.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு..!

``ஜெ.சி.டேனியல்`` - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு...


1930-ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம் அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார்.

இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.

திரைப்படத்தில் கதாநாயகி நாயர் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை எப்படி உயர்ந்த சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்க வைக்கலாம் எனக் கூறி அப்போதிருந்த ஆதிக்க சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட அந்த படத்தை தயாரித்த ஜெ.சி.டேனியல் தன் சொத்துக்கள் பறிபோனதால் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த படத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டதால், மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்தவர் ஜெ.சி.டேனியல் என்ற பதிவு இல்லமலே போனது. அவர் தமிழர் என்ற காரணத்தால் ஜெ.சி.டேனியலுக்கு சேரவேண்டிய மரியாதையை கேரள அரசாங்கம் கொடுக்க மறுத்தது.


இந்த உண்மையை தெரிந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் எடுத்த முயற்சியால், இப்போது கேரள அரசாங்கம் ஜெ.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஜெ.சி.டேனியல் பெயரில் வருடம் ஒருமுறை விருதும் வழங்கப்படுகிறது.

படம் எடுப்பதற்காக ஜெ.சி.டேனியல் எடுத்த முயற்சிகளையும், படம் எடுத்த பின்னர் அவர் பட்ட துன்பங்களையும் தான் வெள்ளித்திரையில் விளக்குகிறது பிருத்விராஜ், மம்தா உட்பட பலர் நடித்திருக்கும் ஜெ.சி.டேனியல் திரைப்படம். மலையாளத்தில் ரிலீஸாகி 7 மாநில அளவிலான விருதுகளை வென்ற இத்திரைப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்

இத்திரைப்படத்தில் இடம்பெறும் ’காற்றே காற்றே’, ’அம்மாடி நான்’ என்கிற பாடல்கள் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றதோடு தமிழிலும் பல ரசிகர்களை கவந்துள்ளது.

விஜயகாந்த் மகனுடன் நடிக்கிறாரா விஜய்..?



கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். விஜயகாந்த் சண்முகபாண்டியனை அறிமுகம் செய்துவைத்த நிகழ்ச்சிக்கு, இயக்குனர்-தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்று வாழ்த்தியிருந்தார்.

அந்த விழாவிலேயே ‘என் மகன்(விஜய்) ஒரு நல்ல பிரேக்குக்காக காத்திருந்த சமயத்தில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நான் கேட்ட ஒரே காரணத்திற்காக கதையே கேட்காமல் நடித்துக்கொடுத்தார்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார் எஸ்.ஏ.சி.

விஜய்க்காக விஜயகாந்த் செய்தது போல தற்போது விஜயகாந்த் மகன் சினிமாவில் அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்திலும் விஜய் நடித்தால் படத்திற்கு ஒரு நல்ல புரமோஷன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக பேசப்படுகிறது. தன் மகன் அறிமுகமாகும் திரைப்படத்தில் விஜயகாந்த் எப்படியும் ஒரு காட்சியில் நடிப்பார் என்று கோடம்பாக்கத்து குருவிகள் கூவிக்கொண்டிருந்த நிலையில், விஜய் நடிப்பதாக பேசப்பட்டது மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அஜீத் - விஜய்; பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்கப்பா..!


எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன் பின்பு தான் இந்த ஒரே நாள் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது.

இந்த வருட பொங்கலுக்கு கைவிட்ட பழக்கத்தை கையிலெடுத்திருப்பது ஜில்லா டீம் தான். படம் துவங்கியபோதே ஜனவரி 10 ரிலீஸ் என அறிவித்து விட்ட வீரம் டீமுடன், பொங்கல் ரிலீஸ் என்று படப்பிடிப்பை துவங்கிய ஜில்லா டீம் 10-ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டது.

ஜனவரி 10-ஆம் தேதிக்காக கிளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருப்பதுபோல் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இரண்டு திரைப்படத்தில் வரும் உண்மையான க்ளைமேக்ஸ் காட்சியும் அதிரடித்திருவிழாவாம். அண்ணன் - தம்பிகள் என ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘விநாயகம் பிரதர்ஸ்’ கதை தான் வீரம் என்றாலும் க்ளைமேக்ஸில் 20 நிமிட சண்டை காட்சிகள் உணர்ச்சிகரமான சீன்கள் தானாம்.

