.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

தமிழ் சினிமாவின் வளரும் படங்கள் - 2014




 கார் மீது காதல்!

தமிழ்சினிமாவில் குறும்பட இயக்குநர்கள் மீதான வெளிச்சம் பரவிக்கிடக்கும் சீசன் இது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக எடுத்த குறும்படமொன்றைத் தழுவி ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் . இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடியவரும் கூட.

படத்தின் கதை 1995-ல் மதுரை பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடக்கிறது. கிராமத்துப் பண்ணையாரான ஜெய்பிரகாஷ், அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ‘பத்மினி ‘கார் ஒன்றை வாங்குகிறார். அவருக்கு கார் ஓட்ட தெரியாது.

இதனால் அந்த ஊரில் கார் ஒட்டத்தெரிந்த விஜய்சேதுபதியை தனது ஓட்டுநராக வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். விஜய் சேதுபதிக்கு அதே ஊரைச்சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் காதல்.

 காதல் வந்ததாலும் ஓட்டுநர் வேலையை மறக்காமால் இருக்கும் சேதுபதியின் ஓட்டுநர் வேலைக்கு, பெரிய ஆப்பு வைக்கிறார் பண்ணையாரின் மகள். தனக்கு சீதனமாக அப்பாவின் பத்மினிக்காரை வாங்கிப் போகிறார் மகள். முதன்முதலில் வாங்கிய காரை பறிகொடுக்கும் பண்ணையாரும், வேலையை இழக்கும் விஜய் சேதுபதியும் சோகமாகிறார்கள்.

இதன்பிறகு கார் அவர்களிடம் திரும்பி வந்ததா இல்லையா என்பதை நகைச்சுவையும் சென்டிமெண்டும் கலந்து சொல்லியிருக்கிறார் அருண்குமார். படத்தில் பண்ணையாராக ஜெயபிரகாஷும், அவரது மகளாக சினேகாவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் இந்தப் படமும் ஹிட் அடிக்கும் என்கிறார்கள்.

ஆடு புலி ஆட்டம்!

விஜய் நடித்த துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து கலைப்புலி எஸ். தாணு தயாரித்துவரும் படம் ‘நேர் எதிர்’. தயாரிப்பாளர், இயக்குநர், கேயாரின் முதன்மை உதவியாளர் ஜெயபிரதீப் எழுதி, இயக்கியிருக்கிறார்.

ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுடன் பார்த்தி தமிழ்சினிமாவுக்கு புதிய வில்லனாக அறிமுகமாகிறார். ‘நேர் எதிர்’ ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஒரே இரவில் நடக்கும் கதை. “உலகில் மனிதனைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்திலிருந்து மாறியதில்லை.

புலி புல்லைத் தின்னாது; வேட்டையாடவே செய்யும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால் மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.

ஒரு மனிதன் எப்போது புலிபோல பதுங்குவான்,எப்போது சிங்கம்போல வேட்டையாடுவான். எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போலவிஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது.

எல்லா விலங்குகளின் குணத்தையும் தனக்குக்கொண்டவனாக இருக்கிறான். ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர் எதிர் ஆக மனிதன் மட்டுமே இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு 5 கதாபாத்திரங்களை பின்னியிருகிறேன்.

படத்தில் வரும் ஐந்து பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.”என்கிறார் நேர் எதிர் இயக்குநர் ஜெயபிரதீப்.

காதல் முக்கோணம்

வெளிப்புறப் படப்பிடிப்புக்கான சாதனங்களை வழங்கி வரும் ரவிபிரசாத் ’அவுட்டோர் யூனிட்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. ‘நான் ஈ’ புகழ் நானி, -நித்யா மேனன் இணைந்து நடித்து வெற்றிபெற்ற "அலா மொதலயிந்தி" என்ற தெலுங்குப் படத்தை தமிழுக்கு ஏற்ப சற்று கதையை மாற்றி ரீமேக் செய்து வருகிறார்கள்.

