.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 15, 2014

என்ன மனுஷன் இவர்..! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா..!



பொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'வீரம்'.இப்படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலாவுக்கு இத்தனை நாளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருடலை 'வீரம்' பட வெற்றி அறுவை சிகிச்சை இல்லாமேலேயே அகற்றியிருக்கிறது.

இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். இங்கே படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார்.

'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி,ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நம்புகிறவர்கள் நம்மவர்கள். வேற்று மொழியினர் எவரையும் எளிதில் உள்ளே விடாதவர்கள் மலையாளத் திரையுலகினர். பாலாவுக்கு எப்படி அங்கு ஒரு இடம் கிடைத்தது?

"அதை என் விதி என்பதா தலையில் எழுதப்பட்ட வாய்ப்பு என்பதா அதிர்ஷ்டம் என்பதா பாக்யம் என்பதா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நான் அறிமுகமாகி தமிழில் நடித்த படங்கள் ஓடவில்லை. அதனால் எனக்கு இங்கே வாய்ப்பு வரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். வெற்றி பெற்றால்தான் மறு பேச்சு. வெற்றி பெறவில்லை என்றால் அவ்வளவுதான். இதுதான் இங்கு உள்ள நிலைமை. ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேறு. அங்கு வெற்றியைப் பார்ப்பதில்லை. வேலையைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்குத்தான் அங்கு மரியாதை.நடிகரைவிட நடிப்புத் திறமையைத்தான் பார்ப்பார்கள். நிஜமான திறமைசாலியை அங்கீகரிப்பார்கள். ஆதரிப்பார்கள். அதனால்தான் என்னை ஏற்றுக் கொண்டார்கள். " என்கிற பாலா,"எனக்கு மொழி ஒரு தடையில்லை. இருந்தாலும் பிற மொழியிலிருந்து, என்னை மாதிரி பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபமாக மலையாளத்தில் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்காது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.என்னை ஏற்றுக்கொண்டு தங்களில் ஒருவராக பார்க்கிற அவர்களின் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வது? என் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் கொடுத்த வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் என்னால் நன்றி என்று மட்டும் கூறி விட முடியாது." என்று நெகிழ்கிறார்.

பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். சகோதரர் சிவா இயக்குநர். இருந்தாலும் இவருக்குள் ஒரு சங்கடம் தொண்டைக்குள் பந்தாக இதுநாள் வரை உருண்டு கொண்டிருந்தது. அதை 'வீரம்' படம் அகற்றியுள்ளது. சங்கடத்தைத் துடைத்து இருக்கிறது.

"நான் தமிழில்தான் அறிமுகமானேன். இங்கு சரிவர படங்கள் அமையாததால்தான் மலையாளப் பக்கம் போனேன். அங்கு பலதரப்பட்ட படங்கள். வியாபாரரீதியில் வெற்றி பெற்ற 'பிக் பி', 'புதியமுகம்' 'ஸ்தலம்' 'திஹிட்லிஸ்ட்' 'அலெக்சாண்டர்' தி கிரேட் போன்ற படங்களாகட்டும்

'வேனல்மரம்' 'பத்தாம் அத்தியாயம்' யோன்ற ஆர்ட் பிலிம் களாகட்டும் ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அனுபவமாக என்னை செதுக்கியது உண்மை. அப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு இங்கு நம்மைப் பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். திறமைக்கு இங்கு மரியாதைஉ.ள்ளது.ஆனால் தாய் மொழியில் நமக்கென்ன மரியாதை உ.ள்ளது என்று நினைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரத்தில்தான் 'வீரம்' படவாய்ப்பு வந்தது.

இயக்குநர் சிவா என் அண்ணன்தான். நானும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கிவிட்டடேன். ஆனாலும் நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. அவரும் என்னைப்பற்றி விசாரித்து பேசியதில்லை. அப்படிப்பட்ட சுதந்திர வெளியில் இருந்தோம்.

'வீரம்' படத்தில் நடிக்கக் கேட்ட போது அண்ணனின் படத்தில் நடிக்கும் தம்பி என்கிற வகையிலும் அஜீத் சாரின் தம்பியாக நடிக்கிறேன் என்கிற வகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்தது. படமும் வெற்றி பெற்றது எனக்கு நீண்டநாள் நெஞ்சுக்குள் கிடந்த ஏக்கம், சங்கடம், உறுத்தல், விலகிய உணர்வில் இருக்கிறேன். "என்கிறார்

வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ' நிறைய சொல்லலாம் சொல்வது அவ்வளவையும் எழுத முடியாதே' என்ற படி தொடங்கினார்.

"அஜீத் சார் பற்றி நிறைய சொல்லலாம். நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத்சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார்.

அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது'. என்றார்.

நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்கவைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம்.

அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார்.சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார்.'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்.''இப்படி அஜீத் பற்றிக் கேட்டால் மூச்சு விடாமல் பேசுகிறார் பாலா.

'வீரம்' படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள கூடுதல் பூரிப்பு பாலாவுக்கு.

பாலா தான் இயக்கிய 'தி ஹிட் லிஸ்ட்' பட அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது எனக்கு 30 வயதில் கிடைத்த வாய்ப்பு. நானே தயாரித்தேன். 40 நடிகர்கள் என் மீதுள்ள அன்புக்காக நடித்தார்கள். ஒரு பத்தாண்டுகால அனுபவம் ஒரு படத் தயாரிப்பில் கிடைத்தது. எல்லா நடிகர்களும் ஒரு படம் தயாரித்தால் நல்ல மனிதராக மாறிவிடுவார்கள். "என்கிற பாலாவின் மனைவி அம்ருதா, பாடகியாக வந்து காதலியானவர். இவர் நினைக்கிற ஸ்வரத்தில் தாம்பத்யசங்கீதம் பாடுகிற பாடகி. ஒரே மகள் அவந்திகா.இதுதான் பாலா.

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை...!

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை - படிப்பதில் மாணவர்களுக்கு...!


 இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது.

ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.

தாவும் மனம்

இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.

பெரும் புரட்சி

அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.

 இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”

‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.

ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.

நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?

நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.

ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது.

 அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

முப்பது நொடிகள்தான்

தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.

பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை.

அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்..!


ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது..!


குழந்தைகளின் பிரியா பிஸ்கெட் ஆகிவிட்டது ஓரியோ.

கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!



இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

 
back to top