அப்பா - மகனின் (சிவன் - சக்தி) ஆக்‌ஷன் கலந்த கதை தான் ஜில்லா. நூறு ஏக்கர் சோளக்காட்டில் ஏரியல் வியூவில் எடுக்கப்பட்ட க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி தான் ஜில்லாவின் ஸ்பெஷல். அவுங்கவுங்க ஆளுக அவுங்கவங்க பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்க.

ஊர் சுற்றலாம் வாங்க.. - சென்னை ..!



சென்னை

தலைநகரம் : சென்னை

பரப்பு : 174 ச.கி.மீ

மக்கள் தொகை : 4,216,268

எழுத்தறிவு : 3,079,004 (80.14%)

ஆண்கள் : 2,161,605

பெண்கள் : 2,094,663

மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 24,231

அமைவிடம்:

தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வரலாறு :


சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது : அதன் பின் நாடு சுதந்திரமடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழேயே இருந்தது.

சட்டசபைத் தொகுதிகள்-14

ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதா கிருஷ்ணன்நகர், பார்க்டவுண், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், தியாகராஜநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை.

பாராளூமன்றத் தொகுதிகள்-3

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

வழிபாட்டிடங்கள்:


கந்தகோட்டம், வடபழனி, மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்டலட்சுமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, ஸ்ரீராகவேந்திர மடம், சாந்தோம் சர்ச்.

சுற்றுலாத் தலங்கள்

வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலுர் மிருகக் காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, மியூசியம்.

வள்ளுவர் கோட்டம்,


இது சென்னை மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தேர் போன்ற அமைப்பு காணப்படுகிறது. 133 குறள்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் பீச்:


சென்னையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை சிறந்த பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

மெரினா பீச்:

இது சென்னைக்கு கிழக்கே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. ஆசியாவின் நீண்ட கடற்கரையான இதன் நீளம் சுமார் 13 கிலோ மீட்டர் ஆகும்.

சிறப்புகள்

தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரம், தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட. பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.

மொழி :

தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது.

Thursday, January 9, 2014

உங்களுடைய ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

உங்களுடைய  ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?



  • இன்ஷூரன்ஸ் பாலிசி!


யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.


  • மதிப்பெண் பட்டியல்!


 (பள்ளி மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம்விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில்

அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை

இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.



  • ரேஷன் கார்டு!


 யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள்

வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.

 எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.


  • டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?


மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.


  • பான் கார்டு!யாரை அணுகுவது?


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்தேவையான விவரங் களைக் குறிப்பிட்டுவிண்ணப்பிக்க வேண்டும்.


  • பங்குச் சந்தை ஆவணம்!


யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.


  • கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?


பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து

சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


  • டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?


சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.


  •  மனைப் பட்டா! யாரை அணுகுவது..?


வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால்  நகல் பட்டா கிடைத்துவிடும்.


  • பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?


மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய்

முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.


  • கிரெடிட் கார்டு!


கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள்

உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.


  • இது எல்லாவத்தையும் விட தொலைத்து விடாமல் இருப்பது நல்லது

பெண்களே..! எச்சரிக்கை..!

பெண்களுக்கு சின்ன, சின்ன டிப்ஸ்…


தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்பாராமல் ஏற்படும் நிலைமையை சமாளிக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன விசயங்களை பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் யாருடைய உதவியும் இல்லாமல் தானே நிலைமையை சமாளிக்க முடியும்.

* அவசரத் தேவைக்கு போலீஸ், தீயணைப்பு மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* செல்போனில்தான் எல்லாருடைய எண்ணும் உள்ளதே என்று எண்ணாமல், உங்கள் கணவர், நெருங்கிய உறவினர் அல்லது நண்பர், அண்டை வீட்டுக்காரரின்தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

* எதேனும் பொருள் விற்க என்றோ அல்லது நன்கொடை வசூலிக்க என்றோ வீட்டுக்கு வரும் முன், பின் அறிமுகம் இல்லாத நபர்களை உடனடியாக வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

* வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அதிக உயரத்தில் இருந்து பொருள்களை எடுப்பது போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

* கேஸ் சிலிண்டர் தீர்ந்து போனால் புதிய சிலிண்டர் மாற்றுவது,கேன் தண்ணீர் தீர்ந்து போனால் மாற்றுவது, “பல்ப்’ மாட்டுவது போன்ற சிறிய வேலைகளை நீங்களாகவே செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் நபர், மின்சாரம் மற்றும் தொலைபேசி பணியாளர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களின் பணி குறித்த அடையாளங்களை உறுதிப்படுத்தியபின் வீட்டுக்குள் அனுமதியுங்கள்.

