அவரது அதீதமான எளிமை. அவருக்கென்று வழங்கப்பட்ட சலுகைகளைக் கூட அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலாம் அவர்களிடம் இருப்பது இரண்டே இரண்டு கோட், இரண்டு பேண்ட் ஆடைகள்தான். இந்த ’க்ரீன் கலாம்’ திட்டத்தில் தனது பெயர் இருப்பது எங்கே சுயவிளம்பரமாகப் பார்க்கப்படுமோ என்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது பெயரை அதிலிருந்து எடுத்துவிடுங்கள் என்றார். அதனால் தற்போது க்ரீன் கலாம் ’க்ரீன் குளோப்’ ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக ரஜினியும், ஆந்திராவின் சூப்பர் ஸ்டாராகச் சிரஞ்சீவியும் இருக்கலாம். ஆனால் அகில இந்தியாவுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அவர், அப்துல்கலாம் மட்டும்தான்.

இவன்தான் பாலா தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறதே?

இந்தக்கதையை கண்ணன் என்னிடம் சொன்னபோது “ இந்தக்கதையில் நான் எங்கே காமெடி பண்ணவேண்டும் என்று கேட்டேன் “ இல்லை நீங்கள் காமெடியைத்தவிரப் பாக்கியிருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் பண்ணவேண்டும் என்றார். இந்த 25 ஆண்டுகளில் என்னைத்தேடி இப்படியொரு கதையோடு எந்த உதவி இயக்குனரும் வந்ததில்லை. எனக்கு ஆச்சரியம். ” நான் இந்தக் கதையை எனது குருநாதர் பாலாவிடம் சொன்னேன். விவேக்கை ஹீரோவாகப் போடு என்று சொன்னதாக என்னிடம் சொன்னார். 15 ஆண்டுகளுக்கு முன்னர், திருமதி ஜானகி விஸ்வநாதன் ‘குட்டி’ என்ற படத்தை இயக்கினார். அதில் மளிகைக்கடை அண்ணாச்சியா நடித்திருந்தேன். அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, அப்போது எனக்குத் தொலைபேசிய பாலா “ உங்களுக்கு இந்தமாதிரி இன்னொரு பக்கம் இருக்கிறது. அதிலும் நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்றார். இப்போது மீண்டும் பாலாவே என்னை வழிமொழிந்திருப்பதைக் கண்ணன் கூறினார். பாலா சொல்லிவிடுவார் ஆனால் இத்தனை ஆண்டுகளாகக் காமெடியில் பயணம் செய்து விட்டு எப்படி என்று மறுத்துவிட்டேன்.

பிறகு கமல் சாரை ஒரு நேர்காணல் நேர்காணல் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது என்னைத் தனியே அழைத்துச்சென்று மனவிட்டுப்பேசிய கமல், இது நீங்கள் அடுத்தக்கட்டத்துக்கு இடம்பெயர வேண்டிய தருணம். உங்களால் கணமாகக் கதாபாத்திரங்களைக் கண்டிப்பாகப் பண்ணமுடியும். உங்களைச் சீரியஸ் ரோல்களில் ரசிகர்கள் பார்ப்பாங்க..” என்று கமல் சொன்னார். கலைஞானியே சொன்னபிறகு வேறு தடையென்ன? அதன்பிறகுதான் இந்தப் படத்துக்கு ஒகே சொன்னேன். மொத்தபடமும் முடிந்துவிட்டது. படத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்தபோது ரசிகர்கள் என்னை எங்கே கொண்டுபோய் வைக்கப் போகிறார்கள் என்ற த்ரில் இப்போதே வந்துவிட்டது. ஒன்று சொல்லமுடியும். என் திரைவாழ்க்கையில் இந்தப் படம் மகுடமாக இருக்கும்.

இத்தனை ஆண்டுகாலச் சினிமாவில் நீங்கள் கமலோடு மட்டும் நடிக்கவில்லையே?


பாரதிராஜா - சிவக்குமார் இருவரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஆனால் பாரதிராஜா படத்தில் அவர் நடிக்கவே இல்லை.கே.பாலச்சந்தர் அவர்களின் பல நாடகங்களுக்குச் சென்று அவரைப் பாராட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அவரும் கே.பி இயக்கத்தில் நடிக்கவில்லை. கமலுடன் நான் இணைந்து நடிக்காதற்கும் காரணங்கள் இல்லை. அவரும் அழைத்ததில்லை. நானும் கேட்டதில்லை. எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால் அது சீரியஸான வாய்ப்பாகக் கூட இருக்கலாம்!

முதன் முறையாக குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற பெண்!


 அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.

இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார்.

இந்த சீசனில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண் பாத்திமா தான்.

பாத்திமாவின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், இதனால் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

ஆனால் தனது தங்கையின் கல்லூரி படிப்பு பாதிக்காமல் அவர் பார்த்துக் கொண்டார்.

அவரது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளிக்க வாங்கிய ரூ.12 லட்சம் கடனை அடைக்க முடியாமல் பாத்திமா, அவரது தாய் மற்றும் தங்கை தவித்தனர். இந்நிலையில் இந்த பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து பாத்திமா கூறுகையில், அமிதாப் பச்சன்ஜி வந்து கட்டிப்பிடிக்கும் வரையில் நான் ரூ.1 கோடி வென்றுவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

எங்களுக்கு உள்ள கடனை அடைக்க இந்த பணம் உதவும். மீதி பணத்தை வைத்து எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்களை வாங்குவேன்.

முன்பு எங்கள் நிலத்தை பறிக்க பலர் முயன்றனர், ஆனால் தற்போது நான் பரிசுத் தொகையை வென்ற பிறகு மேடம் என்று என்னை அழைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை பேணுவோம்!

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

 
back to top