‘கடல்’ பட நாயகன் கௌதம் கார்த்திக் , ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை ரவி தியாகராஜன் இயக்கி வருகிறார்.

மூன்று இளம் இதயங்கள் மத்தியில் நடத்தும் காதல் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்த என்னமோ ஏதோ. காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாததால், சாலை விபத்தில் சிக்கிக்கொள்ளும் கௌதம், தனது காதல் கதையை சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறதாம் கதை.

“காதல் எப்போது எப்படி வேண்டுமானாலும் தனது விளையாட்டுக்கு மனிதர்களை பொம்மைகள் ஆக்கிவிடுகிறது. இதில் காதலின் விளையாட்டை இதுவரை தமிழ்ரசிகர்கள் கண்டிராத முக்கோணக் காதல் கதையாக சொல்லியிருக்கிறேன்” என்கிறார் ரவிதியாகராஜன்.

2 - ன் 1 முருங்கை சாம்பார் -- சீக்ரெட் ரெசிபி .....!




சீக்ரெட் ரெசிபி

சாம்பார் பொடி

என்னென்ன தேவை?

துவரம்பருப்பு - அரை கப்

கடலைப்பருப்பு - அரை கப்

கொத்தமல்லி (தனியா) - ஒரு கப்

மிளகாய் வற்றல் - 1 கப்

மிளகு - 1 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் - 1 சிறிய கட்டி

கறிவேப்பிலை - 2 ஈர்க்கு உலர்ந்தது.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பெருங்காயத்தை பொரித்து பருப்பு வகைகளை வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும். மற்ற பொருள்களையும் வாசம் வரும்வரை  வறுத்து பொடிக்கவும்.

இன்னொரு முறை: பெருங்காயத்தைதவிர அனைத்தும் வெயிலில் உலர வைத்தும், பெருங்காயத்தை கடாயில் பொரித்தும்
பொடிக்கலாம்.


என்னென்ன தேவை?

கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்த துவரம்பருப்பு - இரண்டு கப்

முருங்கைக்காய் - 2

பெரிய வெங்காயம் - 2 (ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டியது)

சின்ன வெங்காயம் - கால் கப்

தக்காளி - பொடியாக நறுக்கியது கால் கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

புளி - ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு

அன்னபூர்ணா சாம்பார் பவுடர் அல்லது

சாதாரண சாம்பார் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

வெல்லம் - சிறிது

உப்பு - தேவையான அளவு.

அரைக்க...

சின்ன வெங்காயம் - அரை கப்

தக்காளி - ஒன்று

தேங்காய் - கால் கப்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

வெந்தயம் - ஒரு சிட்டிகை

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 2 (கீறியது).

எப்படிச் செய்வது?

புளியை நீர்க்க கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீரும் தக்காளியும் சேர்த்து
2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

 கொதித்ததும் புளித்தண்ணீரும் பருப்பும் வெல்லமும்  பெருங்காயமும் சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம்,  மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் தாளித்து சாம்பாரில் கலக்கவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சூடாக இட்லி, தோசை அல்லது வடையுடன்  பரிமாறவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை?

 சாம்பாரில் முக்கியமானது  சாம்பார் பொடி. வறுத்து அரைக்கும் சாம்பார் பொடி சுவையை மாற்றிவிடும். அதனால்  சாதாரணமான சாம்பார் பொடியே போதுமானது.

அதிக நேரம் கொதிக்க விட்டால் முருங்கைக்காய் கரைந்துவிடும். பருப்பு அதிகம் வெந்து குழையாமல் முழுதாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் துவரம்பருப்புடன் சிறிது மைசூர் பருப்பு சேர்க்கலாம்.

சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!



நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு .

அழ குத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை  நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு  சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.

‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல்  போவதே முக்கிய  காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை  என வேறு காரணங்களும் இதன்  பின்னணியில் உண்டு.

இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந் தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்’’ என்கிற  ராஜம், அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஸ் ஸ்டோ னில் தடவி  வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும். 