* யாரும் வந்திருப்பதாக தெரிந்தால் உடனே கதவை திறக்காமல் சன்னல் வழியாக யார் என்று பார்த்த பின்னரே கதவை திறக்க வேண்டும். தெரியாத நபராக இருந்தால் அப்படியே பேசி அனுப்பி விடுங்கள்.

இவ்வளவுதான் நம்ம..?

இவ்வளவுதான் நம்ம..? 


1. நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது உங்கள் மூளை 25 வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும் திறன் பெற்றது, இது ஒரு பல்பை ஒளிரச் செய்யப் போதுமான அளவு மின்சாரம் ஆகும்.

2. நாக்கின் ரேகை மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.

3. ஒவ்வொரு நாளும் நமது உடம்பு 300 பில்லியன் செல்களை உற்பத்தி செய்கிறது.

4. மனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை உள்ளடக்கியது.

5. தைராய்டு குருத்தெலும்பு பொதுவாக ஆடம்ஸ் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.

6. குழந்தைகள் வசந்த காலத்தில் வேகமாக வளர்கின்றன.

7. சராசரியாக மனித இதயம் அதன் வாழ்நாளில் 3,000 மில்லியன் முறை துடிக்கிறது.

8. உங்கள் உடலில் உள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு எலும்புகள் உங்கள் கால் பாதங்களில் அமைந்துள்ளன.

9. மொத்த மக்கள் தொகையில் 7% பேர் இடது கைப்பழக்கம் உடையவர்கள்.

10. உங்கள் வாழ்நாளில் சுமாராக இரண்டு வாரங்கள் முத்தம் அளிக்கச் செலவு செய்கிறீர்கள்.

நீங்கள் முத்தம் அளிக்கும் போது உங்கள் உடம்பில் இருந்து 26 கலோரி செலவழிக்கப்படுகிறது.

11. உங்கள் உடலில் உள்ள உறுப்புகளில் நுரையீரல் மட்டுமே நீரில் மிதக்கும் தன்மை உடையது.

12. நீங்கள் ஒரு நாளைக்கு 22000 முறை சுவாசிக்கிறீர்கள்.

13. பெரும்பாலான முதுகெலும்பு உள்ள விலங்குகள் இரண்டு நுரையீரல் கொண்டிருக்கின்றன.

14. இரண்டு கால் பந்துகளின் அளவை ஒத்தது உங்கள் நுரையீரல்.

15. பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு 40 முதல் 50 முறை சுவாசிக்கிறது. குழந்தை 5 வயதை அடையும் போது இது 25 முறையாக குறைகிறது.

வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி..!



'கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே...’ என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் வகையில் மருத்துவ அறிவியலும், ஆராய்ச்சியும், டெக்னாலஜியும் படுவேகமாக வளர்ந்து நம்மை வியக்கவைக்கின்றன.

கருத்தரித்தலில் பிரச்னை உள்ள தம்பதிகளுக்கு, ஐ.யு.ஐ., ஐ.வி.எஃப். போன்ற செயற்கைக் கருவூட்டல் முறைகள், இப்போது வரப்பிரசாதமாக உள்ளன. இதில், ஐ.வி.எஃப். சிகிச்சைக்கான கட்டணம் சில லட்சங்கள். சிகிச்சை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் குறைவுதான். ஓரிரு தடவை ஐ.வி.எஃப். முறையில் சிகிச்சைக்கு முயற்சித்தும், குழந்தை பெறாதவர்களும்கூட உள்ளனர். தற்போது ஐ.வி.எஃப். சிகிச்சையின் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஈரோட்டைச் சேர்ந்த மாருதி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த வேலப்பன், பங்கஜம் தம்பதியினருக்கு இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டரின் மகப்பேறு இன்மைக்கான சிறப்பு மருத்துவர் நிர்மலா சதாசிவம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சதாசிவம் ஆகிய இருவரிடமும் பேசினோம்.

'ஐ.வி.எஃப். முறை சிகிச்சையில், சினைப்பை முட்டை தூண்டப்படுதல், முட்டையை வெளியே எடுத்தல், விந்து அணுவுடன் சேர்த்துக் கருவை உருவாக்குதல், உருவான கருவை குறிப்பிட்ட நாட்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்தல், வளர்ந்த கருவை, கருப்பைக்கு மாற்றுவது என்று பல கட்டங்கள் உள்ளன. இந்தச் சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மருந்து தவிர்த்து, இன்குபேட்டர் உள்ளிட்ட மேலும் சில காரணங்களால் சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கிறது.

