.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 15, 2013

ஆஸ்துமாவா? அச்சம் வேண்டாம்!




கொட்டும் பனியும், கடும் குளிருமாக, காலையில் கண்விழிக்கும் போதே 'இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..!’ என போர்வைக்குள் சுருண்டு படுக்கத் தோன்றும் சொகுசான காலம் இது. இந்தப் பருவத்தில் வெயிலும் வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பல நோய்களும் வரிசைகட்டி வரக் காத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்களின் பாதிப்பு மிக அதிகமாகும்.


அதிலும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்று மாதங்கள் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிம்ம சொப்பனம்தான். இந்தப் பாதிப்பிலிருந்து மீள, இன்ஹேலர், வெந்நீர், மாத்திரைகள், மருந்துகள் என ஏகப்பட்ட தற்காப்புகள் தேவைப்படும்.


இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்துமா நோயாளிகள் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாகக் கூறுகிறார் சென்னை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன்.


'பொதுவாக ஆஸ்துமா நோயாளிகள், குளிர்காலம் வந்தால்தான் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். எதிர்பாராத ஆஸ்துமா தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க, பெரிய அளவில் பிரச்னை வராமல் இருக்க சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.


ஆஸ்துமா வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்கு மருந்துகள் இருப்பது போல, வராமல் தடுப்பதற்கும் தடுப்பு மருந்துகள் உள்ளன'' என்கிற டாக்டர் ஸ்ரீதரன், ஆஸ்துமா ஏற்படுத்தக்கூடிய காரணிகளைப் பற்றி விவரித்தார்.


குளிர்ந்த காற்று: ஆஸ்துமாவுக்கான முக்கியக் காரணங்களில் முதன்மையானது. ஆஸ்துமா என்பது, மூச்சுக்குழல் பாதிப்பு நோய்.  அடுத்தகட்டமாகத்தான் இது நுரையீரலைப் பாதிக்கிறது. காற்றில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது, மூச்சுக்குழலில் சுருக்கம், வீக்கம், சளி சேர்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், மூச்சுக்குழலில் அடிப்படைச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சுவாசத்துக்கு உதவும் சிறிய காற்றுக்குழாய்கள் வீக்கம் அடைவதால், காற்றுப்பைகளில் அதிகமாக காற்று தங்கி, சுவாசிப்பது கஷ்டமாகிறது. மார்புத் தசைகள் புடைத்துக்கொண்டு விடுவதால், வலி ஏற்படுகிறது.


காற்றின் ஈரத்தன்மை (humidity): காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, பலவித மாசுக்களும், ஆஸ்துமா நோய்க்கான காரணிகளும் ஈரக்காற்றின் ஈரத்தன்மையோடு ஒட்டிக்கொண்டு, நீடித்திருக்கும். இவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, ஆஸ்துமா வரக் காரண மாகிறது.


காளான்களின் நுண் அணுக்கள் (mold spores): குளிர், மழைக் காலங்களில் காற்றில், கண்ணுக்குத் தெரியாத காளான்களின் நுண் அணுக்கள் இருக்கும். இவையும் ஆஸ்துமா காரணிகளே.


படுக்கை உண்ணி (dust mite): கண்ணுக்குத் தெரியாத இந்த உண்ணியின் கழிவுப்பொருளை சுவாசிக்கும்போது, அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ உலகில் இதை 'யுனிவர்சல் அலெர்ஜென்’ என்று அழைப்பார்கள். பொதுவாக எல்லோரும் 'ஏர்கண்டிஷன்’ சாதனம், ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல என்பார்கள். ஆனால், 'ஏசி’ ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், காற்றில் ஈரத்தன்மை அதிகமாக ஆக, காளான்களின் நுண் அணுக்களும், படுக்கை உண்ணிகளும் அதிகமாகும். குறைந்தது 50 சதவிகிதமாவது, ஈரத்தன்மை இருந்தால்தான் இந்த உண்ணியால் உயிர் வாழ முடியும். 'ஏசி’ போடும்போது, ஈரத்தன்மை 30 சதவிகிதமாகக் குறைந்துவிடும். படுக்கை உண்ணியின் தொகையும் குறைவாகவே இருக்கும்.


வைரஸ் தாக்குதல்: குளிர்காலத்தில், குறிப்பிட்ட சில வைரஸ் அதிகம் காணப்படும். நுரையீரலைத் தாக்கக்கூடிய ஆர்.எஸ்.வி. (respiratory syncytial virus) போன்ற வைரஸ் வகைகளும் மூச்சுக்குழலுக்கு அதிகப் பாதிப்பைக் கொடுக்கும். அதிலும், ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு 'பிராங்கியோலைடிஸ்’ என்று பெயர். இதன் அறிகுறியும் பாதிப்பும் ஆஸ்துமா போன்றே இருக்கும். வைரஸ் தொற்றா அல்லது ஆஸ்துமா தாக்குதலா என்று கண்டறிவதுகூடக் கடினம். இது மூச்சுக்குழாய்களில் தாக்கும்போது, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு உண்டு.


கொசு விரட்டிகள்: மழைக் காலம் வந்தால், கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தான்.  குளிர்காலத்திலும் இது அதிகமாக உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். கொசுவை விரட்டுவதற்காக, நாம் உபயோகப்படுத்தும் சுருள்களும் மருந்துகளும்கூட ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.


ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான, வீரியமான மருந்துகள் உள்ளன. மூக்குக்குள் உறிஞ்சும், nasal spray வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம்.


மொத்தத்தில், 'ஆஸ்துமா வந்தால் மட்டுமே சிகிச்சை’ என்ற மனோபாவத்தை மாற்றி, எப்போதுமே மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், குளிர்காலத் தாக்குதல்களிலிருந்து முழுமையாக விடுபடலாம்'' என்கிறார் டாக்டர்.

Saturday, December 14, 2013

காதல் மனைவியைப் பிரிகிறார் ஹ்ரித்திக் ரோஷன்!





பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ஹ்ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம்.


நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ல் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.


''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர்(சுசன்னே) தீர்மானித்துவிட்டார், இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதனால் என்  ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது. இதிலிருந்து நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்''  என்று ஹ்ரித்திக் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சுசன்னேவின் தந்தை நடிகர் சஞ்சய்கான் ''இதை முடிவு என்று கருதுவது தவறு.  அவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரியவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?





ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.

இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

தேன்: தொண்டை வலி


 தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

 காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி


 காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி


 சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு


 உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

உப்பு: பாத வலி
 நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

 முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

 மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால் வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி


 மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

தக்காளி: கால் பிடிப்பு

 இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி


 மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி


 மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை


 வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

புதினா: தசைப்புண்


 அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.

 
back to top