கடலை மாவு, பார்லி பவு டர், தேன் மூன்றும் தலா 1  டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து, ரோமம் நீக்க வேண் டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை  மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரைத் தெளித்து, சந்த னம் தடவி வைத்த பியூமிஸ் ஸ்டோனால், மிக மென்மையாக  ரோமத்தின் எதிர் திசையில் தேய்க்கவும்.

பிறகு அந்த இடத்தைக் கழுவ வும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம்  குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடையும்.

விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர் விட்டு பேஸ்ட்  போலச் செய்து,  உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும்.

எரிச்சலாக  உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ,  தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.

பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன்  வெல்லத் தண்ணீர்  கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும், மென்மையாக உரித்தெடுத்து விடலாம். 

தொடர்ந்து இப்படிச் செய்தால், பெண்  குழந்தைகள் பருவமடையும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள்  எல்லாம் சம அளவு  கலந்து கொள்ளவும்.

 தினமும் குளிக்கும் போது, மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித் தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை...

சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாம லிருப்பது  உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.

கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்,  ரோமங்களை நீக்கிய  இடம், தடித்து, கருப்பதுடன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்.

கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங்  கிரீம்களை உபயோகிப்பதும் ரோம  வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு  சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி  நின்று விடும். 

அந்த இடங்களை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வை த்து, ஊறிக் குளிப்பது மூலம்  ஓரளவு நிவாரணம் காணலாம்.

பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத்  தெரியாமல்  தற்காலிகமாக மறைக்கப்படும்.

ஆனால், பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி  ரோமங்கள் தம் பழைய  நிறத்துக்குத் திரும்பும். கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.

பொற்கோயில் ராணுவ நடவடிக்கை இங்கிலாந்து திட்டம் வடிவமைத்து கொடுத்ததா?



பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில், சீக்கிய தீவிரவாதிகள் பெருமளவில் மறைந்திருந்தனர். அங்கிருந்தபடியே அவர்கள் தங்கள் சதித் திட்டங்களை தீட்டி வந்தனர். இதனால் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, 1984ம் ஆண்டு ஜூன் மாதம், அதிரடியாக பொற்கோயிலில் ராணுவம் நுழைந்தது.

அங்கிருந்து தீவிரவாதிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சண்டையில் பலர் இறந்தனர். இதற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் கே.எஸ்.பிரார் தலைமை வகித்தார். ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அதே ஆண்டில், அக்டோபர் மாதம் சீக்கிய பாதுகாவலரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்துதான் திட்டம் வடிவமைத்து கொடுத்தது என்பதுதான் அது.இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ராணுவ உயரதிகாரி ஒருவர், தன் நாட்டு உள்துறை அமைச்சரின் செயலாளருக்கு, 1984 பிப்ரவரி 23ல் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு உதவும்படி இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில், பிரதமரின் (இங்கிலாந்து) ஒப்புதலுக்கு இணங்க இதற்கான திட்டம் வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால், இங்கிலாந்துதான் இத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்தது என்று வெளியே தெரியவந்தால், அங்கு வசிக்கும் சீக்கிய சமுதாயத்தினர் இடையே பதற்றம் எழ வாய்ப்புள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், இத்தகவலை ராணுவ நடவடிக்கையை முன்னின்று மேற்கொண்ட தளபதி கே.எஸ்.பிரார் மறுத்துள்ளார்.

‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கை முழுவதையும் இந்திய ராணுவம்தான் வடிவமைத்து செயல்படுத்தியது. எனக்கு தெரிந்தவரையில், வெளிநாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரிக்கும்படி அமைச்சரவை செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டாம் வாட்சன் கூறுகையில், ‘‘இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமலேயே இதுகுறித்து முடிவு எடுத்து செயல்பட்டார். இதன் மூலம்தான் ரகசியமாக ராணுவ நடவடிக்கை திட்டம் அளிக்கப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

 
back to top