இந்தச் செலவைக் குறைக்கும் வகையில், கேப்ஸ்யூல் ஐ.வி.எஃப். என்ற நவீன சிகிச்சை வந்துள்ளது. இதில் முட்டை, குறைந்த அளவில் தூண்டப்பட்டு எடுக்கப்படுகிறது. வெளியே எடுக்கப்படும் முட்டை, ஆண் உயிரணுவுடன் சேர்க்கப்படும். இதை கேப்ஸ்யூலில் உயிர்ச் சத்து திரவத்துடன் சேர்த்து இன்குபேட்டரில்வைத்து வளர்க்காமல், பெண்ணின் ஜனனப்பாதையின் உட்பகுதியில் பாதுகாப்பாகவைக்கப்படும். உயிரணு குறைவு பிரச்னை இருந்தால், நுண்ணோக்கியில் பார்த்தபடி, விந்தணுவை முட்டைக்குள் செலுத்தி, அதை கேப்ஸ்யூலில்வைத்து ஜனனப்பாதையில் வைப்போம். இதனால், இயற்கையான சூழ்நிலையில் கரு வளர்வதற்குத் தேவையான தட்பவெப்பநிலை கிடைக்கிறது. கரு வளர்ச்சி அடைந்ததும், அது கர்ப்பப்பைக்கு மாற்றப்படும். கர்ப்பப்பையில் ஒட்டிக்கொள்ளும் அந்தக் கரு நன்கு வளர்ச்சி அடையும். இன்குபேட்டர், அதிக ஆற்றல்மிக்க மருந்துகள் பயன்படுத்துவது குறைக்கப்படுவதால் சிகிச்சைக்கான செலவும் பெருமளவு குறைந்துவிடுகிறது. இந்த கேப்ஸ்யூல் உள்ளிட்ட மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்கும்போது ஐ.வி.எஃப். கட்டணம் தற்போது உள்ளதைவிட, நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும்' என்றார் டாக்டர்.

பணம் அதிகம் செலவழித்து, சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகளின் வயிற்றில் பால்வார்க்கும் செய்திதான்!

காளிபிளவர் மொச்சை மசாலா...




காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 
செய்யத் தேவையானவை

காளிபிளவர் - ஒரு பூ

மொச்சைக் கொட்டை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - அரை கப்

செய்யும் முறை

மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் இருக்கும் வகையில் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

காளிபிளவர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய்களில் ஒன்றாகும். காளிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. நரம்பை பலமாக்குவதோடு, புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல உணவாக அமைகிறது. வாயுத் தொல்லை இருப்பவர்கள், காளிபிளவருடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசையா?




தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ எனப் பக்கத்தைப் புரட்டாதீர்கள். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்’ என்கிற பார்வை உங்களுக்கு  இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?

“முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்” என்கிறார்  ‘நேச்சுரல்ஸ் டபிள்யூ’ உரிமையாளர் வீணா குமாரவேல். இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படுவோருக்கு அவரது ஆலோசனைகள் நிச்சயம்  உதவும். ‘‘நமது சருமம், 20 வயதில் இருப்பது மாதிரி 40 வயதிலோ, 40ல் இருப்பது மாதிரி 60 வயதிலோ இருப்பதில்லை. 20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.

சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும்  பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்கிய காரணம்  வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து  வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.

30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே  சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம்.  கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.

40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்னைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்.  அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.

50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்.  இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்,  மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம்.

மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.வால்நட்  மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை. தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி  ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

‘தல’ - வாழ்க்கை வரலாறு!




எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 1, 1971

பிறப்பிடம்: ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா

பணி: நடிகர், கார் பந்தய வீரர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள்

தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை

1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.

இப்போது, விஷ்ணுவர்தனின் ‘வலை’ என்ற படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

பந்தய வாழ்க்கை

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கை

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

விருதுகள்

    2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

    2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

    விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.

    சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.

    சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.

    ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

காலவரிசை

1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.

1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.

1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.

2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்..!



திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது.

மேலும் “யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் சோலார் பைக்கை சோதனை செய்து ஆராய்சிக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜேஷின் எதிர்கால லட்சியம் இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து நிறையக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவிற்கு சேவை செய்வதுதானாம்.

இரண்டாவது இடம் இந்திய பெண்கள் ...?




உலகில் அதிகஅளவு சிகரெட் குடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியிலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்கா மெடிக்கல் அசோசியேன் சிகரெட் புகைப்பவர்கள் குறித்து (1980-2012) வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது

இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் தற்போது சிகரெட் புகைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாகும். இந்தியாவில ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2 ஆகும்.

கடந்த 1980 இல் இந்தியாவில் புகை பிடித்த ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது தற்போது 2012 ன்படி 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வில் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1980 இல் 721 மில்லியனாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு கணக்குப்படி 967மில்லியனாக அதிகரித்துள்ளது.

10 ஆண்களில் 3 பேர் சிகரெட் புகைப்பதாகவும்,20 பெண்களில் ஒருவர் சிகரெட் புகைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் புகை பிடிப்பவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் உள்ளது.

புகைபிடிப்பது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்று மருததுவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருந்தபோதிலும் அதையும் மீறி தொடர்ந்து புகை பிடிப்பவர்கள், மரணத்தை விலைக்கு வாங்குவதை உணரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

ரிலீஸாகுமா ஜில்லா?




ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன்.

படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பகீரதா - ஜில்லா நிலமை என்ன?




ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன்.


படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!




வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.

வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை: வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ: வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

இது போல் வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை!




வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை ஜனவரி மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான தனி அமைப்பாக ஒழுங்கு விதிமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

வங்கிகளில் கணக்கு துவங்குவது என்பது சாமானியர்களுக்கு இன்னமும் ஒரு கடினமான செயலாகத்தான் இருந்து வருகிறது. அதற்கான வழிமுறைகளை எளிதாக்கி, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை சீர்படுத்த வேண்டும் என்று வங்கிகளை ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

அதிக வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களை விளக்காமல், அவர்களுக்கு சாதகமான காரணிகளை மட்டும் பெரிது படுத்தி, இன்ஷூரன்ஸ போன்ற வங்கி வியாபாரம் சாராத சில சேவைகளை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் மீது திணித்துக் கொண்டிருக்கின்றன. விற்பனைக்குப் பின், வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதற்கு அவை முன் வருவதில்லை. சில சமயங்களில், வாடிக்கையாளர்களின் முறையீடு இல்லாமலேயே, இம்மாதிரி சேவைகளுக்கான கட்டணங்கள் அவர்கள் கணக்குகளிலிருந்து எடுக்கப்படுகின்றன என்பது போன்ற புகார்களும் பதிவாகியிருக்கின்றன. இம்மாதிரி நிகழ்வுகள் நடக்காமல், வாடிக்கையாளர்களின் நலன் பாதுக்காக்கப்படவேண்டும் என்று வங்கிகள், ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில், வங்கிகளுக்கு நேரடியாக செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, ஏ.டி.எம். மற்றும் இணைய தளங்கள் மூலம் தங்கள் வங்கி கணக்குகளை நிர்வகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே வேகத்தில், அவர்களுடைய பண பரிவர்த்தனைக்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவது ஒரு அச்சுறுத்தலான விஷயமாகும். தொழில் நுட்பத்துடன் கூடிய வங்கி சேவையில் செüகரியங்களுடன், பல இடர்பாடுகளும் (ரிஸ்க்) ஒளிந்திருக்கின்றன.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை களின் போது, கார்டு உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்கள் பெரும் பொருள் இழப்புக்கு ஆளாகின்றனர். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு சார்ந்த இணையதள தகவல்கள் கடத்தப்பட்டு, அவை முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. அம்மாதிரி இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் வாடிக்கையாளர்கள், பொருள் இழப்புக்கு ஆளாகின்றனர். இம்மாதிரி அசம்பாவிதங்களின்போது, அனைத்து பொறுப்புகளையும் வாடிக்கையாளர்களின் மீது சுமத்தி, வங்கிகள் இழப்பீடு வழங்காமல் தப்பிக்கும் விதமாகத்தான் தற்போதைய விதிமுறைகள் அமைந்திருக்கின்றன. தவிர்க்கமுடியாமல் இழப்பீடுகள் வழங்கினாலும், அவை காலம் கடந்தே வழங்கப்படுகின்றன.

நவீன தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் வங்கிகள், வாடிக்கையாளர் களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் அடங்கியிருக்கும் ஷரத்துக்கள், பெரும்பாலும் வங்கிகளுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும் விஷயம், நம்மில் பலருக்கு தெரியாது. அதன்படி, பணபரிவர்த்தனைகளின்போது முறைகேடுகள் நடந்தால், அந்த முறைகேடுகள் வங்கியின் அசட்டையால் தான் நடந்தது என்று நிரூபிக்க வேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்பாகும். வங்கி ஊழியர்கள் பணபரிவர்த்தனை முறைகேடுகளுக்கு துணை போனாலும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடையாது. தங்கள் பணம் பறிபோனதற்கு, அவர்கள்தான் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவேண்டும் என்ற விதிமுறையும் அமலில் இருக்கிறது.

தற்போதைய நிலைமையை, வாடிக்கையாளர்கள் பக்கம் சாய்க்கும் விதமாக, விதிமுறைகளை வங்கிகள் திருத்தி அமைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, பண இழப்பு சம்பவங்களில், வாடிக்கையாளரின் கவனக்குறைவு முக்கிய பங்கு வகித்ததற்கான ஆதாரங்களை இனி வங்கிகள்தான் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் வங்கிகள், பண பரிவர்த்தனைகளுக்கான தங்கள் கட்டமைப்பு வசதிகளை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கணக்கிலிருந்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தொடர்ந்து ஒரே நாளில் அல்லது குறுகிய இடைவெளிகளில் பணம் எடுக்கப்பட்டால், வாடிக்கையாளரின் செலவு வரலாற்றின் அடிப்படையில் கணக்கை தொடர்ந்து ஸ்கேன் செய்து, வாடிக்கையாளரின் ஒப்புதலை பெறும் வரை, கார்டை தற்காலிகமாக முடக்கும் மென்பொருள் வசதிகள் வெளிநாடு களில் பயன்படுத்தப்படுகின்றன. இது, முறைகேடுகளை தக்க தருணத்தில் தடுத்து, வாடிக்கையாளரை பெருத்த பொருள் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். மேலும், வாடிக்கையாளரின் கவனக்குறைவு உறுதி செய்யப்படாத பட்சத்தில், அவரை அலையவிட்டு, மன உளைச்சல்களுக்கு உள்படுத்தாமல், இழப்பீடுகள் 48 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

மேக்னெடிக் டேப் பொருத்தப்பட்ட கார்டுகளிலிருந்து, வாடிக்கையாளரின் எண் போன்ற ரகசிய தகவல்களை கடத்துவது எளிதாக இருப்பதால், அதற்கு பதிலாக சிப்ஸ் பொருத்திய கார்டுகளின் பயன்பாடு வெளிநாடு களில் அதிகரித்திருக்கின்றன.இதுவும், வாடிக்கையாளர் பாதுகாப்பு சார்ந்த ஒரு நடவடிக்கையாகும். இந்திய வங்கிகள் இம்மாதிரி தொழில் நுட்ப மேம்பாடுகளை ஆராய்ந்து அமல் படுத்தினால்தான், பொருளாதார மோசடிகளால் ஏற்படும் நஷ்டங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

ஏ.டி.எம். பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தகுந்த உயிர் மற்றும் பண பாதுகாப்பை அளிக்கவேண்டியது வங்கிகளின் கடமையாகும். இந்த இயந்திரங்கள், வங்கிகளின் மினி கிளைகளாக செயல்படுகின்றன. அதனால், வங்கி கிளைகளின் நேரடி வேலை பளு குறைந்து, நிர்வாக செலவும் மிச்சமாகிறது. ஆகையால், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், ஏ.டி.எம். மையங்களுக்கு, அவை இயங்கும் எல்லா நேரத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டியது வங்கிகளின் தலையாய கடமையாகும். விழித்திரை பதிவுகள் மூலம், ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் முறை பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஏ.டி.எம். பணபரிமாற்றங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை தடுக்க,விரல் ரேகைகளை பதிவு செய்து, வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையை வங்கிகள் உடனடியாக அமல்படுத்தினால், மோசடி குற்றங்களை பெருமளவில் தவிர்க்கலாம்.

இந்திய வங்கிகளின் வரலாற்றில் முதன் முறையாக, சேவைகளின் தரத்தை பொருத்து, வங்கிகளை உயர் ரகம், நடுத்தரம், அதற்கும் கீழ் என்று தரம் பிரிக்கும் பணியையும் ஒழுங்குமுறை ஆணையம் துவங்கியிருக்கிறது. ஒருவர் கணக்கு துவங்கும் போது கேட்கப்படும் கேள்விகள், கோரப்படும் ஆவணங்கள் ஆகியவை இந்த தரப் பிரிவிற்கு சில காரணிகளாக அமையும். இதைத் தவிர, அன்றாடம் வாடிக்கையாளர் கள் நடத்தப்படும் முறை, அவர்கள் அளிக்கும் புகார்கள், குறைகள் தீர்க்கும் முறை, தொலைபேசி உரையாடல்களின் தரம் ஆகியவைகளும், தரவரிசை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வங்கிகளின் பொருளாதார பலம் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது. இந்த தரவரிசைப் பட்டியலை, இணையதளத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட உத்தேசித்திருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வங்கியில் கணக்கு துவங்குவது அல்லது ஒரு வங்கியில் இருக்கும் கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது போன்ற முடிவுகளை எடுக்க, இம்மாதிரி தர வரிசை பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தங்கள் சேவை தரத்தை உயர்த்திக்கொள்ள, இந்த தகவல்கள் வங்கிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கும் வங்கிகள், தங்கள் வியாபாரத்தின் தூண்களான வாடிக்கையாளர்களுக்கு உரிய அனைத்து தரமான சேவைகளையும், பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அதை பூர்த்தி செய்ய, வங்கிகள் தங்களை பெருமளவில் தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் தற்போதைய நிலைமையாகும்.

வங்கிகளின் சேவை தரத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களின் காதுகளில் தேனாக வந்து பாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தயாரிப்பில் குதிக்கும் ஹீரோக்கள் பட அதிபர்கள் ஷாக்..!





கோலிவுட் ஹீரோக்கள் திடீரென்று தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதால் பட அதிபர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நடிப்பது ஹீரோக்கள் வேலை, படம் தயாரிப்பது தயாரிப்பாளர்களின் பணி என்ற நிலை மாறி நடிப்பதும், படம் தயாரிப்ப தும் ஹீரோக்களின் பணி என்றாகி விட்டது. நடிகர் தனுஷ் சொந்த பட நிறுவனம் தொடங்கி ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை தயாரித்தார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார்.

 அடுத்து ‘வேலையில்லா பட்டதாரி‘ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார் தனுஷ். அதேபோல் விஷால் சொந்த நிறுவனம் தொடங்கி ‘பாண்டியநாடு‘ என்ற படத்தை தயாரித்து நடித்தார். அடுத்து ‘நான் சிகப்பு மனிதன்‘ என்ற படம் தயாரித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சொந்த பட தயாரிப்பில் ஈடுபடுகிறார். இப்படத்தை ராஜேஷ் டைரக்டு செய்ய உள்ளார். சூர்யா, டி2 என்ற நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க உள்ளார்.


இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ‘பீட்சா‘, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘ போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது ‘மெல்லிசை‘, ‘பண்ணையாரும் பத்மினியும்‘ என்ற படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சொந்த பட நிறுவனம் மூலம் ‘ஆரஞ்சு மிட்டாய்‘ என்ற படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். ஹீரோக்கள் அனைவரும் தற்போது சொந்த பட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதால் பட அதிபர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100



1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண் டாம்.

7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம்.

12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாடுவாசிகள், விரும்பாதவர் கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாச முள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷ யமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல் லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப் பூஜையை செய்ய வேண்டும்.

18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வரு வது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர் கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.

23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதி டரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தல த்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.

29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.

30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.

32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழ வகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.

33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.

34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.

35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக் காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.

42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதி யான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.

44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண் டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண் ணவும்.

50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம்.  சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமி ச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.

53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனி யான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக் கூடாது.

57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங் களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத் துடன் பிரதட்சணம் வருவது தவறு.

59. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.

60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.

64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.

65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.

68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும்.
அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.

70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.

74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.

77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.

78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.

79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.

80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.

82. கோபுர தரிசனம் கோடி நன்மை.

83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழி படுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.

84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார் த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.

87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.

88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1.பித்ருக்கள், 2.குல தெய்வம், 3.விநாயகர், 4.திசாநாதன், 5.பிரச்சனை அல்லது கோரி க்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.

92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங் கள்.

93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதி ற்குள் செய்து விடுங்கள்.

94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.

95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.

97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ் திரம்,  மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.

98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறை யான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடை க்கும்.

100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும் போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

Wednesday, January 8, 2014

விரைவில் வருகிறது புரட்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்



புரட்சித் தலைஹிவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும்
வெளியாகவுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்த “கர்ணன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, புதிய திரைப்படங்களுக்கு சவாலாக இருந்ததுடன், வசூலையும் வாரிக்குவித்தது நினைவிருக்கலாம். இந்தப் புதிய ஐடியாவை அன்றைய மெஹாஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவதன் மூலம் தொடரலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பார்கள் போலும். அதனால் மக்கள் திலகத்தின் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

கடந்த 1965 ஆம் ஆண்டு பத்மினி பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகி வெள்ளிவிழா கண்ட திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்த இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இப்படத்தினை மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி விரைவில் வெளியிடப்போகிறது திவ்யா பிலிம்ஸ் நிறுவனம்.

இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கும் வீரம் திரைப்படத்துடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அஜித் மற்றும் விஜய்க்குப் போட்டியாக எம்.ஜி.ஆரும் கலமிறங்கவுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்..?

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்? 


புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!


இன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது.அந்த வகையில்

அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.


எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.

1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கிறது எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்த புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்


 பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள்.

காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத குஷன் நாற்காலிகளை பயனபடுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன்மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.

எனவே,அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது. என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக்கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்யவேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

கணினி முன் வேலை செய்யும்போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து மூடிக்கொள்ளுங்கள்.

இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளைகட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி…போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

90 அடி உயரத்தில் அஜித்!




அஜித் நடித்துள்ள வீரம் படத்தின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதால் உற்சாகத்தில் உள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வீரம் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
இதனால் தமிழகம் முழுக்க அஜித்தின் கட்-அவுட் வைத்து அசத்த நினைத்துள்ள ’தல’யின் ரசிகர்கள் ஆங்காங்கே பிரம்மாண்ட ‘கட்-அவுட்’களை வைத்து வருகிறார்கள்.

இதில் ஹைலைட்டாக நெல்லையில் உள்ள பாம்பே திரையரங்கு முன்பு வெள்ளை வேட்டி சட்டையில் அஜித்தின் கிராமத்து கெட்-அப் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்-அவுட் 90 அடி உயரம் கொண்டது,இந்த பிரம்மாண்ட கட்-அவுட் விடயம் தான் இப்போது டுவிட்டரில் அஜித் ரசிகர்களின் அசத்தல் டுவீட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த 'ஜில்லா'...!




 நேற்றிரவு 'ஜில்லா' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்ம் 'ஜில்லா' படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று டிரெய்லரை வெளியிடாமல், சிறு சிறு டீஸர்களாக வெளியிடப்பட்டன.

படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டு YOUTUBE தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட வீடியோவாக முதல் இடத்தை பிடித்தது மட்டுமன்றி 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். தொடர்ச்சியாக 2வது, 3வது டீஸரும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 7) YOUTUBE தளத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவருமே ஆர்வமாக காத்திருந்தார்கள்.

நேற்றிரவு (ஜன.7) டிரெய்லர் வெளியானவுடன் விஜய் ரசிகர்கள் அனைவருமே சமூக வலைத்தளங்களில் லிங்க்கை ஷேர் செய்திருந்தார்கள். இதனால், இரவு முதலே ட்விட்டர் தளத்தில் மோகன்லாலை விஜய் இமிடேட் செய்யும் காட்சி, விஜய்யின் காமெடி காட்சிகள், சூரியின் வசனம் என அனைவருமே 'ஜில்லா' படத்தைப் பற்றி பேசியதால் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #Jilla என்ற டேக் முதலிடத்தை பிடித்தது.

தற்போது இந்திய அளவில் முதல் ஐந்து இடத்திற்குள் #Jilla டேக் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கன் சொன்னான்..




அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

ரஷ்யன் சொன்னான்..

எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

இந்தியன் சொன்னான்..

பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்...!





கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது.

‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும்.

இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் த்டையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை நுகர்வோர் வரவேற்கிறார்கள்.

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!




மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

இணைந்தனர் சிம்பு - நயன்தாரா.....




பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்க ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள்
வெளியாகியுள்ளன.

சிம்புவுடனான காதல் முறிவிற்குப் பின்னர் வீண் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து
வந்தனர்.

சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். பாண்டிராஜ் இயக்கிவரும் இப்புதிய படத்திற்கு நயன்தாராவை விடவும் பொருத்தமான ஹீரோயின்
கிடைக்கமாட்டார் என்பதால் படக்குழு நயன்தாராவை அணுகியது. நயன்தாராவும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. காதல் நகைச்சுவையை மையப்படுத்தி இப்படம் தயாராகிவருகிறது.

சிம்பு தயாரிக்கும் இப்படத்தில், சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 
back to top